অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஸ்மார்ட் நகரங்களுக்கான ஸ்மார்ட் வீட்டு வசதி

ஸ்மார்ட் நகரங்களுக்கான ஸ்மார்ட் வீட்டு வசதி

நோக்கம்

நாட்டின் தற்போதைய நகரமயமாதல் சவாலை எதிர்கொள்ளும் வகையில் இந்திய அரசு நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஸ்மார்ட் நகரங்கள் என்ற முன்னோடி திட்டத்தை இறுதியாக ஆரம்பித்து உள்ளது. இந்தியாவில் வசிக்கும் மக்களில் 31 சதவிகித மக்கள் தொகையினரே நகரங்களில் வசிக்கும் சூழல் இருந்தாலும் இந்த மக்கள் தொகையினர்தான் 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 63 சதவிகிதம் பங்களித்து உள்ளனர். இந்தப் பங்களிப்பு 2030ஆம் ஆண்டில் 75 சதவிகிதமாக உயரக் கூடும். பெளதீக, சமூக, பொருளாதார மற்றும் நிறுவன உள்கட்டமைப்பு ஆகியவற்றின் விரிவான அபிவிருத்தியை இது நாடி உள்ளது. ஏனெனில் இத்தகைய வளர்ச்சி ஏற்படுத்தும் சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டியிருக்கிறது.

ஸ்மார்ட் நகரங்கள் என்ற திட்டமானது நகரங்கள் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உள்கட்டமைப்பில் தண்ணீர் விநியோகம், மின்சாரம், துப்புரவு, போக்குவரத்து, வீட்டுவசதி, டிஜிட்டல் இணைப்பு, நிலையான சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பாதுகாவல், ஆரோக்கியம், கல்வி, குடிமக்கள் பங்கேற்புடன் சிறந்த ஆளுகை ஆகியன அடங்கும்.

இவை அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருப்பது நிதி ஆதாரம்தான். இந்த அம்சம் அதிக அளவு பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் அதாவது சுமாராக ரூ.50,000 கோடி குறைந்த செலவில் ஒதுக்கீடு மூலம் எதிர்கொள்ளப்படுகின்றது. அதாவது ஒரு நகரத்திற்கு ஒவ்வோராண்டும் ரூ.100 கோடி என்ற கணக்கில் இது தயாரிக்கப்பட்டு உள்ளது. 100 நகரங்களுக்கு 5 ஆண்டுகள் என்ற காலஅளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வர இருக்கும் இந்த நிதியோடு மேலும் நிதி ஆதாரமானது பல்வேறு ஆதாராங்களில் இருந்து திரட்டப்பட உள்ளது. ஒட்டுமொத்த செயல்முறையிலும் திறன் என்பதே ஸ்மார்ட் என்ற குணாம்சத்தை அடையும் திறவுகோலாக உள்ளது. திறனை அடைவதற்கு நவீன தொழில்நுட்பம் இன்றியமையாதது ஆகும்.

வீட்டு வசதிக்கான தேவைகள்

அரசாங்கப் புள்ளிவிவரப் படி இந்தியாவின் நகரப்பகுதிகளில் குடியிருப்பு பற்றாக்குறை என்பது சுமார் 25 மில்லியன் வீடுகள் ஆகும். எப்படி கற்பனை செய்து பார்த்தாலும் இந்த எண்ணிக்கை எளிதில் நிறைவு செய்ய முடியாத மிகப் பெரிய எண்ணிக்கையாக உள்ளது. நாட்டில் வீட்டுவசதிக்கான தேவை மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லாத நிலையில், இந்தப் பிரச்சனை கிராமப்புறப் பகுதிகளைவிட நகரப்பகுதிகளில் மேலும் தீவிரமாக உள்ளது. மற்றப் பிரிவினரைவிட எந்தப் பிரிவினருக்கு வீட்டுவசதி அதிக அளவில் தேவையாக இருக்கிறது எனப் பார்க்கும் போது இந்தப் பிரச்சனை மேலும் சிக்கலானதாக மாறுகிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பங்களுக்கு நியாயமான விலையில் (வாங்கக் கூடிய விலையில்) வீடுகள் தேவைப்படுகின்றன.

விரைவாகவும் அதிக அளவிலும் வீடுகளைக் கட்டுவதற்கு நவீன தொழில்நுட்பம்தான் கை கொடுக்கும். பெரிய அளவிலான வீட்டுவசதி என்பது தொழிற்சாலை சார்ந்த பேரளவு உற்பத்தியாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் நாம் வீடு என்பதை அதனளவில் தனித்த ஒரு அலகாக மட்டுமே பார்க்கிறோம். அதாவது மரபான முறையில் தனித்து நிற்கும் அலகாக வீட்டை நாம் பார்க்கிறோம். நம்முடைய இந்தப் பார்வையால் பலன் ஏதும் இல்லை.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வீட்டுவசதி கட்டுமானத்திற்கான தொழில்நுட்பம் பழமையானது. மரபான கட்டுமானப் பொருட்களையும் கட்டுமான முறைகளையுமே நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். மாற்றுவகை கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவது என்பது பரிசோதனை நிலையிலேயே நிற்கிறது. பொறியியல் மற்றும் கட்டிடக்கலை கல்வி நிலையங்கள் பழைய கட்டுமானப் பொருட்களையும் முறைகளையுமே பயன்படுத்துமாறு தொடர்ந்து சொல்லி வருகின்றன. இவை சர்வதேச அளவில் தற்போது பயன்படுத்தாத முறை என்றால் மிகையன்று. ஆய்வுக்கூடத்தில் இருந்து நிலத்திற்கு தொழில்நுட்ப மாற்றம் என்பதும் தொய்வுற்ற நிலையிலேயே இருக்கிறது. இந்திய அரசு "கட்டிட மையங்கள்" என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்த மையங்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக அவ்வாறு நிகழவில்லை. பல மையங்கள் செயல்படாமல் போய்விட்டன. தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக இந்திய அரசு உருவாக்கி உள்ள "கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கவுன்சில்" குறித்து பெரும்பான்மையான கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிடக் கலைஞர்களுக்கும் தெரிவதில்லை. வீட்டுவசதி அணுகுமுறை இந்தியாவில் போதுமான அளவில் இல்லாததோடு காலத்திற்கு ஏற்றவாறு உலகத்தோடு இணைந்தும் இல்லை என்பது வருந்தத்தக்க நிலையாகும்.

தொழிற்சாலை சார்ந்த வீடுகள் உற்பத்தி

தொழில்நுட்பத்துக்கான இந்தியாவில் இருப்பது போன்று அல்லாமல், உலக அளவில் பேரளவு குடியிருப்புகள் கட்டுவது என்பது தொழிற்சாலை சார்ந்த உற்பத்தியாகவே இருப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. அவை:

1. ஏற்றுக் கொள்ளும் தன்மையில் எளிமை மற்றும் வீணாகப் போகுதல் என்ற நிலை இல்லாதிருத்தல்

2. தொழிலக உற்பத்தி கட்டுமான செயலின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.

3. நேரமும் பணமும் அதிகமாகச் செலவாவதில்லை.

4. கட்டிடங்களின் தரத்தை எளிதில் கண்காணிக்க முடியும்.

5. வாங்கக்கூடிய விலையில் வீடுகளை கட்டித் தர முடியும்.

பல வளர்ந்த நாடுகளில் தொழிலாளர் நிலையும் பிரச்சனையாக உள்ளன. எனவே அங்கு கிடைக்கும் குறைந்த நேரத்தில் வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும். இந்த நிர்ப்பந்தம் அவர்களை தொழில்நுட்பங்களை மேம்படுத்தி பயன்படுத்தும் சூழலைத் தந்துள்ளது. இங்கு குறைந்த நாட்களில் விரைவாக வீடுகள் கட்டப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் வீடு கட்டுவது என்பது ஆண்டுக்கணக்கில் ஆகும் ஒரு நிலையாக உள்ளது. சர்வதேச நடைமுறைகள் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் பேரளவு உற்பத்தி முறையில் வீடுகளைத் தயாரிப்பது என்பது தொழிற்சாலை சார்ந்த உற்பத்தியாகவே இருக்கிறது.

இத்தகைய முறையில் தயாரிக்கப்படும் சில வீடுகளின் வகை பற்றி கீழே விவாதிக்கப்படுகிறது:

மாடுலர் ஹோம்

தொழிற்சாலைச் சூழலில் வீட்டுக்கான பல்வேறு பாகங்கள் தயாரிக்கப்பட்டு அவை மனையில் எளிமையாகப் பொருத்தப்படுகின்றன. சுவர்கள், தரை, கூரை, படிக்கட்டு மற்றும் இறுதி வடிமைப்பு என சுமார் 90 சதவிகித வீட்டு வேலைகள் தொழிற்சாலைகளிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஒரு நாளில் ஒரு வீடு என்ற முறையில் முன்பே தயாரிக்கப்பட்ட பாகங்களை பொருத்திவிட முடியும். இதனால் நேரமும் பணமும் செலவாவது குறைவதோடு தரமும் இந்த முறையில் சிறப்பாக இருக்கிறது.

பேனலைஸ்டு ஹோம்

இந்த முறையானது நீண்டகாலம் நீடித்து இருக்கும் வீடுகளை தொழிற்சாலை சூழலில் கட்டுவதற்கு உயர்நிலை கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஏற்றார் போன்ற வடிவமைப்பை செய்து கொள்ள இதில் வாய்ப்பு இருக்கிறது. உதவியுடனான வடிவமைப்புத் திட்டம் கணிப் பொறி மூலம் தனிநபருக்கு ஏற்ற வகையில் வீடுகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. சுவர்களும் கூரைத் தளங்களும் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டு வீடு தேவைப்படும் இடத்திற்கு அனுப்பப்படுகின்றன. அங்கு சில நாட்களிலேயே இவை பொருத்தப்பட்டு வீடு உருவாகின்றது. இந்த வீடுகள் இயற்கை பேராபத்துக்களை எதிர்த்து நிற்கக் கூடியவை. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. ஆதலால் பசுமைச் சான்றிதழ் பெற அங்கீகரிக்கப்படுகின்றன.

லாக் ஹோம்

மரத்தைக் கொண்டு வீடு கட்டுவது என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்பது பொதுவான நம்பிக்கை ஆகும். ஆனால் இதற்கு மாற்றாக வர்த்தக ரீதியில் மரத்துண்டு உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் மேற்கொள்ளப்படுகிறது. மரங்கள் என்பவை புதுப்பிக்கக்கூடிய மூலப்பொருள். எனவே மரத்தால் ஆன வீடு என்பதும் பசுமைச் சான்றிதழுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இவை சீதோஷ்ண நிலைக்கு உகந்த வீடுகள் ஆகும்.

கான்கிரீவால்

இந்த முறை ஐரோப்பிய முறைகளில் மிகப்பிரபலமானது ஆகும். அண்மைக்காலத்தில் இந்த முறையானது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்தக் கட்டுமான அமைப்பு ஒன்றுக்குள் ஒன்றைப் பொருத்தக்கூடிய மாடுலர் முறையில் அமைந்தது. இதற்கு பாலிஸ் டைரீன் பேனல்கள் உதவுகின்றன. இந்தியாவில் தொழிற்சாலை சார்ந்த வீடுகளை கட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியில் முடிந்து விட்டதே என விவாதிக்கலாம். எனவே அந்த முறை மீண்டும் இங்கு வேண்டாம் என்றும் கூறலாம். இந்துஸ்தான் ஹவுசிங் ஃபேக்டரி சோதனை தொடக்ககால முயற்சியாகும். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் போன்றே இதுவும் நஷ்டத்தில் இயங்கியது. அதைச் சுட்டிக்காட்டி தொழிலக வீடு உற்பத்தியை இனியும் மறுக்க முடியாது. எனவே வீட்டு கட்டுமானத்தில் அடிப்படை மடைமாற்றத்தை மேற்கொள்ள இதுவே சரியான தருணமாகும். ஸ்மார்ட் தொழில்நுட்பங்களின் உதவியுடன் வீட்டுவசதி புரட்சியை நோக்கி செல்லுதல் இந்திய சீதோஷ்ண நிலைமைகளுக்கு பொருந்தி வரக்கூடிய நவீன தொழில்நுட்பம் இன்று கிடைக்கிறது. இது சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் தொழில்நுட்பமாகும். சிக்கனமானது இல்லை என்றாலும் மரபார்ந்த கட்டுமானச் செலவுக்கு சற்றேறக்குறைய இருக்கும். இதைத்தாண்டி நேரம், தரம் போன்றவற்றைப் பார்த்தால், பலன்கள் அதிகமாகும்.

இப்போது நாம் செய்ய வேண்டியது உகந்த சூழலை உருவாக்குவதுதான். பொருத்தமான சட்டம், நிதி, தொழில்நுட்ப நடைமுறைகளை ஏற்படுத்தி சர்வதேச நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பங்களை இந்தியாவில் செயல்படுத்த முயல வேண்டும். அவ்வாறு செய்தால்தான் பேரளவு உற்பத்தியை வீட்டுவசதியில் நாம் அடையமுடியும். நாட்டில் வீட்டுவசதி நெருக்கடியை உண்மையாகத் தீர்க்க வேண்டும் என நினைத்தால் நகர மேம்பாட்டு அமைச்சகமும் நகர வறுமை ஒழிப்பு அமைச்சகமும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்க வேண்டும். முதலாவதாக, நமக்கு விநியோகம் தேவைப்படுகிறது. இதற்கு விரைவான கட்டுமானம்தான் ஒரே வழி ஆகும். நவீன கட்டமானத் தொழில்நுட்பங்கள் இதற்கு உதவும். அண்மைக் காலங்களில் பிரிஃபேப்ரிகேஷன் கட்டுமான தொழில் நுட்பம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. பல நிறுவனங்கள் இந்தியாவில் இந்த தொழில்நுட்பங்களை விற்க முனைந்துள்ளன. ஆனால் அரசு இது குறித்து விழிப்பாக இல்லை.

இரண்டாவதாக, இந்த விநியோகத்தை மேற்கொள்ள நிலம் தேவை. அரசு மானியம் வழங்க வேண்டிய தேவை உள்ளது. நிறைய நிலத்தை நகர மேம்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் நிலப் பகிர்வும் அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய செயல்கள் ஆகும்.

மூன்றாவதாக, அனைத்து தர மக்களையும் உள்ளடக்குவதற்கு நமக்கு நிதிக் கடன்கள் தேவை. பெரும்பான்மையான மத்திய தர வகுப்பினர் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் கடன்பெறத் தகுதியில்லாதவர் என்ற எண்ணம் மாற்றப்பட்டு அவர்களுக்கும் கடன் அளிக்க வேண்டும். முன்பே இதைச் சில மைக்ரோஃபைனான்ஸ் வீட்டுவசதி கழகங்கள் செய்யத் தொடங்கிவிட்டன.

இறுதியாக, போக்குவரத்து இணைப்பும் தண்ணீர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத ஹவுசிங் எஸ்டேட்டுகள் போலியான டவுன்ஷிப்புகளாகவே இருக்கும். வீட்டுவசதி என்பது ஒரு பொருளாதார நடவடிக்கை. கிட்டத்தட்ட 260 தொழிற்சாலைகளோடு இது தொடர்பு கொண்டுள்ளது.

அண்டை நாடுகளின் வெற்றிப் பாதைகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் எந்த வகையிலும் நம்மால் முன்னேற்றம் அடைய முடியாது. 2020ல் அனைவருக்கும் வீடு என்பது "ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள்" மூலமாகவே நிகழ முடியும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate