অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை

உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை

சொத்தை பங்கீடு செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் ஆவணங்களில் உயிலுக்கும் இடம் உண்டு. தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய சொத்து தான் விருப்பப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உயில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக ஒருவருடைய சொத்து அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு போய் சேரும்.

சுயசம்பாத்திய சொத்து

ஆனால் உயில் அப்படிப்பட்டதல்ல. தன்னுடைய வாரிசுகளுக்கும் எழுதி வைக்கலாம். மற்றவர்களுக்கும் எழுதி வைக்கலாம். வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு எழுதி வைத்தால் வாரிசுகள் அதை எதிர்க்க முடியாது. ஆதலால் பிரியமானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் உயிலை எழுதி வைக்கலாம்.

எனினும் உயில் எழுதுவதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. ஒருவர் தான் உரிமை கொண்டாடும் அத்தனை சொத்தையும் உயிலாக எழுதிவைக்க முடியாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்துக்கு மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும். தன்னுடைய தந்தை வழியில் வந்த பூர்வீக  சொத்துக்கு உயில் எழுதி வைக்க முடியாது.

விருப்பப்பட்ட நபர்கள்

அந்த சொத்தை பாக பிரிவினை மூலம் தனது பெயருக்கு பதிவு செய்து இருந்தாலும் அதற்கு உயில் எழுதி வைக்க முடியாது. அந்த சொத்துக்கு வாரிசுகள்தான் உரிமை கொண்டாட முடியும். ஆனால் முழுக்க, முழுக்க தன்னுடைய சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்க முடியும். எனினும் அது தன்னுடைய உழைப்பினால் மட்டுமே சேர்க்கப்பட்ட சொத்து என்பதை உறுதிபடுத்தி கொண்டால் மட்டுமே எழுதும் உயில் செல்லுபடியாகும்.

ஒருவர் சுயமாக சேர்த்த சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு எழுதி வைப்பதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அவர் தன்னுடைய வாரிசுகளை மட்டுமே கருத்தில் கொண்டு உயில் எழுதி வைத்தால் அந்த சொத்தை பங்கு பிரிப்பதற்கு வாரிசு கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். அந்த சொத்து மனைவிக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துவிடும்.

மனைவிக்கு சொத்து

வாரிசுகளுக்கு எழுதி வைத்தால் மனைவிக்கும் அதில் பங்கு கிடைத்துவிடும் என்று கருத முடியாது. அந்த சொத்துக்கு மனைவி எந்த வகையிலும் உரிமை கோர முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே ஒருவர் சுய சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்த சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு உயில் எழுதி வைப்பதாக இருந்தால் மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதுவது நல்லது.

அதேபோல் தன்னுடைய சுய சம்பாத்திய சொத்து முழுவதையும் மனைவி பெயரில் மட்டும் எழுதி வைப்பதும் சிக்கலை ஏற்படுத்தும். உயிலில் மனைவி பெயரை மட்டும் குறிப்பிட்டால் வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது. தனது மனைவி பெயரில் எழுதி வைத்தால் வாரிசுகளுக்கு சொத்து போய் சேர்ந்துவிடும் என்று கருதிவிட முடியாது. அது அவருடைய மனைவிக்கு மட்டுமே உரிய சொத்தாக மாறிவிடும்.

விருப்பப்படி சொத்து பங்கீடு

அவர் அந்த சொத்தை யாருக்கு கொடுக்க விரும்புகிறாரோ அவருக்குதான் அந்த சொத்து போய் சேரும். நான்கு வாரிசுகளில் மூன்று பேருக்கு மட்டுமே சொத்தை  பாகம் பங்கிட்டு பகிர்ந்து கொடுத்தால் அது செல்லுபடியாகும். நான்காவது வாரிசு தனக்கு பாகம் பிரித்து தரவில்லை என்று எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. மேலும் வாரிசுகளுக்கும் சம அளவில் சொத்து பிரிக்கப்பட வேண்டும் என்று நிர்பந்திக்கவும் முடியாது. மனைவி தனது காலத்துக்கு பிறகு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பங்கு  என்று குறிப்பிடுகிறாரோ அந்த பங்கை மட்டுமே பெற முடியும்.

ஒருவருக்கு அதிகமாக கிடைத்தால் மற்றவர் அதை எதிர்க்க முடியாது. இதனால் வாரிசுகளுக்கு இடையே தேவையற்ற பிரச்சினைகள் எழக்கூடும். மேலும் மனைவி வாரிசுகளை தவிர மற்ற வேறு யாருக்கு வேண்டுமானாலும் சொத்தை பிரித்து கொடுக்கலாம். அது அவருடைய சொத்தாகவே கருதப்படுவதால் அவருடைய விருப்பப்படியே உயில் சொத்துக்கான பங்கீடு அமையும். ஆகவே உயில் எழுதும்போது யாருக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

ஆதாரம் : சார்பதிவாளர் அலுவலகம். தமிழ்நாடு அரசு

கடைசியாக மாற்றப்பட்டது : 6/20/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate