অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

துரத்தும் வைரஸ்

துரத்தும் வைரஸ்

தடுக்கும் வழிகள்

மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல், தும்மல் என்று ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும். வீட்டில் ஒருவருக்கு வந்தால், அடுத்தவருக்குத் தொற்றும். சில காய்ச்சல்கள் கொஞ்சம் கூடுதலாகவே படுத்திவிடும். இதெல்லாம் நமக்குப் புதிதல்ல. ஆனால், சமீபகாலமாக வைரஸ் காய்ச்சல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதிலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் உட்கொண்டு நோயைக் கட்டுப்படுத்திவிட்ட பிறகும்கூட, விரைவிலேயே மற்றொரு காய்ச்சல் தாக்குவதை எப்படிப் புரிந்துகொள்வது? இப்படி வருவது ‘வைரஸ் காய்ச்சலா’ அல்லது ‘மர்மக் காய்ச்சலா’?

சரி, வைரஸ் காய்ச்சல்கள் எப்படிப் பரவுகின்றன? காற்று, தண்ணீர், கொசுக்கள் மூலமே பரவுகின்றன. பொதுவாக உடலுக்குள் சென்றவுடன் 3 முதல் 7 நாட்களுக்குள், வைரஸ் தன் தாக்கத்தைக் காட்ட ஆரம்பித்துவிடும். முறையான மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு 5 முதல் 7 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும். ஆனால், இப்போது சில நாட்களிலோ, சில வாரங்களிலோ இந்தக் காய்ச்சல்கள் திரும்பவும் ஏற்படுவதற்கு என்ன காரணம்?

காய்ச்சலைத் தடுக்க...

“வைரஸ் காய்ச்சல் ஒருவருக்கு வந்திருக்கிறது என்றால், அவர் முழுமையாகக் குணமடைய ஓய்வு மிகவும் அவசியம். ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு வாரம் விடுமுறை எல்லாம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இரண்டு, மூன்று நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு, ஓரளவு சரியானவுடனேயே வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கடுமையாகப் பணிபுரியும்போது மீண்டும் காய்ச்சல் வந்துவிடுகிறது.

வைரஸ் காய்ச்சல் முழுமையாகச் சரியாக வேண்டுமென்றால், நன்றாகக் கொதிக்க வைத்து ஆறிய குடிநீரை அதிகம் பருக வேண்டும். சத்தான, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். மருத்துவச் சிகிச்சையுடன் ஓய்வு எடுத்தாலேபோதும், காய்ச்சல் சரியாகிவிடும்"

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொதுவாகவே அதன் பாதிப்புகள் சில மாதங்கள்வரை இருந்துகொண்டேதான் இருக்கும். ரத்தத்தில் தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள் குறைவது, மூட்டு இணைப்புகளில் வலி எனப் பாதிப்புகள் மூலம் வைரஸ் தன் செயல்பாட்டைக் காட்டிக்கொண்டேதான் இருக்கும். காய்ச்சல் சரியான பிறகும் தொடர்ந்து பாதிப்புகள் இருப்பதை ‘போஸ்ட் வைரல் எஃபெக்ட்’ என்று மருத்துவத்தில் கூறுகிறார்கள்.

“உடலில் பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம்”

பாதிப்புகள் என்ன?

“வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாக்டீரியாவும் சுலபத்தில் தொற்றிவிடும். பாக்டீரியாக்களை அழைத்துக்கொள்ளும் திறன் வைரஸ்களுக்கு உண்டு. இதை மருத்துவத்தில் ‘செகண்டரி பாக்டீரியஸ் இன்ஃபெக் ஷன்’ என்கிறார்கள். இப்போது ஒருவருக்கு ஃபுளூ காய்ச்சல் வந்திருக்கிறது என்றால், பாக்டீரியா தொற்றும் சேர்ந்துகொள்ளும்பட்சத்தில் சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். அதேபோல, சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். எனவே, வைரஸ் காய்ச்சல்களை முழுமையாகச் சரி செய்துகொள்வதே நல்லது.”

கூடுதல் கவனம்

“பொதுவாகக் குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வரும். குழந்தைகள் தண்ணீரில் விளையாட ஆர்வம் காட்டுவார்கள். மழை நீரில் விளையாடுவார்கள். வீட்டுக்கு வந்த பிறகு நன்றாக சோப்பு போட்டுக் கழுவாமல் உணவைச் சாப்பிடுவார்கள். அதன்மூலம் வைரஸ் உடலுக்குள் சென்றுவிடலாம். அதனால் வயிற்றுப்போக்கு, வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம்.

பொதுவாக டெங்கு காய்ச்சலுக்குக் காரணமாகும் கொசுக்கள் காலை வேளையில்தான் கடிக்கும். அதனால், பள்ளியில் இருக்கும் போதோ வீட்டில் இருக்கும்போதோ கொசு கடிக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மழை நீரில் விளையாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தெருவோரங்களில், தள்ளுவண்டியில் விற்கப்படும் உணவுப் பண்டங்களை வாங்கிச் சாப்பிடாமல் இருக்கக் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக 1 முதல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எதுவும் தெரியாது. அவர்களுடைய கையையும், கை விரல்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் இதைச் சொல்லித் தரவும் வேண்டும்”

ஆதாரம் :மருத்துவர் ரவி. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனை.

கடைசியாக மாற்றப்பட்டது : 6/17/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate