অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

முதியோரை தாக்கும் முக்கிய நோய்கள்

முதியோரை தாக்கும் முக்கிய நோய்கள்

முதியவர்களை பாதிக்கும் முக்கியமான நோய், எலும்பு தொடர்பானது. வயதானால் முதலில் முந்திக்கொண்டு வருவது மூட்டுத் தேய்மானம், முழங்கால் எலும்பு அழற்சி, எலும்புகளின் இணைப்பில் ஏற்படும் வலி ஆகியவை தான். 90 சதவீதத்தினருக்கு, எலும்பு தொடர்பான பிரச்னைகள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

மேலும், ஞாபக மறதி நோய்களும் ஏற்படுகின்றன. வயதாக ஆக, எலும்புகள் பலவீனமடைகின்றன. இதுவே, ‘ஆஸ்டியோபொரோசிஸ்’ எனப்படும். இந்த பாதிப்பு இருந்தால், லேசாக தடுமாறி விழுந்தாலும், எலும்புகள் முறிந்துவிட வாய்ப்புகள் உண்டு. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, ‘வைட்டமின் டி’ அவசியம். கால்சியம் மாத்திரை சாப்பிட்டாலும், அதை கிரகிக்க இளஞ்சூரிய ஒளி உடலில் படும்படி இருப்பது நல்லது. எனவே, வாரத்திற்கு ஐந்து நாட்கள், 30 நிமிடங்கள் வீதம், மிதமான சூரிய ஒளியில், கட்டாயம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால், எலும்பு பிரச்சனைகள் வராமல் இருக்கும். அதோடு, தினசரி பால் அருந்தலாம். அறுபது வயதை கடந்தவர்கள், பி.எம்.டி., எனப்படும், ‘போன் மினரல் டென்சிட்டி’ பரிசோதனை செய்து, எலும்புகளின் உறுதி தன்மையை அறியலாம். மூளையிலுள்ள, ‘நியூரான்’ செல்கள், பலருக்கு குறைவது இயற்கை. அப்படி குறைவதால், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி வியாதி வரும். அதில் பல வகைகள் உள்ளன. அதற்கு, பொது மருத்துவரையோ, நரம்பியல் மருத்துவரையோ அணுகி சிகிச்சை மேற்கொள்ளலாம்.

முதியோருக்கு செரிமானப் பிரச்சனை தவிர்க்க முடியாததாக இருக்கும். உடல் உழைப்பு குறைவதாலும், ஒரே இடத்தில் பெரும்பாலும் அமர்ந்திருப்பதாலும், செரிமானம் குறையும். இதனால், சரியாக பசிக்காது. இவர்களுக்கு, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய, நார்ச்சத்துள்ள உணவுகளை கொடுக்கலாம். இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தால், ஞாபக மறதி பிரச்சனை அதிகரிக்கும். புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பால், மோர், கேழ்வரகு, ஆரஞ்சு, வாழை, கொய்யா, பச்சைக்காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமானப் பிரச்சனைகள் வராது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பு அளவு தெரிந்து கொள்வது அவசியம். மேலும், பசி இல்லாதிருத்தல், எடை குறைதல் போன்ற அறிகுறி இருந்தால், புற்று நோய் பரிசோதனை செய்து கொள்ளலாம். வயதானவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க வேண்டும்.

அவர்களை யாரும் கவனிக்காமல் கடந்து செல்வது, தன் பேச்சுக்கு மரியாதை இல்லை என்ற ஏக்கம் தான் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மருந்து, உணவு, பணம் இவை எல்லாவற்றையும் விட, பிள்ளைகள், உறவினர்களுடன் செலவிடும் நேரம் தான், அவர்களுக்கு உண்டான சந்தோஷ தருணங்கள். அதுமட்டுமல்ல, பேரக் குழந்தைகளை, தாத்தா, பாட்டியிடம் விடும் பழக்கம் இன்று வெகுவாக குறைந்து இருக்கிறது. காரணம், கவனமாகப் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம். ஆனால், குழந்தைகளை தாத்தா, பாட்டிகளுடன் பழக விட்டாலே, அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

ஆதாரம் : தமிழ் மருத்துவம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/13/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate