சர்வதசச் சட்டத்தை உள்நாட்டு நீதி அமைப்பு முறையில் செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை எழும் போதும், உள்நாட்டுச் சட்டத்தை சர்வதேச நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயங்களில் செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை எழும் போதும் சர்வதேச சட்டத்திற்கும் உள்நாட்டுச் சட்டத்திற்கும் இடையிலான உறவு குறித்த தெளிவான புரிதல் அவசியமாகிறது. எனவே இவ்விரண்டு சட்டத்துக்கும் இடையிலான உறவுக்கு கொள்கை முக்கியத்துவத்தை விட நடைமுறை முக்கியத்துவமே அதிகம் எனலாம்.
சர்வதேச சட்டத்திற்கும் உள்நாட்டுச் சட்டத்திற்கும் இடையிலான உறவு குறித்து விளக்கும் பல்வேறு கொள்கைகளில் ஒருமைத்துவம், இருமைத்துவம் ஆகிய இரு கொள்கைகள் முக்கியமானவையாகும்.
இக்கொள்கையின்படி சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் பொதுவான ஒரே சட்ட அமைப்புமுறையின் (Legal System) அங்கங்களாகும். அதாவது இருவிரு சட்டங்களும் ஒரே சட்ட அமைப்பு முறையின் இருவேறு அம்சங்களாகும். இக்கொள்கை சட்டத்தின் விதிகள், தனிநபர்களைக் கட்டுப்படுத்தினாலும் நாடுகள் அல்லது அரசு அல்லாத பிற தனியுருக்களைக் கட்டுப்படுத்தினாலும் அவ்விதிகளை உள்ளடக்கிய சட்டம் ஒரு ஒற்றை அலகே (Single Unit) என்று இக்கொள்கை கருதுகிறது. அதனாலேயே இக்கொள்கையை ஒருமைத்துவம் என்கிறோம்.
இக்கொள்கையின்படி, உள்நாட்டுச் சட்டமாக இருந்தாலும் சர்வதேசச் சட்டமாக இருந்தாலும் இரண்டுமே இறுதியில் தனிநபர்களின் நடத்தைகளையே ஒழுங்குபடுத்துகின்றன. இவற்றில் சர்வதேசச் சட்டம், சர்வதேசத் தளத்தில் செயல்படுவதால், தனிநபர்களின் அத்தகைய நடத்தைகள் நாடுகளின் நடத்தையாகக் கருதப்படுகிறது. இது மட்டுமே இரண்டு சட்டங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடாகும்.
அதனால் தான் பிரிட்டீஷ் வழக்கறிஞரும், சர்வதேச நீதிமன்ற நீதிபதியாயிருந்த ஹெர்ஷ் லாதர்பாக்ட் (Hersch Lauter Pacht) “இரண்டு சட்ட அமைப்பு முறைகளுக்கும் தனிநபர்களே அடிப்படை ஆதாரமாக இருக்கின்றனர். நாடுகளுக்காக உருவானதே சர்வதேசச் சட்டமேயொழிய சர்வதேசச் சட்டத்திற்காக நாடுகள் உருவாகவில்லை என்பது உண்மையே, ஆனால் அந்த நாடுகள் மனிதர்களுக்காக உருவானதேயொழியே, நாடுகளுக்காக மனிதர்கள் உருவாகவில்லை என்பதும் உண்மையே’ என்கிறார்.
அதாவது சர்வதேசச் சட்டம் நாடுகளுக்காக உருவானது இந்த நாடுகள் மனிதர்களுக்காக உருவானது. எனவே, சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் இறுதியில் மனிதர்களுக்கானது என்பதால் இவ்விரண்டு சட்டமும் ஒரே சட்ட அமைப்பு முறையைச் சார்ந்தவையே என்பது ஒருமைத்துவக் கொள்கையாளர்களின் மையக்கருத்தாகும்.
வியென்னா பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியரான ஹென்றி கெல்சன் (Henry Kelsen) சர்வதேசச் சட்டமும் ஒரு சட்டமே என்று ஏற்றுக் கொண்டு விட்டால், சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் ஒன்றிணைந்த சட்ட அமைப்பு முறையின் அங்கங்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது என வலியுறுத்துகிறார்.
இக்கொள்கையாளர்கள், சர்வதேசச் சட்டமும், உள்நாட்டுச் சட்டமும் அடிப்படையில் ஒரே சட்ட அமைப்பு முறையைச் சார்ந்தவை என்பதை நிரூபிக்க மற்றொரு வாதத்தையும் முன்வைக்கின்றனர். அதாவது, சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பலவும் உள்நாட்டுச் சட்டக் கோட்பாடுகளை ஒப்புமையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். உதாரணத்திற்கு நாட்டின் இறங்குரிமை (State Succession) பற்றிய சர்வதேசச் சட்ட விதிகள், உள்நாட்டுச் சட்டத்தில் உள்ள இறந்தவரின் வாரிசுகளின் (Legal Heirs) இறங்குரிமை பற்றிய விதிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். அதுபோல உள்நாட்டுச் சட்டத்தில் உள்ள பல சட்டக் கருத்தாக்கங்கள் சர்வதேசச் சட்டத்தில் இருந்து வருவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, நாடுகளின் ஆள்நில அதிகார வரம்பு (Territorial Jurisdiction), குடிமக்களின் குடியுரிமை (Citizenship), அகதிகளின் உரிமை (refugee rights), போன்ற உள்நாட்டச் சட்டம் சார்ந்த கருத்தாக்கங்களை சர்வதேசச் சட்ட விதிகளின் துணையின்றி புரிந்து கொள்ளவோ செயல்படுத்தவோ முடியாது. எனவே ஒருமைத்துவக் கொள்கையாளர்கள் உள்நாட்டுச் சட்டமும் சர்வதேசச் சட்டமும் ஒரே சட்ட அமைப்பு முறையில் ஒன்றையொன்று சார்ந்து இயங்கும் இரண்டு அங்கங்கள் என்று கருதுகின்றனர். ரைட் (Wright), கெல்சன் (Kelson), ட்யுகெய்ட் (Duguit), லூதர்பாக்ட் (Lauter Pacht), ஸ்டார்க் (Starke) போன்றோர் ஒருமைத்துவக் கொள்கையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
18 ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்து சட்டவியலாளர் வில்லியம் ப்ளாக்ஸ்டோன் (William Blackstone) சர்வதேசச் சட்டம் இங்கிலாந்தின் உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகமாகும் என்கிறார். அவர், நாடுகளின் சட்டத்திற்கெதிரான தனிநபர்களின் குற்றத்தைப் பொறுத்தவரை, நாடுகளின் சட்டம், இங்கிலாந்து பொதுச்சட்டத்தின் ஒரு பாகமாகும் என்கிறார். ப்ளாக்ஸ்டோன் வெளிப்படையாக ஒருமைத்துவம் பற்றிப் பேசவில்லை என்றாலும் அவரது கோட்பாட்டின் சாரம் ஒருமைத்துவமே ஆகும். ஆனால் ப்ளாக்ஸ்டோன் இங்கிலாந்தின் பொதுச் சட்டம் குறித்து மட்டும் தான் சர்வதேசச் சட்டம் இங்கிலாந்தின் பொதுச்சட்டத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறாரேயொழிய எல்லா நாடுகளுக்கும் பொதுவான கோட்பாடாக அதை முன்மொழியவில்லை. மேலும் சர்வதேச் சட்டத்திற்கு எதிராக குற்றம் புரியும் தனிநபர்கள் மீது இங்கிலாந்து நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க அதிகாரவரம்பு பெற்றுள்ளன என்ற அடிப்படையிலேயே இதை கூறுகிறார். சர்வதேசச் சட்டத்தை மீறும் அரசைப் பொறுத்து அவர் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இருமைத்துவக் கொள்கைப்படி, உள்நாட்டுச் சட்டமும் சர்வதேசச் சட்டமும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரண்டு வெவ்வேறு சட்ட அமைப்பு முறைகளாகும். ஓப்பன்ஹீய்ம் (Oppenheim), ட்ரைபெல் (Trepel), அன்ஜிலோட்டி (Anzilotti) போன்றோர் இருமைத்துவக் கொள்கையாளர்களுள் குறிப்பிடத் தக்கவர்களாவர்.
ஓப்பன்ஹீய்ம், இவ்விரண்டு சட்டங்களும் வெவ்வேறு சட்ட அமைப்பு முறைகள் என்பதற்கு பின்வருவனவற்றை ஆதாரமாகக் கூறுகிறார்.
ட்ரைபெல்-லும் இதே போன்று உள்நாட்டுச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தனிநபர்கள் சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் நாடுகளே உன்றும் உள்நாட்டுச் சட்டத்தின் மூலாதாரம் இறையாண்மை அரசின் தனி விருப்பம், சர்வதேசச் சட்டத்தின் மூலாதாரம் நாடுகளின் பொது விருப்பம் என்றும் வேறுபடுத்திக் காட்டுகிறார்.
அன்ஜிலோட்டி இவ்விரு சட்ட அமைப்பு முறைகளும் வெவ்வேறானவை என்பதற்கு பின்வருவனவற்றை காரணங்களாகக் காட்டுகிறார்.
ஆனால் அன்ஜிலோட்டின் மேற்சொன்ன இரண்டு காரணங்களும் ஏற்புடையது அல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாவது உடன்படிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை மட்டுமே சர்வதேசச் சட்டத்தின் ஒரே அடிப்படை அல்ல என்பது நிகழ்விலைச் சட்டக் கொள்கையாளர்களால் ஏற்கனவே ஏற்கப்பட்டுவிட்டது. இரண்டாவதாக, உள்நாட்டுச் சட்டத்திற்கும் சர்வதேசச் சட்டத்திற்கும் இடையே முரண்பாடுகள் எழ வாய்ப்பே இல்லை என்பதும் நடைமுறை உண்மைக்கு புறம்பானதாகும்.
அதுபோல, இருமைத்துவக் கொள்கையை மறுக்கும் ஸ்டார்க், இன்று சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் நாடுகள் மட்டுமல்ல, தனிநபர்களும் தான் என்று ஆகிவிட்ட நிலையில் இவ்விரண்டு சட்ட அமைப்புகளும் வெவ்வேறானவை என்று கூற முடியாது என்று வாதிடுகிறார்.
பொதுவாக இயற்கைச் சட்டக் கொள்கையாளர்களே ஒருமைத்துவக் கொள்கையின் ஆதரவாளர்களாவர். இருமைத்துவக் கொள்கை, நிகழ்நிலைச் சட்டக் கொள்கையாளர்களின் ஆதரவைப் பெற்றது. நிகழ்நிலைச் சட்டக் கொள்கையாளர் அல்லாத சிலரும் இருமைத்துவக் கொள்கையை ஆதரிக்கின்றனர் என்பதும் உண்மையே. இயற்கை சட்டக் கொள்கையாளர்களின் ஆதரவை பெற்றிருப்பதால், ஒருமைத்துவக் கொள்கையே, சர்வதேசச் சட்ட வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து நெடுங்காலம் வரை செல்வாக்கு செலுத்தி வந்தது. அதன் பின்னர் நிகழ்நிலைச் சட்டக்கொள்கையின் செல்வாக்கு மேலோங்கிய போது கூடவே இருமைத்துவக் கொள்கையும் செல்வாக்குப் பெற்றது.
ஆனால் சர்வதேசச் சட்டத்தின் நடைமுறை மற்றும் முற்போக்கு வளர்ச்சி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது ஒருமைத்துவக் கொள்கையை சரியான கொள்கையாகத் தோன்றுகிறது. ஆனால் இக்கொள்கை தான் முழுக்க சரியானது என அறுதியாகக் கூறிவிடவும் முடியாது. ஏனெனில் ஒருமைத்துவக் கொள்கை, இவ்விரு சட்டங்களின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இல்லை. அதில் விடுப்பட்ட அம்சங்களையே இருமைத்துவக் கொள்கை ஆதாரமாக கொண்டுள்ளது.
நாடுகளின் நடைமுறை வழக்கங்களை வைத்துப்பார்த்தால், இவ்விரண்டு கொள்கைக்கும் இடைப்பட்டதொரு கொள்கையே சரியான கொள்கையாகத் தோன்றுகிறது. ஏனெனில், நாடுகளில் நடைமுறை வழக்கத்தில், சில சமயங்களில் சர்வதேசச் சட்டதிற்கு மேலான இடம் அளிக்கப்படுகிறது. வேறு சில சமயங்களில் உள்நாட்டுச் சட்டத்திற்கு மேலான இடம் அளிக்கப்படுகிறது.
சர்வதேசச் சட்ட விதிகளை உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் எவ்வாறு அமல்படுத்துவது அல்லது பொருத்துவது என்பதே நடைமுறைக் கேள்வியாகும்.
ஒருமைத்துவக் கொள்கையின்படி சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் ஒரே சட்ட அமைப்பு முறையைச் சேர்ந்தவை என்பதால், சர்வதேசச் சட்டத்தின் விதிகள் அனைத்தும் தானாகவே உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு அங்கமாக ஆகிவிடும். எனவே அத்தகைய நிலையில் சர்வதேசச் சட்ட விதிகளை உள்நாட்டு அதிகார வரம்பில் பொருத்துவது பற்றிய கேள்வி எழவாய்ப்பில்லை. ஆனால் இருமைத்துவக் கொள்கையின் படி இவ்விரு சட்டங்களும் வேறுவேறு சட்ட அமைப்பு முறைகள் என்பதால், சர்வதேசச் சட்டத்தின் விதிகளை சட்ட அமைப்பு முறையில் இருக்கும் உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் தானாகவே பொருத்திவிடும் என்று கூற முடியாது. அத்தகைய சூழ்நிலையில் எவ்வாறு அதைப் பொருத்துவது அல்லது செயல்படுத்துவது என்ற நடைமுறைக் கேள்வி எழுகின்றது. இது குறித்து சட்ட வியலாளர்களிடையே நான்கு விதமான கொள்கைகள் நிலவுகின்றன. அவை:-
இருமைத்துவக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் நிகழ்நிலைச் சட்ட கொள்கையாளர்களின் கருத்துப்படி, சர்வதேசச் சட்ட விதிகளை உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் நேரடியாக செயல்படுத்த முடியாது. எனவே, சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் செயல்படுத்த வேண்டுமானால், உள்நாட்டின் இறையாண்மை அரசால் அக்குறிப்பிட்ட சர்வதேசச் சட்டம் ஏற்று கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இதுவே குறிப்பான ஏற்புக் கொள்கையாகும். பொதுவாக சர்வதேச உடன்படிக்கைகளை உள்நாட்டில் செயல்படுத்துவதில் இக்கொள்கை பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேசச் சட்டம் முழுவதுக்கும் இக்கொள்கை பொருந்தாது. சர்வதேச வழக்காற்று விதிகள் எவ்வித குறிப்பான ஏற்பும் இல்லாமலேயே உள்நாட்டு நீதிமன்றங்களில் செயல்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கொள்கையின்படி, சர்வதேசச் சட்டம், உள்நாட்டுச் சட்ட அதிகாரவரம்பிற்குள் நேரடியாக செயல்படுத்தப்பட முடியாது என்பதுடன் குறிப்பாக ஏற்பு செய்வதாலும் செயல்படுத்தப்பட முடியாது. மாறாக அச்சர்வதேசச் சட்ட விதிகள், சட்டமியற்றல் மூலம் உள்நாட்டுச் சட்டமாக மாற்றப்பட வேண்டும். அப்போது தான் அச்சர்வதேசச் சட்ட விதி உள்நாட்டு நீதிமன்றத்தில் நிறைவேற்றத்தக்க சட்டமாக மாறும்.
ஆனால் நடைமுறையில் இக்கொள்கை எல்லா சர்வதேசச் சட்ட விதிகளுக்கும் பொருந்துவதாக இல்லை. சர்வதேச உடன்படிக்கைகள் பலவும் உள்நாட்டுச் சட்டமாக மாற்றமடையாமலேயே உள்நாட்டு நீதிமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குறிப்பான ஏற்புக் கொள்கையும் மாற்றமடைதல் கொள்கையும், சர்வதேசச் சட்ட விதிகள் உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் நிறைவேற்றபட வேண்டுமானால், ஏதோவொரு வகையில் குறிப்பான ஏற்பு அல்லது உள்நாட்டுச் சட்டமாக மாற்றடைதல் மூலம் - உள்நாட்டுச் சட்டத்துடன் சர்வதேசச் சட்டம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் (incorporate) என்று கூறுகின்றன. எனவே இவ்விரு சட்டங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கூறும் கொள்கை ஒன்றிணைக்கம் கொள்கை எனப்படுகிறது.
இக்கொள்கையின்படி, சர்வதேசச் சட்டத்தின் அரசமைப்பு விதிகள், சர்வதேசச் சட்டத்தை எவ்வாறு தங்களது உள்நாட்டுச் சட்ட அதிகாரவரம்பிற்குள் நிறைவேற்றுவது என்பது குறித்த விதிமுறைகளை ஒவ்வொரு நாடும் வகுத்துக் கொள்ளலாம் என்று அளிப்படைவு செய்துள்ளது. எனவே சர்வதேசச் சட்டம், உள்நாட்டு அதிகாரவரம்பிற்குள் நிறைவேற்றப்படுவதற்கு குறிப்பான ஏற்போ உள்நாட்டுச் சட்டமாக மாற்றமடைவதோ தேவையில்லை. ஒவ்வொரு நாட்டின் அரசமைப்பின்படி அந்தந்த நாடுகளில் நிலவும் நடைமுறை மற்றும் அமைப்பு முறையின்படி சர்வதேசச் சட்ட விதிகள், அந்நாட்டின் உள்நாட்டுச் சட்ட அதிகாரவரம்பிற்குள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், இக்கொள்கை கூறும் சர்வதேசச் சட்டத்தின் அரசமைப்பு விதிகள் என்று எதுவும் உண்மையில் சர்வதேசச் சட்டத்தில் கிடையாது என்ற உண்மை இக்கொள்கையின் நம்பகத் தன்மையையே கேள்விக்குள்ளாக்கி விடுகிறது.
சர்வதேச மனித உரிமைகள் விதிகளை உள்நாட்டில் பொருத்துவது தொடர்பாக 1988 பிப்ரவரியில் பெங்களூருவில் நடைபெற்ற பொதுச் சட்ட நாடுகளின் சர்வதேச நீதிபதிகள் ஆய்வரங்கில் (Judicial Colloquium on Domestic Application of International Human Rights) பெங்களுரு கோட்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இக்கோட்பாடுகளில் சர்வதேச மனித உரிமைகள் விதிகள் உள்நாட்டுச் சட்டத்தில் செயல்படுத்துவது தொடர்பாக சில கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. அக்கோட்பாடுகள் சர்வதேச சட்ட விதிகளை உள்நாட்டு அதிகார வரம்பிற்குள் நிறைவேற்றுவது குறித்த சர்வதேசப் புரிதல்களை மேலும் தெளிவுப்படுத்துவதாக அமைந்தது. அவற்றுள் சில:-
சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டுச் சட்ட அதிகாரவரம்பிற்குள் நிறைவேற்றுவது குறித்து பலவேறு முரண்பட்ட கொள்கைகள் நிலவுகின்றன. அக்கொள்கைகளுக்கும் நாடுகளின் உண்மையான நடைமுறை வழக்கத்திற்கும் கூட முரண்பாடுகள் இருக்கின்றன. எனவே, சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டு அதிகார வரம்பிற்குள் செயல்படுத்துவது குறித்த நாடுகளின் உண்மையான நடைமுறை வழக்கத்தில் இருந்தே நாம் இது குறித்து சரியான முடிவுக்கு வரமுடியம்.
சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டுச் சட்ட அதிகாரவரம்பில் செயல்படுத்துவது குறித்த நாடுகளின் நடைமுறை வழக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால், இவ்விரு சட்டங்களும் முரண்படும் போது எந்தச் சட்டம் மேலோங்கி நிற்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். ஒரு சர்வதேச உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள சர்வதேசச் சட்ட விதிக்கு நேர் விரோதமாக உள்நாட்டு சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், அந்த உள்நாட்டு நீதிமன்றம் எந்த சட்டத்தைப் பின்பற்றி தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.
இருமைத்துவக் கொள்கையாளர்களின் கருத்துப்படி சர்வதேசச் சட்ட விதியை விட உள்நாட்டுச் சட்டமே மேலோங்கியதாக இருக்கும். அத்தகைய முரண்பாடு எழும் போது, உள்நாட்டு நீதிமன்றம் உள்நாட்டுச் சட்டத்தையே பின்பற்ற வேண்டும். ஏனெனில் இருமைத்துவக் கொள்கையின்படி உள்நாட்டுச் சட்டம் தனியான சட்ட அமைப்பு முறை ஆகும். அந்த சட்ட அமைப்பு முறைக்குள் அந்நாட்டின் இறையாண்மை அரசின் சட்டமே உயர்ந்த சட்டமாகும்.
ஆனால் இந்த விஷயத்தில் ஒருமைத்துவக் கொள்கையாளர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சில சட்டவியலாளர்கள், சர்வதேசச் சட்டமே மேலோங்கி நிற்கும் என்கின்றனர். கெல்சன் போன்ற வேறு சில சட்டவியலாளர்கள், அக்குறிப்பிட்ட பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து சில சமயம் சர்வதேசச் சட்டமும் சில சமயம் உள்நாட்டுச் சட்டமும் மேலோங்கியதாக இருக்கும் என்கின்றனர்.
ப்ளாக்ஸ்டோனின் கோட்பாட்டின்படி, சர்வதேசச் சட்டம் முழுமையாக இங்கிலாந்து பொதுச் சட்டத்தின் ஒரு பாகமாகக் கருதப்பட்டாலும் இன்றைய நடைமுறை வழக்கத்தில் அது முழுமையாக பின்பற்றப்படவில்லை. சர்வதேசச் சட்ட விதிகளை இங்கிலாந்து உள்நாட்டுச் சட்டத்தில் செயல்படுத்துதற்காக அது சர்வதேச வழக்காற்று விதிகள் என்றும் சர்வதேச உடன்படிக்கை விதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளப்படுகிறது. இரண்டிற்கும் வெவ்வேறு நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளன.
Chung-chi-Cheung-Vs R (1939)- என்ற வழக்கில், இங்கிலாந்தின் பிரிவி கவுன்சில் நீதிமன்றத்தின் நீதிபதி அட்கின் பிரபு, சர்வதேசச் சட்டத்தின் விதிகள், இங்கிலாந்தின் சட்டங்களுடன் முரண்படாத வரையில் இங்கிலாந்தின் உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகமாகவே கருதப்படும் என்று கூறியுள்ளார்.
ஒத்திசைந்த பொருள் விளக்க விதி (Rule of harmonious Cosntruction)
நாடாளுமன்றத்தின் சட்டங்களும் சட்ட ஆவணங்களும் சர்வதேசச் சட்டத்துடன் முரண்படாத வகையில் பொருள் கொள்ளப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக ‘நாடாளுமன்றத்தின் எண்ணம், சர்வதேசச் சட்டத்தை மீற வேண்டும் என்பது அல்ல” எனும் முதனிலை அனுமானமும் ஏற்பட்டது.
சாட்சிய விதி (Rule of Evidence)
இங்கிலாந்தின் நீதிமன்றங்களில், அயல்நாட்டுச் சட்டத்தை ஒரு பொருண்மையாக நிரூபிக்க வேண்டி இருப்பது போல் சர்வதேசச் சட்ட விதிகளை நிரூபிக்க வேண்டியதில்லை. நீதிமன்றமே அந்த விதியை சர்வதேசச் சட்ட மூலாதாரங்களில் இருந்து அறிந்து உறுதி செய்து கொள்ளும்.
மேலே கண்ட இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சர்வதேச வழக்காற்று விதிகள் இங்கிலாந்தின் உள்நாட்டுச் சட்டமாக கருதப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதற்கு வரம்புகளும் இல்லாமல் இல்லை. இங்கிலாந்து அரசரின் செயல் சர்வதேசச் சட்டத்திற்கு விரோதமாக இருந்தாலும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் அச்செயலைக் கேள்விக்குள்ளாக முடியாது. அதுபோல் இங்கிலாந்து மன்னரின் கேள்விக்குள்ளாக்க முடியாது. அதுபோல இங்கிலாந்து மன்னரின் தனிப்பட்ட அதிகாரவரம்பிற்குட்பட்ட செயலையும் இங்கிலாந்து நீதிமன்றங்களில் கேள்விக்குள்ளாக்க முடியாது.
இங்கிலாந்தின் அரசு பீடத்தின் (Crown) தலைமையிலான நிர்வாகத் துறைக்கும் சட்டமியற்றும் நாடளுமன்றத்துக்கும் இடையிலான உறவுகளை முறைப்படுத்தும் அரசமைப்புக் கோட்பாடுகளின் படியே சர்வதேச உடன்படிக்கைகளைப் பொறுத்த நடைமுறை வழக்கம் இருக்கின்றது. இந்த அதிகார பிரிவினையில் சர்வதேச உடன்படிக்கைகள் நிர்வாகத் துறையின் செயல்களாக அமைகின்றன. நிர்வாகத் துறையின் அத்தகைய உடன்படிக்கைகள் உள்நாட்டில் தானாகவே செயல்படுத்தப்படுவது, நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட உள்நாட்டு சட்ட அமைப்பு முறையில் நிர்வாகத் துறை தலையிடுவது போலாகும். அது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் மாண்பையும் சிறுமைப்படுத்துவதாக அமையும். எனவே பிரிட்டனின் நடைமுறை வழக்கத்தில் பெரும்பாலும் அமையும். எனவே பிரிட்டனின் நடைமுறை வழக்கத்தில் பெரும்பாலும் சர்வதேச உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தின் குறிப்பான சட்டத்தின் மூலம் உள்நாட்டுச் சட்டமாக ஆக்கப்படாத வரை உள்நாட்டில் நிறைவேற்றத்தக்கவை அல்ல.
பின்வருவன நாடாளுமன்றத்தின் சட்டம் அல்லது ஒப்பந்தம் தேவைப்படக்கூடிய சர்வதேச உடன்படிக்கைகளாகும்.
பிரிட்டனின் நடைமுறை வழக்கத்தை போலவே அமெரிக்காவின் நடைமுறை வழக்கத்திலும் சர்வதேசச் சட்டம், வழக்காற்றுச் சட்டமாகவும் உடன்படிக்கைச் சட்டமாகவும் பிரித்தே நடைமுறைப் படுத்தப்படுகிறது.
சர்வதேச வழக்காற்று விதிகளை உள்நாட்டு சட்ட அமைப்பு முறையில் நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்காவும் பிரிட்டனின் நடைமுறை வழக்கத்தையே பின்பற்றுகிறது. எனவே சர்வதேச வழக்காற்று விதிகளும் அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகமாகவே கருதப்பட்டு அமெரிக்க நீதிமன்றங்களால் நிறைவேற்றப்படும். அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டங்கள் அத்தகைய சர்வதேச வழக்காற்று விதிகளுடன் முரண்படாத வகையிலேயே அமெரிக்க நீதிமன்றங்களால் பொருள் கொள்ளப்படும். ஆனால், ஏற்கனவே இருக்கும் சர்வதேச வழக்காற்று விதிகளுக்கு முரணாக பிந்தய சட்டம் இருக்குமானால் பிந்தய சட்டமே மேலோங்கியதாக எடுத்துக் கொள்ளப்படும்.
சர்வதேச உடன்படிக்கைகளைப் பொறுத்த வரை அமெரிக்காவின் நடைமுறை வழக்கம் பிரிட்டனின் நடைமுறை வழக்கத்தில் இருந்து மாறுபடுகிறது. பிரிட்டனின் நடைமுறை வழக்கம் நிர்வாகத் துறைக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்பட்டது போல், அமெரிக்க நடைமுறை வழக்கத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக சர்வதேச உடன்படிக்கை குறித்த அரசமைப்பு சட்ட வகைமுறைகளின் படியே தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசமைப்புச் சட்டம் ஷரத்து IV-இன்படி இந்த அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் சர்வதேச உடன்படிக்கைகளும் இந்த நாட்டின் மேலான சட்டங்கள் ஆகும். அதாவது அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம், சர்வதேச உடன்படிக்கைகளையும் அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டத்திற்கு சமமானதாகவே வகைப்படுத்துகின்றது.
ஆனால் அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டத்திற்கும், சர்வதேச உடன்படிக்கைக்கும் முரண்பாடு ஏற்பட்டால், இரண்டில் பிந்தய நாளில் உருவானது எதுவோ அதுவே மேலோங்கியதாக இருக்கும். அதே சமயத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கும் சர்வதேச உடன்படிக்கைக்கும் முரண்பாடு ஏற்பட்டால், அரசமைப்புச் சட்டமே மேலோங்கியதாக இருக்கும் என்பதே அமெரிக்காவின் நடைமுறை வழக்கமாகும்.
அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம், சர்வதேச உடன்படிக்கைகளும் உள்நாட்டு சட்டத்திற்கு இணையானவையே என்று கூறினாலும் அமெரிக்க நீதிமன்றங்கள் சர்வதேச உடன்படிக்கைகளை இருவகையாகப பிரிக்கின்றன. அவை:-
தன் செயலாக்க உடன்படிக்கைகள் என்பது, அரசமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்திற்கு உட்பட்டு உருவாக்கப்பட்டிருந்தால், தனியான சட்டம் எதுவும் இல்லாமல் தானாகவே உள்நாட்டு நீதிமன்றங்களில் நிறைவேற்றத்தக்கதாக இருக்கும் உட்படிக்கைகளாகும். பிற உடன்படிக்கைகள் தன் செயலூக்ககமற்ற உடன்படிக்கைகள் எனப்படும். அவற்றை உள்நாட்டு சட்டமாக ஏற்றுக் கொள்ளும் தனியான சட்டம் ஒன்று இயற்றப்படும் வரையிலும் அவ்வுடன்படிக்கை விதிகள் அமெரிக்க நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தாது.
இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை இந்தியாவிலும் இங்கிலாந்தின் நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது. இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், இந்தியாவின் நடைமுறை வழக்கம் இந்திய அரசமைப்பு சட்டத்தைப் பின்பற்றியதாகவே அமைந்தது. இந்திய அரசமைப்புச் சட்டம், இங்கிலாந்தைப் போல சர்வதேச் சட்டத்தில் வழக்காறுகளையும் உடன்படிக்கைகளையும் வெவ்வேறாக பிரிக்கவில்லை. ஷரத்து-51 C சர்வதேச சட்டத்தையும் உடன்படிக்கை கடப்பாடுகளையும் அரசு மதித்து நடக்க வேண்டும் என்று கூறுகின்றது. இதில் சர்வதேசச் சட்டம் என்பது வழக்காற்றையே குறிப்பிடுகிறது என்கிறார் அலெக்ஸான்ட்ரோவிச் (Alexandro witch). எனவே இந்திய அரசமைப்புச் சட்டம், சர்வதேச வழக்காறுகளையும் சர்வதேச உடன்படிக்கைகளையும் சமமாகவே பாவிக்கின்றது. ஆனால் உண்மை நடப்பில் இவ்விரண்டிலும் வெவ்வேறு நடைமுறை வழக்கங்களே பின்பற்றப்படுகின்றன.
சர்வதேச வழக்காறுகளைப் பொறுத்தவரை, பிரிட்டனின் நடைமுறை வழக்கமே இந்தியாவிலும் பின்பற்றப்படுகிறது. அதாவது சர்வதேச வழக்காற்று விதிகள் இந்தியாவின் உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகமாகவே கருதப்படுகிறது. Peoples’s Union for Civil Liberties Vs Union of India AIR 1997 SC 568 - என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், உள்நாட்டுச் சட்டத்துடன் முரண்படாத சர்வதேச வழக்காற்று விதிகள், இந்தியாவின் உள்நாட்டுச் சட்டத்துடன் ஒன்றிணைக்கப் பட்டுவிட்டதாகவே கருதப்பட வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் சட்ட நிலையாகும் என்று கூறியுள்ளது.
A.P.Polution Control Boar-Vs-prof M.V.Nayusu,1999 SCC 712-என்ற வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் சர்வதேசச் சட்டத்pன் வழக்காற்று விதியாகிய முன்னெச்சரிக்கைக் கோட்பாட்டினை (Precautionary Principle) அங்கீகரித்து உள்நாட்டுச் சட்டத்தில் பொருத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச உடன்படிக்கைகளைப் பொறுத்தவரை இந்தியாவில் நடைமுறை வழக்கங்களைத் தீர்மானிக்கும் கடமையை இந்திய உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளது. ஏனெனில், இந்திய உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளது. ஏனெனில் இந்திய அரசமைப்பின்படி சர்வதேச உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவதும், ஏற்புறுதி செய்வதும் நிர்வாகத் துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். ஆனால் நிர்வாகத் துறையால் ஏற்புறுதி செய்யப்பட்ட சர்வதேச உடன்படிக்கையை உள்நாட்டுச் சட்ட அமைப்பு முறைக்குள் நிறைவேற்றுவதற்கு உரிய சட்டமியற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உரியதாகும் என்று ஷரத்து-523 கூறுகின்றது. ஆனால் சர்வதேச உடன்படிக்கைகளை இந்தியாவின் உள்நாட்டு நீதிமன்றங்களில் நிறைவேற்றுவது தொடர்பான ஒழுங்கு முறை விதிகளை வகுக்கும் சட்டம் எதனையும் ஷரத்து 253-இன்படி இந்திய நாடாளுமன்றம் இது நாள் வரை இயற்றவில்லை.
Birma-Vs-Sate of Rajasthan AIR 1951 Raj 127-என்ற வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றமும், State of madras-Vs-C.G.Menon,AIR 1954 SC 517-என்ற வழக்கில் உச்ச நீதிமன்றமும், சர்வதேசச் சட்டத்தின் ஒரு பாகமாகிய சர்வதேச உடன்படிக்கைகள், உரிய சட்டம் இயற்றப்படாத நிலையில் உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகமாக ஆகாது என்று தீர்ப்பளித்துள்ளன. ஆனால் இந்தச் சட்ட நிலை படிப்படியாக பல்வேறு தீர்ப்புகளில் மாறிக் கொண்டே வந்து இறுதியாக, Vishaka-Vs-Sate of Rajasthan AIR 1997 SC 3011-என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், உள்நாட்டு சட்டத்தில் வெற்றிடமாக உள்ள ஒரு விஷயம் குறித்து சர்வதேச உடன்படிக்கை ஒன்று இருக்குமானால், அது குறித்த உள்நாட்டுச் சட்டம் தனியாக இயற்றப்படாவிட்டலும் அதனை உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு பாகமாக எடுத்தக் கொள்ளலாம் என்ற நிலையை எட்டியுள்ளது. அதனால் தான் அலெக்ஸான்ட்ரோவிச் “எல்லா உடன்படிக்கைகளும் உள்நாட்டுச் சட்டம் இயற்றப்பட்டால் தான் இந்தியாவின் உள்நாட்டுச் சட்டத்தில் செயல்படுத்தப்பட முடியும் என்று சொல்ல முடியாது. தனிநபர் உரிமைகளைப் பாதிக்கும் உடன்படிக்கைகளக்கு மட்டுமே சட்டம் தேவை: மற்ற உடன்படிக்கைகளுக்கு சட்டம் தேவையில்லை என்றே இந்திய நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளன” என்று கூறுகிறார்.
சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டில் நிறைவேற்றுவது தொடர்பான பிறநாடுகளின் நடைமுறை வழக்கங்கள் ஒரே சீரானவையாக இல்லை. இருப்பினும் பிறநாடுகளின் நடைமுறை வழக்கங்களை பொதுவாக பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
பொதுவாக எல்லா நாடுகளிலும் உள்நாட்டு அரசின் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு கூடுமானவரை செயல்வடிவம் கொடுக்கும் வகையிலேயே உள்நாட்டுச் சட்டத்திற்கு பொருள் விளக்கம் காண வேண்டும் என்ற நடைமுறை நீதிமன்றங்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது.
ஆதாரம் : சரவணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
வெளியிடு : திணமனி
கடைசியாக மாற்றப்பட்டது : 7/8/2020
சர்வதேச சட்டத்தின் மூலாதாரங்கள் குறித்து இங்கு விவ...
சர்வதேச சட்டத்தின் இயல்பும் அடிப்படையும் (Nature a...
சர்வதேச சட்டத்தின் மூலாதாரங்கள் - பாகம் 2 பற்றி இங...