অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பொதுவான பிரச்சனைகள்

பொதுவான பிரச்சனைகள்

தலைவலி

தலைவலிகள்
நாம் ஒவ்வொருவரும் எப்போதாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களே. சில தலைவலிகள் மிகுந்த அசெளகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பான்மையானவை தற்காலிகமாக நீங்கக்கூடியவை.
பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்கக்கூடியவை. ஆனால் தாங்க முடியாத அளவிற்கு தலைவலி இருக்குமேயானால் மருத்துவரை அணுகுவதற்குத் தயங்காதீர்கள்.
மருத்துவரானவர் தலைவலியானது தீ ர பாதிப்பிற்குரியதா, அடிக்கடி வரக்கூடியதா அல்லது காய்ச்சலுடன் வரக்கூடியதா என சோதிப்பார்.

எப்பொழுது தலைவலி ஆபத்துக்குரியது?

அனைத்து தலைவலிகளுக்கும் மருத்துவ உதவி தேவை இல்லை. சில தலைவலிகள் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததாலும், ஒவ்வாமையாலும், தசைப்பிடிப்பாலும் ஏற்படும். அவைகளை வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம். இதர தலைவலிகள் தீவிரமானவையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே உடனடி மருத்துவ உதவி அவசியம்.

தலைவலிக்குரிய கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்,உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.

  • அதிக வலியுடன் திடீரென்று எதிர்பாராது வரக்கூடிய தலைவலி
  • பார்வையில் மாற்றம் அல்லது வேறு உடல் கோளாறுகளுடன் தொடர்புடைய தலைவலிகள்.

பரபரப்புத் தன்மை (டென்ஷன்) காரணமாக ஏற்படும் தலைவலி, ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்) & தொகுப்புத் தலைவலி எனத் தலைவலிகளைப் வகைப்படுத்தலாம். ஒற்றைத்தலைவலி(மைக்ரேன்) & தொகுப்புத் தலைவலி ஆகியவை இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட தலைவலிகளின் வகைகளாகும். அளவுக்கு மீறிய அதிக உடல் உழைப்பும் இத்தலைவலியை அதிகப்படுத்துகின்றது. தலைப்பகுதியைச் சுற்றிலும் உள்ள திசுக்களில் ஓடக்கூடிய இரத்தக்குழாய்கள் விரிவடைவதாலோ அல்லது வீங்குவதாலோ, தலையைக் குத்துவது போன்றோ அல்லது அடிப்பது போன்றோ வலிக்கச்செய்யும். தொகுப்புத் தலைவலியை விட ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்) அதிக அளவில் காணப்படுகிறது.
தொகுப்புத் தலைவலி வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் அடிக்கடி தொடர்ந்து வரும். இந்த தலைவலி பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் வரும். இது தீவிரமான வலியைத் தரும்.

பரபரப்புத் தன்மை(டென்ஷன்) காரணமாக ஏற்படும் தலைவலி:
  • பரபரப்பு அல்லது தசைச் சுருக்கத் தலைவலிகள் பொதுவாக வரக்ககூடியவை. ஒருவரிடம் அதிக மன அழுத்தம் இருக்கும் காலம் வரை தொடர்ந்து வலியைக் கொடுக்கும்.
  • பரபரப்புத் தலைவலிகளுடன் தொடர்புடைய வலியானது மந்தமாக( குறைந்த அளவில்) இருந்தாலும் நீடித்து இருக்கக்கூடியது. நெற்றி, தலைப்பொட்டு & கழுத்தின் பின்பகுதியில் வலியை உணரலாம்.
  • மக்கள் பரபரப்புத் தலைவலி வந்தால் தலைப்பகுதியைச்சுற்றிலும் கயிறைக் கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டதுபோல் இருக்கும் என்பார்கள்.
  • பரபரப்புத் தலைவலி அதிக காலங்களுக்கு தொல்லைகொடுத்தாலும், மன அழுத்தம் இருக்கும் காலகட்டங்கள் வரை மட்டுமே தொல்லை தரும். அதன் பிறகு நின்று விடும்.
  • பரபரப்புத் தலைவலிகள் பொதுவாக பிற அறிகுறிகளுடன் தொடர்புடையது அல்ல. ஒற்றைத்தலைவலிக்கு(மைக்ரேன்) வருவது போன்று முன் கூட்டிய அறிகுறிகள் ஏதும் இதற்கு கிடையாது.ஏற்படுகின்ற தலைவலிகளில் 90% தலைவலிகள் பரபரப்புத் தலைவலிகளே.
சைனஸ் தலைவலிகள்

சைனஸ் நோய் அல்லது அலர்ஜியின் காரணமாக இத்தலைவலி வரும். சளி அல்லது ஃப்ளூ காய்ச்சலைத் தொடர்ந்து சைன பாதைகள், மூக்கின் மேற்புறம் மற்றும் பின்புறம் உள்ள எலும்புகளில் உள்ள காற்றறைகள் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியால் சைனஸ் தலைவலிகள் ஏற்படும். சைனஸ் பகுதிகளில் அடைப்பு அல்லது கிருமிகளின் பாதிப்பு அதிகமாகும் போது தலையில் வலி உண்டாக ஆரம்பிக்கும். இவ்வலியானது தீவிரமாகவும், தொடர்ந்தும் இருக்கும். காலை முதல் வலிக்க ஆரம்பிக்கும். இவ்வலி தலை குனிந்தால் துடிக்கச் செய்யும் அளவுக்கு வலிக்கும்.

சைனஸ் தலைவலியின் பொதுவான அறிகுறிகள்:

  • கண்களைச் சுற்றிய பகுதிகள், கன்னங்கள் மற்றும் நெற்றிப்பகுதிகளில் ஏற்படும் வலி & அழுத்தம்.
  • மேல் வரிசைப்பற்களில் வலி இருப்பது போன்ற உணர்வு.
  • காய்ச்சல் மற்றும் குளிர்
  • முக வீக்கம்

சைனஸ் தலைவலியால் உருவாகும் முக வீக்கத்தைக் குறைக்க சூட்டுடன் ஒத்தனம் மற்றும் ஐஸ்கட்டிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

தலைவலி பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)
https://www.youtube.com/watch?v=LF0J3U1DjIs
https://www.youtube.com/watch?v=VL8pqYVdYG8

ஒற்றைத் தலைவலிகள் (மைக்ரேன்)

ஒற்றைத் தலைவலிக்கான பொதுவான அறிகுறிகள்:

  • பார்வையில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படும் வலி
  • தலைப்பகுதியின் ஒரு புறத்தில் மிதமான வலியிலிருந்து தீவிரமான துடிக்க வைக்கும் வலி
  • வாந்தி அல்லது குமட்டல்
  • வெளிச்சம் & இரைச்சலுக்கு எளிதில் உணர்ச்சிக்கு உள்ளாகுதல்.

பல்வேறு காரணிகள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டக்கூடியவை. மது, சாக்லேட், நாள்பட்டபால்கட்டி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கஃபீன் போன்ற உணவுப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆல்கஹால் மற்றும் கஃபீன் பொருட்களைப் பயன்படுத்துதல் தலைவலியைத் தூண்டும்.

குறிப்பு:
மிக அதிகமான தலைவலிகள் உங்களுக்கு இருக்குமானால், மருத்துவரை அணுகி அவற்றின் அறிகுறிகள்,பாதிப்புத்தமை மற்றும் வலியைக் குறைக்க நீங்கள் கையாண்ட நடவடிக்கைகள் முதலியவற்றைத் தெளிவாக விளக்கவும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் என்பது இரத்தக் குழாயின் வழியாக பாய்ந்தோடும் இரத்தமானது இரத்தக்குழாய் சுவர்களில் ஏற்படுத்தும் விசையாகும். தமனி (ஆர்ட்ரீஸ்) என்பது இதயம் இறைக்கும் இரத்தத்தினை உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு எடுத்துச்செல்கிறது. இதயம் இரத்தத்தை தமனிக்குள் இறைப்பதினால் இந்த அழுத்தம் உண்டாகிறது. மேலும் தமனி,  அதன் வழியாக செல்லும் இரத்த ஓட்டத்தைத் தேவையான அழுத்தததை செலுத்தி முறைப்படுத்துகிறது.

வழக்கமாக இரத்த அழுத்தத்தினை, இதய தசைகள் சுருங்கும்போது ஏற்படும் அழுத்தம் (சிஸ்டோலிக்) / இதய தசைகள் விரியும்போது ஏற்படும் அழுத்தம் (டயாஸ்டோலிக்) என குறிப்பிடுவர். உ-ம் 120/80. இதயம் சுருங்கும்போது காணப்படும் இரத்த அழுத்தம் எப்பொழுதும் இதயம் விரியும்போது இருக்கும் அழுத்தத்தைவிட உயர்வாகவே இருக்கும்.

சிஸ்டோலிக் இரத்த அழுத்தம் ஒரு ஆரோக்கியமான நபருக்கு 90க்கும் 120மில்லி மீட்டர் பாதரச அழுத்தம் (மிமீ பாதரசம்) இடையே உள்ள அளவிலேயே இருக்கும். அதேபோல டையாஸ்டோலிக் இரத்த அழுத்தம் 60லிருந்து 80 மிமீ பாதரச அழுத்தம் என்ற அளவில் இருக்கும். தற்போதைய பரிந்துரையின் படி, ஒருவரின் சாதாரண இரத்த அழுத்தம் 120/80 மிமீ பாதரசம் என்ற அளவிற்கு கீழாக இருக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

குறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன?

குறைந்த இரத்த அழுத்தம் என்பது இரத்தத்தில் உள்ள அழுத்தத்தின் அளவு இருக்க வேண்டிய அளவைவிட குறைவாகவே காணப்படும். இரத்தக்குழாய்களின் வழியாக செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து காணப்படுவதால் இரத்த அழுத்தம் குறைந்து அதற்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன. இரத்தத்தின் அழுத்தம் குறையும்போது மூளை, இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உடல் உறுப்புகளுக்கு செல்லும் பிராணவாயு மற்றும் உணவுப்பொருட்களின் அளவு குறைவதினால் மேற்கூறிய உடல் உறுப்புகளில் நிரந்தர பாதிப்பு / சிதைவு ஏற்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை போல் இரத்த அழுத்தம் எண்ணைக் கொண்டு, குறைந்த இரத்த அழுத்தம் வரையறுக்கப்படுவதில்லை. மாறாக, உடல் உறுப்புகளுக்கு செல்லும் இரத்தம் அளவு குறைவதினால் ஏற்படும் அறிகுறிகளைக் கொண்டு குறைந்த இரத்த அழுத்தம் வரையறுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு, எந்த வித குறைந்த இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் இன்றி, இரத்த அழுத்தத்தின் அளவு 90/50 (மமீ பாதரசம்) என்ற அளவிலேயே இருக்கும். உயர் இரத்த அழுத்தம் கொண்ட நபர்களில், இரத்த அழுத்தத்தின் அளவு 100/60 (மிமீ பாதரசம்) என்ற அளவிற்கு குறையும் போது, குறைந்த இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் ஏற்படுகிறது.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நபர்கள், எழுந்து நிற்கும்  போது  லேசான தலைவலி, தலைச்சுற்றல் அல்லது மயங்கி விழுதல் போன்றவை ஏற்படுகின்றன. இதனை ஆர்த்தோஸ்டாடிக் ஹைபோடென்ஷன் (எழுந்து நிற்பதினால் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்த நிலை) என்பர். சாதாரணமாக ஆரோக்கியமான நிலையில் உள்ள நபர்களிலும் இதுபோல் எழுந்து நிற்கும் போது இரத்தத்தின் அழுத்தம் குறையும். ஆனால் அது விரைவாக சமன்செய்யப்படுகிறது. இதயத்திற்கு இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக் குழாய்களில் இரத்த அழுத்தத்தின் அளவு குறையும்போது, இரத்தத்தின் அளவு குறைந்து, இதயத்தில் வலி அல்லது இதயத்தின் திசுக்களில் பாதிப்புகளும் எற்படக்கூடும். சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறையும்போது சிறுநீரகத்தின் மூலம் நம் உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படாமல் போகிறது. உ-மாக, யூரியா மற்றும் கிரியாட்டினின் போன்ற கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படாமல், அவற்றின் அளவு இரத்தத்தில் அதிகரிக்கிறது. தொடர்ந்து இரத்த அழுத்தத்தின் அளவு குறைந்து காணப்படுவதால், சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல் மற்றும் மூளை போன்றவை மிக விரைவாக தங்கள் செயலை இழக்கின்றன.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இரத்த அழுத்தத்தின் அளவு 130/80 என்ற அளவை விட அதிகமாக இருந்தால் அதனை உயர் இரத்த அழுத்தநிலை என கருதலாம். உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக்கொதிப்பு என்பது தமனிகளில் இரத்த அழுத்தத்தின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கிறது என்று பொருட்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம் என்பது உணர்ச்சிவசப்படும் போது இரத்த அழுத்தத்தில் ஏற்படும் உயர்வினைக் குறிக்காது. இருந்தாலும் உணர்ச்சிமிக்க சூழ்நிலைகள் மற்றும் மனஅழுத்தம் இரத்த அழுத்தத்தினை தற்காலிகமாக உயர்த்துகிறது.
சாதாரணமாக இரத்த அழுத்தத்தின் அளவு 120/80 என்ற நிலையில் இருக்கும். இரத்த அழுத்தத்தின் அளவு 120/80 மற்றும் 139/89 என்ற அளவுகளுக்கு இடைப்பட்டு காணும்போது இதனை “ப்ரி-ஹைப்பர்டென்சன்” அதாவது உயர்இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முன் நிலை என்பர். இரத்த அழுத்தம் 140/90 என்ற அளவில் அல்லது அதற்கு மேல் இருந்தால் அதனை உயர் இரத்த அழுத்தம் என்பர்.
உயர் இரத்த அழுத்த நிலையில் இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் தமணிகளின் நீளும் தன்மை குறைந்து தமனி சுவர்கள் கடினமாதல், கண் மற்றும் மூளை பாதிக்கபபடுதல் போன்றவை ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் அதிகமுள்ளன. எனவே உயர் இரத்த அழுத்தத்தினை ஆய்ந்தரிந்து அதனை சாதாரண நிலைக்கு கொண்டுவருவதால் மேற்கூறிய சிக்கலான பாதிப்புகளை தடுக்கலாம்.

தைராய்டு

தைராய்டுசுரப்பியினை புரிந்து கொள்ளுதல்
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும். இந்த சுரப்பியின் முதன்மைப் பணியானது, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்துவதாகும். உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி தைராய்டு என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியினை பயன்படுத்த வேண்டும் என்பதனை முடிவுசெய்கிறது. நன்கு செயல்படும் தைராய்டு சுரப்பியானது தேவையான அளவு தைராய்டு ஹார்மோனை சுரக்கச்செய்கிறது. இரத்தத்திலுள்ள தைராய்டு ஹார்மோனின் அளவினை, பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கண்காணித்து அதனை கட்டுப்படுத்துகிறது. இந்த பிட்யூட்டரி சுரப்பியானது மூளைக்கு கீழே மண்டையோட்டின் மையத்தில் அமைந்துள்ளது. இது, இரத்தத்தில் தைராய்டு ஹார்மோன் அளவு குறைவது மற்றும் அதிகரிப்பதை கண்டுணர்ந்து, தைராய்டு சுரப்பியின் செயலை கட்டுப்படுத்தும்/சரிசெய்யும் டி.எஸ்.எச் எனும் ஹார்மோனை சுரக்கிறது.

தைராய்டு நோய் என்றால் என்ன? இது யாரைப் பாதிக்கிறது?

தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும். அதேபோல், தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர். எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். ஆகிலும் பாதிப்படையும் நிலைமை ஆண்களைவிட பெண்களுக்கு 5 முதல் 8 மடங்கு அதிகம்.

தைராய்டு நோய் எதனால் ஏற்படுகிறது?

தைராய்டு நோய் ஏற்பட பல வித்தியாசமான காரணங்கள் உண்டு. பின்வரும் நிலைமைகள் ஹைப்போதைராய்டிஸ்சத்தை ஏற்படுத்தும்.

  • தைராய்டைடிஸ் என்பது தைராய்டு சுரப்பி வீ’க்கமடைவதாகும். இதனால் தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறைகிறது.
  • ஹாஷிமோட்டோஸ் தைராய்டைடிஸ் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் வலியில்லாத நோயாகும். இது பரம்பரை வியாதி.
  • போஸ்ட்பார்டம் தைராய்டைடிஸ் என்பது 5 முதல் 7 சதம் பெண்களில் குழந்தை பெற்றபின் ஏற்படக்கூடிய ஒரு தற்காலிகமான நோய்.
  • ஐயோடின் குறைபாடு. இந்த பிரச்சினையினால் உலகமுழுவதும் தோராயமாக 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோனை சுரக்க ஐயோடினை பயன்படுத்துகிறது.
  • செயல்படாத தைராய்டு சுரப்பி. இந்த நிலை பிறக்கும் 4000 குழந்தைகளில் ஒரு குழந்தையினைப் பாதிக்கிறது. இந்த பிரச்சினையினை சரிசெய்யாவிட்டால் அந்த குழந்தை உடல் மற்றும் மூளைவளர்ச்சி குன்றி காணப்படும்.

பின்வரும் நிலமைகள், அதிகப்படி தைராய்டு சுரப்பு (ஹைப்பர்தைராய்டிஸம்) ஏற்படுத்தும்.

  • க்ரேவ் நோய் - இதில் முழு தைராய்டு சுரப்பியும் அதிகளவில் செயல்பட்டு அதிகளவு தைராய்டு ஹார்மோனினை சுரக்கும்.
  • தைராய்டைடிஸ் - இதில் வலி இருக்கும் அல்லது வலி இல்லாமலிருக்கும். தைராய்டு சுரப்பியில் சேமித்துள்ள ஹார்மோனை வெளியேற்றுவதால், சிலவாரங்கள் அல்லது மாதங்கள் ஹைபர்தைராய்டிஸ்சத்தினை ஏற்படுத்தும்.
  • அதிகளவு ஐயோடின். சில் மருந்துகளில் அதிகளவில் ஐயோடின் காணப்படுவதால் அவை சில நபர்களில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதனை அதிகரிக்கும் அல்லது குறைக்கும்.
ஹைப்பர்தைராய்டிஸ்சம் மற்றும் ஹைப்போதைராய்டிஸ்சம் இவைகளின் அறிகுறிகள் யாவை?

கீழ்க்காண்பவைகள் ஹைப்போதைராய்டிஸ்சத்தின் அறிகுறிகள்  ஆகும்.

  • சோர்வு
  • அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் அதன்மூலம் அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல்.
  • மறதி.
  • உடல் எடை கூடுதல்
  • உலர்ந்த, தடியான தோல் மற்றும் உரோமம்.
  • கரகரப்பான குரல்
  • குளிரினை பொறுத்துக்கொள்ள முடியாது.

 

கீழ்க்காண்பவைகள் ஹைப்பர்தைராய்டிஸ்சத்தின் அடையாளங்கள் ஆகும்.

  • எரிச்சல் / படபடப்பு
  • தசைகளின் பெலவீனம் / நடுக்கம்
  • உடல் எடைகுறைதல்
  • தூக்கமின்மை
  • தைராய்டு சுரப்பி வீங்குதல்
  • கண்களில் எரிச்சல் அல்லது பார்வை கோளாறு
  • வெப்ப உணர்வு அதிகரித்தல்

தைராய்டு நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதற்காக சிகிச்சையினை மேற்கொண்டு நோயின் அடையாளங்கள் ஏற்படும் முன்னரே இதனை கட்டுப்படுத்தலாம். தைராய்டு நோய்கள் வாழ்க்கையின் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு பிரச்சினை. இதனை சரியாய் கையாள்வதினால் தைராய்டு நோய் உள்ளவர் ஆரோக்கியமாக மற்றவர்களைப் போல வாழலாம்.

ஜலதோஷம்

ஜலதோஷம் எப்படி பரவுகிறது?
ஜலதோஷம் என்பது ஒருவரோடு ஒருவர் கைகளை குலுக்கும் போது பரவுகிறது. உதாரணமாக ஜலதோஷம் கொண்ட நபர்  வாயினால் ஊதும்போது அல்லது கைகளை கொண்டு மூக்கை துடைத்த பின் மற்றவர்களை தொடும்போது மற்றவருக்கு ஜலதோஷம் ஏற்படுத்தும் வைரஸ் கிருமி தொற்றிக் கொள்கிறது. கூடுதலாக பேனா, புத்தகங்கள் மற்றும் காபி அருந்தும் கோப்பைகள் போன்ற பொருட்களில் இந்த வைரஸ் பல மண்- நேரம் தங்கி, அப்பொருட்களை தொடும் ஓருவருக்கு நோய் தொற்றும் வாய்ப்புள்ளது. உண்மையில் இவ்வகை நோய்க்கிருமிகள் இருமல் மற்றும் தும்மல் போன்றவை மூலம்  பரவும் தன்மை மிகவும் குறைவு.

குளிர்ச்சியான சீதோஷண நிலையால்ஜலதோஷம் பரவும் சாத்தியம் உள்ளதா?
குளிர்ச்சியான சீதோஷண நிலையில், வெளியில் செல்வதினால் ஜலதோஷம் பரவுவது குறைவு. சீதோஷண நிலையைவிட ஜலதோஷம் உள்ளவருடன் நாம் எவ்வளவு நெருக்கம் கொள்கிறோம் என்பதனை பொறுத்து மற்றவருக்கு பரவுகிறது.

பருமனான உடல் நிலை

அதிகமான கொழுப்பானது உடலில் தங்கி விடுவதால் சாதாரண அளவில் இருக்க வேண்டிய எடையைவிட 20 சதவீதம் உடல் எடை அதிகரித்துக் காணப்படும் நிலை பருமனான உடல் நிலை என்று அழைக்கப்படுகிறது.

பருமனான உடல் நிலையினால் ஏற்படும் பாதிப்புகள்
  • பருமனான உடல் நிலை மோசமான உடல் விளைவுகளுக்கும் இளவயது மரணத்திற்கும் காரணமாகின்றது.
  • பருமனான உடல் நிலை, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பின் அளுவு அதிகரித்தல், இதய நோய், நீரிழிவு, சிறுநீரகக் கல் மற்றும் ஒரு வகையான புற்று நோய்க்கும் வழிவகுக்கிறது.
  • அளவிற்கு அதிகமாக உண்பது மற்றும் குறைந்த உடல் உழைப்பு போன்றவைகளாலும் சில சமயங்களில் பரம்பரை காரணங்களாலும் பருமனான உடல் நிலை குறைபாடு ஏற்படுகின்றது.
பருமனான உடல் நிலைக்குக் காரணங்கள்
  • சாப்பிடும் அளவிற்குத் தகுந்த சக்தியானது உடலில் செலவிடப்படாத நிலை
  • அதிக அளவில் கொழுப்பு பொருட்களை உட்கொள்வது
  • குறைவான உடல்பயிற்சி மற்றும் இலகுவான வாழ்க்கை முறை
  • மனநிலை சம்பந்தமான காரணிகளினால் அதிகமான உணவை உட்கொள்வது
  • உடலுக்குத் தேவையான சக்தயை உடல் சரியாக செலவழிக்கத் தவறும் போது
குழந்தைபருவத்தில் இருக்கும் பருமனான உடல் பின்னர் வளர்ந்த பின்பு பருமனான உடல் நிலைக்கு வழிவகுக்கிறது. சரிவிகித உடல் எடை அளவு

சரிவிகித உடல் எடையினை கணக்கிடுவதற்கு பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படும் கணக்கீடுமுறை "பாடி மாஸ் இன்டக்ஸ்" (உடல் எடை குறி) ஆகும். இதன்மூலம் சரிவிகித உடல் எடையினைக் கணக்கிட இயலும்.
உடல் எடை குறி = உடல் எடை (கிலோகிராம்)/[உயரம் (மீட்டர்)]2
உடல் எடை குறி
18.5 ஐவிட குறைவாக இருந்தால் - குறைந்த எடை
18.5 - 25 வரை இருந்தால் - சரியான எடை
25 - 30 வரை இருந்தால் - அதிக எடை
30 ஐவிட அதிகமாக இருந்தால் - மிக அதிக எடை

உடல் எடையைக் குறைப்பதற்கான வழிமுறைகள்
  • எண்ணையில் பொரித்த உணவு வகைகளை மிகவும் குறைந்த அளவில் உண்ண வேண்டும்.
  • அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுவகைகளான முழுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் முளைகட்டிய பயறுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • மெதுவாக மற்றும் சீராக உடல்எடை குறைய வேண்டும்.
  • அதிக அளவில் பட்டினி இருப்பது உடல்நலக்குறைவிற்கு வழிவகுக்கக்கூடும்.
  • நமது உடல் இயக்கத்திற்கு ஏற்ற அளவில் தேவையான உணவினை தாராளமாக உட்கொள்ளலாம்.
  • குறைந்த அளவு உணவினை அதிக இடைவேளைகளில் உண்ண வேண்டும்.
  • சர்க்கரை, கொழுப்பு மற்றும் மது போன்றவற்றை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும்.
  • ஆடைநீக்கிய பாலை உபயோகிக்க வேண்டும்.
  • மாவுச்சத்து உணவுகளை குறைத்து, புரதச்சத்து உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

டிஹைட்ரேஷன்(உடலில் உள்ள நீரின் அளவு குறைதல்)

டிஹைட்ரேஷன் என்றால் என்ன?
டிஹைட்ரேஷன் என்பது, உடலில் உள்ள நீரினை, மிக அதிகளவில் இழப்பது ஆகும். நம் உடல் நன்கு செயல்பட, நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை உட்கொள்ளவேண்டியள்ளது. ஒரு நாளுக்கு உட்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச நீரின் அளவு 8 டம்ளர்கள் (ஒரு லிட்டர் அல்லது ஒன்றேகால் லிட்டர்) ஆகும். தேவைப்படும் தண்ணீரின் அளவு உடல் செயல்திறன் மற்றும் வயதினைப்பொருத்து வேறுபடுகிறது. ஆனால், நன்கு சுறுசுறுப்பாக செயல்படும் நபர்களுக்கு மேற்கூறிய அளவைவிட, இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் தேவைப்படுகிறது. நாம் உட்கொள்ளும் நீரானது நமது அன்றாட செயல்களின் போது இழக்கும் நீரின் அளவை சரி கட்டும் அளவிற்கு தேவைப்படுகிறது. நமக்கு தேவையான அளவைவிட குறைவாக தண்ணீர் அருந்தும் போதோ அல்லது நமது உடல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இழக்கும் போது, அது டிஹைட்ரேஷனில் முடிகிறது.

டிஹைட்ரேஷன் எதினால் ஏற்படுகிறது?
குடலில் பாதிப்பு ஏற்படுவதினால், அதிகளவு தண்ணீர் இழப்பு நேரிடுகிறது. குடலின் உட்சுவரில் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்கிருமிகள் சேர்வதால், குடலிலிருந்து உடலுக்குள் உறிஞ்சப்படும் நீரின் அளவைவிட அதிகளவு திரவத்தினை குடலானது சுரக்கச்செய்யும் போதும், குமட்டல் மற்றும் பசி இன்மையினால் உட்கொள்ளும் நீரின் அளவு  குறைவதினாலும் டிஹைட்ரேஷன் ஏற்படுகிறது.

டிஹைட்ரேஷன்-னின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
சில நாட்களிலேயே உடல் எடை குறைவதாகும் (அல்லது சில மணி நேரங்களில்) வேகமாக உடலின் எடையில் 10 சதம் குறைதல் என்பது மோசமான டிஹைட்ரேஷன் நிலையாகும். பொதுவாக தாகம் அதிகரித்தல், நாவறண்ட தன்மை, பெலவீனம் அல்லது லேசான தலைவலி (குறிப்பாக நிற்கும் போது தலைவலி அதிகரித்தல்) சிறுநீரின் நிறம் மாறுதல் அல்லது கழிக்கும் சிறுநீரின் அளவு குறைதல் போன்றவை டிஹைட்ரேஷன்-னின் அடையாளங்களாகும். மோசமான டிஹைட்ரேஷன் ஏற்படும் போது, உடலின் வேதியியல் தன்மை மாறுகிறது. சிறுநீரக செயல் இழப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள ஏற்படும்.

தலைமுடி கொட்டுதல் (அ) இழப்பு

தலைமுடி கொட்டுதல் என்றால் என்ன?

தலைமுடி கொட்டுதல் என்பது தலையில் உள்ள முடி பரவலாக உதிர்ந்து முடியின் அடர்த்தி குறைவது முதல் வழுக்கை ஏற்படுதல் வரையாகும். வேறுபட்ட காரணங்களுக்காக முடி உதிரலாம். மருத்துவ ரீதியாக தலைமுடி உதிர்வதை பலவகைப்படுத்தலாம். அவையாவன.

  • பொதுவான வகை முடி உதிர்தல் என்பது, உடலில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாதத்திற்கு பின் ஏற்படுகிறது. அதாவது நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கிடத்தல்,  பெரிய அறுவை சிகிச்சை அல்லது மோசமான நோய்தொற்றுக்கு பின்னர் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு மாறும்போதும் முடி உதிர்தல் ஏற்படலாம். முக்கியமாக, பெண்களில், குழந்தை பிறந்த பின்னர் இது போன்று ஏற்படலாம். மிதமான அளவு முடி உதிர்தல் இருக்கும். ஆனால் வழுக்கை தோன்றுவது அரிதாக காணப்படும்.
  • மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்- முடி உதிர்தல் சில மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படக்கூடும். இதனால், தலை முழுவதிலும், திடீரென முடி உதிரக்கூடும்
  • மருத்துவ ரீதியாக நோயின் அடையாளம் - முடி உதிர்தல் என்பது மருத்துவ ரீதியாக நோயின் அடையாளமாகும். அதாவது தைராய்டு பிரச்சினைகள் (ஹைப்பர் தைராய்டிஸம் மற்றும் ஹைப்போ தைராய்டிஸம்), பாலின-ஹார்மோன்களின் அளவு அதிகமாகவோ அல்லது குறைவுபடும்போதோ, அல்லது மிக மோசமான சத்துணவு பற்றாக்குறை முக்கியமாக புரதம், இரும்பு, துத்தநாகம் அல்லது பையோடின் போன்றவற்றின் குறைபாடுகளின் அடையாளமாகும். இது போன்ற குறைபாடுகள், உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்களில் பொதுவாக காணப்படுகிறது.
  • தலையின் தோல்பகுதியில் பூஞ்சான்களினால் ஏற்படும் தொற்று நோய் - சில வகை பூஞ்சான்களினால் ஏற்படும் நோய் தொற்றுவினால், தலையில் வட்ட வட்டமான வடிவில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. இவ்வகையான முடி உதிர்தல் பொதுவாக சிறுபிள்ளைகளில் ஏற்படக்கூடிய ஒன்று.
பரம்பரையாக ஏற்படும் வழுக்கைத்தன்மை

ஆண்களில் முடி உதிர்தல் என்பது, தலையில் முற்பகுதியில் முடிஉதிர்தல் மற்றும்/அல்லது தலையின் மேற்பகுதியில் உள்ள முடி தடிமனின்றி மெல்லியதாக காணப்படுதல் ஆகும். இம்முடியிழப்பு ஆண்களில் ஏற்படும் பொதுவான வகையாகும். இவ்வகையான வழுக்கை ஒரு ஆணின் எந்த வயதிலும் ஏற்படலாம். வழுக்கை (மண்டை) மூன்று காரணிகளின் கூட்டுச் செயலினால் ஏற்படுகிறது. அதாவது பரம்பரையாக ஏற்படக்கூடிய தன்மை, ஆண்களில் சுரக்கும் ஆண் இன ஹார்மோன் மற்றும் வயது அதிகரித்தல் போன்றவைகளாகும். பெண்ளில் தலையின் முனபாகம் தவிர, அனைத்து இடங்களிலும் தலைமுடி அடர்த்தியின்றி மெலிந்து காணப்படுதல் ஏற்படுகிறது.

அடையாளங்கள்

அடையாளங்கள்
நாம் ஒவ்வொரு நாளும் 50 முதல் 100 தலைமுடியினை இழக்கிறோம். ஒருவேளை இதற்கு மேற்பட்ட தலைமுடி உதிர்ந்தால் இது ஒரு வழுக்கை ஏற்படக்கூடியதற்கான காரணமாகும். பொதுவாக தலைமுடி மெலிந்து மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் வழுக் ஏற்படுவதையும் கவனிக்கலாம்.

தடுத்துக்காத்தல்

உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைத்தல், நல்ல சுகாதாரமான உணவகளை உட்கொள்ளுதல் மற்றும் நல்ல தலைமுடியினை பராமரிக்கும் முறைகள், மற்றும் கூடுமானால் முடி உதிர்வதை தடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவைகளை மேற்கொள்வதினால் சிலவகை முடி இழப்பினை தடுத்துக் காக்கலாம். பூஞ்சான்களின் தொற்றுவினால் ஏற்படும் முடி இழப்பினை, முடியினை சுத்தமாக வைத்துக் கொள்வதினாலும், தொப்பி, சீப்பு அல்லது ப்ரஷ் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதினை தவிர்ப்பதன் மூலமும் தடுத்துக் காக்கலாம். பரம்பரையாக ஏற்படக்கூடிய முடி இழப்பினை சிலவேலைகளில் மருந்துகளை உட்கொள்வதினாலும் தடுத்துக் காக்கலாம்.

தலைமுடி உதிர்தல் தடுக்க சில ஆலோசனைகள்

கூந்தலின் வறட்சித் தன்மையை நீக்க சில குறிப்புகள்:-

  • விளக்கெண்ணெய் தேய்க்கவும்.
  • முட்டை கலந்த ஷாம்பை உபயோகப்படுத்தவும்.
  • தயிரை தடவி ஊரவைத்து குளிக்கும் போது தலையை நன்கு அலசவும்.

முடி வளர,முடி கருமையாக மற்றும் முடி கொட்டுவது நிற்க்க சில குறிப்புகள்:-

  • முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்.
  • கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.
  • நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
  • சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
  • செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
  • முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
  • வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

மூலம் : S.P. கலா ,கருங்காலக்குடிகிராமம், தமிழ்நாடு

மலச்சிக்கல்

மலச்சிக்கல் என்றால் என்ன?
மலம் கழிக்கும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றத்தினை மலச்சிக்கல் என்று கூறுவர். கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 3 முதல் 12 முறை மலம் கழிப்பது “இயல்பான” மலம் கழிக்கும் முறை எனலாம்.

அடையாளங்கள்
வயிறு உப்புகை மற்றும் வயிற்றில் ஏற்படும் அசெளகரியங்கள்.

காரணங்கள்

  • நார்சத்து குறைவாக உள்ள உணவு உட்கொள்ளுதல்
  • டிஹைட்ரேஷன் (உடலின் நீர் அளவு குறைதல்)
  • ஜீரண உறுப்புகளின் (குடல்) இயங்குதன்மை குறைதல்
  • சில மருந்துகளை உட்கொள்ளுவதால் ஏற்படக்கூடியவை
  • பெருங்குடலில் ஏற்படும் புண் (உ-ம்) பெருங்குடல் புற்றுநோய்
  • தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரத்தல் (ஹைப்போதைராய்டிஸம்)
  • சுண்ணாம்புச்சத்து குறைவாக உள்ள நிலை / பொட்டாசியம் குறைவாக உள்ள நிலை.
  • பார்கின்சன்ஸ் நோய்.

எளிய (சிகிச்சை முறைகள்) தீர்வுகள்

  • உணவில் நார்ச்சத்துள்ள பொருளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது முழு தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
  • பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

பிரச்சினைகள் தொடர்ந்து விடாப்பிடியாக இருக்கும் போது மருத்துவரை அணுகவேண்டும்.

காய்ச்சல்கள்

மனிதர்களின் சாதாரண உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அல்லது 98.6 டிகிரி செல்சியஸ் ஆகும். உடல் வெப்பநிலை சாதாரண அளவை விட அதிகமாகும் போது அதனை காய்ச்சல் என்கிறோம். காய்ச்சல் என்பது ஒரு வியாதி அல்லது நோய் அல்ல. இது ஒரு நோயின் அறிகுறியேயாகும். காய்ச்சல் என்பது நோய் தொற்றுவினால் உடலில் ஏற்படும் எதிர்விளைவு ஆகும். காய்ச்சல் அதிகரிப்பது நோய் அதிகரிப்பதை குறிக்கிறது.

காரணங்கள்

கீழ்க்காணும் நோய்கள் காய்ச்சலை ஏற்படுத்தும் காரணங்களாகும்

  • மலேரியா
  • டைபாய்டு
  • காச நோய் (TB)
  • ருமாடிக் காய்ச்சல்
  • தட்டம்மை
  • புட்டாளம்மை (மம்ப்ஸ்)
  • நிமோனியா, சளி, இருமல், உள்நாதசையழற்சி (டான்ஸிலைட்டிஸ்), மூச்சுக்குழலழற்சி (பிரான்கைட்டிஸ்) போன்ற சுவாச மண்டல சம்மந்தமான நோய்தொற்றுகள்.
  • மூத்திரப் பாதை அல்லது குழாயில் ஏற்படும் நோய்தொற்றுகள்.

பொதுவாககாய்ச்சலின் அறிகுறிகள்

  • உடல் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ் அல்லது 100 டிகிரி பாரன்ஹீட் என உயர்ந்து காணப்படுதல்
  • தலைவலி
  • உடல் நடுக்கம்
  • மூட்டு வலி
  • பசியின்மை மற்றும் சோர்வு
  • மலச்சிக்கல்

பின்பற்றதேவையான எளிய ஆலோசனை

  • நோயாளியை நன்கு காற்றோட்டமான அறையில் வைக்க வேண்டும்
  • நிறைய அளவில் தண்ணீர் உட்கொள்ள வேண்டும்
  • தூய்மையான மற்றும் மென்மையான உடையை அணியச் செய்யலாம்
  • போதுமான ஓய்வு அவசியம்.
  • உடல் வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸ் அல்லது 103 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருந்தாலோ அல்லது காய்ச்சல் தொடர்ந்து 48 மணி நேரங்களுக்குமேல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்

காய்ச்சலின்போது உட்கொள்ள வேண்டிய உணவுகள்

  • காய்ச்சிய தூய்மையான (தண்ணீர்) குடிநீர் - அதிக அளவில்
  • உடலை பாதுகாக்க தேவையான சத்துப்பொருட்களான குளுகோஸ், பானங்கள் மற்றும் பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளச் செய்யலாம்.
  • சுலபமாக ஜீரணமாகக்கூடிய அரிசிக் கஞ்சி, ஜவ்வரிசிக்கஞ்சி, பார்லி நீர் போன்றவை தகுந்தவை
  • பால் மற்றும் ரொட்டி
  • ஆட்டிறைச்சி, முட்டை, வெண்ணை, தயிர் மற்றும் எண்ணையில் தயார்செய்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அல்சர் (குடற் புண்)

அல்சர் என்றால் என்ன?
அல்சர் என்பது செரிமான உறுப்பு/குழலின் உட்சுவர்களில் ஏற்படும் புண்கள்/ரணம் ஆகும். அல்சர் பெரும்பாலும் பொதுவாக டியோடினத்தில் (அதாவது சிறுகுடலின் முதல் பகுதியில்) ஏற்படும்.

அல்சர் ஏற்படுத்துபவைகள் யாவை?

  • ஹெலிகோபாக்டென் பைலோரை எனப்படும் ஒரு வகை பாக்டீரியா பலவகை அல்சர்களை ஏற்படுத்துகிறது.
  • வயிற்றில் சுரக்கும் அமிலம் மற்றும் திரவச்சாறு செரிமான மண்டலத்தின் உட்சுவரினை எரித்து, அரிப்பதும் அல்சர் ஏற்படுவதில் பங்கு வகிக்கிறது. இது உடலில் மிக அதிகமான அமிலம் உற்பத்தியாவதினாலோ அல்லது செரிமான மண்டலத்தின் உட்சுவரானது பிறவழிகளில் சிதைவுறுவதினாலோ ஏற்படுகிறது.
  • உடல் ரீதியான மற்றும் உளரீதியான அழுத்தமும், ஒரு நபரில் ஏற்கனவே அல்சர் இருப்பின், அதனை அதிகரிக்கிறது.
  • சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினாலும் அல்சர் ஏற்படுகிறது.

அல்சரில் ஏற்படக்கூடிய அடையாளங்கள்

  • சாப்பிடும் போது அல்லது தண்ணீர் குடிக்கும் போது நன்றாய் இருக்கும், ஆனால் 1 அல்லது 2 மணி நேரம் கழித்து, நிலமை மோசமாகும் (டியோடினல் அல்சர்).
  • சாப்பிடும்போது மற்றும் குடிக்கும் போது நிலைமை மோசமாதல் (காஸ்டிரிக் அல்சர்).
  • இரவு தூக்கத்தை பாதிக்கும் அளவுக்கு வயிற்று வலி ஏற்படுதல்.
  • வயிறு கனத்தல் போன்ற உணர்வு, வயிறு உப்புதல், வயிறு எரிச்சல், அல்லது மந்தமான நிலையில் வயிற்றில் வலி.
  • வாந்தி
  • எதிர் பாராத உடல் எடை இழப்பு.

கடைப்பிடிக்க எளிய ஆலோசனைகள்

  • புகைபிடிக்கக் கூடாது
  • மருத்துவர் பரிந்துரைக்காத பட்சத்தில் அழற்சியை தடைசெய்கிற மருந்துகளைத் தவிர்க்கவும்.
  • காஃபீன் மற்றும் மதுவகைகளைத் தவிர்க்கவும்
  • நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.

அல்சர் மோசமடைதலின் எச்சரிக்கையான அடையாளங்கள்

  • இரத்த வாந்தி ஏற்படுதல்.
  • சில மணி நேரங்களுக்கு முன் அல்லது நாளுக்கு முன் உட்கொண்ட உணவினை வாந்தி பண்ணுதல்.
  • வழக்கத்திற்கு மாறான பலவீனம் அல்லது தலைசுற்றல்.
  • மலத்தில் இரத்தம் வருதல் (மலத்தில் இரத்தம் வருவதால் மலத்தின் நிறம் கருப்பு அல்லது தார் போன்று மாறுதல்)
  • தொடர்ந்து கொமட்டல் அல்லது திரும்பத்திரும்ப வாந்தி
  • திடீரென மோசமான வலி
  • தொடர்ந்து எடை குறைவு
  • மருந்து உட்கொண்டாலும், வலி நீங்காமலிருத்தல்
  • வலி உடலின் பின்பக்கம் வரை சென்றடைதல்.

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

* வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்ற உடல் பாகங்களால் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.

தொடர்பான தகவல்கள்
  • புகையிலையினால் ஏற்படுகிற வாய்ப்புற்று நோய் கொண்ட நோயாளிகள், உலகிலேயே, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில்  உள்ளனர்.
  • இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு, முறையே 56.4% மற்றும் 44.9% புகையிலை காரணமாயிருக்கிறது.
  • 90%கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைபிடித்தல் ஏற்படுத்துகிறது.
* இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புற இரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.
தொடர்பான தகவல்கள்
  • இந்தியாவில் 82% நாட்பட்ட நுரையீரல் சுவாசக்குழாய் அடைப்பு நோய் ஏற்பட, புகைப்பிடித்தல் காரணமாய் அமைகிறது.
  • புகையிலை மறைமுகமாக நுரையீரல் டியூபர்குளோஸிஸினை (டி.பி) ஏற்படுத்துகிறது. எப்போதும் புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் ஆகும். சிகரெட் அல்லது பீடிகளை அதிகளவு புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
  • புகைத்தல்/புகையிலை திடீரென இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவினை குறைக்கிறது.
  • புகையிலை, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில், கரங்களில் காங்கரின் எனப்படும் கால் மாமிசத்தை அரித்துவிடும் புண்களை ஏற்படுத்தலாம்.
  • புகையிலை, உடல் முழுவதிலும் உள்ள தமனி எனப்படும் இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக்குழாய் சுவர்களை சேதப்படுத்துகிறது.
  • புகைத்தல், சிறுபிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு உடல்நலக்கேட்டினை ஏற்படுத்துகிறது. புகைப்பழக்கமில்லாத ஒருவர், புகைப்பழக்கம் (ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கும்) உள்ளவரோடு சேர்ந்து வாழும்போது, புகைபிடிக்காத நபர் அவரை அறியாமலேயே மூன்று சிகரெட்டினை புகைக்கிறார். இது அவரின் சிறுநீரில் உள்ள நிகோடின் அளவு கொண்ட கணிக்கப்பட்டது.
  • புகைத்தல்/புகையிலை பயன்பாடு டையாபிடிஸ் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிற காரணியாக அமைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
  • புகையிலை, இரத்தத்திலுள்ள நன்மை பயக்கக்கூடிய கொழுப்பின் அளவை குறைக்கிறது.
  • புகைபிடிப்பவர்கள் / புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, பயன்படுத்தாாதவர்களை, விட இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது.
* ஒவ்வொரு 8 விநாடிகளில் 1 புகையிலை சம்மந்தமான மரணம் நிகழ்கிறது.
தொடர்பான தகவல்கள்
  • இந்தியாவில் புகையிலை சம்மந்தமான உயிரிழப்பு ஆண்டிற்கு 8 முதல் 9 லட்சம் ஆகும்.
  • புகையிலையை தவிர்ப்பதால் ஒரு விடலைப்பருவத்தினரின் வாழ்வில் 20 ஆண்டுகள் கூடுகிறது.
  • புகையிலை பயன்படுத்தும் விடலைப்பருவத்தினரில் பாதிப்பேர் புகையிலை உபயோகத்தால் கொல்லப்படுகின்றனர். (மீதமுள்ளவர்களில் பாதிபேர் நடுத்தரவயதிலும், பாதிபேர் முதிர்வயதிலும் கொல்லப்படுகின்றர்)
  • புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேகமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* ஆண்கள் மற்றும் பெண்களில், புகைத்தல் / புகையிலை உபயோகம், கெடுதலான விளைவுகளை ஏற்படுத்துகிறது
தொடர்பான தகவல்கள்
  • ஆண்களில் மலட்டுத் தன்மை ஏற்பட, புகைப்பழக்கம் ஒரு காரணமாக அமைகிறது.
  • புகைத்தல் / புகையிலை பயன்பாடு, பெண்களில் ஈஸட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் நின்றுபோவது குறித்த காலத்திற்கு முன்பே ஏற்படுகிறது.
  • புகைத்தல் / புகையிலை பயன்பாடு உடலின் செயல் மற்றும் திறனை குறைக்கிறது.
  • புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது, ஸ்ட்ரோக் (மூலை பாதிப்பு) ஏற்படும் வாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது.
  • புகைப்பழக்கம் உள்ள கர்ப்பிணிகளில், குழந்தையை இழக்க அதிகவாய்ப்பு உள்ளது. குறைந்த எடையுடன் கூடிய பிள்ளைபிறக்கும் வாய்ப்புள்ளது. வளர்ச்சியில் கோளாறுகள் கொண்ட குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. பிறந்த குழந்தை திடீரென இறக்க வாய்ப்புள்ளது.
புகையிலையினை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

புகையிலையைதவிர்ப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

  1. உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.
  2. உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது.
  3. நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால் பாதிக்கப்படமாட்டார்.
  4. உங்கள் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் இருமல் மற்றும் சளி மறையலாம்.
  5. உங்கள் பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாறும்.

புகையிலையைதவிர்ப்பதால் ஏற்படும் சமுதாய நன்மைகள்

  1. நீங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராக இருப்பின், சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.
  2. உங்கள் சுயதோற்றம் மற்றும் சுயநம்பிக்கை வளரும்.
  3. இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராய் இருப்பீர்கள்.
  4. புகையிலையை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம், மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்
புகையிலை பயன்பாட்டினை விட்டுவிட எந்நேரமும் நல்ல நேரம் தான்
  • புற்றுநோய் மற்றும் பிற மோசமான நோய்கள் ஏற்படும்முன், நடுத்தரவயதில் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது, பிற்காலத்தில், புகையிலைப் பழக்கத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் பிற ஆபத்துகளை தவிர்க்கிறது.
  • புகையிலை பழக்கத்தினை ஆரம்ப வயதிலேயே நிறுத்துவதின் பலன் மிகவும் அதிகம்.
  • புகைபிடிக்கும் பழக்கத்தை நீங்கள் விட்டுவிட்டால்,  இதயநோய் வரும் அபாயம், புகைபிடிக்காதவர்களைப்போலவே 3 வருடங்களில் குறைந்து, இயல்பான நிலைக்கு வருகிறது.
புகைத்தல் / புகையிலை பயன்பாட்டினை தவிர்க்க சில ஆலோசனைகள்
  1. சிகரெட் சாம்பல் போடும் தட்டுகள், பான், ஜர்தா போன்றவற்றை கண்ணிற்கும், மனதிற்கும் மறைவாக வைக்க வேண்டும்.
  2. சிகரெட், பான், ஜர்தா போன்றவற்றை சுலபமாக கிடைக்காத,  எட்டாத இடத்தில் வைக்கவும். உ.ம். வீட்டின் பிற அறைகளிலோ, அடிக்கடி செல்லாத இடங்களிலோ அல்லது அலமாரிகளில் வைத்து பூட்டியோ வைக்க வேண்டும்.
  3. புகை, பான், ஜர்தா போன்றவற்றை பயன்படுத்த தூண்டும் காரியங்கள், புகைப்பிடிப்போர் கூட்டம் போன்றவற்றை கண்டறிந்து, சிறிது காலத்திற்கு அவற்றிலுருந்து விலகியிருக்க முயற்சிக்க வேண்டும்.
  4. சுவிங்கம், இனிப்புகள், பெப்பர்மென்ட் மிட்டாய்கள், சர்க்கரை மிட்டாய் போன்றவற்றை வாயில் போட்டுக் கொள்ளுதல்
  5. எப்பொழுதெல்லாம் புகையிலை, பான் போன்றவை நினைவுக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில், மூச்சினை நன்கு இழுத்து விட முயற்சிக்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்வது புகைப்பழக்க எண்ணத்தை குறைக்க உதவுகிறது.
  6. புகையிலை எடுக்க நீங்கள் நினைக்கும்போது, உங்கள் குழந்தைகள் பற்றி சிந்தியுங்கள். மேலும், புகையிலையினால் நோய் ஏற்படின், அது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதனை சிந்தனை செய்து பாருங்கள்.
  7. புகையிலை பழக்கததினை நிறுத்த ஒரு தேதியை குறியுங்கள்.
  8. உங்களுக்கு உதவும் நபரை கண்டறியுங்கள்.
  9. புகையிலை, பான், ஜர்தா போன்றவை இல்லாத முதல் நாளுக்காய் திட்டமிடுங்கள்.
  10. புகையிலை, பான், ஜர்தா போன்றவற்றின் மேல் விருப்பம்  ஏற்படும் போது கீழ்க்காணும் 4 வழிகளைப் பின்பற்றுங்கள்
    • ஏதேனும் ஒரு வேலையை செய்யுங்கள்
    • அடுத்த சிகரெட்டினை புகைக்க / பயன்படுத்த தாமதியுங்கள்
    • மூச்சை நன்கு உள்ளிழுத்து விடுங்கள்
    • தண்ணீர் அருந்துங்கள்
  11. புகையிலை பழக்கததினை விடுவதற்கு உங்களால்  முடியும் என உறுதியாக நம்புங்கள்
  12. உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள்
  13. மனதைத் தளர்ததும் உக்திகளை (யோகா, நடைபயிற்சி, தியானம், நடனம், இசை போன்றவை) ஒவ்வொரு நாளும் செய்யுங்கள்.
  14. காஃபின் (காபியில் இருக்கும் ஒரு வகை வேதியல் பொருள்) மற்றும் ஆல்கஹால் (மது) உட்கொள்வதை குறைத்துகொள்ளுங்கள்
  15. மேலும சுறுசுறுப்பாக இருந்து, ஆரோக்கியமாக உணவினை உட்கொள்ளுங்கள்.

பிற நோய்கள்

மிருகங்களினால் ஏற்படும் கடிகள்

மிருகங்களின் கடி சாதாரணமாக காயங்களை ஏற்படுத்தும் அல்லது வாழ்க்கையை அச்சுறுத்தக்கூடிய  தொற்றுக் காயங்களை ஏற்படும்.

மிருகக்கடிக்கானகாரணங்கள்
முதலாவது மிருகக்கடி எனும் போது பெரும்பாலானவை நாய்கள் கடிப்பதினால் ஏற்படுகிறது. இரண்டாவதாக பூனைகள் கடிப்பதால் ஏற்படுகிறது. பூனைக்கடிப்பதினால் ஏற்படும் பயங்கரம் என்பது நாய் கடியினால் ஏற்படுவதைவிட மோசமானது. மற்ற மிருகங்கள் எனும்போது பாம்புக்கடி மற்றும் குரங்குக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மிருகங்களின் கடி எனும்போது ராபிஸ் எனும் வெறிநாய்கடி மிக முக்கியமானது. பெரும்பாலும் நாய்கள் கடிப்பதினாலே ராபிஸ் தோன்றுகிறது.

அறிகுறிகள்
மிருகங்கள் கடிக்கும் போது மேல் தோல் கிழியாவிட்டாலும் மேல் தோலுக்கு கீழாக காணப்படும் தசை, டெண்டான் (தசைநார்), லிகாமெண்ட் (தசையை எலும்புகளோடு இணைக்கும் தசைநார்), எலும்புகள் மற்றும் நரம்புகள் போன்ற உறுப்புகள் நசுங்குதல் மற்றும் கிழியக்கூடிய நிலைமைகள் ஏற்படலாம். ஒருவேளை கடியின் போது மேல் தோல் கிழியும் போது மேற்கூறிய நிலைமைகளுடன் நோய் தொற்றக்கூடிய கூடுதல் நிலைமை ஏற்படுகிறது.

நோய்தொற்றுவதற்கான அடையாளங்கள்

  • காயத்தைச் சுற்றிலும் வெதுவெதுப்பாக இருத்தல்
  • காயத்தைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படுதல்
  • வலி தோன்றுதல்
  • சீல் வெளியேறுதல்
  • காயத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறமாக காணப்படுதல்
  • காயத்தை சுற்றியுள்ள தோலில் நோயின் தன்மை பரவுதல்
  • நிணநீர் சுரப்பிகள் வீங்குதல் (நெறிகட்டுதல்)
  • ராபிஸ் மற்றும் பூனைக்கீறலினால் ஏற்படும் காய்ச்சல்

தசைநார்அல்லது நரம்புகள் சேதப்படும் போது காணப்படும் அடையாளங்கள்

  • விரல்களை நீட்டவோ அல்லது முடக்கவோ இயலாமை
  • விரல் நுணிகளில் உணர்வுகள் இழந்தல் காணப்படும்.

உடனடியாகமேற்கொள்ள வேண்டிய மருத்துவ முதலுதவி
கடிபட்ட இடத்தை வாயில் வைக்கக்கூடாது. வாயில் காணப்படும் பாக்டீரியாக்கள் தொற்றக்கூடும்.
மேலானகாயங்கள்
மேலான காயங்களை சோப்பைக் கொண்டோ அல்லது தண்ணீரைக் கொண்டோ நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அல்லது ஹைட்ரஜன் பெர்ராக்சைடு அல்லது ஆல்கஹால் எனப்படும் கிரிமி நாசினியைக் கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட மருந்து அல்லது பூசும் களிம்பினை வைத்து ஒட்டும் தன்மை இல்லாத கட்டுபோடும் துணியைக் கொண்டு காயத்தை மூடவேண்டும். காயம் பட்ட இடத்திலுள்ள நரம்புகள் மற்றும் தசை நார்களில் சிதைவு ஏற்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளனவா என கவனமாய் பார்த்தறிய வேண்டும்.  சிலசமயம் உள்காயம் அல்லது ஊமைக் காயங்கள் ஏற்படும். கடிப்பட்ட இடம் அல்ல காயம் 10 நாட்களுக்குள் சுகமாக வேண்டும். அப்படி ஆறாத பட்சத்தில் அல்லது நோய் தொற்றுதலுக்கான அறிகுறியோ நரம்பு மற்றும் தசை நார் சிதைவோ காணப்படின் கண்டிப்பாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

இரத்தகசிவு அல்லது இரத்தப் போக்கு இருப்பின்
இரததக்கசிவு இருந்தால் அந்த இடத்தை சுத்தமாக நன்கு உலர்ந்த துணியினைக் கொண்டு நேரடியான அழுத்தத்தை செலுத்தி அந்த இடம் மற்ற பகுதிகளைவிட உயர எழும்பச் செய்ய வேண்டும். அந்த இடத்தில் இரத்தக் கசிவு ஏற்படவில்லையெனில், அந்த இடத்தை சுத்தம் செய்ய தேவையில்லை காயத்தை நோய் தன்மையை உண்டுபண்ணாத பாதுகாப்பான சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மற்றும் மருத்துவ உதவியை நாடவேண்டும்.
பாம்புக்கடிகள்
பாம்புகள் குளிர்ரத்தப்பிராணிகள் ஆகும். இவைகளால் தங்கள் உடலின் தட்பவெட்பநிலையினை மாற்றிக்கொள்ள இயலாது. குளிர்ச்சியான தட்பவெட்பத்தில் இவைகள் இயல்பாக செயல்படும். இவைகள் 25 முதல் 32 டிகிரி செல்ஷியஸ்  தட்பவெப்பநிலையில் மிகவும் சுருசுருப்பாக செயல்படும்/
பாம்புகள் கடிக்கும் போது தன்னுள் உள்ள விஷத்தை அல்லது நச்சை கடிக்கும் பகுதியில் உட் செலுத்தும். இந்த விஷமானது விஷத்தை சுரக்கும் சுரப்பியிலிருந்து நடு குழாய்  போன்ற அமைப்பின் வழியாய் பாம்பின் விஷப்பல்லுக்குச் செல்லும் பின்னர் தான் கடிக்கும் இறையின் உடலினுள் செலுத்தும். பாம்பின் விஷத்தில் பல விளைவுகளை உண்டாக்கும் பல பொருட்கள் கலவையாக காணப்படுகிறது. சுருங்கச் சொன்னால் விஷத்தில் உள்ள புரதங்களை 4 வகையாக பிரிக்கப்படலாம்.

  • சைட்டோடாக்சின் எனப்படும் உடற்செல்களை பாதிக்கும் விஷத்தன்மையுள்ள புரதம்
  • ஹிமோ டாக்சின் எனப்படும் இரத்தத்தை பாதிக்கும் விஷத் தன்மையுள்ள புரதங்கள்
  • நியூரோடாக்சின் எனப்படும் நரம்பு பகுதியை பாதிக்கும் விஷத் தன்மையுள்ள புரதங்கள்
  • கார்டியோ டாக்சின் எனப்படும் இதயத்தை பாதிக்கும் விஷத் தன்மையுள்ள புரதங்கள்

8000 வகையான விஷத்தன்மையுள்ள பாம்புகள் உள்ளன. இவற்றில் மனிதர்களில் ஆபத்தை ஏற்படுத்தும் இரண்டு முக்கிய குடும்பப்பிரிவுகளை சார்ந்த விஷத்தன்மையுள்ள பாம்புகள் உள்ளன. அவை நாகப்பாம்பு வகை மற்றும் விரியன் பாம்புவகை.

அறிகுறிகள்
விஷப்பாம்புகடி பல விளைவுகளை ஏற்படுத்தும் (சிறிய காயங்கள் முதல் வாழ்க்கையை அச்சுறுத்தும் வியாதி மற்றும் மரணம்.) விஷப்பாம்பு கடிக்குப்பின் ஏற்படும் அறிகுறிகள் சிலவேலைகளில் தவராக புரிந்து கொள்ளப்படும். விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் எந்த குறிப்பிட்ட அறிகுறியும் காணப்படாது. பின்னர் திடீரென சுவாசிப்பது கடினமாகி மயக்க நிலை ஏற்படும்.

பாம்புக்கடியால் ஏற்படும் சில முக்கிய வகை அடையாள அறிகுறிகள்

  • கடிபட்ட இடத்தில் ஏற்படும் மாற்றங்கள், விரியன் மற்றும் சிலவகை நாகப்பாம்பு கடியினால் அந்தபகுதியில் வலி இருக்கும் மற்றும் அந்த இடம் தடித்து மிருதுவாய் காணப்படும். கடிப்பட்ட இடம் வீக்கம் கண்டு, இரத்த கசிவு மற்றும் கொப்புளங்கள் ஏற்படும். சில நாகப்பாம்பின் விஷம் கடிப்பட்ட இடத்தை சுற்றியுள்ள திசுக்களை, தசைபகுதியை கொன்றுவிடும்.
  • இரத்தப்போக்கு, விரியன் பாம்பு கடியினால் உடல் உள்ளுறுப்புகளில் குறிப்பாக மூளை மற்றும் குடல் போன்ற பகுதிகளில் இரத்த கசிவு ஏற்படும். கடிப்பட்டவருக்கு கடிப்பட்ட இடத்திலிருந்து அல்லது வாய் மற்றும் பழய காயங்களிலிருந்தோ தானகவே இரத்தப்போக்கு ஏற்படும். சரியாக கவனிக்கவில்லையெனில் இரத்தப்போக்கின்மிகுதியால் மயக்க நிலை இன்னும் மரணமும் நேரிடலாம்.
  • நரம்பு மண்டல பாதிப்புகள் : சில வகை பாம்புகளின் விஷமானது நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கின்றன. விஷம் விரைவாக குறிப்பாக சுவாசதசைகளை பாதிப்பதினால் மருத்துவ உதவியின்றி மரிக்க நேரிடும். ஆரம்பத்தில் கடிப்பட்ட நபரின் கண்களில் பாதிப்பு ஏற்படும். பேச்சு குழறல் மற்றும் சுவாச பிரச்சனைகள், சுயநினைவிழக்கும் தன்மை பின்னர் மரணம்.
  • தசை செயல் இழப்பு  சில குறிப்பிட்ட பாம்பு விஷம் நேரடியாக உடலில் ஆங்காங்கே பல பகுதிகளில் உள்ள தசையை செயல்இழக்கச் செய்கிறது. செயல் இழந்து தசைகளிலிருந்து வெளிவரும் கழிவு சிறுநீரகங்களின் செயல்பாட்டை தடை செய்யும் மற்றும் இரத்தத்திலள்ள புரதங்களை சீறுநீரகங்கள் மூலம் வெளியேற்ற முயற்சிக்கும். இதன் விளைவாக சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்யும்.
  • கண்கள்    விஷத்தை துப்பும் நாகங்கள் விஷத்தை குறிப்பாக மனதிர்களின் கண்களில் உமிழச்செய்யும். இதன் விளைவாக கண்களில் நேரடியாக வலி மற்றம் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எப்பொழுதுமருத்துவ பராமரிப்பு நடைபெறவேண்டும்

ஒருவரை கடித்த விஷத்தன்மையற்றது என கண்டறியப் பட்டாலோழிய அனைத்து அல்லது எந்த வகை பாம்புகடிக்கான மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவின் உதவியினை அவசியம் நாட வேண்டும். நினைவில் கொள்ள வேண்டியது, பாம்பின் வகையை சரியாக இனம் காணாமல் போனால் இது மரணத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். தவறுதலாகிவிடும். விஷத்தன்மையில்லாத பாம்பு கடியின் காயத்தை நன்கு பராமரிக்க வேண்டும். பாம்பு கடியினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடைசி 5 ஆண்டுகளில் டெடான்ஸ்எனும் ரனஜன்னி கூடுதல் ஊசி போட தவறியிருப்பின் அவசியம் இந்த ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

ராபீஸ் (வெறிநாய் கடி வியாதி) வராமல் தடுப்பது உங்கள் கரங்களில் உள்ளது

அறிகுறிகள்
ராபீஸ் நோயின் போது அதிகமான அளவு உடல் உறுப்புகளின் இயக்கம்,  நடுக்கம், தசை இழுப்பு மற்றும் சுவாசிப்பதில் குறிகிய இடைவெளி போன்றவற்றை கண்டறியலாம். உணவு குழாய் தசைகளில் பாதிப்பு ஏற்படுவதால் எந்த பொருளையும் விழுங்குவது நோயாளிகளுக்கு கடினமாக இருக்கும். ஹைட்ரோபோபியா (தண்ணீரை கண்டால் பயம்) இதனை தொடர்ந்து ஏரோபோபியா (காற்றுக்குப் பயப்படுதல்) மற்றும் உமிழ்நீர் சுரப்பு அதிகரிப்பு போன்றவை அறிகுறிகளாகும்.

ராபீஸ்எப்படி பரவுகிறது?
ராபீஸ் வைரஸினால் பாதிக்கப்பட்ட விலங்கினம் ஒருவரை நாக்கினால் நக்குவதினால் அல்லது கடிப்பதினால் கடிபட்ட நபருக்கு பரவுகிறது. கவனிக்க வேண்டிய காரியம் ஒன்று என்னவென்றால் அனைத்து வெட்ப ரத்த பிராணிகளும் ராபீஸ் வைரஸினால் பாதிக்கப்படகூடும் மற்றும் இந்நோயினை பரப்பவும் செய்யும். உடல் உறுப்புகளை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றும்போது ராபீஸ் வைரஸ் கடத்தப்படகூடும். ராபீஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட மேற்தோல் வழியாக மாத்திரமல்ல நல்ல முறையில் உள்ள மியுகோஸா (உடல் உறுப்புகளின் உட்சுவரில காணப்படும் ஜவ்வு போன்ற அமைப்பு) மூலமும் நம் உடலுக்குள் செல்லும் தன்மை கொண்டவை.

ஒருமனிதனிலிருந்து இன்னொருமனிதனுக்குராபீஸ் வைரஸ்கடத்தப்படக்கூடியசாத்தியங்கள்உண்டா?
மனிதனிலிருந்து மனிதனுக்கு கடத்தப்படுதல் என்பது  சாத்தியம் என்றாலும் இது மிக அரிதாக நடக்கக்கூடியது. மிகவும் குைறந்த அளவிலான சம்பவங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனபோதிலும் ராபீஸ் நோய் கண்ட நபரின் உடலில் உள்ள அனைத்து திரவப்பகுதியிலும் ராபீஸ் வைரஸ் காணப்படுகிறது. இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ராபீஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது அதிக கவனம் எடுக்க வேண்டும். (கையுறைகள் மற்றும் மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்)

ராபீஸ்வைரஸின் இனவிருத்திகாலம் எவ்வளவுமற்றும் இக்காலத்தைநிர்ணயிக்கும்காரணிகள்யாவை?
கடிபட்ட பகுதியில் ராபிஸ் வைரஸ் படிந்தவுடன், தசை இழைகளில் பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிப்பட்ட இடத்திலிருந்து நரம்பு வழியாக தான் இலக்கு உறுப்பான மூளையை நோக்கி நகர்கிறது. இவற்றின் பெருக்கக்காலம் என்பது பல கரணிகளை பொறுத்து வேறுபடுகிறது. அப்படிபட்ட காரணிகளாவன

  • கடிபட்ட இடம்
  • கடிப்பட்ட இடத்தில் பதியும் வைரஸின் அளவு
  • வைரஸின் நோய் உண்டாக்கும் தீவிரத்தன்மை
  • கடிபட்ட நபரின் நோய் எதிர்ப்புத்தன்மையின் நிலை
  • மூளைக்கு அருகில் அதாவது தலை கழுத்து முகம் அல்லது அதிகளவு நரம்புகளை கொண்ட உடலின் எந்த ஒரு கடைப்பகுதியில் கடிபட்டாலும் இவ்வைரஸ் குறைந்த காலத்தில் பெருக்கம் அடையும்

ஏன்ராபீஸ்எப்பொழுதும்மரணத்தைதோற்றுவிக்கக்கூடியவை?
பொதுவாக ராபிஸ் நோயின் அறிகுறியானது சாடிஸ்வைரஸ் நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்தபின்னர் தான் கண்டறியப்படுகிறது அல்லது காணப்படுகிறது. எனவே நரம்பு திசுக்களில் உள்ள இந்த ராபிஸ் வைரஸை எந்த ஒரு நோய் எதிர்ப்பு பொருளும் சென்றடைவதில்லை. நரம்பு திசுவில் இவ்வைரஸ்கள் விரைவாக இனப்பெருக்கம் அடைந்து மரணத்தினை தோற்றுவிக்கிறது

ராபிஸ்வராமல்தடுப்பதறகுசிறந்தவழிஎன்ன?
ராபிஸ் குணப்படுத்த முடியாத ஒன்று. எனவே கீழ்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அவசியம் இதனை தடுக்கவேண்டும்
·  தெருவில் திரிகின்ற விலங்குகளை தொடுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்
·  இந்நோயை வருமுன்னரே தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியினை ஏற்படுத்தும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவேண்டும்
·  வெறிநாய்கடிக்கு பின் முதலுதவி செய்த பின்னர் இந்நோயினை எதிர்க்கும் பொருட்கள் நம் உடலில் உற்பத்தி செய்யும் வண்ணமாக ஆன்டிஜென்களை நம் உடலில் செலுத்தியோ (ஆக்டிவ் இம்யூணைசேஷன்) அல்லது இந்நோயினை எதிர்க்கும் பொருட்களை நேரடியாக நம் உடலில் செலுத்தியோ (பாஸிவ் இம்யூனைசேஷன்) இந்நோயினை எதிர்க்கும் தன்மையை நம் உடலில் ஏற்படுத்த வேண்டும்

ராபிஸிக்குஎதிரானபோதுமானபாதுகாப்பைஉறுதிசெய்யும்அத்தியாவசியநடவடிக்ககள்யாவை?
நல்ல பாதுகாப்பினை உறுதி செய்ய அநேக நடவடிக்கைகள் உண்டு. அதாவது காயத்தை கண்காணிப்பது, ஆக்டிவ் இம்யூனைசேஷன் மற்றும் பாஸிவ் இம்யூனைசேஷன் (மோசமான நாய் கடியின் போது) இருப்பினும் நாம் மனதில் கொள்ள வேண்டிய காரியம் என்னவெனில் கடிபட்ட நபரின் நோய் எதிர்ப்பு தன்மை (குறைவின்றி) நன்கு காணப்படவேண்டும். அப்பொழுதுதான் அந்த நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின தன்மை தடுப்பூசிக்கு ஏற்றாற்போல் செயல்படும்

தடுப்பூசிபோட்டுக்கொள்ளும்போதுமது அருந்துவதைஅவசியம்தவிர்க்க வேண்டுமா?
அதிகம் மது உட்கொள்வது நோய் எதிர்ப்பு செயலினை மட்டுப்படுத்தும். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது அதிகம் குடிக்க வேண்டாம் என்று நோயாளிகளுக்கு கற்பிப்பது நல்லது.

முதுமை

முதுமை என்பது ஒரு நபரின் பிறப்பிலிருந்து தொடங்குகின்றது. ஒரு குழந்தையானது வளர்ந்து பெரிதாகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்படுகிறது. பொதுவாக உடல் இயக்கங்களின் ஒத்துழையாமையில் தொடங்கி மரணம் நிகழக் காரணமாவது முதுமை என்றழைக்கப்படுகிறது.

முதுமையின் போது ஏற்படும் நிகழ்வுகளாவன
மூளை மற்றும் நரம்புமண்டல அமைப்பு
முதுமையடையும் போது, மூளையின் நரம்புமண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறையத் தொடங்குகின்றது. வயதானவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. ஞாபகசக்தி குறைவு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் குறைவான வேகத்துடனேயே காணப்படுவர்.
60 வயதிற்கு மேல் முதுகு தண்டில் உள்ள அணுக்கள் குறைய ஆரம்பிப்பதால் அவர்களின் உணர்வு சக்தி குறையத் தொடங்குகின்றது.

நோய்எதிர்ப்பு சக்தி
முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றது, இது பல நோய்த்தொற்றுகளுக்கு, குறிப்பாக புற்றுநோய், நிமோனியா மற்றும் இன்புளுயன்ஸா போன்றவைகளுக்கு காரணமாகின்றது.

வெயில் மயக்கம் அல்லது வெப்பவலிப்பு

வெப்பவலிப்பு என்றால் என்ன?

வெயில் மயக்கம் அல்லது வெப்பமயக்கம் எனப்படுவது ஒரு உயிரினை குடிக்கும் ஒரு நிலையாகும். அதிக வெய்யில் அல்லது வெப்பநிலைக்கு உடல் ஆட்படுத்தப்படும் போது உடலின் வெப்பநிலையினை ஒழுங்குபடுத்தும் அமைப்பு செயல்படாமல் போகிறது. அதிக வெப்பமான சுற்றுச்சூழல் அல்லது அதிகமான உடலியக்கம் போன்ற சூழ்நிலைகளில் உடலின் அதிகப்படியான வெப்பத்தினை அதனால் வெளியேற்ற முடியாது. உடலின் அதிக வெப்பநிலை உடலிலுள்ள முக்கிய உறுப்புகளின் செயல்படுத்துவதை நிறுத்திவிடும்.

இவ்வெப்பமயக்கம் உடல் வெப்பநிலை சம்பந்தப்பட்ட தீவிரமான நிலையாகும். இந்நிலை அதிக வெப்பநிலையில் கடினமான வேலை செய்யும்போது அல்லது உடற்பயிற்சி செய்வது ஆகிய சூழ்நிலைகளுடன் போதுமான தண்ணீர் அல்லது திரவ உணவுகளை சாப்பிடாதது போன்ற காரணத்தால் ஏற்படுகிறது.

யாருக்கு வெப்ப மயக்கம் ஏற்படும்?

எவருக்கு வேண்டுமானாலும் வெப்ப மயக்கம் ஏற்படலாம் எனினும் சிலர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் அதிக வெய்யிலுக்கு பழகாதவர்கள் போன்றவர்கள் அதிகம் இந்நிலையினால் பாதிக்கப்படுகின்றனர். சில மருந்துகளும் மனிதர்களை இந்நிலையினால் அதிகம் பாதிப்படைவதற்குள்ளாக்கும்.

வெப்பமயக்கத்தின் அல்லது வெப்ப வலிப்பின் அறிகுறிகள் என்ன?

வெப்பமயக்கத்தின் முதல் அறிகுறி உடல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பதாகும். (அதாவது 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல்). மனநிலை பாதிப்படைதல் அதாவது குழப்பமடைதல், கோமா. தோல் காய்ந்தும் சூடாகவும் காணப்படாது. அதிக வேலை அல்லது களைப்பினால் வெப்பமயக்கம் உண்டானாலும் தோல் ஈரப்பதத்துடனே இருக்கும்.

இதர அறிகுறிகளாவன:

  • நாடித்துடிப்பு அல்லது இதயத்துடிப்பு அதிகரித்தல்
  • சுவாசித்தலின் எண்ணிக்கை அதிகரித்தல்
  • அதிகமான அல்லது குறைந்த இரத்தஅழுத்தம்
  • குழப்பம்,எளிதில் உணர்ச்சிவசப்படுதல், சுயநினைவின்மை
  • மயக்கம் வருவது போன்ற உணர்வு
  • தலைவலி
  • வாந்தி
  • மயக்கம்-இது வயதானவர்களில் வெப்பமயக்கத்தின் முதல் அறிகுறியாகும்

வெப்பமயக்கம் தொடர்ந்து இருந்தால் கீழ்க்கண்ட தீவிர அறிகுறிகள் காணப்படலாம்

  • மனக்குழப்பம்
  • அதிகமான மூச்சிரைப்பு
  • உடல் மரத்தல்
  • கைகளிலும், கால்களிலும் வலியுடன் கூடிய வலிப்பு
  • வலிப்பு
  • கோமா
முதலுதவி
  • வெயிலிலிருந்து பாதிக்கப்பட்டவரை அகற்றி நிழலான அல்லது குளிரூட்டப்பட்ட இடத்தில் அமரவைக்கவேண்டும்
  • பாதிக்கப்பட்டவரை படுக்கவைத்து அவரின் கால்களை சற்று உயர்த்திவைக்கவும்
  • அவரின் உடைகளை தளர்த்திவிடவும்
  • குளிர்ந்த தண்ணீர் அல்லது ஆல்கஹால், கஃபின் கலக்காத திரவத்தை குடிப்பதற்கு கொடுக்கவும்
  • தண்ணீர் தெளிப்பது அல்லது குளிர்ந்த தண்ணீரால் நனைத்த ஈரத்துணியால் பாதிப்பப்படவரை துடைத்து விசிறுதல்
  • பாதிக்கபட்டவரை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கவேண்டும். ஏனெனில் உடல் வெப்பநிலை அதிகரித்து பின்னர் வெப்பவலிப்பாக மாறுவதற்கு வாய்ப்புண்டு.

முதலுதவிகள் செய்த பின்பும் உடல் வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருத்தல், வலிப்பு, குழப்பம், மயக்கம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அவரை உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவேண்டும்

எப்படி வெப்பவலிப்பினை தடுப்பது?

வெப்பவலிப்பினை தடுப்பதற்கு அதிக திரவ உணவினை எடுத்துக்கொள்ளவேண்டும். வெயிலில் அல்லது வெளியில் வேலை செய்யும்போது உடல் வெப்பநிலையினை சாதாரணமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். குடிப்பழக்கத்தினை விடுவது, கஃபின் போன்றவற்றை எடுத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும். ஏனெனில் இப்பொருட்கள் உடலிலிருந்து அதிகமாக நீரினை வெளியேற்றும். வெளிறிய நிறமுடைய, தளர்வான ஆடைகளை அணியவேண்டும். வேலைக்கு இடையில் திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு உடலிலுள்ள தண்ணீரின் அளவினை பராமரிக்க வேண்டும்

ஆதாரம்: Mayoclinic.com

கடைசியாக மாற்றப்பட்டது : 6/10/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate