অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சிறுநீரக நோய்களை எப்படி தடுப்பது

சிறுநீரக நோய்களை எப்படி தடுப்பது

சிறுநீரக நோய்கள் நோயுற்றவர்களை கொல்லக்கூடியதன்மை பெற்றவை. அவை சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்து இறுதியில் செயற்கையாக சிறுநீரை வெளியேற்றும் டையாலிஸிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யத்  தூண்டும். ஒத்துப் போகக் கூடிய சிறுநீரகங்கள் கிடைப்பது அரிதாகையாலும், அதற்காகக் கொடுக்க வேண்டிய தொகை மிக அதிகமாக இருப்பதாலும், முன்னேறிய நாடுகளில் கூட, 5 லிருந்து 10 சதவீத நோயாளிகளுக்கே டையாலிஸிஸ் சிகிச்சையோ அல்லது மாற்றுச் சிறுநீரகங்கள் பொருத்துவதோ நடக்கிறது. பிறருக்கு அந்த வசதி இல்லாமல் போய் இறக்கவே செய்கிறார்கள். அதற்கு மாற்று மருத்துவமும் அறுவை சிகிச்சையும் கிடையாது. மிக மோசமான நிலையை அடைந்துவிடும் சிறுநீரகபாதிப்பு நோய், என்பது மிகவும் சாதாரணமாகவும் பரவலாகவும் தாக்கக் கூடிய நோயே. அதற்கு எந்தவித குணப்படுத்தும் முறையும் கிடையாது. ஆகவே விரைவாக நோயை அடையாளம் கண்டுகொண்டு, சிகிச்சைப் பெற்று நோயை முற்ற விடாமல் தடுப்பது ஒன்றே சரியான வழி. இதன்மூலம் டையாலிஸிஸ் செய்ய வேண்டிய தேவையை அல்லது மாற்று சிறுநீரகத்தைப் பொருத்த வேண்டிய நாளை ஒத்திப் போடும்.

சிறுநீரக நோய்களை எப்படி தடுப்பது?

உங்கள் சிறுநீரகங்களை என்றைக்கும் உதாசீனப்படுத்தாதீர்கள். இந்த நோய்களைத் தடுக்கும் முறைகள் பற்றியும் அந்த நோய்களுக்கு செலுத்த வேண்டிய கவனம் பற்றியும் இரு வகைகளாகப் பிரித்து கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஆரோக்கியமான நபர் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்.

2. நோய் வந்து விட்டால் அனுசரிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

ஆரோக்கியமானவர் அனுசரிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஏழு வழிகள்

உடலை சரியான எடையில் சுருசுருப்பாக வைத்திருங்கள்

முறையான தேகப் பயிற்சியும் அன்றாடம் உடல் உழைப்புமிக்க வேலைகளும் செய்தால் இரத்த அழுத்தம் சரியான நிலையில் வைக்கப்படும். இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு எல்லைக்குள் இருக்கும்.

சரிவிகித உணவு.

ஆரோக்கியமான உணவையே சாப்பிட்டு வாருங்கள். உணவில் புதிய பச்சை பசேலென்ற காய்களும், பழங்களும் சேர்க்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் மாமிசம் கலந்த உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள். 40 வயதிற்கு மேல் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தம் மிகாமல் பாதுகாக்கவும், சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் உதவும்.

உடல் எடையை தினசரி குறித்து வைக்கவும்

உடல் எடையை, சமச் சீரான உணவு மூலமும், தேகப் பயிற்சி மூலமும் சரிவரப் பேணி வாருங்கள். இது நீரிழிவு நோய்,  இருதய நோய், சிறுநீரக நோய் ஆகியவை வராமல் தடுக்கிறது.

புகைப்ப்பிடித்தல் மற்றும் புகையிலை தவிர்க்கவும்

சிகரட் புகைப்பது, Atherosclerosis எனும் நோயைக் கொண்டு வரும். இது சிறுநீரகங்களுக்குப் போகும் இரத்தத்தைக் குறைக்கிறது. ஆகவே சிறுநீரகங்கள் திறன் மிக்கநிலையில் வேலை செய்யமுடியாது.

வலி கொல்லி மாத்திரைகளை தவிர்க்கவும்

இதை அதுவும் வெகு முறையாகவே வாங்கி எடுத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். ஸ்டீயராய்டாக இல்லாமல் வீக்கத்தைக் குறைக்கும் ibuprofen போன்ற மருந்துகள் காலம் தவறாமல் எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதிக்கும் என்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. வலி நிவாரணத்திற்கு உங்கள் மருத்துவரைக் கண்டு ஆலோசித்து மருந்து வாங்கிச் சாப்பிடுங்கள். சிறுநீரகங்களை அதற்கு பணயம் வைக்காதீர்கள்.

ஏராளமாக குடிநீரைப் பருகுங்கள்

ஒரு நாளைக்கு சுமார் 3 லிட்டர் நீராவது பருகுங்கள். இது சிறுநீரை மேலும் நீர்க்க வைக்கும். இதன்மூலம் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை நீக்கி சிறுநீரக நோய்களை வராமல் தடுக்கலாம்.

வருடத்திற்கு ஒரு முறை, சிறுநீரக சோதனை செய்யவும்

சிறுநீரக நோய்கள் பெரும்பாலும் பொறுமையாக பாதித்துக் கொல்லும் குணமுடையவை. மிக மோசமான நிலைக்கு முற்றும்வரை இந்த நோய்கள் எந்தவித அறிகுறிகளையும் காட்டுவதில்லை. சிறுநீரகங்களை அவ்வப்போது முறையாக சோதித்து அறிய வேண்டும். ஆனால் பெரும்பாலும் இந்த வழிமுறை உதாசீனப்படுத்தவே படுகிறது.

நீரிழிவால் அவதிப்படுபவர்களுக்கு அல்லது உயர்இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அல்லது குடும்பத்தில் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு இது மிகவும் அவசியம். அதுவும் 40 வயதிற்கு மேல் அவசியம் இந்தச் சோதனைகளை மேற்கொள்ளவும். வருடத்திற்கு ஒருமுறை உங்கள் இரத்த அழுத்தம், சிறுநீர் மற்றும் இரத்தத்தில் உள்ள கிரியேட்டினைனின் அளவு ஆகியவற்றை சோதித்துக் கொள்ளவும்.

நோயுற்றவர்களுக்கான முன்னெச்சரிக்கைகள்

சிறுநீரக நோய்களைப் பற்றித் தெரிந்து வைத்திருங்கள்

முகத்தில் வீக்கம், பாதங்களில் வீக்கம், பசியின்மை, வாந்தி எடுத்தல், முகம் வெளிறிப் போதல், நலிவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம், அல்லது சிறுநீரில் புரோட்டீன். இம்மாதிரியான விளைவுகளைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகி சிறுநீரக நோய்களுக்கு உண்டான சோதனைகளை மேற்கொள்ளவும்.

நீரிழிவு நோயுற்றவர்க்கான முன்னெச்சரிக்கைகள்

நீரிழிவு நோய் உடைய ஒவ்வொரு நோயாளியும் சிறுநீரக நோய் வராமல் தடுத்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். நீரிழிவு ஒன்றே மிக மோசமாக உருவாகும் சிறுநீரக நோய்களுக்கு முதற்காரணம். 45 சதவீத நோயாளிகள் யாவரும் நீரிழிவு சம்பந்தப்பட்ட சிறுநீரக நோயை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆரம்ப நிலையிலேயே நீரிழிவு நோயை கண்டறிவதற்கு எளிய சோதனைகள் இருக்கின்றன. ஒரு மாதத்திற்கு மூன்று முறைகள் இரத்த அழுத்த நிலையை சோதிக்கவும். அதே வரிசையில் சிறுநீரையும், சிறுநீரில் புரோட்டீன் இருக்கிறதா என்பதையும் சோதிக்கவும். நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோயை மிக விரைவாக கண்டறிய சிறு நீர்ப்பரிசோதனையே சிறந்த வழி. இது வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். சிறுநீரகங்களின் செயல்பாட்டுத் திறனைக் கண்டறிய இரத்தத்தில் உள்ள கிரியேட்டினைனையும் (and eGFR) ஐயும் சோதிக்கவும்.

உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரோட்டீன் , வீக்கங்கள், அடிக்கடி இரத்தத்தில் சர்க்கரை குறைந்து போதல், இன்சுலினின் தேவை குறைதல் மற்றும் நீரிழிவுடன் கூடிய கண் நோய்கள் ஆகியவை சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான அறிகுறிகளாகும்.

இவ்வகை அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனுக்குடன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும்.

நீரிழிவோடு சம்பந்தப் பட்ட நோய்களை விரட்ட எல்லா நீரிழிவு நோயாளிகளும், இரத்த அழுத்தத்தை 130/80 மி.மி.க்குள் வைத்தாக வேண்டும். உடன் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளை விழுங்கல் வேண்டும். அவர்கள் உணவில் புரோட்டினைக் குறைக்க வேண்டும். லிபிட் திரவத்தை அதிகமாகாமல் குறையச் செய்ய வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக அனுசரிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

இரண்டாவதாக வரும் மோசமான நிலை உயர் இரத்த அழுத்தமாகும். இதுவே சிறுநீரகங்களை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. இது தவிர்க்கப் படக் கூடியதே. உயர் இரத்த அழுத்தத்துடன் கூடிய நோயாளிகளுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் வெளிப்படையாகத் தெரியாததினால், அவர்கள் ஒழுங்கற்ற இடைவெளிகளில் மருந்து உட்கொள்ளுகிறார்கள். அல்லது சிகிச்சையை தவிர்த்தும் கூட விடுகிறார்கள். ஒரு சிலர் மருந்து ஒரு தொந்தரவு என்று நினைத்து சிகிச்சையை நிறுத்தி விடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. கட்டுக்குள் வைக்கப் படாத உயர் இரத்த அழுத்தத்தை நீண்ட நாட்கள் இருக்கும்படி விட்டு விட்டால், சிறுநீரகங்களை மிக மோசமாக பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளிவிடும். இருதயங்கள் தாக்கப்பட்டு பக்கவாத நோயும் தாக்கலாம்.

சிறுநீரக நோய்களை தடுக்க, எல்லா உயர் இரத்த அழுத்த நோயாளிகளும், மருத்துவத்தை ஒழுங்கு நிறைந்த இடைவெளிகளுடன் கடைப்பிடிக்க வேண்டும்.

நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கான முன்னெச்சரிக்கைகள்.

நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) குணப்படுத்த முடியாதது ஆகும். ஆனால் விரைவிலேயே அதன் தாக்கத்தைக் கண்டுகொண்டு,  உணவுக் கட்டுப்பாடு மற்றும் சரியான சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் டையாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியநாளை ஒத்திப் போடலாம்.

ஒவ்வொரு நாளும் அவசியம் இரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். மிக மோசமாக சிறுநீரகங்கள்தாக்கப்படும் நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம், நீர் வற்றிப் போதல், சிறுநீர்ப் பாதையில் தடுப்புக்கள், செப்ஸிஸ், கொடுக்கப்பட்ட மருந்துகளினால் வரும் விஷ விளைவுகள், இவற்றை சோதித்து அறியவும். இந்த பாதிப்புக்களை முறையாக அகற்ற முயற்சி செய்தாலே சிறுநீரகங்களின் மிக மோசமான பாதிபுக்கள் குறையும்.

பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் (Polycystic kindney disease) இருப்பதை அறிந்து மருத்துவம் மேற்கொள்வது எப்படி?

தன்மெய் ஓங்கிய பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் (Autosomal dominant polycystic kidney disease (ADPKD)) என்பது  பொதுவாக குடும்பப் பாரம்பரியத்தால் வரக் கூடியது. டையாலிஸிஸ்ஸுக்கு வரக் கூடிய நோயாளிகளில் 6 லிருந்து 8 சதவீதம் இத்தகைய நோயாளிகளாக இருக்கிறார்கள்.

இந்நோயாளியை ஒலிக்கு அப்பால் எழும் அலைகளைக் கொண்டு செய்யப்படும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்படிச் செய்தாலே மிக விரைவில் இந்த நோயைக் கண்டுணர முடியும். இந்த நோயை குணப்படுத்துவது என்ற சாத்தியமற்றது. ஆனால் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, சிறுநீரகப் பாதையை தொற்றுக்களிலிருந்து குணப்படுத்துவது உணவில் கட்டுப்பாடு போன்ற விஷயங்களை கவனிக்க முடியும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பாதைத் தொற்றுக்களை விரைவாகக் கண்டு கொள்ளுதல்

எளிதில் விளக்க முடியாத காய்ச்சலினால் ஒரு குழந்தை தவிக்க ஆரம்பிக்குமானால், உடனே மேற்கண்ட தொற்று இருக்கிறதா என்பதை சோதியுங்கள். அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல் காணுதல், பசியின்மை, அல்லது எடை மிக மெதுவாகக் கூடுதல் போன்றவை இதன் அறிகுறிகள்.

இந்த தொற்று நோயால் காய்சலுடன் கூடிய நிலையில் சிறுநீரகங்கள் மோசமாக பாதிக்கப்படும். அதிலும் மிகத்தாமதமாக சிகிச்சை செய்தாலோ அல்லது முழுமையாக இல்லாத சிகிச்சையைக் கையாண்டாலோ சிறுநீரகங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் சிறுநீரகங்களில் உள்ளே ஒரு வெட்டுக் கோடு, சிறுநீரகங்களின் குறைவான வளர்ச்சி, உயர் இரத்த அழுத்தம், மற்றும் சிறுநீரகங்கள் செயலிழத்தல் (வயது முதிர்ந்த நிலையில் வரும்) போன்ற அபாயங்களை ஏற்படுத்தும்

மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக, குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பாதையில் வரும் தொற்றுக்களை விரைவாகக் கண்டறிவது மட்டுமல்லாமல், முறையான சிகிச்சையும் அளிக்க வேண்டும். நோயின் பின்னணியில் உள்ள அபாய சாத்தியக் கூறுகளை உடனடியாகக் கண்டறிய வேண்டும். Vesicoureteric reflux என்பது மிகப் பெரும்பாலும் காணப்படும் குறையாகும். இது நோய்தாக்கப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேருக்கு காணப்படுகிறது. இந்த தொற்று இருக்கும் குழந்தைகளுக்கு இடைவிடாது தொடரக் கூடிய மருத்துவம் மிக மிக அவசியம்,

வயதானவர்களுக்கு அடிக்கடி வரக் கூடிய சிறுநீரகப் பாதைத் தொற்று.

சிறுநீரகப் பாதையில் தடுப்பு அல்லது கற்கள் உருவாகும் நோய் போன்றவை சிகிச்சை தராவிட்டால் சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே நோயின் பின்னணியில் உள்ள காரணங்களை ஆராயந்து விரைவாகவே செயல்படுதல் வேண்டும்.

கற்கள் உருவாகும் நோய்களையும்  BPH போன்ற நோய்களையும் எப்படி கட்டுப்படுத்துவது.

இவர்களில் பெரும்பாலோருக்கு வெளிப்புறத்தில் அறிகுறிகள் தென்படுவதே இல்லை. ஆகவே நோய் இருப்பதை அவர்கள் உடனுக்குடன் கண்டு கொள்வது கடினம். இதனால் சரியான சமயத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய சிகிச்சையும் தவறுகிறது. வயதான பலருக்கு BPH எனும் நோயின் ஆரம்பகால அறிகுறிகள் பெரும்பாலும் தவற விடப்படுகின்றன. முறையான மருத்துவ முயற்சிகளும் காலத்தே எடுக்கப் படும் சிகிச்சைகளும் சிறுநீரகங்களை பாதுகாக்கும்.

இள வயதில் உருவாகும் உயர் இரத்த அழுத்தத்தை உதாசீனம் செய்ய வேண்டாம்.

இளவயதில் வரக் கூடிய உயர் இரத்த அழுத்தம், கொஞ்சம் அசாதாரண விளைவே. இதன் பின்னணியைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு ஆராய்ச்சியே செய்தாக வேண்டும். இளவயதில் கடுமையாகத் தாக்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிறுநீரக நோய்களே மிக முக்கிய காரணங்களாகும். ஆகவே ஒவ்வொரு நோயாளியும் முறையான சோதனை வரிசைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நோய்களை விரைவாகக் கண்டறிய வேண்டும்.

கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு விரைவில் சிகிச்சை அளிப்பது எப்படி?

சிறுநீரக செயலிழப்புக்கு மிக முக்கியமான காரணங்கள் (திடீரென்று அது செயலிழத்தல்) வயிற்றுப் போக்கு, வாந்தி எடுத்தல், Falciparum Malaria, உயர்இரத்த அழுத்தம், செப்ஸிஸ், ஒரு சில மருந்து வகைகள் (Ace Inhibitor NSAIDS) போன்றவை ஆகும். விரைவிலேயே கண்டு பிடிக்கப்பட்டு முறையான சிகிச்சை இவற்றிற்கு அளித்தால் சிறுநீரக செயலிழப்பை தடுக்கலாம்.

மருந்துகள் புழங்கும்பொழுது ஒரு எச்சரிக்கை.

மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ளப்படும் மருந்துகளினால் சிறுநீரகங்கள் பழுதடையும். இத்தகைய மருந்துகளை, தலைவலிக்கும் உடல் வலிக்கும் உட்கொள்ளாதீர்கள். மருத்துவ சிபாரிசின் பேரிலேயும், அறிவுரைகளின் பேரிலும் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளே சாலச்சிறந்தவை. ஆயுர்வேத, சித்த மருந்துகள் மற்றும் சீன நாட்டு மூலிகைகளில் செய்யப்பட்ட மருந்துகள் போன்ற இயற்கையான மருந்துகள்யாவும் உண்மையிலேயே தீங்கற்றவை என்று நினைப்பது மிகத்தவறு. ஆயுர்வேத மற்றும் சித்த மருந்துகளில் கனமுள்ள உலோகங்கள் காணப்பட்டால் சிறுநீரகங்களுக்கு அபாயம் விளைவிக்கும்.

ஒரேசிறுநீரகத்தில் வாழும்பொழுது எடுத்துக் கொள்ளப் படவேண்டிய முன்னெச்சரிக்கை.

ஒரே சிறுநீரகத்தோடு வாழக்கூடியவர்கள் ஆரோக்கியமாகவே வாழ்ந்தாலும் அவர்கள் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

  • இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
  • நிரம்ப நீரோ திரவங்களோ பருக வேண்டும்.
  • என்றைக்கும் ஆரோக்கியமான உணவையே உட்கொள்ள வேண்டும்.
  • உப்பு அதிக அளவில் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். புரோட்டீன் அதிகமுள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
  • மிக முக்கியமாக, அடிக்கடி முறையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil/

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate