অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

குடியிருப்புகள் பெருக்கம் அதிகரித்து வருவதற்கு ஏற்ப குடியிருப்புகளின் தேவைகள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப புறநகர் பகுதிகளின் எல்லைகள் விரிவாக்கம் அடைந்து வந்தாலும் அங்கும் குடியிருப்புகள் நெருக்கமாக முளைத்த வண்ணம் இருக்கின்றன. உடனே வீடு கட்டி குடியேற முடியாதவர்களின் தேர்வாக வீட்டுமனைகள் அமைந்திருக்கின்றன. முதலீடு நோக்கத்தில் இருக்கும்  பெரும்பாலானோரும் வீட்டுமனைகள் வாங்குவதற்கே ஆர்வம் காட்டுகிறார்கள்.

வீட்டுமனைப்பிரிவு

அதனால் வீட்டுமனைகள் விற்பனை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறைந்த விலையில் கிடைக்கும் இடங்களை குறி வைத்து நிறைய பேர் சொத்து வாங்க முனைப்பு காட்டுகிறார்கள். அந்த மனைகள் பற்றிய தன்மைகளை அறிந்து கொள்வது அவசியம். ஏனென்றால் சில இடங்களில் உரிய அங்கீகாரம் பெறாமல்  வீட்டுமனைகளை ‘லே அவுட்டாக’ பிரித்து விற்பனை செய்வதும் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த மனைகள் அங்கீகாரம் (அப்ரூவ்டு) பெற்ற மனைகளை விட குறைந்த விலையில் கிடைப்பதும் பலர் வாங்குவதற்கு காரணமாக இருக்கிறது.

நிறைய பேர் வீட்டுமனைக்கான அங்கீகாரம் பற்றிய தகவல்களை சரிவர ஆராயாமல் குறைந்த விலையில் கிடைப்பதையே தங்களுக்கு சாதகமான அம்சமாக நினைத்து மனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். எந்த பகுதியில் மனை வாங்கினாலும் அந்த பகுதியை சூழ்ந்திருக்கும் கட்டமைப்பு வசதிகளை மட்டும் கவனத்தில் கொள்ளக்கூடாது. சகல வசதிகளும் நிறைந்திருப்பதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மனை பற்றிய அத்தனை ஆதாரங்களையும் சரிபார்க்க வேண்டும்.

இட ஒதுக்கீடு

ஏனென்றால் வாங்கும் மனை அங்கீகாரம் பெறாததாக (அன் அப்ரூவ்டு) இருந்தால் அந்த மனைப்பிரிவில் வீடு கட்ட அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழும். முக்கியமாக வங்கிக்கடன் கிடைப்பதில் பிரச்சினைகள் தலைதூக்கும். முதலில் மனை வாங்கும்போது அந்த மனைப்பிரிவுக்கு செல்லும் சாலை வசதியை கவனத்தில் கொள்ள வேண்டும். குறுகிய சாலை வசதியை கொண்டிருந்தால் அந்த மனைப்பிரிவை தேர்ந்தெடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

ஏனெனில் சாலையின் அகலம் குறைந்த பட்சம் 23 அடி வரை இருப்பது அவசியம். பெரிய அளவில் ‘லே அவுட்’ போடப்படும் மனைப்பிரிவுகளில் அதற்கு ஏற்ப சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மனைப்பிரிவுகளை விற்பனை செய்ய ‘லே அவுட்’ போடப்படும் போது டி.டி.சி.பி அல்லது சி.எம்.டி.ஏ.விடம் அனுமதி பெற வேண்டும். பெரிய அளவில் போடப்படும் அத்தகைய ‘லே அவுட்’டுகளில் பூங்கா, சமுதாயக் கூடம், பள்ளிக் கூடம், கடைகள், பொது பயன்பாடு இடம் போன்றவற்றுக்கு  இடம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

அடிப்படை வசதி

அப்படி ஒதுக்கீடு செய்யும்போது மனைப்பிரிவுகளில் குறிப்பிட்ட பகுதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான்  மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சிலர் அப்படி செய்யாமல் அனைத்து மனைப்பிரிவுகளையும் விற்பனை செய்து விடுவதன் மூலம் மனை வாங்குபவர்கள் பிரச்சினையை சந்திக்க நேரிடும். எனவே மனை வாங்கும்போது அதற்கு செல்லும் சாலை வசதியை கவனத்தில் கொள்வதுடன் பொது பயன்பாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு சென்று அந்த மனை பற்றிய விவரங்களை சரி  பார்ப்பது நல்லது.

முக்கியமாக தெரு விளக்கு, குடிநீர் வசதி, சாக்கடை வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அந்த மனைப்பிரிவில்  போதிய இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். வீடு கட்ட அனுமதி பெறுவதிலும் பல வகைகளில் பிரச்சினைகள் ஏற்படும். எனவே மனைப்பிரிவுகளில் வீட்டுமனை வாங்கும்போது கவனமாக செயல்பட வேண்டும்.

ஆதாரம் : டெய்லி தந்தி

கடைசியாக மாற்றப்பட்டது : 6/23/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate