வைரசால் ஏற்படும் பறவைக் காய்ச்சல் ஒரு தொற்று நோய். காட்டு நீர்ப் பறவைகளான வாத்து போன்றவை பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் இந்நோய் வெளித்தெரிவதில்லை. பண்னைப் பறவைகளும் பாதிக்கப்படுவதுண்டு, இது கொள்ளைநோயாகப் பண்ணைகளில் பரவும்.
மனிதர்கள் பொதுவாக இந்த வைரசால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் A(H5N1) மற்றும் A(H7N9) ஆகியவை மனிதர்களுக்குக் கடுமையான தொற்றை ஏற்படுத்தி உள்ளன. H7N3, H7N7, மற்றும் H9N2 போன்ற பிற பறவைக்காய்ச்சல் வைரசுகளும் மனிதர்களைப் பாதித்ததுண்டு.
ஏவியன் நச்சுக்காய்ச்சல் துணைவகை வைரஸ் A(H5N1) மிகவும் தீவிரமான நோய்பரப்பும் வைரஸ் ஆகும். 1997-ல் ஹாங்காங்கில் ஏற்பட்ட ஒரு பண்ணை நோயெழுச்சியின் போது மனிதர்களிடம் இது முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. 2003-ல் மீண்டும் A(H5N1) வைரசின் நோயெழுச்சி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கப் பண்ணைகளில் உண்டானது. 2003-ல் இருந்து 20 ஜனவரி 2016 வரை 449 மரணங்களை உள்ளடக்கிய ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்ட A(H5N1) நேர்வுகள் 16 நாடுகளில் ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 16 நாடுகளில் 4 தென்கிழக்கு ஆசியப் பகுதியைச் சார்ந்தவை. அவையாவன, வங்காள தேசம், மியான்மர், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து.
2013 முதல் 6 மரணம் உட்பட 10 ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்ட பறவைக்காய்ச்சல் வைரஸ் A (H5N6) நேர்வுகள் சீனாவில் கண்டறியப்பட்டன.
மார்ச் 2013-ல் ஒரு துணைவகை நச்சுக்காய்ச்சல் வைரஸ் A(H7N9) முதன்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டது. 286 மரணங்களை உள்ளடக்கிய 722 ஆய்வகத்தால் உறுதிசெய்யப்பட்ட 722 நச்சுக்காய்ச்சல் வைரஸ் A(H7N9) நேர்வுகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆய்வகச் சோதனையில் உறுதிசெய்யப்பட்ட மொத்தம் 29 A(H9N2) நேர்வுகள் மனிதர்களில் இலேசான அறிகுறிகளுடன் உலக அளவில் கண்டறியப்பட்டன.
ஜனவரி 2015 வரை, 15 மாநிலங்களில்/யூனியன் பிரதேசங்களில் (மகாராஷ்ட்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், மேற்கு வங்கம், பீகார், அசாம், மேகாலயா, மணிப்பூர், திருபுரா, சிக்கிம், ஒடிசா, கருநாடகம், கேரளம். சண்டிகார்) பண்ணைப் பறவைகளில் 25 A(H5N1) வைரஸ் தாக்குதல்கள் நடந்ததாக இந்திய அரசின், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அறிவித்துள்ளது. 2011-2012 மற்றும் 2012-2013-ல் கடுமையாக நோய்பரப்பும் பறவைக்காய்ச்சல் வைரஸ் (HPAI) இந்தியாவின் பல மாநிலங்களில் கண்டறியப்பட்டன.
இதுவரை இந்தியாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களில் காணப்படவில்லை. தில்லியில் உள்ள தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டம் இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவலைக் கண்காணித்து வருகிறது.
பறவைகளில் காணப்படும் சில வகையான நச்சுக்காய்ச்சல் A வைரஸ் உலகப் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு இரண்டு காரணம் உண்டு: முதலாவதாக மனிதர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படும் தொற்று. இரண்டாவதாக, பரவும் நச்சுக்காய்ச்சல் திரிபுகள் உருவாதல்.
உலக சுகாதார ஒழுங்குமுறைகளின் படி (IHR, 2005) புது நச்சுக்காய்ச்சல் துணைவகையால் ஏற்படும் மனிதத் தொற்றுக்கள் அனைத்தும் அறிவிக்கப்பட வேண்டும்.
மனிதர்களில் பறவைக்காய்ச்சல் A வைரஸ் அறிகுறிகள்:
குறைந்த அளவில் நோய் உண்டாக்கும் பறவைக் காய்ச்சல் A வைரசால் கண்சவ்வழற்சியில் இருந்து காய்ச்சல், இருமல், தொண்டைவலி, தசைவலி, கீழ் சுவாச நோய்கள் (நிமோனியா) வரையிலான அறிகுறிகள் தோன்றி மருத்துவமனைப் பராமரிப்பும் தேவைப்படும்.
அதிக அளவில் நோய் உண்டாக்கும் பறவைக் காய்ச்சல் A வைரசால் அதிகக் காய்ச்சலோடு (38oC மேல்) நச்சுக்காய்ச்சல் அறிகுறிகளான சளி இருமல் (சில வேளை இரத்தத்துடன்) தொண்டைவலி இருக்கும். ஆரம்பக் கட்டத்தில் சிலருக்குக் கீழ் சுவாச மண்டலப் பாதிப்பு காணப்படும்.
சில நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, நெஞ்சு வலி, மூக்கு ஈறில் இருந்து இரத்தம் மற்றும் சில வேளைகளில் நரம்பியல் மாற்றங்கள் (மனநிலை பாதிப்பு, வலிப்பு) காணப்படலாம்.
சுவாச பாதிப்பு, கரகரப்பான குரல், மூச்சை உள்ளிழுக்கும் போது வெடிப்பு சத்தம் ஆகியவை பொதுவாகக் காணப்படலாம்.
நோயரும்பும் காலம் A (H5N1) –க்கு 8-17 நாட்களும், A(H7N9)-க்கு 2-8 நாட்களுமாக (சராசரி 5 நாட்கள்) இருக்கும். கள ஆய்வுக்கும், நோயாளிகளைக் கண்காணிக்கவும் நோயரும்பும் காலமாக 7 நாட்களைப் பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
A (H5N1) மற்றும் A(H7N9)- வைரசால் பாதிக்கப்பட்டவர்களுள் மரண விகிதம் பருவகால நச்சுக் காய்ச்சலோடு ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகும்.
இன்ஃபுளுயன்சா A பேரினத்தையும் ஆர்த்தோமைக்ச்சோவைரிடே குடும்பத்தையும் சார்ந்த பறவைக் காய்ச்சல் வைரசால் இந்நோய் ஏற்படுகிறது.
அதிக நோய்த்திறன் கொண்ட வைரசுகள் சில பறவை வகைகளில் அதிக மரண விகிதத்துக்குக் காரணமாக இருக்கின்றன (48 மணி நேரத்துக்குள் 100% மரணம்). குறைந்த நோய்திறன் கொண்டவை கடும் நோயோடு தொடர்புடையவைகளாக இல்லை எனினும் பறவைகளில் நோயெழுச்சியாகப் பரவக் கூடும்.
அதிக நோய்பரப்பும் திறன் கொண்டவை H5, மற்றும் H7 துணை வகைகள் ஆகும். இவை பறவைகள் மத்தியில் சுற்றில் இருக்கின்றன. மனிதர்களில் கடுமையான நோய் உருவாக்கவும் அதற்கேற்றபடி மாற்றிக்கொள்ளவும் ஆற்றல் வாய்ந்தவை இவை.
பரவல் – தொற்றுள்ள பறவைகள் பறவைக்காய்ச்சல் வைரசை உமிழ்நீர், சளி மற்றும் கழிவுகள் மூலம் வெளியேற்றுகின்றன.நோயுற்ற அல்லது செத்த பறவைகளுடன் நீடித்த தொடர்பு ஏற்படும்போது வைரஸ் ஒருவரின் கண், மூக்கு அல்லது வாயில் அல்லது மூச்சை உள்ளிழுக்கும் போது உடலுக்குள் புகுகிறது.
மனிதரில் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்துக் காரணிகள்-
தொற்று ஏற்பட்டு உயிரோடுள்ள அல்லது இறந்த பறவைகளோடு நேரிடையான அல்லது மறைமுகத் தொடர்பு அல்லது பறவைச் சந்தை போன்ற அசுத்தமான சூழல் ஆகியவையே தொற்று ஏற்படும் ஆபத்துகள்.
பச்சையான தொற்றுள்ள பறவை இரத்தத்தால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்ளுவதாலும் தொற்று ஏற்படலாம்.
பறவைகளைக் கொன்று இறகு நீக்கி உடலை கையாளும் இடங்களும் உட்கொள்ள சமைக்கும் இடங்களும் ஆபத்தானவையே.
தகுந்தவாறு சமைக்கப்பட்ட இறைச்சியும் முட்டையும் நோயைப் பரப்பாது.
தற்போதுள்ள நோய்பரவியல் அல்லது வைரலியல் சான்றுகள் மூலம் பறவை வைரசுகள் மனிதனுக்கு மனிதன் பரவுவதில்லை என்று அறியமுடிகிறது.
விலங்குகளிடம் பறவைக்காய்ச்சல் வைரஸ் A கண்டறியப்பட்ட இடங்களில் வாழ்வோருக்கு காய்ச்சலோடு கூடிய சுவாச நோய் இருந்தால் பறவைக்காய்ச்சலோ என சந்தேகம் எழும் வாய்ப்புள்ளது.
பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தெளிவானவை அல்ல. உயிருள்ள அல்லது செத்த பறவைகள், காட்டுப் பறவைகள், கடுமையாக நோய்வாய்ப்பட்டோர் தொடர்பு, பறவைக்காய்ச்சல் உள்ள இடங்களுக்கு சென்றுவந்தமை, பறவைக்காய்ச்சல் வைரசுள்ள மாதிரிகளை ஆய்வகத்தில் கையாண்டது போன்ற விவரமான வரலாறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்தியாவில், மனிதரில் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பதைக் கண்டறிய, பூனாவில் உள்ள தேசிய வைரலியல் நிறுவனமும், தில்லியில் இருக்கும் தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையமும் ஆய்வுகள் மேற்கொள்ளுகின்றன.
உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனம் (போப்பால், மத்தியப் பிரதேசம்) பறவைக்காய்ச்சலை சோதனை செய்யும் உச்ச நிறுவனம் ஆகும். ஜலந்தர், கொல்கத்தா, பெங்களூர் மற்றும் பெரேலியில் உள்ள நான்கு உயிர்-பாதுகாப்பு நிலை lll (BSL lll) ஆய்வகங்களும், கவாத்தியில் இருக்கும் ஒரு நகரும் BSL lll ஆய்வகமும் சோதனைகள் மேற்கொள்ளுகின்றன. 21 மாநிலங்களில் இருக்கும் உயிர் பாதுகாப்பு நிலை ll (BSL ll) மத்திய/மாநில நோய்கண்டறியும் ஆய்வகங்கள் பறவைக்காய்ச்சல் சோதனைகள் செய்து வருகின்றன
(பொன் விதி: மனித மற்றும் விலங்கு மாதிரிகள் ஒரே சோதனையகத்தில் சோதிக்கப்படக் கூடாது. இருப்பினும், ஒரே நிறுவனத்தில் சோதிக்கப்படலாம். ஆனால் மனித மற்றும் விலங்கு மாதிரிகளுக்கான தெளிவான, உறுதியான தனித்தனி அறைகள் இருக்க வேண்டும். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குத் தொற்று பரவாமல் இருக்கவே இக்கட்டுப்பாடு-உ.சு.நி.)
நோய்வாய்ப்பட்டு முதல் சில தினங்களில் தொண்டை அல்லது மூக்கில் இருந்து ஒற்றி எடுக்கப்படும் மாதிரிகளில் இருந்தே பறவைக்காய்ச்சல் A வைரஸ் பொதுவாகக் கண்டறியப்படுகிறது.
மனித மாதிரிகளில் இருந்து பறவைக் காய்ச்சலைக் கண்டறியும் சோதனைகள்:
நோயின் ஆரம்பக்கட்டத்தில் (உதாரணமாக ஒருவருக்கு A(H5N1) வைரஸ் தொற்று ஏற்படும்போது) மருத்துவ நிலையைக் கண்காணிக்க மருத்துவமனைப் பராமரிப்புப் பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவமனையை நீங்கிய பின்னர் குடும்ப உறுப்பினர்கள் சுத்தம் மற்றும் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டைப் பேண அறிவுறுத்தப்பட வேண்டும்).
ஆதரவு சிகிச்சையுடன் ஒசெல்ட்டாமிவிர் போன்ற எதிர்வைரஸ் மருந்துகளைப் பயன்படுத்தலாம். இது வைரஸ் நகல் எடுக்கும் நேரத்தைக் குறைத்து உயிர்வாழும் வாய்ப்பை மேம்படுத்துகிறது.
மருத்துவ ரீதியாக சந்தேகம் ஏற்பட்டு (அறிகுறிகளுக்குப் பின் 48 மணிநேரத்துக்குள் என்பது சிறப்பானது) காரணமான கிருமியை உறுதிப்படுத்தும் முன் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் எதிர்வைரல் சிகிச்சை (ஒசெல்ட்டாமிவிர்) அளிக்க வேண்டும். வேறு கண்டறிதல்கள் உறுதிப்படுத்தவில்லை எனில் சந்தேகத்திற்கு உரிய நேர்வுகளில் ஒரு வழக்கமான ஐந்து நாள் மருந்தை அளிக்கலாம். உறுதிப்படுத்தப்பட்ட நேர்வுகளில் மருத்துவ நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒசெல்ட்டாமிவீர் சிகிச்சையின் அளவையும் காலத்தையும் அதிகப்படுத்தலாம். கோர்ட்டிகோஸ்டிராய்ட் பயன்பாட்டை உ.சு.நி. பரிந்துரைக்கவில்லை.
A(H5N1) மற்றும் A(H7N9) தொற்றின் சிக்கல்களில் அடங்குவன:
பறவைப் பண்ணைகளில் பணி செய்வோரும், பறவைக் காய்ச்சல் நோயெழுச்சியின் போது செயலாற்றுவோரும் தனிநபர் காப்பு சாதனங்களைப் பயன்படுத்தி கைசுத்தத்தையும் பேண வேண்டும்.
துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன் கண்காணிப்பு – வீட்டுப் பண்ணை, வளர்ப்புப் பறவைகள் மற்றும் பன்றிக்கொட்டில் ஆகியவற்றில் ஏற்படும் நோய் எழுச்சியைத், தொடர்ந்து கண்காணிக்க (ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு) மாநில மற்றும் மாவட்ட அளவில் சுகாதரம், கால்நடை பராமறிப்பு மற்றும் பிற துறை வல்லுநர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.
பறவைக் காய்ச்சல் நோயெழுச்சி உள்ள இடங்களுக்குச் செல்லும் பயணிகள் பண்ணைகள், விலங்குகள், பறவைச் சந்தைகள், கோழி வெட்டும் இடங்கள் அல்லது பறவை மற்றும் விலங்கு எச்சங்களால் அசுத்தமான இடங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பயணிகள் தங்கள் கரங்களை சோப்புத் தண்ணீரால் கழுவி, உணவு சுத்தத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
பறவைக் காய்ச்சல் நோயாளித் தொடர்பு மற்றும் ஆபத்துள்ள சூழலுக்குச் சென்றவர்கள் எதிர் வைரல் வேதியல் முற்காப்பு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பறவைகளில் தடுப்பு நடவடிக்கைகள்:
பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால், நோயைத் தடுப்பதே முதல் வேலை. நோய்வாய்ப்பட்ட பறவைகளைக் கொன்று உடலைப் புதைத்து, அப்பகுதி முழுவதும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். பாதுகாப்பான இடைவெளிக்குப் பின்னரே மீண்டும் பறவைகளை வளர்க்கத் தொடங்க வேண்டும்.
விலங்குகள் சுகாதார உலக அமைப்பின் பரிந்துரைப்படி கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சலைத் தடுக்க தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். அதிக நோய்த்திறன் பெற்ற பறவைக் காய்ச்சலை அதன் ஆரம்ப இடமான பண்ணைகளிலேயே ஒழிக்க உலக விலங்குகள் சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இதன் மூலம் இந்நோய் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் பரவாமல் தடுக்கலாம்.
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/16/2020
கினிப்புழு நோய் தாக்கம் மற்றும் நோய் மேலாண்மை குறி...
அமீபியாசிஸ் நோயின் காரணங்கள் மற்றும் நோய் மேலாண்மை...
சாகாஸ் நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்...
ஆந்த்ராக்ஸ் நோயின் காரணங்கள் மற்றும் மேலாண்மை முறை...