অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சிறுநீரகங்களின் நோய்களை கண்டறியுதல்

சிறுநீரகங்களின் நோய்களை கண்டறியுதல்

'காலத்திலேயே கிழிந்த துணியை தைத்து விட்டால், துணி மேலும் கிழியாது" என்பது பழமொழி. ஆங்கிலத்தில் ‘சிரிஞி’ என்று சொல்லப்படும் மிக மோசமான சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த முடியாது. இதன் மிக மோசமான நிலைகளை குணப்படுத்துவது என்பது மிக மிகச் செலவு மிக்க ஒன்றாகும். இவ்வகை மோசமான நோயை உடையவருக்கு எந்தவித அறிகுறியும் வெளிப்படத் தெரியவே தெரியாது. அப்படி ஒருவேளை ஆரம்ப காலங்களிலேயே அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், அதை மருத்துவத்தால் குணப்படுத்த வாய்ப்பு உண்டு. ஆகவே சிறுநீரகக் கோளாறுகள் இருப்பதாக சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வது சாலச்சிறந்தது.

யார் சிறுநீரகக் கோளாறுகள் வருவதற்கான அபாயம் உள்ளவர்கள்?

எவருக்கும் சிறுநீரகக் கோளாறுகள் வரலாம். ஆனால் அதிகமான அபாயத்திற்கு உள்ளாகக்கூடியவர் யார் என்றால் –

  • சிறுநீரக நோயின் அறிகுறிகள் ஏற்கனவே காணப்பட்டவர்கள்
  • ஏற்கனவே நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள்
  • குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் இருந்தால் அல்லது இரத்த அழுத்தம் இருந்தால்
  • புகை பிடிப்பவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் அல்லது 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்
  • வெகு பல வருடங்களாக வலி நிவாரணி மருந்துகளை உபயோகிப்பவர்கள்
  • பிறப்பு முதலே சிறுநீர்ப் பாதையில் பிரச்னை உடையவர்கள்

ஆரம்ப காலத்திலேயே அறிகுறிகளைக் கண்டு கொள்வது இம்மாதிரியான நபர்களுக்கு சிகிச்சைகளை துவங்க நன்மை பயக்கும்.

சிறுநீரக பிரச்னைகளை எப்படி சோதித்து அறிவது? பெரும்பாலும் நடத்தப்படும் சோதனைகள் யாவை?

பல்வேறு சிறுநீரக கோளாறுகளை கண்டறிய மருத்துவர் நோயாளியின் உடல் சரித்திரத்தை படித்து முழுமையாக ஆராய்ந்து பின், இரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டு அதோடு பிற சோதனைகளையும் செய்ய பரிந்துரை செய்வார். இவை எல்லாம் காலம் தவறாமல் அடிக்கடி செய்து வரல் வேண்டும்.

சிறுநீரை சோதித்தல், இரத்தத்தை சோதித்து அறிதல் மற்றும் ரேடியக் கதிரியக்கத்தைக் கொண்டு சோதித்தல் போன்றவை பெரும்பாலும் நடத்தப்படும் சோதனைகள் ஆகும்.

சிறுநீர்ப் பரிசோதனை

வெவ்வேறு வகையான சிறுநீர்ப் பரிசோதனைகளும் வெவ்வேறு வகையான சிறுநீரகப் பிரச்னைகளைப் பற்றிச்சொல்லும்,

வழக்கமாக எடுக்கப்படும் சிறுநீர்ப் பரிசோதனை

  • இது எளிதான மற்றும் செலவுகுறைவான பரிசோதனையாகும். இதனால் தெரியவரும் முடிவுகள் மிக முக்கியமான தடயங்களைக் காட்டுகின்றன. ஆனால் சாதாரண சோதனைக் குறிப்புக்களைக் கொண்டு சிறுநீரகப் பிரச்னைகள் முழுவதுமாக இல்லை என்று சொல்லி விட முடியாது.
  • சிறுநீரில் புரோட்டீன் இருப்பது அனேக சமயங்களில் தெரிய வரும். அதை உதாசீனம் செய்யக் கூடாது. அதுவே சம்பந்தப்பட்ட நோயாளிக்கு முதல் தடவையாக இருக்கலாம். அல்லது மிக ஆரம்ப நிலையாக இருக்கலாம். அல்லது மிக மோசமான நிலையின் ஒரு எச்சரிக்கை அம்சமாகக் கூட இருக்கலாம். ஏன் இருதயக் கோளாறின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். குறிப்பாக நீரிழிவு நோயின் ஆரம்பக் குறிகளாகக் கூட இருக்கலாம்.
  • சிறுநீரில் காணப்படும் சீழ்த் துளிகள், சிறுநீர்ப் பாதையில் தொற்று இருப்பதைக் காட்டுகிறது.
  • புரோட்டீன் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களும் சிறுநீரில் காணப்பட்டால், அவை பரிசோதனைக்கு சில முக்கியமான தடயங்களைக் காட்டும். முக்கியமாக சிறுநீரகங்கள் வீக்கமடைந்த நிலையையும் நோய்களையும் காட்டும். (அதாவது glomerulonephritis என ஆங்கிலத்தில் சொல்லப்படும் நோயைக் குறிக்கும்.

Microalbuminuria

Microalbuminuria எனப்படும் நிலை மிகச்சிறிய அளவு புரோட்டீன் சிறுநீரில் இருப்பதைக் காட்டும். இந்த சோதனையே நீரிழிவு நோயில் சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்டிருப்பதை உணர்த்தும், முதலாவதும் மிக விரைவில் எடுக்கப்பட்டதுமான சோதனையாகும். இந்த நிலையில் நோயை தடுத்து திருப்பி விட வாய்ப்பு உண்டு. ஆனால் முறையான சிகிச்சை அவசியம். இந்த புரோட்டின் (ஆல்புமன்) வழக்கமான சோதனை வரிசையில் தெரிய வருவதில்லை.

சிறுநீரை வைத்து நடத்தப்படும் இதர சோதனைகள்

1. 24 மணி நேரம் கிடைக்கும் சிறுநீரை வைத்து ஆல்புமனைக் கண்டு பிடித்தல். புரோட்டீன் சிறுநீரில் இருப்பதைக் கண்டுபிடிக்க இந்த பரிசோதனை அவசியம், 24 மணி நேரத்தில் உடலிலிருந்து நீங்கி வெளிவரும் புரோட்டீனை அளக்க இந்த பரிசோதனை மிகவும் அவசியம். நோயின் வீரியத்தை அறிவதையும் புரோட்டின் இழப்புக்கு எடுத்துக் கொள்ளும் மருத்துவத்தின் பயனையும் அறிய வைக்கிறது.

2. கல்ச்சர் மற்றும் மருந்தின் விளைவுகளைப் பற்றிய சோதனை: இந்த சோதனை 48 லிருந்து 72 மணி நேரங்களுக்குள் ஏற்படும் விளைவுகளைச் சோதிக்கிறது. சிறுநீரில் உள்ள பாக்டீரியாவின் தன்மையை அறிய வைக்கிறது. அந்த பாக்டீரியாதான் சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் தொற்றைப் பற்றியும், தொற்றினுடைய வீர்யத்தைப் பற்றியும், மருத்துவத்தில் உபயோகப்படும் ஆன்டிபயாடிக் மருந்தைப் பற்றியும் சொல்கிறது.

3. அமிலத்தையும் எலும்புருக்கி நோய் பாக்டிரியா கலப்பையும் எடுத்துக் காட்டும் பரிசோதனை: இந்த சோதனை சிறுநீர்ப்பாதையில் டீ. பி. நோய் இருந்தால் எடுத்துக் காட்டும்.

இரத்தப் பரிசோதனைகள்

பல்வேறு வகையான இரத்த பரிசோதனைகள் செய்வதன்மூலம் மாறுபட்ட சிறுநீரக பிரச்னைகளை பற்றி அறியலாம்.

கிரியேட்டினைன் மற்றும் யூரியாவைக் காட்டும் பரிசோதனைகள்

இரத்தத்தில் உள்ள கிரியேட்டினைன் மற்றும் யூரியாவின் அளவுகள் சிறுநீரகங்கள் செயல்படும் விதத்தை நிர்ணயிக்கும். மேற்கண்ட இரண்டு கழிவுப் பொருட்களையும் சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து நீக்குகின்றன. சிறுநீரகங்களின் வலிமை குன்றினால், இரத்ததில் இருக்கும் மேற்கண்ட பொருட்களின் அளவுகள் உயரும். பொதுவாக சீரம் கிரியேட்டினைன் எனும் பொருட்ள் 0.9 லிருந்து 1.4 மி.கி/டெலி. ஆக இருக்கும். இரத்தத்தில் இருக்கும் யூரியாவின் அளவு 20லிருந்து 40மி.கி/டெ.லி. இருக்கும். அதைவிட உயர்ந்து நிற்கும் அளவுகள் சிறுநீரகங்கள் பழுதடைந்த நிலையைக் காண்பிக்கும்.

ஹீமோக்ளோபின்

ஆரோக்கியமாக உள்ள சிறுநீரகங்கள், இரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. அவற்றில்தான் ஹீமோக்ளோபின் இருக்கிறது. இரத்த பரிசோதனையில் இதன் அளவு குறைவாகக் காண்பிக்கப்பட்டால், அதற்கு இரத்த சோகை நோய் என்று பெயர். மிக மோசமான சிறுநீரக நோய்களில் வழக்கமாகக் காணப்படும் நோய்களில் ஒன்று இந்த இரத்த சோகையாகும்.

இருந்தாலும் இரத்த சோகை அடிக்கடி பிற நோய்களினால் கூட ஏற்படலாம். ஆகவே இரத்த சோகைக்காக செய்யப்படும் பரிசோதனைகள் யாவும் சிறுநீரகக் கோளாறுகளை முடிவு செய்யும் இறுதி சோதனைகள் அல்ல.

இதர இரத்த பரிசோதனை

இவற்றைத் தவிர இன்னமும் எத்தனையோ இரத்த பரிசோதனைகள் இந்நோயாளிகளுக்கு என்று நடத்தப்படுகின்றன. அவை இரத்தத்தில் சர்க்கரை, சீரம் புரோட்டீன், கொலஸ்ட்ரால், மின்சாரம் பாயும் திரவங்கள் (சோடியம், பொட்டாசியம், மற்றும் க்ளோரைட்டுகள் இருப்பதைக் காட்டும்), கால்ஷியம், பாஸ்பரஸ், பைகார்பொனேட், ASO titer, Complement levels முதலியனவாகும்.

ரேடியக் கதிர்வீச்சு பரிசோதனைகள்

சிறுநீரகத்தை ஒலிக்கு அப்பால் உள்ள அலைகளை வைத்து சோதித்தல் (ultrasonagraphy)

இந்த சோதனை சிறுநீரக பிரச்னைகளை வெகு விரைவில் கண்டறிவதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும் ஒன்றாகும். இது சிறுநீரகத்தில் சிஸ்ட் போன்ற வளர்ச்சிகள், அவற்றின் அளவு, கற்கள் அல்லது புண்கள் ஆகியன இருந்தால் காண்பிக்கும். சிறுநீர் போக்குக்கு தடை இருந்தாலும் இதன்மூலம் அறியலாம். இரு சிறுநீரகங்களும் பொதுவான அளவைவிட சிறியதாக இருந்தால் அவை பழுதாகிவிட்டதென உறுதி செய்யலாம்

அடிவயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தல்

சிறுநீரகங்களில் "கற்கள் இருந்தால் அவற்றை இந்த சோதனை மூலம் அறியலாம்.

Intra-venousurography (IVU)

IVU ஒரு தனிச் சிறப்புடைய எக்ஸ்ரே சோதனையாகும். இதில் ஒருதனித்தன்மையுடைய நிறமுள்ள மருந்து கையில் இருக்கும் ஒரு இரத்தக் குழாயில் செலுத்தப் படுகிறது. இரத்தம் சிறுநீரகத்திற்குள் சென்று விடுவதால், சிறுநீற்றோடு கலந்து வெளி வருகிறது. இதனால் சிறுநீர் செல்லும் வழி தெளிவாகத் தெரிகிறது. அதாவது சிறுநீரகங்கள், யுரீட்டர், மற்றும் சிறுநீர்ப்பை போன்றவை தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கின்றன. தொடர்ந்து பல புகைப் படங்கள் எக்ஸ்ரே படங்களாகப் பிடிக்கப்படுகின்றன. இது சிறுநீர் உருவாவதிலிருந்து வெளியேறும் வரை தெளிவாக அதன் போக்கை காட்டுகிறது. எந்த ஒரு பிரச்னையும் - புண்கள், தொற்றுக்கள், அசாதாரண நிலைமைகள் யாவும் வெளிக்காண்பிக்கப்பட்டுவிடும்.

சிறுநீரகங்கள் வேலை செய்யாது நின்று விடும்பொழுது, மேற்கண்ட IVU சோதனையை வழக்கமாக சிபாரிசு செய்ய மாட்டார்கள். ஏனென்றால் உடலுக்குள் செலுத்தப்படும் அந்த நிறமுள்ள திரவம் (அது செல்லும் வழியைக் காட்டக் கூடியது) ஏற்கனவே பழுதுபட்டிருக்கும் சிறுநீரகங்களை மேலும் பழுதாக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த சமயங்களில் மேற்கண்ட நிறமுள்ள திரவம் போதுமான அளவு அடையாளம் காண்பிக்க முடியாது. இந்த சோதனை நோயாளியின் பிரசவ காலத்திலும் தவிர்க்கப்படுகிறது. ஒலிக்கு அப்பால் எடுக்கப்படும் சோதனையும் CT Scan போன்ற சோதனைகளும் இருப்பதால், இக்காலங்களில் இந்த சோதனை வெகு குறைந்த அளவே மேற்கொள்ளப்படுகிறது.

Voiding cystourethrogram (VCUG)

VCUG - Micturating cystourethrogram என்றும் அழைக்கப்படும் இந்த பரிசோதனை முக்கியமாக சிறுவர்களின் சிறுநீர்ப்பாதையை சோதிப்பதற்காக ஏற்பட்டது. இது ஒரு சிறப்பு வாய்ந்த எக்ஸ்-ரே பரிசோதனை ஆகும். சிறுநீர்ப்பை நிறைந்தவுடன், வெளிப்புறத்திலிருந்து கதீடர் வழியாக மாறுபட்ட ஊடக திரவம் ஒன்றை உட்செலுத்துகிறார்கள். இதை கொஞ்சம் எச்சரிக்கைகள் மிகுந்த வழிகளில் செய்கிறார்கள். சிறுநீர்ப் பை நிறைந்தவுடன், கதீடரை வெளியே எடுப்பார்கள். எடுத்து விட்டு நோயாளியை சிறுநீர் கழிக்கச் சொல்லுவார்கள். இடையிடையே இடைவெளிகள் விட்டு, எக்ஸ்-ரேபடம் எடுப்பார்கள். அதன்மூலம் சிறுநீர்ப்பையின் சுற்று வரைபடம் தெரிகிறது. இந்த சோதனை மூலம் யுரீட்டருக்குள் சிறுநீர் பின் செல்வது சோதிக்கப்படுகிறது. அத்துடன் சிறுநீரகங்களுக்குள் செல்வதும் கணிக்கப்படுகிறது. பின்னதான செயல்பாட்டை vesicourctericreflux என்று ஆங்கிலத்தில் அழைப்பர். சிறுநீர்ப்பையில் அல்லது யுரீத்ராவில் ஏதாவது அசாதரணமான வேறுபாடுகள் தோன்றினால் அவை வெளியாகிவிடும்.

கதிர்வீச்சு முறைகளில் எடுக்கப்படும்பிற சோதனைகள்

சிறுநீரகப் பரிசோதனைகளில் தனி முக்கியத்துவம் வாய்ந்த சோதனைகளான - CT ஸ்கான் சோதனைகள் போன்றவை மேற்கொள்ளப்படும். அந்த சோதனைகள், சிறுநீரகங்களையும், சிறுநீர்ப்பாதையையும் சோதிக்கும். இதைத் தவிர renal Doppler, radionuclear study, renal angiography, antegrade and retrograde pyclography போன்றவை மிக உபயோகமானவை.

வேறு சில முக்கியமான சோதனைகள்

Kidney biopsy, cystoscopy and urodynamics ஆகியன சிபாரிசு செய்யப்படக் கூடிய முக்கியமான சோதனைகள். இவை சரியானதும் முழுமையானதுமான சிறுநீரக நோயைப் பற்றிய விவரங்களை அறிய மிகத் தேவையானது.

Kidney biopsy

மேற்கண்ட சோதனை மூலம் ஒரு சில சிறுநீரக நோய்களால் ஏற்படும் விளைவுகளை எளிதாகக் கண்டறியலாம்.

Kidney biopsy என்றால் என்ன?

இந்த சோதனையில் சிறுநீரகத்தின் ஒரு மிகச்சிறு சதைத்துண்டு வெட்டி எடுக்கப் படுகிறது. அதை ஒரு ஊசி மூலம் செய்வார்கள். எடுத்து ஒரு மைக்ராஸ்கோப் (உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் கருவி) கருவியின் கீழ் வைத்துப் பார்ப்பார்கள். வந்திருக்கும் நோயின் துல்லியமான கணிப்பை இந்த சோதனைமூலம் செய்தறிய முடியும்

மேற்கண்ட சோதனையை எப்பொழுது சிபாரிசு செய்வார்கள்?

ஒரு சில பரிசோதனைகளினால் நோயின் துல்லியமான கணிப்பு செய்ய முடியாமல் போகும். அச்சமயங்களில் மேற்கண்ட சோதனை ஒன்றே இருக்கும் வழியாகும்.

மேற்கண்ட சோதனை எப்படி உதவுகிறது?

அது ஒரு சில விளக்க முடியாத நோய் நிலைகளை விவரமாக எடுத்து கணிக்க உதவுகிறது. இந்த விவரங்களைக் கொண்டு சிறுநீரக நோயைக் கண்டறியும் சிறப்பு மருத்துவர்கள் (nephrologists) நோயை குணப்படுத்தும் முறைகளை சீராக வரையறுக்கவும் நோயாளிகளை வழிநடத்தவும் முடியும்.

எந்த வழியில் இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது?

மிகவும் சாதாரணமாக மேற்கொள்ளப்படும் வழி percutaneous needle biopsy என்பதாகும். அதில் உள்ளே வெற்று வழியாக இருக்கும் ஒரு ஊசி எடுத்துக் கொள்ளப்பட்டு, உடலின் தோல் வழியாக சிறுநீரகத்திற்குள் செலுத்தப்படுகிறது. இன்னொரு வழி Open biopsy என்பதாகும். இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.

மேற்கண்ட சோதனை எப்படி நடத்தப் படுகிறது?

  • நோயாளியை ஆஸ்பத்திரியில் சேர்ந்து விடச் சொல்லி, அவரிடம் அனுமதிப் பத்திரத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.
  • சோதனைக்கு முன் அவருடைய இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்துக் கொள்வார்கள். அத்துடன் இரத்த பரிசோதனை மூலம் வெளிவரும் இரத்தம் முறையான வினாடிகளுக்குள் உறைகிறதா என்று பார்க்கிறார்கள் ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் இந்த உறைதலைத் தடுக்கும். அதை பையாப்சி செய்வதற்கு 1 முதல் 2 வாரங்களுக்கு நிறுத்துகிறார்கள்.
  • ஒலிக்கு அப்பால் உருவாக்கப்படும் அலைகளைக் கொண்டு நடத்தப்படும் பரிசோதனையைச் செய்து, எங்கு பையாப்சி செய்ய வேண்டும் என மிகத் துல்லியமாக கண்டுகொள்கிறார்கள்.
  • முகத்தைக் கீழ் நோக்கி வைத்து நோயாளி படுக்க வைக்கப்படுகிறார். அடிவயிற்றின்கீழ் ஒருதலைகாணி உரை வைக்கப்படும். சோதனையின் பொழுது முழுக்க முழுக்க நோயாளி கண்களைத் திறந்து நடப்பன எல்லாவற்றையும் பார்க்க முடியும். குழந்தைகளுக்கு இந்த சோதனை மயக்க மருந்து கொடுத்தே செய்யப்படும்.
  • உடல் தோல்புறம் சரியாக சுத்தம் செய்யப்பட்ட பின், பையாப்சி செய்யப்படும் இடத்தில் மரத்துப் போகச் செய்யப்படுகிறது.
  • வெற்றுக் குழாய்ப் பகுதி உள்ள ஒரு ஊசியைக் கொண்டு, சிறுநீரகத்திலிருந்து 2 அல்லது 3 சிறு சிறு நூலிழைகள் போன்ற துண்டுகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த சோதனைத் துண்டுகள் மருத்துவ நிபுணர்களுக்கு அனுப்பட்டு சோதிக்கப்படுகின்றன.
  • பையாப்சி சோதனைக்குப் பிறகு ஊசி போட்ட இடத்தின் மீது சற்று அழுத்தப் படுகிறது. இதன் மூலம் இரத்தக் கசிவு ஏற்படாமல் செய்யப் படுகிறது. அதற்குப் பிறகு 6 முதல் 12 மணிநேரங்கள் நோயாளி ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லப் படுகிறார். வழக்கமாக மறுநாளே அவரை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.
  • நோயாளி எந்த கடுமையான உழைப்பையும் பையாப்சி முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குத் தள்ளிப் போடுவது உத்தமம்.

பையாப்சி செய்து கொள்வதினால் ஏதாவது அபாய சாத்தியக் கூறுகள் உண்டா?

எந்த ஒரு அறுவை சிகிச்சையிலும் இத்தகைய சாத்தியக் கூறுகள் இருக்கவே செய்கின்றன. கொஞ்சம் வலியும் சிறுநீர் சிவப்பாக ஓரிரு முறைகள் கழிக்கப்படுதலும் வெகு சாதாரணமாகக் காணப்படுபவையே. எப்பொழுதாவது இரத்தம் கசிவது நிற்கவில்லையானால், அவசர கால சிகிச்சையாக சிறுநீரகங்களையே நீக்க வேண்டியது தவிர்க்கப்பட முடியாததாகிவிடும்.

ஒரு சில சமயங்களில் கிடைத்த சிறு சதைத்துண்டு போதுவான அளவு சோதனைக்கு உபயோகமில்லாமல் போய் விடலாம் 20 ல் 1 விகிதத்தில் இந்த தடங்கல் நிகழலாம். இத்தகைய நிலைமைகளில் பையாப்சியை மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டியது அவசியமாகிறது.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil

கடைசியாக மாற்றப்பட்டது : 11/17/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate