உணவு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உணவு, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துகள் மற்றும் தாது உப்புகளின் வேதிகலவையாகும். இச்சத்துகள் நிறைந்த உணவு வாழ்நாள் முழுவதும் உடல் வளர்ச்சிக்கும் உடல்நலத்தைப் பேணவும் இன்றியமையாத தேவையாகிறது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவையான சிறப்பான தேவைகளை நிறைவு செய்வதிலும், உடல் நலம் குன்றியவர்கள் நோயிலிருந்து மீண்டு வரவும் இச்சத்துகள் உதவுகின்றது.
உணவினை, நம் உடலில் செயல்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.
புரதம் நிறைந்த உணவினை, உடலை வளர்ப்பவை என்கிறோம், பால், இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றில் உள்ள புரதம் முதல் தர புரதமாகும்.
பருப்பு வகைகள் மற்றும் கொட்டை வகைகளில் புரதம் நிறைந்திருந்தாலும், இவற்றை உயர்தரப் புரதமாகக் கருத இயலாது. புரதம் உள்ள உணவுப் பொருட்கள் உயிர் வாழ்வதற்கும், வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவுகின்றது. இவை சக்தி அளிப்பவையாகவும் உள்ளது.
தாது உப்புகள், புரதம் மற்றும் உயிர்ச் சத்துகள் செறிந்த உணவுப் பொருட்களை உடலைப் பாதுகாப்பவை எனவும், உடலியக்கத்தைச் சீராக்கும் உணவு எனவும் கூறுகிறோம். இவை உடல்நலத்திற்கும் உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்துக் கொள்வதற்கும், தசைகள் சுருங்கி விரிவதற்கும், உடலில் நீரின் அளவைச் சமநிலைப் படுத்துவதற்கும், இரத்தம் உறைதலுக்கும், உடலின் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதற்கும், இதயத் துடிப்பைச் சீராக்குவதற்கும், இன்றியமையாதது. பால், முட்டை, கல்லீரல், பழவகைகள், காய்கறிகள் போன்ற உணவுகள், உடலைப் பாதுகாக்கும் மற்றும் உடலியக்கத்தைச் சீராக்கும் உணவுப் பொருட்களாகும்.
நமது இனம், சமுதாயம், பண்பாடு, மதம் சார்ந்த வாழ்க்கை முறையில், உணவு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மதம் மற்றும் சமூக அடிப்படையிலான குடும்பங்களின் கூட்டு வாழ்க்கையில் அன்பை வெளிப்படுத்துவதிலும், நட்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாக, உணவானது விளங்குகிறது.
உடல் மற்றும் சமூகத் தேவைகளை நிறைவு செய்வது மட்டுமின்றி, உணவு மனிதர்களின் ஒரு சில உளவியல் தேவைகளையும் நிறைவு செய்கிறது. உளவியல் சார்ந்த தேவைகளான பாதுகாப்பு உணர்வு, சமூகத்தில் தன்னையும் ஒரு அங்கமாக உணர்ந்து கொள்ளுதல், அன்பு செலுத்துதல் போன்ற தேவைகளை உணவு மறைமுகமாக நிறைவு செய்கிறது. (எ.கா.) நம் குடும்பத்தினருக்காகச் சுவையான உணவு சமைத்து அன்புடன் பரிமாறுதல் நமது அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் செயல்பாடாகும்.
சமநிலை என்பது பல்வேறு உணவு வகைகளிலிருந்து உணவினைத் தேர்ந்தெடுத்தல்.
ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்