புயலுக்கு அடுத்தபடியாக புதிய புதிய பெயர்களில் தினம் ஒன்றாக அறிமுகமாவது காய்ச்சலாகத்தான் இருக்கும். உடல் வெப்பநி லையை எகிறச் செய்கிற இந்தக் காய்ச்சல், சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடும். பல நேரங்களில் உயிரைப் பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டும். அதனாலேயே குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றாலே பல அம்மாக்களுக்கும் பீதி தலைக்கேறும்.
உடலின் சராசரி வெப்பநிலையானது 98.6 டிகிரி ஃபாரன்ஹீட். சிலருக்கு இதைவிட சற்று கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். வெப்பநிலையானது 100 டிகிரி வரை இருப்பது பிரச்னையில்லை. அதைத் தாண்டினால்தான் கவலைப்பட வேண்டும்.
உடலின் எதிர்ப்பு சக்தி இயக்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் போது காய்ச்சல் வரும். காய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல. அது ஒரு அறிகுறி. பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது, இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும். அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல். சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் காய்ச்சல் வரும் போது அலட்சியம் கூடாது.
பொதுவாக குழந்தைகளுக்கு 5 - 6 வயதுக்கு மேல்தான் எதிர்ப்பு சக்தியில் முன்னேற்றம் தெரியும். எனவே, அவர்களுக்குக் காய்ச்சல் வரும் போது, கூடவே வலிப்பும் வரலாம். இதற்கு ‘ஃபெப்ரைல் ஃபிட்ஸ்’ என்று பெயர். இந்த மாதிரிக் குழந்தைகளுக்கு அடுத்த முறை காய்ச்சல் வரும் போது அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
லேசாக உடல் சூடானாலே போதும்... உடனே ஒரு பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துப் போடுகிற பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அது தேவையில்லை. இன்னும் சிலர் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் போது 3 மணி நேரத்துக்கொரு முறை பாராசிட்டமால் கொடுக்கிறார்கள். அதுவும் தவறு. 100 டிகிரியை தாண்டும் போது, சுத்தமான காட்டன் துணியை குளிர்ந்த தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, நெற்றி, அக்குள் பகுதிகளில் வைத்துத் துடைத்தாலே 80 சதவிகிதம் குணமடையும்.
தேவையில்லாமல் நாமாக மருந்துகள் எடுப்பதன் மூலம் தாமாக உற்பத்தியாகிற எதிர்ப்பு சக்தியை நாமாகவே கெடுக்கிறோம். 100 டிகிரிக்கு அதிகமான காய்ச்சலும், அதீத களைப்பும் இருந்தால் அல்லது காய்ச்சலுடன் கூடவே உளறல், குளிர், ஜன்னி போன்றவை இருந்தாலோ மருத்துவரை நாடுவதே பாதுகாப்பானது. டி.பி, டைஃபாய்டு போன்ற காய்ச்சல்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும். டெங்கு, மலேரியா போன்றவை பரவாது. வீட்டில் ஒருவருக்குக் காய்ச்சல் வந்திருக்கும். மருத்துவரைப் பார்த்து மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பார்.
அடுத்த சில நாட்களில் இன்னொரு நபருக்கும் காய்ச்சல் வந்தால், அவருக்கும் அதே காய்ச்சலாகத்தான் இருக்கும், மருத்துவர் அதே மருந்தைத்தான் பரிந்துரைப்பார் என்கிற தவறான நம்பிக்கையில் தாமாகவே அந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருந்துகள் என்பவை ஒருவரது வயது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து வேறுபடும்.காய்ச்சலுடன் கூடிய தொண்டைக் கரகரப்பு, மூக்கடைப்பு போன்றவற்றுக்குத் தாமாகவே மருந்துக் கடைகளை அணுகி, ஆன்டிபயாடிக் வாங்கி சாப்பிடுவதும் தவறு. வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் எடுக்கக்கூடாது. என்ன மாதிரியான காய்ச்சல், அதன் தீவிரம் என்ன என்பதைப் பொறுத்து, ஒரு மருத்துவரால்தான் சரியான மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும்.
ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும் போது, பிரச்னை சரியானதும் பாதியோடு நிறுத்தவும் கூடாது. முழுக்க குணமானாலும், பரிந்து ரைக்கப்பட்ட மொத்த ஆன்டிபயாடிக்கையும் சாப்பிட்டு முடிக்க வேண்டியது முக்கியம்.
தேவைப்பட்டால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலம் பரிசோதனை, எக்ஸ்ரே போன்றவற்றை எடுக்கலாம்.
ஆதாரம் : குங்குமம் தோழி
கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...