অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வெப்ப நோய்கள்

வெப்ப நோய்கள்

வெப்ப நோய்கள்

கோடைக் காலம் தொடங்கிவிட்டது. சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கும். அப்போது மூளையில் உள்ள 'ஹைப்போதலாமஸ்' எனும் பகுதி, நமக்கு வியர்வையைப் பெருமளவில் சுரக்கச் செய்து உடலின் இயல்புக்கு மீறிய வெப்பத்தை வெளியேற்றுகிறது. ஆனாலும் இந்த முயற்சிக்கும் ஓர் எல்லை உண்டு.

அக்னி நட்சத்திர வெயிலின்போது ஹைப்போதலாமஸ் தன்னுடைய முயற்சியில் தோற்றுப்போகிறது; உடலின் வெப்பத்தை ஓரளவுக்குத்தான் குறைக்கிறது. அப்போது வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சை தொற்று, நீர்க்கடுப்பு எனப் பல வெப்ப நோய்கள் ஏற்படுகின்றன. அதேவேளையில் நம் உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால் வெப்ப நோய்களை வெல்வது எளிது.

ஏற்படுவதற்கான காரணங்கள்

வெப்பத் தளர்ச்சி

மனித உடலின் இயல்பான வெப்பநிலை 98.4 டிகிரி ஃபாரன்ஹீட். வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, உடலின் வெப்பம் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும், களைப்பு உண்டாகும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலிலிருந்து சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பல உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு ‘வெப்பத் தளர்ச்சி’ (Heat Exhaustion) என்று பெயர்.

வெப்ப மயக்கம்

நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்கிறவர்கள், திடீரென மயக்கம் அடைவதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது 'வெப்ப மயக்க'த்தின் ( Heat Stroke) விளைவு. இதற்குக் காரணம், வெயிலின் உக்கிரத்தால் தோலிலுள்ள ரத்தக்குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி வகுக்கிறது. இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்து, ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக மயக்கம் வருகிறது.

வெப்ப மயக்கத்துக்கு முதலுதவி

மயக்கம் ஏற்பட்டவரை குளிர்ச்சியான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். மின்விசிறிக்குக் கீழ் படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, உடல் முழுவதும் காற்று படும்படி செய்யுங்கள். தலைக்குத் தலையணை வேண்டாம். பாதங்களை உயரமாகத் தூக்கி வைக்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றியெடுத்துத் துடைக்கவும். இது மட்டும் போதாது. அவருக்குக் குளுக்கோஸ், சலைன் செலுத்த வேண்டியதும் முக்கியம். உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

சிறுநீர்க் கடுப்பு

கோடையில் பல பேருக்கு அதிக அளவில் தொல்லை தருவது சிறுநீர்க் கடுப்பு. தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. குடிக்கும் தண்ணீரின் அளவு குறையும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடுகிறது. இதன் விளைவால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும்.

அப்போது சாதாரணமாகக் காரத் தன்மையுடன் இருக்கின்ற சிறுநீர், அமிலத்தன்மைக்கு மாறிவிடும். இதன் விளைவுதான் சிறுநீர்க்கடுப்பு. அடுத்து, சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்து சிறுநீர் கல் உண்டாகும். இதனாலும் சிறுநீர்க் கடுப்பு ஏற்படும். வெயிலில் அலைவதைக் குறைத்துக்கொண்டு, நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.

வியர்க்குரு

கோடையில் சுற்றுப்புற வெப்பநிலை சர்வசாதாரணமாக 40-லிருந்து 45 டிகிரியைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க வழக்கத்தைவிட, மூன்று மடங்கு வியர்வை சுரக்கிறது. இந்த வியர்வையை அவ்வப்போதுத் துடைத்து உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.

இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குரு பவுடர் அல்லது காலமின் லோஷனை வியர்க்குருவில் பூசினால் அரிப்பு குறையும்.

வயிற்றுப்போக்கு

வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவாகக் கெட்டுவிடும். அவற்றில் நோய்க் கிருமிகள் அதிக அளவில் பெருகும். இந்த உணவை உண்பதால் பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் வரலாம்.

அதனால், வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகளை உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது. உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியதும் தண்ணீரைக் கொதிக்கக் காய்ச்சி ஆறவைத்துக் குடிக்க வேண்டியதும் முக்கியம்.

அம்மை நோய்கள்

கோடை வெப்பத்தால் நிலம் உஷ்ணம் அடையும்போது குப்பை, கூளங்களில் குடியிருக்கும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்றின் மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் 'வேரிசெல்லா ஜாஸ்டர்' எனும் வைரஸ் கிருமிகள். இந்தக் கிருமியால் நமக்குச் சின்னம்மை ஏற்படுகிறது. அந்நோய் வந்து குணமான பின்னரும் சிலருக்கு இந்த நோய்க் கிருமிகள் நரம்புகளில் தங்கி, பல ஆண்டுகள் கழித்து 'அக்கி அம்மை'யை ஏற்படுத்தும்.

இதுபோல் மீசில்ஸ் வைரஸ், தட்டம்மை நோயை ஏற்படுத்தும். இந்த அம்மை நோய்களைத் தடுக்கத் தடுப்பூசிகள் உள்ளன. தேவைப்பட்டால் போட்டுக்கொள்ளலாம்.

வெப்ப நோய்களை வெல்லும் வழிகள்

  • வெயில் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து நான்கு லிட்டர்வரை தண்ணீர் குடிப்பது அவசியம். காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள், குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம். காரணம், குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக்குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.
  • இதற்குப் பதிலாக இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன.
  • இதனால், உடலின் நீரிழப்பால் ஏற்படுகிற பாதிப்புகளை உடனடியாகக் குறைகின்றன. எலுமிச்சை சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.

பழங்களை அதிகப்படுத்துங்கள்

தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலா பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது. கோடை வெப்பத்தால் வியர்வையில் பொட்டாசியம் வெளியேறிவிடும். இதனால் உடல் களைப்படைந்து, தசைகள் இழுத்துக்கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும். கோடையில் வெப்பத் தளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கப் பழங்களைச் சாப்பிடுவதுதான் சிறந்த வழி.

எண்ணெய் தவிர்

கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்ற சிற்றுண்டிகள் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால், இவற்றைத் தவிர்ப்பதே நல்லது. அதேபோல் சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

சிறந்த கோடை உணவு

இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத் தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளி கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவு வகைகள். மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி, தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர்விட்டுச் சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும். காரணம், கேப்பைக் கூழுக்கும் தயிருக்கும் உடலின் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய தன்மையுண்டு.

வெயிலில் அலையாதீர்

கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. வெயிலில் செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்துச் செல்லுங்கள். கறுப்புக் குடையாக இருக்க வேண்டாம். முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால், கண்களுக்கு 'சன் கிளாஸ்' அணிந்து கொள்ளலாம்.

ஆடையில் கவனம்

  • உடைகளைப் பொறுத்தவரை கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே! அவற்றில்கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தைக் கிரகிக்கும்.
  • ஆகவே, இத்தன்மையுள்ள ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும். சூரிய ஒளி உடலில் படுவதால், ஒவ்வாமைக்கு உள்ளாகுபவர்கள் 'சன் ஸ்கிரீன்' களிம்பை முகத்திலும் கை, கால்களிலும் பூசிக்கொள்ளலாம்.

ஆதாரம் : தி - இந்து நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/18/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate