ஒரு நாள்பட்ட நிரந்தர நோய் உள்ளது என்று தெரிய வரும் போது அது ஒருவரின் வாழ்க்கையையே மாற்றித்தான் விடுகின்றது.
நிலையான ஒரு வாழ்க்கையிலிருந்து பெரும் மாற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரும் சவாலாக இருக்கலாம். இந்த முதல் பாகத்தில் நீங்கள் சிறுநீரக வியாதியைப் பற்றியும் அதற்குரிய மருத்துவங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். மேலும் சிறுநீரக மருத்துவர் மட்டுமல்லாமல் உங்களை பார்த்துக் கொள்ள வேண்டிய மற்ற சிறப்பு மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த மற்ற வல்லுநர்கள் ஆகியவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் இரண்டு சிறுநீரகங்களும் முக்கியமாக 24 மணி நேரமும் உங்கள் இரத்தத்திலிருந்து கழிவுப்புக்களை (கழிவு பொருட்கள் - Waste Products) சுத்தப்படுத்தும் வேலையை பிரதானமாக செய்கின்றன. அவை விலா எலும்புகளுக்கு சற்றே கீழே பின்பக்கம் முதுகின் நடுப்புறத்தில் உள்ளன. பெரியவர்களுக்கு ஒவ்வொருவரின் கை முஷ்டி அளவு ஒவ்வொரு சிறுநீரகமும் இருக்கும். சிறுநீரகங்கள் பிரித்தெடுக்கும் சிறுநீர் சொட்டு சொட்டாக உள் சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. தினந்தோறும் 24 மணி நேரத்தில் உங்கள் இரண்டு சிறுநீரகங்களுக்குள்ளும் 180 லிட்டர் இரத்தம் சென்று அதுனுள் உள்ள 140 மைல் நீளமுள்ள நுண்ணிய குழாய்கள்/ஜல்லடை உறுப்புகள் வழியாக கடந்து அதனுள் உள்ள கழிவுப்புக்கள் நீக்கப்பட்டு மீண்டும் உடலிற்குள் திரும்புகின்றது.
நம்மில் சிலருக்கே பிறப்பிலேயே ஒரு சிறுநீரகமே இருப்பதுண்டு. அதனோடு எந்த சுகக்கேடும் இல்லாமல் அவர்கள் 100 வயது வரை வாழவும் முடிகின்றது. நமது சிறுநீரகங்களின் செயல் திறன் 20% க்கு கீழ் குறையும் வரை நாம் எந்த ஆரோக்கயக் கேடும் உடல் கஷ்டமும் இல்லாமல் வாழ முடியும்.
1. சிறுநீரகங்களின் தலையாய பணி ஏற்கனவே சொல்லியிருந்தது போல நம் உடல் செயல்படும் போது உணவை எரிபொருளாக உபயோகப்படுத்தியபின் உண்டாகும் கழிவுப்புகளை தொடர்ந்து நீக்கி சிறுநீரில் சேர்த்து வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கும் ஒரு சுத்தீகரிப்பு தொழிலாளியின் வேலைதான்.
2. நம் உடலில் உள்ள திசுக்கள் இரத்தம், ஜீரண நீர்கள் உட்பட 60 சதவிகிதம் நீரால்தான் ஆனவை.
இந்த விகித்தை அதே 60 சதவிகிதமாக சரியாக வைத்திருப்பது சிறுநீரகங்கள்தான். நம் உடலில் உள்ள நீரின் அளவு. உணவிலும் திரவங்களாகவும் எடுத்துக் கொள்ளும் நீரின் அளவு உடலிருந்து வெளியே செல்லும் தண்ணீரின் அளவு, (சிறுநீர், வேர்வை, சில சமயம் வாந்தி) இவைகளை கணக்கிட்டு அது சிறுநீரின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்து எப்போதும் உடலில் நீரின் அளவு ஒரே மாதிரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றது. இதனால் சிறுநீரக பாதிப்பில் உபரி நீர் உடலில் சேர்கின்றது. கை, கால், முகம், வயிறு ஆகியவற்றில் வீக்கம் உண்டாகின்றது.
3. நம் உடலில் பல்வேறு திசுக்களில் உள்ள தாது உப்புக்கள், இரசாயனங்கள் (உதாரணம் - சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், யூரிக் ஆசிட், பை-கார்பனேட் இன்னும் பல) ஆகியவற்றை சரியான அளவாக வைத்திருப்பது சிறுநீரகங்கள்தான். சிறுநீரகங்களை நம் உடலின் சூப்பர் இரசாயன கட்டுப்பாடு கேந்திரம் எனலாம் இதனால் சிறுநீரக செயலிழப்பில் பல்வேறு இரசாயனங்களின் அளவு மாறுபட்டு அதனால் பல தொந்திரவுகள் வரலாம்.
4. ஹார்மோன்கள் எனப்படும் சில சத்துக்கள் நம் உடலில் உள்ள பல்வேறு வகை நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்பட்டு இரத்தம் வழியே வேறு உறுப்புகளுக்கு எடுத்து செயல்பட்டு அந்த உறுப்புகளின் பணியைக் கட்டுப்படுத்துகின்றன (உதாரணம் - தைராயிட் - தைராக்சின், கணையத் திட்டுக்கள் - இன்சுலின்). சிறுநீரகங்களின் சில பகுதிகள் நாளமில்லாச் சுரப்பியாக – செயல்பட்டு சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
எரித்ரோபாயிட்டின் என்ற ஹார்மோன் எலும்பு மஜ்ஜையில் உள்ள சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் திசுக்களின் மேல் செயல்பட்டு அதிக சிவப்பணுக்களை உண்டாக்கச் செய்கின்றது. கால்சிட்ரியால் என்ற ஹார்மோன் இரத்தத்தில் கால்சியம் என்ற சுண்ணாம்புச் சத்தினை சீராக வைத்திருந்து அதன் மூலம் அது எலும்புகளில் படிவதை உறுதி செய்து எலும்புகளை வலுவாக வைக்கின்றது. ரெனின் என்ற ஹார்மோன் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது. எனவே சிறுநீரக செயலழிப்பில் எரித்ரோபாயிட்டின் குறைவால் சிவப்பணுக்களின் குறைவு - இரத்த சோகை, கால்சிட்ரியால் குறைவு, அதனால் எலும்புகள் வலுவிழப்பு, ரெனின் அதிகரிப்பு அதனால் உயர் இரத்த அழுத்தம் ஆகியன நேருகின்றன.
சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது நம் உடலில் பல்வேறு கழிவுப்புக்களும், உபரி நீரும் படிப்படியே அதிகமாகின்றன. தாது உப்புக்கள் மற்றும் பல்வேறு இரசாயனங்களின் அளவுகளும் இரத்ததத்தில் இயல்புக்கு மாறுபடுகின்றன. சிறுநீரகங்களிலிருந்து உற்பத்தியாகும் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிப்பால் இரத்த சோகை, எலும்புகள் வலுவிழத்தல், உயர் இரத்த அழுத்தம் ஆகியன நேருகின்றன. இவை அனைத்தும் ஓரளவிற்கு மேல் அதிகமாகும் போது பல்வேறு சுகவீனங்கள் உடலிற்கு உண்டாகின்றன. சிறுநீரக செயலிழப்பிலும் இரண்டு வகை உண்டு.
1. திடீர் சிறுநீரக செயலிழப்பு (Acute Kidney Failure : AKF)
நன்கு வேலை செய்து கொண்டிருந்த சிறுநீரகங்கள் திடீரென மிக விரைவாக சில நாட்களுக்குள் முற்றிலும் செயலிழந்து விடக் கூடும். விபத்தில் இரத்த இழப்பு, அதீத இரத்த அழுத்தக் குறைவு, சிறுநீரகங்களில் கிருமித் தாக்குதல், சில வகை மருந்துகளுக்கு எதிர் விளைவு, வயிற்றுப் போக்கு சில வகை விஷங்களால் பாதிப்பு (உதாணரம் : பாம்புக் கடி, சாணிப் பௌடர், நாட்டு மருந்துகள்), சிறுநீரகக் குழாய்களில் கல் அடைப்பு, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் சிறுநீர் அடைப்பு போன்றவை நம் நாட்டில் சில காரணங்கள் இச்சமயம் சிறுநீரகங்கள் முற்றிலும் செயல்படாவிட்டால் தற்காலிகமாக டயாலிசிஸ் சிகிச்சை தேவைபடலாம். பெரும்பாலான சமயங்களில் 2 - 4 வாரங்களில் சிறுநீரகங்கள் சரியாகி வேலை செய்யத் தொடங்கும். டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. முற்றிலும் பழைய ஆரோக்ய நிலைக்கு உடல் திரும்பி விடும்.
2. நாள்பட்ட (நீண்ட கால) நிரந்தர சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney failure – CKF)
இந்த வகை சிறுநீரக செயலழிப்பு மாதக் கணக்கில், வருடக் கணக்கில் சிறுநீரகங்கள் படிப்படியே பல்வேறு நோய்களால் செயலிழப்பதால் வருகின்றது.
3. முற்றிய (கடை நிலை) நிரந்தர சிறுநீரக செயலழிப்பு (End Stage Kidney Failure – ESKF)
மேற்கூறிய நாள்பட்ட சிறுநீரக செயலழிப்பு படிப்படியே முன்னேறி கடைசியில் சிறுநீரகங்கள் முற்றிலும் செயலழிப்பது. இதில் சிறுநீரகங்கள் மீண்டும் வேலை செய்ய வாய்ப்பே இல்லை. இந்த சமயத்தில் நீங்கள் தொடர்ந்து உயிர் வாழ டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை அவசியமாகின்றது. இவ்விரண்டு வகை சிறுநீரக செயலிழப்பிற்கும் காரணங்கள் ஒன்றே. இந்தியாவில் சர்க்கரை நோயால் சிறுநீரக பாதிப்பு, கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரக பாதிப்பு, மரபணுக் கோளாறுகளால் சிறுநீரகங்களில் கட்டி, சிறுநீரக நுண்தமனி அழற்சி, ஆகியவை முக்கிய காரணங்கள். ஆனால் நம் நாட்டில் அறியாமை, குறைவான மருத்துவ வசதி ஆகிய காரணங்களால் பல முறை என்ன காரணத்தால் சிறுநீரகங்கள் செயலிழந்தன என்பதை கண்டு பிடிக்கும் முன்பே சிறுநீரக செயலிழப்பு மிகவும் முற்றி சிறுநீரகங்களை ஸ்கான் செய்து பார்க்கும் போது அவை சுருங்கி விட்டன. இனி சரி செய்ய இயலாதபடி பழுதடைந்து விட்டன என்பதும் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சிதான். அவ்வாறு சிறுநீரகங்கள் சுருங்கிய பின்னர் என்ன காரணத்தால் சிறுநீரக செயலிழப்பு வந்தது என்பதை கண்டு பிடித்தாலும் அதனால் பெரிய நன்மை இல்லை என்பதால் அதைக் கண்டுபிடிப்பதில் சிறுநீரக மருத்துவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்பது முற்றிய சிறுநீரக செயலிழப்பிற்கு முந்தைய நிலையாகும். இந்த நிலையில் உங்கள் சிறுநீரக செயலிழப்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கண்டுபிடிக்கப்பட்ட போது உங்கள் சிறுநீரகத்தின் வேலைத் திறனைப் பொறுத்து உங்களுக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதை பல வாரங்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ அல்லது வருஷங்களுக்கோ தள்ளிப் போட முடியும். நீங்கள் ஒரு சிறுநீரக மருத்துவரின் (கிட்னி டாக்டர் - நெப்ராலஜிஸ்ட் - Nephrologist) கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம். அவர் நீங்கள் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய தருணத்தை முடிந்த அளவு தள்ளிப் போட முயற்சி செய்வார். இதற்கு நீங்கள் அவரை மாதம் ஒரு முறை சென்று காண வேண்டியது அவசியம். அவர் உங்கள் இரத்த அழுத்தம் இரத்தத்தில் பல்வேறு உப்புக்கள், இரசாயனங்களின் அளவுகள், இரத்த அளவு, சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவற்றை கண்காணித்து மருந்துகளை பரிந்துரைப்பார். மேலும் உங்களின் இந்த நிரந்தர சிறுநீரக – செயலிழப்பு மேலும் முற்றி எப்போது உங்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் என்பதையும் அவரே கணக்கிட்டு கூறுவார். முற்றிய சிறுநீரக செயலிழப்பு என்பது நிரந்தரமான முற்றிலுமான சிறுநீரக செயலிழப்பாகும். இந்த நிலையை வந்தடைந்த பிறகு நீங்கள் டயாலிசிஸ் சிகிச்சையோ அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சையோ இல்லாது உயிர் வாழ முடியாது.
சிறுநீரகங்கள் படிப்படியாக செயலழிக்கும் போது சிறுநீரகங்களின் செயல்திறன் 70 சதவிகிதற்கு கீழ் குறையும் வரை பெரும்பாலானவர்களுக்கு தொந்திரவு என்று எதுவும் வராமலும் இருக்கலாம். அல்லது ஆரம்ப கட்ட தொந்திரவுகளான சோர்வு, களைப்பு, கணுக்கால் வீக்கம், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை நாம் அலட்சியப்படுத்த்திருக்கலாம். கீழ்கண்ட அறிகுறிகள் பல்வகை சேர்க்கையில் சிறுநீரக செயலழிப்பில் வரலாம்.
1. சிறுநீர் வழக்கத்தை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கழித்தல்
2. வீக்கம் - கை, கால், வயிறு, முகம் மற்ற பாகங்களில்
3. உயர் இரத்த அழுத்தம்
4. பசி இன்மை, உமட்டல், வாந்தி, விக்கல்
5. வாயில் கசப்புத் தன்மை
6. உடல் சோர்வு, களைப்பு, மயக்கம்
7. மன ரிதீயான தொந்திரவுகளான எதிலும் ஆர்வமின்மை, இரவில் தூக்கமின்மை, பகலில் தூக்கம்
8. தலை வலி, உடல் வலி, எலும்புகளில் வலி
உங்களுக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய கால கட்டத்தில் டயாலிசிஸ் செய்ய ஆரம்பித்து சில நாட்களிலேயே உங்களுடைய இந்த தொந்திரவுகள் அனைத்தும் பெருமளவு குறைந்து நீங்கள் ஆரோக்யமாக உணர்வீகள்.
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கான சிகிச்சையில் நோயாளியான என்னுடைய பங்கு என்ன? நான் என் உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்துவது?
(ஒரு சிறுநீரக செயலிழப்பு நோயாளியின் குறிப்பு) – நான் இதைக் கூறுவது உங்களை பயப்படுத்த அல்ல. நீங்கள் புரிந்து கொள்ளத்தான். உங்கள் சிறுநீரக செயலிழப்பு உங்கள் வாழ்க்கையை சற்று மாற்றி அமைக்கத்தான் போகின்றது. ஒவ்வொரு தனிமனிதரும் அவருடைய சிறுநீரக செயலிழப்பு நோயை ஒவ்வொரு விதமாக எதிர் கொள்வார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட உள்ள மாற்றங்களை மிகவும் கடினமாகவும் நினைக்கலாம். எளிதில் ஏற்றுக் கொள்ளவும் செய்யலாம். இந்த மாற்றங்கள் உங்களை மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினரையும் வேலை பார்க்கும் சூழ்நிலையையும் கூட பாதிக்கும்தான். இந்த மாற்றங்கள் உணவுக் கட்டுப்பாடு, தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள், முறையான இடைவெளிகளில் சிறுநீரக மருத்துவரிடம் பரிசோதனை என்பன ஆகும். உங்கள் கவலைகள், பயங்கள், உடலில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் எதிர் கொள்ள நேரும். இவை ஆரம்பத்தில் கடினமாக தோன்றினாலும் நாட்கள் செல்ல செல்ல குடும்பத்தினர், மருத்துவக் குழுவினரின் ஆதரவுடன் நீங்கள் இந்த மாற்றத்தை செயல்படுத்த முடியும். என்னைப் பொறுத்த வரை இதே போல பாதிப்பிற்குள்ளான சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுடன் தொடர்பு கொண்டு பேசுவதால் என் கவலைகளையும், சந்தேகங்களையும் பகிர்ந்து கொண்டு குறைத்துக் கொள்ள முடிந்தது.
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு முன்னேறி கடைநிலை சிறுநீரக செயலிழப்பாக மாறும்போது அப்போது அதன் சிகிச்சை முறைகளில் பல முறைகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு உகந்ததை அனைவரையும் கலந்து நன்கு ஆலோசித்து தேர்ந்தெடுக்கலாம். இச்சிகிச்சை முறைகள் எல்லாவும் எல்லாருக்கும் பொருந்தாது. ஒவ்வொரு சிகிச்சை முறையின் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் மருத்துவர், குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யுங்கள். ஒன்றைத் தொடங்கினால் பின்னர் வேறொன்றிற்கு மாற முடியாது என்றில்லை. ஆனால் ஒரு வகை சிகிச்சையை ஆரம்பிக்கும் முன்பு அதற்கு நேரமும் உழைப்பும், பணமும் செலவழித்து சில ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கும் என்பதால் சிகிச்சை தொடங்கும் முன்பு ஒரு முறையாக ஆலோசித்து முடிவு செய்யவும். உங்கள் பொதுவான உடல் ஆரோக்யம், டயாலிசிஸ் மையத்திலிருந்து உங்கள் வசிக்குமிடத்தின் தூரம், வெவ்வேறு வகை டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று சிகிக்சைக்கு ஆகும் செலவு ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குகந்த சிகிச்சையை முடிவு செய்யவும்.
1. ஹீமோடயாலிசிஸ் - (Hemodialysis - செயற்கை சிறுநீரக இயந்திர இரத்த சுத்தீகரிப்பு)
2. பெரிடோனியல் டயாலிசிஸ் (Peritoneal Dialysis – வயிற்று ஜவ்வு வழி திரவ சுத்தீகரிப்பு)
3. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை – (Kidney Transplantation)
டயாலிசிஸ் (Dialysis) என்ற வார்த்தைக்கு அர்த்தம் அசுத்த இரத்தத்தை செயற்கை முறையில் சுத்தப்படுத்துதல் என்பதாகும். டயாலிசிஸ் சிகிச்சையின் போது சிறுநீரக செயலிழப்பில் உடலில், இரத்ததத்தில் சேரும் அசுத்தங்கள் (கழிவுப்புக்கள்) நீக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஆரோக்யத்துடன் இரண்டு சிறுநீரகங்கள் உள்ள உங்கள் உறவினர் அல்லது நண்பரிடமிருந்து அல்லது விபத்து, மூளை இரத்த கசிவு போன்ற காரணங்களால் மூளை இறப்பு நேரிட்ட நபரிடமிருந்து ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டு உங்களுக்கு பொறுத்தப்படுகின்றது. அது நன்கு வேலை செய்ய ஆரம்பித்தவுடன் உங்கள் செயலிழந்த பழைய சிறுநீரகங்கள் செய்து கொண்டிருந்த அத்தனை வேலைகளையும் அது ஏற்று செய்ய ஆரம்பித்து விடுகின்றது. நிறைய சிறுநீரக மாற்று பெற்றவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்தவுடன் தங்களுக்கு முழுவதும் குணமானதாக நினைத்துக் கொள்கின்றனர். இது அப்படியல்ல. சிறுநீரக மாற்று பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறுநீரக ஒவ்வாமைக்கு உண்டான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.
ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு
கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...