অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

டெங்கு, சிக்குன் குனியா

டெங்கு, சிக்குன் குனியா

மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல், இருமல், டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்களை தவிர சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இந்த அச்சம் ஒவ்வொரு மழைக்காலத்திலும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. தற்போது மக்களின் பெரும் அச்சத்துக்கு காரணமான டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு வைரஸ் நோயாகும். இந்த வைரஸ் டைப்1, டைப்2, டைப்3 மற்றும் டைப்4 ஆகிய 4 வகைகளில் உள்ளது. வெப்ப  மண்டல நாடுகளில் காணப்படும் ஏடிஸ், ஏஜிப்டி என்ற கொசுவால் இது பரவுகிறது.

1990ம் ஆண்டுகளில் ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும் நோயாக டெங்கு அடையாளம் காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால்  லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்காசிய நாடுகள், இந்தியா மற்றும் அமெரிக்கா  போன்ற வெப்பமண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருகிறது. இந்த காய்ச்சல் கண்ட ஒருவரை கடிக்கும் ஏடிஸ் வகை கொசு  மற்றொருவரை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு வைரஸ் தொற்றுகிறது.

டெங்கு காய்ச்சல் தீவிரமாகும்போது மூக்கு, பல் ஈறு மற்றும் தோலிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும். வயிற்று குடலினுள் ரத்தம் வடியும் நிலை  ஏற்பட்டால் வாந்தி காபி கொட்டை நிறத்தில், மலம் கறுப்பு நிறத்தில்  வெளியேறும். டெங்கு என்ற ஸ்பானிய மொழிச்சொல் எலும்பு முறிக்காய்ச்சல்  என பொருள்படும். இந்நோய் டெங்கு  வைரசால் ஏற்படுகிறது.

கொசு எப்போது கடிக்கும்?

ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு கடித்த 2 முதல் 7 நாட்களுக்குள் நோய் ஏற்படும். இந்த கொசுக்கள் கறுப்பு நிறமானவை. இறக்கையில் வெள்ளை  நிறப்புள்ளிகள் தென்படும். மற்ற கொசுக்களை விட தோற்றத்தில் சிறியவை. முதுகில் வெள்ளை நிறக்கோடுகள் 2 தெரியும். பெண் வகை  கொசுக்கள்தான் நோயை பரப்பும். இந்த கொசுக்கள் சூரிய உதயத்திற்கு பின் 2 அல்லது 3 மணிக்குள்ளும், சூரிய அஸ்தமனத்திற்கு முன் 2 அல்லது 3  மணி நேரத்திற்குள்ளும் கடிக்கும். இந்த கொசுக்கள் சாதாரண சூழலில் 60 நாட்கள் வரை உயிர் வாழக்கூடியது.

நோய் அறிகுறிகள்

  • அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலை.
  • ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சல் நிலை.
  • ரத்தப் பெருக்குடன் கூடிய டெங்குக் காய்ச்சல் நிலை.

டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை.

முதல் நிலையை தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும். ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சல் ஓரிரு நாட்களில்  குறையவில்லை எனில் உடனடியாக உரிய சிகிச்சை பெற்றால் மரணத்தை தவிர்க்க முடியும்.  கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி,  முன்தலை பக்கத்தில், கண்களின் பின்புறத்தில் வலி, கண்களை உருட்டும்போது கடுமையான வலி, உடல்வலி, மூட்டுக்கள், தசைகள், கை, கால்,  எலும்பு போன்றவற்றில் வலி, குமட்டல், வாந்தி, சிறிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட சிரங்குகள், கண் சிவத்தல், உடல் சோர்ந்து வெளிறிய நிலை,  பசியின்மை, வெளிச்சத்திற்கு பயம், திடீரென காய்ச்சல் குறைதல் போன்றவை ஏற்படும்.

உடம்பு குளிர்தல், பதற்றம், அரைத்தூக்கம், அதிர்ச்சி நிலை, அதிகரித்த சுவாசம், அதிகரித்த நாடித்துடிப்பு, தோலில் ரத்தக்கசிவு, ரத்த வாந்தி, கறுப்பு நிற  மலம், வயிறு, கால் முதலியவற்றில் வீக்கம், ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைப்படுவது, ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் மற்றும்  ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் முதலியன டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும். ரத்தத்தில் சிறுதட்டுகளின் எண்ணிக்கை 28,000க்கு கீழ்  குறையும்போது நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்து மரணம் ஏற்படும். இந்நிலை ஏற்பட்ட பின் சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்றுதல் மிகவும்  கடினம்.

நோயை கண்டறிதல் வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல். அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய  லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (400010,000 சி.எம்.). டெங்கு காய்ச்சலின்போது ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுக்களின்  எண்ணிக்கை குறைவாக காணப்படும். டெங்கு வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டிபயாடிக் என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியை  பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும்.

சிகிச்சை: டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை ஓய்வு அவசியம். திரவ வகை உணவு அதிகம் உட்கொள்ளலாம். உடல் உஷ்ணத்தை குறைக்க  அசிட்டாமினோஃபென் மாத்திரைகளை பயன்படுத்தலாம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும் போது மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுவது அவசியம்.  டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. காய்ச்சலை குறைப்பது,  ரத்ததட்டு அணுக்கள் குறைவதை தடுப்பது போன்றவைகளுக்கு பொதுவான சிகிச்சை வழங்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த தட்டு அணுக்கள் அழிப்பதால், ரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது. சித்த மருத்துவத்தில்  பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும். நிலவேம்பு கசாயம் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும்.  மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.

மூலிகைச்சாறு தயாரிப்பது எப்படி?

சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு, நிலவேம்பு குடிநீர் கசாயம் ஆகியவைகளை வீட்டிலேயே  தயாரிக்கலாம். பப்பாளி இலை சாறு: புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது  இடித்து வடிக்கட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள்  அதிகரிக்கிறது. கல்லீரல் பாதிப்பு நீங்கி, சீராக செயல்பட வைக்கிறது.

இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் பயன் கிடைக்கும். பப்பாளி இலையில் வைட்டமின்  ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  மலைவேம்பு இலைச்சாறு: புதிதாக பறித்த  மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று  முறை அருந்த வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.

நிலவேம்பு குடிநீர் நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவைகளை தேவையான  அளவு தண்ணீர் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும். வீட்டில் தயாரிக்க  முடியாதவர்கள் மருந்து கடைகளில் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி மேற்கண்ட முறையில் தயார் செய்தும் அருந்தலாம். நிலவேம்பு குடிநீர்  டெங்கு வைரசை அழித்துவிடும். இவற்றையும், குடிநீரையும் ஐந்து நாட்கள் அருந்தி வர காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் தணிந்த பிறகு மேலும்  இரண்டு நாட்களுக்கு அருந்தி காய்ச்சலின் தாக்கத்தை தடுத்துவிடலாம்.

சிக்குன் குனியா

சிக்குன்குனியா நோயும் ஈடிசு ஈஜிப்டை என்ற கொசு கடிப்பதால்தான் பரவுகிறது. ஈடிசு ஈஜிப்டை, ஈடிசு அல்போபிக்டசு இரு வகைக் கொசுக்கள்  திறந்தவெளியில் இருக்கும்போது கடிக்கும். ஈஜிப்டை வகைக்கொசு வீடுகளின் உள்புறங்களிலும் உலவுவதால் உள்புறங்களிலும் கடிக்கின்றன.  பெரும்பாலும் இவை பகல் நேரங்களிலும், அதிலும் குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிகம் கடிப்பவை. இவை இரவில் கடிப்பதில்லை. அதிலும்  பெண் கொசுக்கள்தான் கடிக்கின்றன.

அதிகமான காய்ச்சலும் மூட்டு வலியும் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். தலைவலி மற்றும் ஒளி ஒவ்வாமையும் இருக்கக்கூடும். பெரும்பாலும்,  ஓரிரு நாட்கள் நீடித்த பின்னர் காய்ச்சல் குறைந்து விடும். எனினும், கடுமையான தலைவலி, மூட்டுவலி, தூக்கமின்மை ஆகியவை ஐந்து முதல் ஏழு  நாட்கள் வரை நீடிக்கக்கூடும். அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றால் ஒரு வாரத்திலேயே நோய் குணமாகும்.  மேலும் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு சாறு ஆகியவற்றையும் குடிக்கலாம்.

கொசுக்களை ஒழிக்க..

தண்ணீர் தேங்கி நிற்கும் எல்லா இடங்களையும் சுத்தம் செய்து, மண் அல்லது மணல் மூலம் நிரப்பி விட வேண்டும். சுற்றுபுறத்தில் உள்ள தண்ணீர்  தேங்கக்கூடிய பிளாஸ்டிக் பைகள், உடைந்த பானைகள், கண்ணாடி பாட்டில்கள், பழையை டயர்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை புதைத்து  விட வேண்டும்.

பயன்படுத்தாத பாத்திரங்கள், வாளிகள் போன்றவற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். பூந்தொட்டிகள், பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கி நிற்கும்  நீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். எறும்பு வராமல் இருக்க மேசை கால்களுக்கு வைக்கும் பாத்திரங்களின் தண்ணீரையும் ஒரு நாள்  விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும்.

ஏசியிலிருந்து வெளியேறும் நீரையும் மாற்ற வேண்டும். தண்ணீரை அகற்ற முடியாத இடங்களில் உப்பை சேர்க்கலாம். கொசு ஒழிப்பு மருந்துகளை  தெளிக்கலாம்.

கேள்வி பதில்கள்

1. டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்குமாமே?

இவை சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வாழக் கூடியவை. பகலில் தான் கடிக்கும்.

2. டெங்குவின் தீவிரம் எப்போது தெரியும்?

பெரும்பாலானோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகி விடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும், டெங்கு சிண்ட்ரோம் (Dengue Shock Syndrome) உருவாகும். அப்போது கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப் போகும். சுவாசிக்கச் சிரமப்படுவர். ரத்த அழுத்தம் குறைந்து சுயநினைவை இழப்பர்.

3. டெங்குவால் ஏற்படும் பாதிப்புகள்?

டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்து விடும். இவை தான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, உடல் உள் உறுப்புகளில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். உரிய நேரத்தில் சிகிச்சை தராவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.

ஆதாரம் : தினகரன் & தினமலர் நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate