অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மலேரியா

மலேரியா

மலேரியா பற்றின தகவல்களை பகிர்ந்து நடைமுறைப் படுத்துவதின் முக்கியத்துவம் என்ன?

மலேரியா என்பது கொசுக்கடியினால் பரவும் ஒரு மோசமான நோயாகும். ஒவ்வொரு ஆண்டும் 30 கோடிமுதல் 50 கோடி வரை மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்படுகின்றனர். 10 லட்சம் குழந்தைகள் மலேரியாவினால் இறக்கின்றனர். மலேரியா அதிகமாக காணப்படும் பகுதிகளில், இறப்பு மற்றும் இளம்குழந்தைகள் வளர்ச்சி குறைவுக்கு, இந்நோயே முக்கிய காரணமாக அமைகிறது.

மலேரியா, முக்கியமாக, கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தானதாக அமைகிறது. இதனால், இரத்தசோகை, கருக்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், குழந்தை எடைகுறைந்து பிறத்தல் மற்றும் கர்ப்பிணிப்பெண் இறப்பு போன்றவை ஏற்படுகிறது

நோய்தடுப்பு மற்றும் இந்நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம், பல உயிர்களைக் காப்பாற்றலாம்.

முக்கிய குறிப்புகள்

ஒவ்வொரு குடும்பமும் மற்றும் சமுதாயமும் மலேரியா பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?

  1. மலேரியா கொசுக்கடியால் பரப்பப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லியிடப்பட்ட கொசுவலைகளுக்குள் தூங்குவது, கொசுக்கடியை தடுக்க சிறந்த வழியாகும்.
  2. எங்கெல்லாம் மலேரியா அதிகமாக காணப்படுகிறதோ, அங்கெல்லாம் சிறுபிள்ளைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். ஒரு குழந்தை காய்ச்சலுடன் காணப்பட்டால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரால் அக்குழந்தை சோதிக்கப்பட வேண்டும். மலேரியாவினை தடுக்க ஆன்டி மலேரியல் ட்ரீட்மெண்ட் எனப்படும் சிகிச்சையினை பெற்றுக் கொள்ள வேண்டும்
  3. கர்ப்பிணிப் பெண்களுக்கு மலேரியா மிகவும் ஆபத்தானது. எங்கெல்லாம் மலேரியா அதிகமாக உள்ளதோ, அப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரப் பணியாளரால் பரிந்துரைக்கப்பட்ட மலேரியாவிற்கு எதிரான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது மலேரியவிலிருந்து சுகம் பெற்றுக் கொண்டிருக்கிற ஒரு குழந்தைக்கு, அதிகளவு திரவ மற்றும் திட உணவு தேவைப்படுகிறது.
  5. குடும்பங்கள் மற்றும் சமுதாயங்கள் கொசுக்கள் இனப்பெருக்கம் அடைவதை நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், மலேரியாவை தடுத்து நிறுத்த முடியும்

மலேரியா குறித்த உபதகவல்கள்

தகவல் குறிப்பு 1

மலேரியா கொசுக்கடியால் பரப்பப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லியிடப்பட்ட கொசுவலைகளுக்குள் தூங்குவது, கொசுக்கடியை தடுக்க சிறந்த வழியாகும்.

சூரியன் மறைவது முதல் சூரியன் உதிக்கும் வரை, முக்கியமாக, கொசுக்கள் அதிக செயல்திறனுடன் காணப்படும். இவ்வேளையில், சமுதாயத்தில் உள்ள அனைத்து நபர்களும், குறிப்பாக சிறுபிள்ளைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், கொசுக்கடியிலிருந்து அவசியம் காக்கப்பட வேண்டும்.

பரிந்துரைக்கப்ட்ட பூச்சிக்கொல்லியில் நணைக்கப்பட்ட கொசுவலைகள், திரைகள் அல்லது மஸ்கிடோ மாட்கள் மேல் கொசுக்கள் அமரும்போது, அவைக் கொல்லப்படுகின்றன. நிரந்தரமாக பூச்சிக்கொல்லி கொண்டுள்ள கொசுவத்திகள்/ மாட்கள் பயன்படுத்துதல் நலம். வலைகள், திரைகள் அல்லது மாட்கள் அவ்வப்போது முறையாக பூச்சிக்கொல்லியில் தோய்க்கப்பட்டும் பயன்படுத்தப்படலாம். பொதுவாக கொசுவலைகளை குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்றாவது முறை துவைக்கும்போது அல்லது மழைக்காலம் துவங்கும்போதோ பூச்சிக்கொல்லியில் நணைக்கப்பட வேண்டும். பயிற்றுவிக்கப்பட்ட சுகாதார பணியாளர் பாதுகாப்பான பூச்சிக்கொல்லிகள் மற்றும் வலைகளை அவற்றில் நணைக்கும் முறைகளைப் பற்றி ஆலோசனை அளிக்கலாம்.

குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகள் அவசியம் பாதுகாப்பான வலைகளின் கீழ் தூங்க வேண்டும். வலைகளின் விலை மிக அதிகமாக இருக்கும் போது, அந்த குடும்பத்தில் பிள்ளைகள் மட்டுமாவது தூங்கும் வண்ணம் ஒரு பெரிய கொசுவலையினை வாங்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், தாயோடுகூட வலையின் கீழ் படுத்துறங்க வேண்டும்.

வருடம் முழுக்க, கொசு குறைவாக உள்ள காலங்களிலும் கூட பாதுகாப்பான வலைகளை பயன்படுத்த வேண்டும்:

கொசுவலைகளைப் பயன்படுத்த இயலாத நிலையில் மற்ற நடவடிக்கைகள் உதவலாம்.

• பரிந்துரைக்கப்படட பூச்சிக்கொல்லி இடப்பட்ட பாய்கள், துணிகள் மற்றும் திரைகளை கதவு மற்றும் ஜன்னல்களில் தொங்க விடலாம்.

• திரைகளை கதவு மற்றும் ஜன்னல்களுக்கு போடலாம்

• கொசுவத்திச்சுருள் மற்றும் பிற புகையூட்டிகளைப் பயன்படுத்தலாம்.

• இரவு வந்தவுடன், கால்கள் மற்றும் கைகளை மூடும் வண்ணம் (நீள முழுக்கைச் சட்டை மற்றும் நீண்ட பாண்ட்ஸ் அல்லது பாவாடை) ஆடை அணியலாம். இது சிறுபிள்ளைகள் மற்றும் கர்ப்பிணிபெண்களுக்கு மிக முக்கியம்.

தகவல் குறிப்பு 2

எங்கெல்லாம் மலேரியா அதிகமாக காணப்படுகிறதோ, அங்கெல்லாம் சிறுபிள்ளைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். ஒரு குழந்தை காய்ச்சலுடன் காணப்பட்டால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரால் அக்குழந்தை சோதிக்கப்பட வேண்டும். மலேரியாவினை தடுக்க ஆன்டி மலேரியல் ட்ரீட்மெண்ட் எனப்படும் சிகிச்சையினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

குடும்பத்திலுள்ள யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தாலோ அல்லது சிறுகுழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ, மயக்கத்துடன் காணப்பட்டாலோ அல்லது இழுப்பு இருந்தாலோ, மலேரியா காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகப்படலாம்.

ஒரு குழந்தைக்கு மலேரியாவால் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என நம்பபப்படும் போது, உடனடியாக சுகாதாரப் பணியாளரின் பரிந்துரையின்படி அக்குழந்தைக்கு, மலேரியாவிற்கு எதிர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மலேரியா காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளுக்குள் அதற்கான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அக்குழந்தைகள் இறந்து விடுவர்.

ஒரு சுகாதாரப் பணியாளர் எவ்வகையான சிகிச்சைமுறை சிறந்தது மற்றும் எவ்வளவுகாலம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையினை கூறலாம். மலேரியா காய்ச்சல் உள்ள ஒரு குழந்தை அதற்கான சிகிச்சையை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் வேகமாக மறைந்தாலும் சிகிச்சையை பரிந்துரைக்கப்பட்ட காலம் வரை எடுத்துக்கொள்ளாவிட்டால், மலேரியா அதிக மோசமானதாக மாறும். மேலும், இதனை சுகப்படுத்துவது மிக கடினமாகிவிடும்

சிகிச்சைக்குப் பின்னரும், கீழ்க்காணும் காரணங்களால் மலேரியாவின் அறிகுறிகள் தொடர்ந்து இருப்பின், அக்குழந்தையை அவசியம் சுகாதாரமையம் அல்லது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

• குழந்தை போதுமான மருந்தினை பெற்றுக்கொள்ளாத நிலை

• குழந்தைக்கு மலேரியா அல்லாத பிற உடல்நல கோளாறுகள் இருத்தல்

• மலேரியாவிற்கான சிகிச்சை பலனளிக்காத போது, வேறு மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது

ஒரு குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால், கீழ்க்காணும் முறையினைப் பயன்படுத்தி உடல் வெப்ப நிலையை முடிந்தவரை சீராய் வைக்க வேண்டும்.

• பஞ்சினை குளிர்ந்த நீரில் தோய்த்து உடலின் மேல் வைப்பது அல்லது குளிர்ந்த நீரால் (மிக குளிர்ந்த நீரல்ல) குளிக்க வைத்தல்

• குழந்தையை ஒரு சில ஆடைகளைக் கொண்டு மூடுவதாலோ அல்லது ஒரு போர்வையை வைத்து போர்த்துதல்

தகவல் குறிப்பு 3

கர்ப்பிணிப் பெண்களுக்கு மலேரியா மிகவும் ஆபத்தானது. எங்கெல்லாம் மலேரியா அதிகமாக உள்ளதோ, அப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரப் பணியாளரால் பரிந்துரைக்கப்பட்ட மலேரியாவிற்கு எதிரான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாதாரண பெண்களைவிட கர்ப்பிணி பெண்கள் மிக அதிகளவில் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் கர்ப்ப காலத்தின் போது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக, முதல் கர்ப்பத்தின் போது இவ்வியாதி இரத்தசோகை, கருச்சிதைவு, குறித்த காலத்திற்கு முன்னமே குழந்தை பிறத்தல் அல்லது குழந்தை இறந்து பிறத்தல் போன்றவற்றை ஏற்படுதும். மலேரியா கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் எடை குறைந்ததாகவே பிறக்கும். இதினால், குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். முதல் வருடத்தில் குழந்தை இறப்பும் ஏற்படலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் பரிந்துரைக்கப்பட்ட மலேரியாவிற்கு எதிரான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்

எல்லா மலேரியாவிற்கு எதிரான மாத்திரைகளும் கர்ப்ப காலத்தின் போது பாதுகாப்பானவை அல்ல. மலேரியாவிற்கு எதிரான எந்த மாத்திரை சிறந்தது என்பதனை சுகாதார பணியாளர் அறிவார்.

கர்ப்பிணிப் பெண்கள் கொசுக்கடிகளை தடுத்து நிறுத்தும் வண்ணம், பூச்சிக்கொல்லியில் ஒழுங்காக தோய்த்து எடுக்கப்பட்ட கொசுவலையின் கீழ் உறங்குவது அவசியம்.

மலேரியா அறிகுறியுடன் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு இறப்பை தடுத்து நிறுத்தும் வண்ணம், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

மலேரியாவால் உடல்நலக் குறைவுற்ற கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் சுகாதாரப் பணியாளரை அணுகி, இரும்பு மற்றும் கூடுதல் வைட்டமின் ஏ மருந்தினை கேட்டு, பெற்றுக் கொள்ள வேண்டும்.

தகவல் குறிப்பு 4

மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது மலேரியவிலிருந்து சுகம் பெற்றுக் கொண்டிருக்கிற ஒரு குழந்தைக்கு, அதிகளவு திரவ மற்றும் திட உணவு தேவைப்படுகிறது.

மலேரியா உடலில் உள்ள சக்தியினை குறைத்து விடுகிறது. மேலும், குழந்தையின் உடலில் உள்ள தண்ணீர், வியர்வையின் மூலம் இழக்கப்படுகிறது. உடலில் உள்ள தண்ணீர் வெளியேறுவதால் நீரழப்பைத் தடுக்க மற்றும் ஊட்டச் சத்து குறைவையும் தடுக்க, அக்குழந்தைக்கு சத்துள்ள உணவு மற்றும் நீர் அடிக்கடி கொடுக்க வேண்டும். அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது உடலில் நீரிழப்பினை தடுக்கிறது. மலேரியாவையும் சேர்த்து பிற நோய் தொற்றுகளை எதிர்க்க, குழந்தைக்கு உதவுகிறது.

அடிக்க மலேரியா நோய்தொற்று ஏற்படுவது குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் மூளைவளர்ச்சியை குறைக்கலாம். இரத்த சோகையையும் ஏற்படுத்தலாம். அடிக்கடி மலேரியா ஏற்படும்போது குழந்தைக்கு இரத்த சோகை உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.

தகவல் குறிப்பு 5

குடும்பங்கள் மற்றும் சமுதாயங்கள் கொசுக்கள் இனப்பெருக்கம் அடைவதை நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், மலேரியாவை தடுத்து நிறுத்த முடியும்.

எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளதோ அங்கெல்லாம் கொசு இனப்பெருக்கம் நடைபெறுகிறது. உ-ம் குளங்கள், சதுப்பு நிலங்கள், குட்டைகள், குழிகள் / பள்ளங்கள், வடிகால்கள் / சாக்கடைகள் மற்றும் ஈரப்பதம் நிறைந்த நீண்ட புல்தரைகள் மற்றும் புதர்கள். கொசுக்கள், நீரோடைகளின் ஓரங்கள் மற்றும் தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களுக்குள்ளும், ஏரிகள் மற்றும் பயிற் நிலங்களிலும் இனப்பெருக்கம் செய்கின்றன.

கீழ்க்காணுமாறு செய்து கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்

• தண்ணீர் சேரும் இடத்தை மண்ணிட்டு அடைத்து அல்லது தண்ணீரை வெளியேற்றுவது

• தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை அல்லது தொட்டிகளை மூடியிட்டு வைப்பது

• வீடுகளை சுற்றியுள்ள புதர்களை அகற்றுவது

மலேரியா முழு சமூகத்தையும் பாதிக்கும். கொசுக்களின் இனப்பெருக்க இடங்களை குறைக்கலாம். கொசுவலைகளை தகுந்த நேரத்தில், பூச்சிக்கொல்லியில் நணைத்து, காயவைத்து பயன்படுத்த வேண்டும். சமுதாயங்கள் தங்கள் பகுதியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை அணுகி, மலேரியாவை தடுத்து கட்டுப்படுத்த உதவும்படி அவசியம் கேட்க வேண்டும்.

கேள்வி பதில்

1. கொசுக்கள் மூலம் பரவும் நோய்க்கான காரணம் என்ன?

கொசுக்கள் மூலம் பரவும் நோய்களுக்கு, தேங்கியிருக்கும் தண்ணீர் தான் முக்கிய காரணம். கொசுக்கள் யாவும் கிருமிகளை, ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு எடுத்துச் செல்லும் கிருமி வாகனங்களைப் போல செயல்படுகின்றன.

2. கொசுக்கள் பரவுவதற்கான காரணம் என்ன?

முறையாக கழிவுகளை அகற்றாதது மற்றும் திறந்த தண்ணீர் நிலைகள் ஆகியவை கொசுக்கள் பரவுவதற்கு காரணமாகும்.

3. கொசுக்களால் ஏற்படும் சில முக்கிய நோய்கள் யாவை?

மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, பைலேரியா ஆகியனவாகும்.

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate