অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இனப்பெருக்க சுகாதாரம்

இனப்பெருக்க சுகாதாரம்

கருச்சிதைவு/ குறைப்பிரசவம்

கர்ப்பந்தரித்த எல்லா கர்ப்பங்களும் ஒன்பது மாதங்கள் (40 வாரங்கள்) முடிவுற்று அதன் விளைவாக குழந்தை பிறப்பதில்லை. சில வேளைகளில் கர்ப்பகாலம் ஒன்பது மாதங்கள் நிறைவுபெறாமலேயே இடையிலே தானாக கலைகிறது. இதனை கருச்சிதைவு/குறைப்பிரசவம் (அ) தானாக எற்படும் கருச்சிதைவு என்று அழைக்கப்படுகிறது. கருச்சிதைவு பொதுவாக 26 வாரங்களுக்கு முன்னதாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் மகப்பேறு காலங்களை இடையிலேயே அறுவைச்சிகிச்சையின் மூலம் இடையிலேயே முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை தூண்டுதலின் பேரில் செய்யப்படும் கருச்சிதைவு எனப்படுகிறது.

குறைப்பிரசவம்/கருச்சிதைவு (அ) தன்னிச்சையாக ஏற்படும் கருச்சிதைவு

கருவில் குழந்தை உயிர்வாழும் சாத்தியம் உள்ள போதும் ஏற்படும் கருச்சிதைவை குறைப்பிரசவம் என்பர். இது முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது.

கருச்சிதைவு எதினால் ஏற்படுகிறது?

பெரும்பாலும் கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது, அவ்வாறு குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தையாக வளர நேரிடுகிறது. எனவே கருச்சிதைவு என்பது மேற்கூறிய குறைபாடுள்ள பிறப்பை தடுக்கும். மலேரியா, சிபிலிஸ், கர்ப்பவதி கீழே விழுவதினால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களினாலும் ஏற்படக்கூடும். சில நேரங்களில், கருப்பையில் வளர வேண்டிய கரு, கருவகத்தின்று கருப்பைக்கு கருமுட்டையினை எடுத்துச் செல்லும் மிருதுவான குழலான பெல்லோப்பியன் டியூப் எனப்படும் பகுதியில் வளர்ச்சியடைவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. அதே போன்று கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும ஏற்படும் கர்ப்பமானது பாதியிலேயே கருச்சிதைவு அடைகிறது. இம்மாதிரி கருச்சிதைவு ஆபத்தானதும் கூட.

கருச்சிதைவுக்கான அடையாளங்கள்

கருச்சிதைவுக்கு இரண்டு முக்கிய அடையாளங்கள் உண்டு. ஒன்று பெண்குறியில் இரத்தப்போக்கு மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும் பின் அதிகரிக்கும். பின்னர், வெகு விரைவாக இரத்தம் கட்டிகட்டியாக வெளிப்படும். கருச்சிதைவு, கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும்போது, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போல இருக்கும்.

முழுமையான கருச்சிதைவு

கருப்பையில் வளர்கின்ற கரு சிதைவடைந்து, அக்கரு மற்றும் அதனை சூழ்ந்துள்ள திசுக்களும் முழுவதுமாக பெண்குறியின் வழியாக வெளியேற்றப்படுவது முழுமையான கருச்சிதைவு எனப்படும். இப்படி முழுமையான கருச்சிதைவு எற்படும்போது, இரத்தப் போக்கு கருச்சிதைவுக்குப் பின் சில நாட்களில் நின்றுவிடுகிறது. இவ்வாறு கருச்சிதைவடைந்த பெண்கள், 2-4 வாரங்களுக்குக் கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. இவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மேலும் இந்நாட்களில் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முற்றுப் பெறாத கருச்சிதைவு

சிதைவுற்ற கருவின் சில பகுதி அல்லது ப்ளாசண்டாவின் ஒருபகுதி கருப்பையிலேயே தங்கியிருப்பதை முழுமையடையாத கருச்சிதைவு/முற்றுப் பெறாத கருச்சிதைவு என்பதாகும். இப்படிப்பட்ட முற்றுப்பெறாத கருச்சிதைவு என்பது 10 முதல் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரத்தப்போக்கு தொடர்ந்து இருக்கும். கருப்பையில் தங்கியுள்ள சிதைவுற்ற கரு, மிஞ்சியுள்ள இறந்த திசுக்கள் நோய் கண்டு, இதன் விளைவாக காய்ச்சல் மற்றும் அடிவயிற்றில் வலியினை தோற்றுவிக்கும். கருச்சிதைவு முழுமையற்ற நிலையில் காணப்படும்போது நன்கு பயிற்சி பெற்ற சுகாதார பணியாளரைக் கொண்டு எவ்வளவு விரைவாக எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும். முற்றுப் பெறாத கருச்சிதைவினால் எற்படும் நோய்த்தொற்றினை சரியாக கவனிக்காவிட்டால் பெல்லோபியன் டியூபில் பாதிப்புகளை ஏற்படுத்தி பெண்ணானவள் கருவுறும் தன்மையை இழக்கச்செய்யும். இவ்வாறு முழுமைபெறாத கருச்சிதைவினால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் காணப்படின் அப்பெண் அவசியம் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். கருச்சிதவுற்ற பெண்கள், குறிப்பாக முற்றுப் பெறாத கருச்சிதவுற்ற பெண்கள் அடுத்த குழந்தையைக் கருத்தரிக்க சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

திரும்பபத்திரும்ப ஏற்படும் கருச்சிதைவுகள்

சில பெண்களில் கருச்சிதைவானது திரும்பபத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டுமுறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு கர்ப்ப காலத்தின் பின்பகுதிகளில் ஏற்பட்டால் அப்பெண்ணானவள் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியம்.

தூண்டுதலின் பேரில் கருச்சிதைவு அடையச்செய்தல்

சில நேரங்களில் கருவுற்ற பெண் தானாக முன்வந்து கருச்சிதைவு செய்து கொள்வதுண்டு. இதனை, கர்ப்பமுற்ற ஆரம்ப நாட்களிலேயே செய்ய வேண்டும். முதலில் கருவுற்ற பெண்ணிற்கு வலி ஏற்படாமல் இருக்க, வலியை குறைக்கக்கூடிய ஊசியினைப் போட வேண்டும். பின்னர் மருத்துவர் தகுந்த உபரணங்களைப் பெண்குறியின் வழியாகச் செலுத்தி கருப்பையிலுள்ள கருவினைச் சுத்தம் செய்வார். இவ்வகை அறுவைச்சிகிச்சை 15 நிமிடங்கள் வரை நடக்கும். இவ்வகை சிகிச்சை முறை, நன்கு பயிற்சி பெற்ற நபரால், தகுந்த உபகரணங்களைக் கொண்டு, சுத்தமான சூழலில் செய்தால் ஆபத்தானது அல்ல. இவ்வகை சிகிச்சைக்குப் பின், குளிர் ஜுரம், வயிற்று வலி, இடுப்பு வலி, ரத்தப் போக்கு அல்லது துர்நாற்றம் கலந்த வெள்ளைப் போக்கு ஏற்பட்டால், அப்பெண் உடனடியாக சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். கால தாமதம் மரணத்தை விளைவிக்கக் கூடும்.

சட்ட நிரூபணம்

தேசிய மக்கள் தொகை கொள்கை 2000 ல் கூறப்பட்ட மக்கள் தொகை நிலைப்படுத்தலுக்கான வழிமுறைகளை செயல்படுத்த சட்டங்கள் அவசியம். குறிப்பிட்ட நோக்கங்களுக்காய் இயற்றப்பட்ட இரண்டு சட்டங்கள் உள்ளன. அவைற்றைப் பற்றிய விளக்கம்.

கருவில் உள்ள குழந்தையினை ஸ்கேன் செய்து பரிசோதித்தறிவதை ஒழுங்குபடுத்தும் சட்டம்.

மேற்கூறிய சட்டம் மற்றும் விதிகள் வடிவமைக்கப்பட்டு 1996ஆம் ஆண்டு ஜனவரி மாத ஒன்றாம் தேதி (1.1.1996) லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய சட்டத்தின்படி கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை மட்டும் ஆராய்ந்துணரலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கருவில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என் ஆராய்ந்துணர்வதை தடை செய்கிறது. இந்த சட்டத்தை மீறுவோறுக்கு தண்டனையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. த ப்ரிநேடல் டையக்னோஸ்டிக் டெக்னிக் (ரெகுலேஷன் மற்றும் ப்ரிவெண்டிங் ஆ ஃப் மிஸ்யூஸ்) ஆக்ட் என்பது கருவில் உள்ள வளரும் குழந்தை பெண்ணா என்பதனை கண்டறிந்து பெண்சிசு கொலை செய்வதை தடுத்து நிறுத்த வகை செய்யும் நடைமுறையில் உள்ள சட்டம்.

மெடிகல் டெர்மினேஷன் ஆ ஃப் ப்ரெக்னென்ஸி ஆக்ட்

மருத்துவமுறையின்படி கர்ப்பத்தினை குறித்த காலத்திற்கு முன்பே முடிவுக்குகொண்டு வருவதை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும்
கருச்சிதைவு ஏற்படுவதின் மூலம் ஏற்படும் உடற்நலக்குறைவு மற்றும் இறப்பு எண்ணிக்கை போன்றவற்றைக் கட்டுப்படுத்த மேற்கூறிய சட்டம் 1971 ஆண்டு பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து (1.4.1972) ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர இந்தியாவின் அனைத்து பகுதியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் 1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
மேற்கூறிய சட்டம் கருச்சிதைவினை எந்த தேகநிலையில், எந்த நபரால் எந்த இடத்தில் செய்ய வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டுகிறது.
மேற்கூறிய சட்டம் கீழ்க்காணும் சூழ்நிலையில் கருச்சிதைவு முறையினை கைக்கொள்ளலாம் என குறிப்பிடுகிறது.

  • மருத்துவமுறைப்படி தாயின் தேகநிலை

தாயானவள் ஏதேனும் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ (அ) மனநல பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ (அ) அவளுக்கு வேறு உடல்நலப்பிரச்சினைகள் ஏற்படக்கூடிய ஆபத்தான சூழலில் கர்ப்பகாலத்தை தொடர்வதினால் உயிருக்கே ஆபத்து (அ) உடல் மற்றும் மன அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற சூழ்நிலையில், கருச்சிதைவு முறையினை கைக்கொள்ளலாம்.

  • யூஜெனிக்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வைரஸ் நோய் தொற்று, மருந்துகளை உட்கொள்ளுதல், எக்ஸ்ரே மற்றும் கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படுதல், இரத்த வகைகள் பொருந்தாத நிலையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பைத்தியமான நிலையில், பிறக்கும் குழந்தைக்கு உடல்நலம் மற்றும் மனநலம் குன்றி பிறக்கும் என்ற ஆபத்தான நிலை ஏற்படும்போது கருச்சிதைவு முறையினை கைக்கொள்ளலாம்.

  • மனிதாபிமான அடிப்படையில்

கருணை அடிப்படையில் கற்பழிப்பின் விளைவால் ஏற்படக்கூடிய கர்ப்பம்

  • கர்ப்பம்

மேற்கூறிய சட்டத்தின்படி, மருத்துவ முறைபடி கருச்சிதைவை, பதிவு பெற்ற, பிரசவ மற்றும் பெண்கள் நோய் பிரிவில் அனுபவம் வாய்ந்த, பரிந்துரைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் மாத்திரமே செய்ய வேண்டும். கர்ப்பம் 12 வாரங்களுக்கு
உட்பட்டிருப்பின் ஒரு தனி மருத்துவ நிபுணர் மற்ற மருத்துவர்களின் ஆலோசனையின்றி கருச்சிதைவு செய்யலாம். ஆனால் கர்ப்பம் 12 வார காலங்களுக்கு மேற்பட்டிருப்பின், இரண்டு மருத்துவ நிபுணர்கள் ஒன்றுகூடி பேசி முடிவெடுத்த பின்னர், அவர்களுள் ஒருவர் கர்ப்ப காலத்தினை முடிவுக்குக் கொண்டு வரலாம். கர்ப்ப காலம் 20 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களாயிருக்கும் போது, கர்ப்ப காலத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய அவசரநிலை ஏற்படும்போது தனி ஒரு மருத்துவ நிபுணர் மற்ற எந்த மருத்துவரையும் கலந்தாலோசிக்காமலும் மற்றும் அங்கீகாரம் பெறாத மருத்துவமனையிலும் கருச்சிதைவு முறையினை செய்யலாம்.
பெண்களின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலைப் பெறுவது அவசியம். ஒரு வேளை பெண்கள் வயதில் மைனராக இருந்தாலோ அல்லது மயக்கநிலையில் சுயநினைவற்றிருந்தாலோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமான நிலையிலிருந்தாலோ, பாதுகாவலரிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற்றுக்கொள்ளலாம். எம்.டி.பி ஆக்ட் 1971ன் படி கருச்சிதைவு செய்து கொள்ளும்போது இதனை ஒரு குறிப்பிட்ட நபரின் சொந்தப்பிரச்சினையாகப் பாவிக்கப்படுகிறது. கருச்சிதைவு செய்து கொண்ட பெண்களின் விவரம் இரகசியமாக காக்கப்பட வேண்டும்.
இப்படி ஒரு மருத்துவர், கருச்சிதைவு முறையினை கையாளும் போது, போதிய முன்னெச்சரிக்கை முறைகள் மற்றும் பராமரிப்பினை மேற்கொண்டால், கருச்சிதைவு செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளிலும் சட்ட நடவடிக்கைகளிலுமிருந்து பாதுகாக்கப்படுவார். ஆனால் விதிகள் மீறப்படும் போது மருத்துவர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.
கர்ப்பத்தினை எம்.டி.பி முறைப்படி மருத்துவ அடிப்படையிலும் மற்றும் யூஜெனிக் அடிப்படையிலும் முடிவுக்குக் கொண்டு வருவது தாய் மற்றும் பிள்ளைக்கு நல்லது.
ஆனால் விரும்பத்தகாத, குறிப்பாக கர்ப்பத்தில் வளரும் பெண் குழந்தையை, கர்ப்பத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் அழித்தல் என்பது ஒரு அநீதியான மற்றும் சமூக விரோதச் செயல். எனவே இதனை அனுமதிக்கக்கூடாது மாறாக தடை செய்யப்படவேண்டும். அடிக்கடி கருச்சிதைவு செய்து கொள்வது தாயின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது.
இது உடல்நலக்குன்றல் மற்றும் மரணத்தினை தோற்றுவிக்கும். எனவே பெண்களுக்கு இதனை விளக்கிக்கூறி பிற கருத்தடைமுறைகளை மேற்கொள்ளும் படி உற்சாகப்படுத்த வேண்டும்.
த எம்டிபி ஆக்ட் என்கின்ற சட்டம் 1975 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. கீழ்க்காணும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

  • கருச்சிதைவு முறையினை மேற்கொள்வதற்கு, மருத்துவருக்கு தேவையான சான்று வழங்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரிக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னர், இவ்வதிகாரம் சான்றளிக்கும் மன்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்தது
  • கருச்சிதைவு செய்யும் மருத்துவருக்கான தகுதிகள்
  • அ) 25 மருத்துவ முறைப்படி கர்ப்ப காலத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (எம்டிபி) க்களில் உதவியாக பணிபுரிந்து அனுபவமுள்ள பதிவுபெற்ற மருத்துவராக இருக்க வேண்டும்.
  • ஆ) பிரசவ மற்றும் பெண்கள் நோய் மருத்துவத்துறையில் ஆறு மாதம் பயிற்சி பெற்ற மருத்துவர்.
  • இ) பிரசவ மற்றும் பெண்கள் நோய் மருத்துவத்துறையில் பட்ட மேற்படிப்பு பெற்றவர்.
  • ஈ) 1971-ல் இச்சட்டம் கொண்டு வருவதற்கு முன் மருத்துவபடிப்பை முடித்து இத்துறையில் (ஓபிஜி) மூன்று ஆண்டுகள் அனுபவம் வென்றவர் மற்றும்
  • உ) இச்சட்டத்திற்கு பின் மருத்துவ படிப்பை முடித்து இத்துறையில் ஓராண்டு அனுபவம் பெற்றவர்.
  • அரசு சாரா நிறுவனங்கள் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரியினிடம் உரிமம் பெற்றபின் கருச்சிதைவு பணிகளைச் செய்யலாம்.
கருச்சிதைவு செய்முறைக்கான தகவல்கள்

கருச்சிதைவுச் செய்துகொள்ளும் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச தகவல்கள்

  1. கருச்சிதைவு செய்யப்படும்போதும் அதற்கு பின்னரும் என்ன செய்யப்படும் என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
  2. கருச்சிதவினால் ஏற்பட்வுள்ள விளைவுகள் உ.ம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சதைபிடிப்பு, வலி மற்றும் இரத்தப்போக்கு
  3. கருச்சிதைவு முறை எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்?
  4. வலியைக் குறைக்க எம்மாதிரியான முறைகள் கையாளப்படிகின்றன.
  5. இம்முறையில் ஏற்படும் ஆபத்து மற்றும் சிக்கல்கள்.
  6. இம்முறையில் கருச்சிதைவு செய்தபின் எப்பொழுது சாதாரண வேலைகளில் ஈடுபடவேண்டும், தாம்பத்திய உறவும் சேர்த்து. மற்றும்
  7. பின் தொடர் பராமரிப்பு.
  8. பெண்ணானவள் கருச்சிதைவுச் செய்ய முன்வரும் போது, கர்ப்ப காலத்தின் காலஅளவு, பெண்ணின் மருத்துவ ரீதியான உடல்நிலை, எற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் எந்த வகையான முறைகளைக் கொண்டு கருச்சிதைவு செய்யப்படும் என்ற அனைத்து விவரங்களை அவளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

  9. HIV யினால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருச்சிதைவு சிகிச்சை பெரும் போது, அவர்களுக்கு சிறப்புத் தகவல்கள் (கருச்சிதைவில் HIV யின் பங்கு) கொடுக்கப்பட வேண்டும்

கருத்தடை

கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையமாக கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதை தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன.

  • முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக, கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவை தவிர்பது நல்லது.
  • இரண்டாவது எளிமையான முறை, கருமுட்டை கரு அணுவுடன் சேராமல் தவிர்ப்பது. ஆண் அல்லது பெண் கருத்தடை சாதனம் உபயோகிப்பதன் மூலம் கருத்தரிப்பை தவிர்க்கலாம். அல்லது நிரந்தரமான கருத்தடை முறை ஆண் அல்லது பெண் செய்து கொள்ளலாம்.
  • வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகள் மூலம் கரு முட்டையும் கரு அணுவும் இணைந்து கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.
  • பெண்ணின் கருப்பையில் ஐயுடி பொருத்துவதன் மூலம் கருவளர்வதை தடுக்கலாம்.
  • கருத்தரித்த பின் கூட குறிப்பிட்ட நாட்களுக்குள் கருச்சிதைவு செய்துகொள்ள இயலும். மாத்திரைகள் மூலம் கூட கருவை கலைக்கலாம்.

மேற் குறிப்பிட்ட கருத்தடை முறைகளை அவர் அவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்ககியத்திற்கு ஏற்றார் போல் கைகொள்ளலாம்.

கருத்தடை முறைகளை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • எந்தெந்த சந்தர்ப்பங்களில் கருத்தரிப்பு நிகழும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
  • கருத்தடை முறை பாதுகாப்பானதா அல்லது ஏதேனும் மோசமான பக்க விளைவுகள் உள்ளதா என்பதை அறிதல்
  • நீண்டநாள் உபயோகம் செய்யும்போது பக்க விளைவுகள் உள்ளதா என்பதை அறிதல்
  • அது தாய்பால் அளிப்பதில் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதையும், தாய்பாலில் கருத்தடை மருந்தின் குணங்கள் கலந்து விட வாய்ப்புள்ளதா என்றும் அறியவேண்டும்
  • பிறக்க இருக்கும் குழந்தையின் உடல்நலத்தை பாதிக்குமா என்பதை அறிதல்
  • கருத்தடை சாதனம் உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமையை ஏற்படுத்துமா. உதாரணமாக, ஒழுங்கான மாதவிடாய் இல்லாமை அல்லது கருவழி பாதையில் பிரச்சனைகள்
  • கருத்தடை சாதனம் தானாகவே உபயோகித்துக் கொள்ளலாமா அல்லது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையா
அ. கருத்தடை - இயற்கை முறை

1. ரிதம் (காலண்டர்) முறை
இந்த முறைப்படி, மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்குப் பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சி பருவத்தில், உடலுறவை தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம், மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும். இந்த முறையில், பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு, இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது. .

2. பில்லிங்ஸ் முறை
பெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சி பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன், இது சற்று குறைந்த அளவில், வறண்டும், கெட்டியாகவும், வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்பு தன்மை கருமுட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான நாட்களின் அறிகுறியாகும். இந்த மாறுபாடுகளை கவனிக்கும் போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.

3. உடலில் வெட்ப மாறுபாடு
பெண்கள் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தில் நடுப்பகுதியில் கண்காணித்தில் வேண்டும். அக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும் போது, உடலின் வெப்பநிலை 1-2 டிகிரி பாரன்உறீட் அதிகமாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவை தவிர்பதன் மூலம் கருத்தரிப்பை தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையை தெரிந்து கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆ. தடுப்பு முறை (கரு முட்டை கரு அணு இணைவதை தடுக்கும் முறை)

ஆண்கள் அணியும் ஆணுறை
ஆண்கள் அணியும் ஆணுறை உடலுறவிற்கு முன்பு அணிந்து கொள்வதன் மூலம், கரு அணு கர்பப்பபையில் கருமுட்டையுடன் இணைவதை தடுத்து கருத்தரிப்பை தவிர்க்க இயலும். ஒரு முறை உபயோகித்த ஆணுறையை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக செயல்படுவதுடன் எய்ட்ஸ் மற்றும் உடலுறவு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க இயலும்.

டயாபர்ம் பெண்களுக்கான கருத்தடை சாதனம்
பத்தொன்பதாம் நுாற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்களுக்கான கருத்தடை சாதனம் 2-4 இன்ச் வட்டவடிவில் ஒரு ரிங் இணைக்கப்பட்ட பொருளாகும். இதை ஆரம்பக்கட்டத்தில் ஒரு மருத்துவரின் அல்லது ஒரு மருத்துவ ஊழியரின் உதவியுடன் பொருத்திக் கொள்ள பழகி விட்டால் பின் சுயமாகவே பெண் உடலுறுப்பில் பொறுத்திக் கொள்ள இயலும். இதை அணிவதன் மூலம் கரு அணு கரு முட்டை இணைவதை தடுத்து கருதரிப்பை தவிர்க்க இயலும். ஒருமுறை உபயோகித்தப்பின் அதை சோப்பு போட்டு சுத்தப்படுத்தி மீண்டும் அடுத்த முறை உபயோகம் செய்யலாம். இதன் விலை சற்றே அதிகமானாலும் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பெண்களுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது.

சர்விகல் கேப்
இது டயாபர்ம் போன்றே சர்விக்ஸ்-ல் பொருத்தி கொள்ள கூடிய ஒரு ரப்பர் கேப். இதை அணிந்து கொள்வதன் மூலம் சர்விக்ஸின் திறப்பு மூடப்படுவதால் கருத்தரிப்பு நிகழ்வு தடைப்படுகிறது.

பெண்களுக்கான கருத்தடை பொருள்
பெண்களுக்கான இந்த கருத்தடைப் பொருள், பாலியுரித்தனால் செய்யப்பட்ட மெதுவான, பெண்களின் உடலுருப்பில் பொருத்திக்கொள்ள கூடிய வசதியுடன் உள்ள ஒன்றாகும். உடலுறவிற்கு முன்பே இதை பொருத்திக் கொள்வதன் மூலம் கரு அணு கரு முட்டையுடன் இணைவதை தவிர்கலாம். இது கருத்தரிப்பை தவிர்ப்பதுடன், எய்ட்ஸ் மற்றும் உடலுறவின் மூலம் ஏற்படும் நோய்களை தடுக்கவும் இயலும். ஆனால் சற்றே விலை அதிகமானது.

ஸ்பெர்மிசைடு
ஸ்பெர்மிசைடு என்பது பெண் உறுப்பில் தடவிக்கொள்ளும் ஒரு ரசாயன பொருளாகும். இது கரு அணுவை செயலிழக்கச் செய்வதால் கருத்தரிப்பை தடை செய்ய இயலும். இது மெதுவான நுரை வடிவத்திலும், மாத்திரைகள், கிரீம் வடிவத்தில் உள்ளது. இதன் பக்க விளைவுகள் கூட மிகக் குறைவே. ஒரு சிலருக்கு இது ஒவ்வாமை விளைவுகளை கொடுக்கலாம்.

நடைமுறை வழக்கத்தில் உள்ள கருத்தடை முறை

தாய்பால் அளிப்பது
குழந்தை பிறந்த பின் ஒருசில மாதங்களுக்கு கருமுட்டை வளர்வது, மீண்டும் மாதவிடாய் ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட சற்றே தாமதம் ஏற்படும். தாய்பால் அளிக்கும் காலத்தை நீட்டிப்பதன் மூலம் கருத்தரிப்பை தள்ளி போட இயலும்.

கருத்தடுப்பு சாதனங்கள்

ஐயுடி
ஐயுடி என்பது சிறிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு கர்ப்பபையில் பொருத்திக் கொள்ளப்படும் ஒரு கருத்தடை சாதனம் ஆகும். கர்ப்பப்பையில் உள்ள இந்த பொருள் கருத்தரிப்பை தடை செய்து கரு அணுவும் கரு முட்டையும் இணைந்து வளர்வதை தடை செய்கிறது.
நம் தேசத்தில் புழக்கத்தில் உள்ள இந்த கருத்தடை பொருளின் பெயர் காப்பர் டி. இது பொருத்தப்பட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் மாற்றப்படவேண்டும். இது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ளபட வேண்டிய ஒன்று. ஆனால் இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக கருதப்படுகிறது. ஆனாலும் இதில் ஒருசில பக்க விளைவுகள் உள்ளது.

  • பொருத்தப்பட்ட மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வலி ஏற்படுகிறது
  • மாதவிடாயின்போது அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது
  • மிக அறிதாக கர்ப்பபையின் உள்சுவர் தோலில் பிரச்சனைகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் போது, அதை நீக்கும் நேரத்தில் வலி ஏற்படலாம்.
  • ஐயுடி பொருத்திக் கொள்வதால் கர்ப்பப்பையில் வெளிப்புறத்தில் முக்கியமாக பெல்லோபியன் டியுபில் கரு வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் இன்பெக்ஷன் ஏற்பட்டு சரியான மருத்துவ வசதி இல்லாத போது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட நேரிடலாம்

ஸ்டிராய்டு அல்லாத மாத்திரைகள்
இந்த மாத்திரைகளும் கருத்தரிப்பை தடுக்க உதவும்.

ஹார்மோன் முறைகள்

ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் முறையில், ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகள் உடலில் மாற்றப்படுவதால் கரு வளர்ச்சியையும் கரு அணு வளர்ச்சியையும் தடுக்கப்படுகிறது. மேலும் இது சர்விகல் சுவரை அடர்த்தியாக செய்வதால் கரு அணு கர்ப்பபைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆனால் இம்முறையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் கருத்தடை மருந்துகள்
ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் கலந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் ஒவரியில் வளரும் கருமுட்டைகளை வளரவிடாமல் தடுப்பதால் கருத்தரிப்பு ஏற்படாமல் தடுக்க இயலும். மாலா டி குறைந்த வீரியம் உள்ள பாதுகாப்பான கருத்தடை மருந்தாகும்.

ப்ரோஐஸ்ட்ரோன் மட்டும் உள்ள மருந்துகள்

ப்ரோஐஸ்ட்ரோன் மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்ளும்போது, சர்விகல் ம்யுகஸ் அதிகமாக்கியும், கரு அணு கரு முட்டை நகர்வதை குறைத்தும், கரு வளர்வதை தடுக்கிறது. ஆனால் இம்முறையில் உடல் நலத்தில் பக்க விளைவுகள் உள்ளது.

அவசரகால கருத்தடை மாத்திரைகள்
பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இத்தகைய கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிப்பை தவிர்கலாம். இதன் பக்க விளைவுகளாக, வாந்தி அடுத்த மாதவிடாய் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் இந்த முறை 100 % நம்பகமானதல்ல.

நிரந்தர கருத்தடை முறைகள்

நிரந்தரமாக செய்து கொள்ளும் இந்த முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்து செல்லும் குழாயை தடுப்பது அல்லது வெட்டி எடுப்பது போன்ற முறைகள் கையாளப்படுகிறது. இம்முறையில், தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்றபோதே செய்து கொள்ளவேண்டும்.
ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை
வாசக்டமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் சிறிய மாறுதல். இந்த அறுவை சிகிச்சையை செய்வதன் மூலம் கரு அணு செல்வது தடைபடுவதால், பெண்கள் கருத்தரிப்பதை தவிர்க்கலாம். ஆனால் அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு வாரம் வரையில் அதிக பளுவுள்ள பொருட்களை துாக்கக் கூடாது. அறுவை சிகிச்சைக்கு பின் வீக்கம், வலி, ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பெண்களுக்கான நிரந்தர கருத்தடை
இந்த முறையில், பெண்களின் பிறப்புறுப்பில் செய்யும் சிறிய அறுவை சிகிச்சையால், ஒவரியில் வளரும் கருமுட்டை கரு அணுவுடன் இணைவது தடுப்கப்படுகிறது. சரியான முறையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை முறை சிறந்த கருத்தடை முறையாகும். ஒரு சில நேரங்களில் இன்பெக்ஷன், ரத்தக்கசிவு ஏற்படலாம். அதிக வலி மற்றும் உதிரம் போக்கு இருக்கும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வும், 2-3 நாட்களுக்கு அதிகபளுவோ துாக்கக் கூடாது.

கருச்சிதைவு

கருச்சிதாைவு என்பது கரு முழுமையான வளர்ச்சி அடைவதற்கு முன்பே செய்யப்படுவது. ஒரு சிலருக்கு இயற்கையாகவே கருச்சிதைவு ஏற்படும். மருத்துவ வசதியை உபயோகித்து கருவை கலைக்க இயலும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் ஏற்படும் கருவை கலைப்பதற்கு இம்முறை கையாளப்பகிறது. மருத்துவ முறையில் செய்யப்படும் கருச்சிதைவுக்கு 1972ம் ஆண்டு சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டது. கரு வளர்ச்சியின் தன்மை அல்லது நாட்களுக்கு ஏற்ப வெவ்வேறு கருச்சிதைவு முறைகள் கையாளப்படுகிறது.

சக்ஷன்
இந்த முறையை 6ல் இருந்து 8 வாரம் வரை வளர்ந்த கருவை கலைப்பதற்கு உபயோகிக்கின்றார்கள். இது, லோக்கல் அல்லது பொது அனஸ்தீஸியா அளித்த பின் வளர்ந்த கருவை உறிஞ்சி எடுத்து விடுவதாகும். இதற்காக மருத்துவ மனையில் தங்குவது அவசியம் இல்லை.

டி-சி
இந்த முறையில் 8ல் இருந்து 16 வாரங்கள் வரை வளர்ந்த கருவை ஒரு கம்பி மூலம் கலைத்து பின் கர்ப்ப பையை சுத்தம் செய்து விடுதலாகும்.

கருவை வெளியே வரவைக்கும் முறை
16-20 வாரம் வளர்ந்த கருவை, மருந்துகளை உபயோகித்து வெளியே வரவைப்பதாகும். இம்முறை அனீஸ்தீஸியா அளித்து செய்யப்படும். இதற்காக மருத்துவமனையில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்க வேண்டி வரும்

கருச்சிதைவு மாத்திரைகள்
கருச்சிதைவு மாத்திரைகள் உபயோகிப்பதன் மூலம் 6 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை வளர்ந்த கருவை கலைக்க இயலும். ஆனால் இதில் பக்க விளைவுகள் சற்று அதிகம். இம்முறையில் மிக அதிகமான உதிரப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படலாம்.

மலட்டுத்தன்மை

கேள்வி : மலட்டுத்தன்மை என்றால் என்ன?

பதில் - மலட்டுத்தன்மை என்பது இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் ஒரு நோய். இது உடலின் அடிப்படை செயலான இனப்பெருக்கத்தைக் கெடுக்கிறது. கருவுருதல் என்பது ஒரு சிக்கலான செயல். இது அநேக காரணிகளை பொருத்தது. அவையாவன

  • ஆணில் உண்டாகும் நலமான ஆண் விந்தணு மற்றும் பெண்ணில் உண்டாகும் பெலமுள்ள பெண் கருமுட்டை இவற்றைப் பொறுத்து அமைகிறது.
  • பெண் கருவகத்திலிருந்து கருப்பைக்கு, கருமுட்டையினை எடுத்துச்செல்லும் பெல்லோபியன் டியூப் எனப்படும் குழாய் அடைப்பின்றி இருந்தல்
  • ஆணின் விந்தணு கருமுட்டையுடன் இணைந்து கருசேர்க்கை ஏற்படுதல்
  • அவ்வாறு கருவுற்ற முட்டையானது கருப்பையில் பதிந்து கருவாக உருவாகுதல்
  • கருவின் போதுமான தரம்
  • முடிவாக கர்ப்ப காலம் முழுமை பெற்று குழந்தை பிறக்க, வளரும் கரு சுகாதாரமானதும் மற்றும் பெண்ணின் உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பிகள் கரு நன்கு வளர்ச்சி அடைவதற்கான சூழலை அமைத்துத் தருவது மிகவும் அவசியம்.

இவற்றில் ஏதேனும் ஒரு செயல் கெடும்போது குழந்தைபெற வாய்ப்பில்லாத மலட்டுத்தன்மை என்ற நிலையை ஏற்படுத்துகிறது.

கேள்வி 2. மலட்டுத்தன்மையை ஏற்படுத்துபவைகள் யாவை?

பதில்- ஆண்களில் மலட்டுத்தன்மை ஏற்படக்காரணங்களாவன
விந்தணுக்கள் உற்பத்தி இல்லாதிருப்பது அல்லது போதுமான விந்தணுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பது. சில வேளைகளில் விந்தணுக்கள் குறைபாடுடையவைகளாக (அதாவது இரண்டு தலைகள் அல்லது இரண்டு வால்கள் உடையனவாக) காணப்படுவது அல்லது விந்தணுக்கள் கரு முட்டையினை சென்றடைவதற்கு முன்னரே இறத்தல் போன்றவையாகும்.
பெண்களில் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்களாவன வளர்ச்சி பெற்ற கருமுட்டை கருவகத்திலிருந்து வெளிப்படுவதில் ஏற்படும் கோளாறுகள்.
பெல்லோபியன் டியூபில் ஏற்படும் அடைப்பு மற்றும் திரும்பபத்திரும்ப எற்படும் கருச்சிதைவினால் கர்ப்பப்பையில் ஏற்படும் பைப்ராய்டுஸ் எனப்படும் பிரச்சினைகளும் மலட்டுத்தன்மைக்கு காரணங்களாகும். .

கேள்வி 3. வெளிக்கருவுருதல் (இன் விட்ரோ பெர்டிலைசேஷன்) என்றால் என்ன?

பதில்வெளிக்கருவுருதல் என்பது கருவகத்தில் உள்ள வளர்ச்சி பெற்ற கருமுட்டையினை அறுவைசிகிச்சை முறைப்படி நீக்கம் செய்து அதனை உடலுக்கு வெளியில் பெட்ரிடிஸ் எனப்படும் கண்ணாடித் தட்டில் வைத்து ஆண் விந்தணுவுடன் கலப்பது ஆகும். அவ்வாறு கலக்கச் செய்த கருமுட்டையினை சுமார் 40 மணி நேரத்திற்கு, கருச்சேர்க்கை நடந்து கருவுற்ற முட்டையில் செல் பிரிவுகள் ஏற்படுகின்றதா என்பது கண்காணிக்கப்படும். பின்னர் அக்கருவுற்ற வளரும் முட்டையினை மீண்டும் பெண்ணின் கருப்பையில் பதியச்செய்து வளரச் செய்வதாகும். இம்முறையில் ஆண் விந்தணு பெல்லோபியன் டியூப் வழியாக வருவது தவிர்க்கப்படுகிறது.

வீடியோ: https://www.youtube.com/watch?v=8cUQkBu7ehY

மெனோபாஸ் (மாத விலக்கு இல்லாத காலம்)

மெனோபாஸ் பற்றிய விளக்கம்

நோயின்றி ஆரோக்கியமாக வாழவும், இன விருத்தி செய்து கொள்ளவும், தமது வாரிசுகளை வளர்க்கவும் ஏற்றவாறு நமது உடலமைப்பு அமைந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உடலில் ஏற்படும் மாற்றத்தின் தன்மைக்கு ஏற்பவே மன நிலைகளிலும் மாற்றம் உருவாகிறது. பெண்களின் வளர் இளம் பருவத்தில் ஏற்படும் இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் வளர்ச்சி பற்றிய சரியான புரிதலை பென்களுக்கு ஏற்படுத்துதல் மிகவும் அவசியமானது. பெண்ணின் சினைப்பையில் உருவாகும் கருமுட்டையானது கருவாக உருவாகாமல், பிறப்புறுப்பின் வழியாக வெளியெறுவதனையே மாத விலக்கு என்கிறோம்.ஒரு பெண்ணுக்கு வாழ்வில் முதன் முறையாக கரு முட்டை வெளியேறும் நிகழ்வினையே பருவமடைதல் அல்லது பூப்பெய்தல் என்கிறோம். ஆரோக்கியமாக உள்ள ஒரு பெண்ணுக்கு தடையின்றி 28 நாட்களுக்கு ஒரு முறை கரு முட்டை வெளியேறும்.சில பெண்களுக்கு நாட்கள் தள்ளிப் போகலாம். ஒழுங்கற்ற மாத விலக்கு ஏற்படலாம்.

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது. தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் மாதவிலக்கு ஏற்படுவதில்லை. கணவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் ஓய்வின்றி உழைக்கின்ற பெண்கள் தமது உடல் நலனில் போதிய அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை என்பது தற்போதைய உண்மை நிலையாகும்.

மாத விலக்கை தொடர்ந்து சந்தித்த பெண் 45 வயதிற்கு மேற்பட்ட வயதில் நிரந்தரமாக மாதவிலக்கு இல்லாத சூழல் ஏற்படும். அதுவே மாத விலக்கு இல்லாத இனிய காலம் (மெனோபாஸ்) என்று கூறுவர். இந்த மாதவிலக்கு இல்லாத காலத்தை நினைத்து பெண்கள் பயப்படுவது, அஞ்சி நடுங்குவது, வாழ்க்கையே முடிந்து போய்விட்டது என எண்ணுவர். தமக்கு வயதாகி விட்டது என கவலைப்படுவர் அந்த சிந்தனை முற்றிலும் தவறான எண்ணமாகும் மெனோபாஸ் காலத்தில் .உடலுறவில் நாட்டம் ஏற்படாது. உடலில் அசதியும், உடலில் மாற்றங்களும் ஏற்படும். உடலில் சோர்வும் ஏற்படும். பொதுவாக மெனோபாஸ் நிலையினை மூன்று வகையாக பிரிக்கலாம்.

  1. பெரிமெனோபாஸ்
  2. மெனோபாஸ்
  3. போஸ்ட் மெனோபாஸ்
பெரிமெனோபாஸ்

மாத விலக்கு நிற்பதற்கான அறிகுறிகள் பெண்ணுக்கு தோன்ற ஆரம்பிக்கும் சமயத்தில் ரத்த போக்கு சிலருக்கு ஒரு வாரத்திற்கு இருக்கலாம்.சிலருக்கு தடைபட்டு வரலாம்.இந்த அறிகுறிகள் தோன்றி நான்கு முதல் ஐந்து ஆண்டுகாலத்திற்கு பிறகு மாத விலக்கு முழுவதுமாக நிற்கிறது.இந்த மெனோபாஸ்க்கும் முந்தைய காலகட்டத்தையே பெரிமெனோபாஸ் என்கிறோம்.

மெனோபாஸ்

மாத விலக்கு முற்றிலும் நின்றுவிட்ட காலத்தையே மெனோபாஸ் என்கிறோம்.இந்நிலைக்கு பிறகு மாதவிலக்கு ஏற்படுவதில்லை.

மாதவிலக்கு நிற்கும் இந்த கால கட்டத்தில் வியர்வை பெருக்கம் ஏற்படும்.மன நிலையில் குழப்பம் ஏற்படும். எலும்பு மூட்டுகளில் வலியும், அசதியும் ஏற்படும். உடலுறவில் ஈடுபாடு இருக்காது. இன்னும் சொல்லப் போனால் வாழ்வையே இழ்ந்தது போன்ற உணர்வுகள் தலைகாட்டும். மனநிலையில் ஏற்படும் குழப்பத்தால் அடிக்கடி மறதி ஏற்படும். சிறுசிறு விசயங்களுக்குகூட எரிச்சல், கோபம் ஏற்படும். உடலில் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் முக்கியமான ஹார்மோன் சுரப்பு குறைந்து விடுகிறது.ஒரு சிலருக்கு ஹார்மோன் சுரப்பே இருக்காது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் பிறப்புறுப்பின் ஈரத்தன்மை காய்ந்து விடும். பிறப்புறுப்பின் உட் பகுதி சுருங்கி விடும். இச்சூழலில் உடலுறவின்போது ஏற்படும் உராய்வினால் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு வலியை உண்டாக்கும். சிறுநீர்ப் பாதையில் நோய்க்கிருமித்தொற்று ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உடலுறவை தள்ளிப்போடுவதற்காக, கணவரிடம் சண்டையிடுவதும், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவும் செய்வார்கள். இது போன்ற சமயங்களில் பெண் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிக முக்கியம்.

ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்து விட்ட நிலையில் சில பெண்களது முகத்தில் ஆண்களைப் போல முடி வளரலாம். தோலின் மேற்பகுதி வறண்டு சுருக்கங்கள் ஏற்படும். ஈஸ்ட்ரோஜன் குறைந்து விடுவதால் எலும்புகளுக்குன்டான கால்சியம் கிடைப்பதில்லை, இதனால் எலும்புகள் தேய்மானம் உருவாகி, மூட்டு வலி உருவாகிறது. மெனோபாஸ் ஏற்படும் போது ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறையும் என பார்த்தோம். இந்த சமயத்தில் பாலிக்குலார் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் எனப்படும் எப்.எஸ்.ப் அதிகமாகச் சுரக்கும்.இதனால் பெண்ணின் பிறப்புறுப்பில் மாற்றங்கள் ஏற்படும். பெண் உறுப்பு சுருங்கி குறுகி விடும். யோனிக் குழாயில் வழ வழப்புத் தன்மை குறைந்து வறண்டு விடும். இதனால்தான் மெனோபாஸ் சமயத்தில் உடலுறவு, எரிச்சல்-வலி மிகுந்ததாக மாறுகிறது. சில பெண்கள் இருமும் போதும், தும்மும் போதும் சிறுநீர் கசிவு ஏற்பட்டு சிக்கலான சூழலை உருவாக்கும்.

மெனோபாஸ் காலத்தில் உடல் தசைகளில் தளர்ச்சியும் இடுப்பு தசை மற்றும் சுற்றளவு அதிகரிக்கச் செய்யும். எலும்புகள் வலுவிழப்பதால், சிறிய தடுமாற்றத்தில் கூட கீழே விழவும், எலும்புகள் முறிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். நரம்பு சம்மந்தப்பட்ட கோளாறுகள், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் ஏற்படும்.இது இயற்கையான சூழலில் ஏற்படும் மெனோபாஸ் காலத்தில் சந்திக்கும் பிரச்சனையாகும்.

கர்ப்பப்பை அகற்றப்பட வேண்டிய காரணங்கள்

கீழ்க்கண்ட காரணங்களால் கர்ப்பப்பை அகற்றப்பட வேண்டியது வரலாம்:
மாதவிலக்கு சமயத்தில் கட்டுப்பாடற்ற ரத்த போக்கு ஏற்படும். வெள்ளைப்படுதலுக்கு சிகிச்சை எடுத்தும் கட்டுப்படாத நிலையில், கர்ப்பப்பை புற்று ,கட்டிகள், நாள்பட்ட கிருமித் தொற்றுகளால் ஏற்படும் தொற்று ,கர்ப்பப்பை இருக்க வேண்டிய இடத்தில் இருந்து கீழ்நோக்கி நகர்ந்து விடும்.பிரசவ காலத்தில் கர்ப்பபையில் உள்ள பிளசன்டா என்ற பனிக்குடத்தில் சிக்கலான நிலை அல்லது அதிக கட்டுக் கடங்காத ரத்தப்போக்கு ஏற்படும்.இது போன்ற சமயங்களில் , கர்ப்பப்பை ,அறுவை சிகிச்சையின் வழியாக அகற்றப்படுகிறது. இதுபோன்று கர்பப்பை அகற்றப்பட்ட அந்த பெண்ணுக்கும் மாத விலக்கு இல்லாத (மெனோபாஸ்) நிலை உருவாகிறது.

கவனிக்கவேண்டியவை

ஒரு பெண் ,குழந்தை நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்லும் வளர் இளம் பருவம் தொடங்கி பருவத்திற்கு வந்த காலம் முதல், திருமணமாகி, குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு என ஒவ்வொரு கட்டமாக பெண்ணின் வாழ்க்கை காலம் அமைகிறது. குடும்ப பிரச்சனைகளை, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கிறாள். அந்தப் பெண்ணுக்கான வாழ்க்கைக் கல்வியும் அரிதாகி விடுகிறது. எனவே,ஒரு பெண் குழந்தை பிறந்து வளரும் ஒவ்வொரு விநாடியிலும் தாயின் செயல்பாடுகளை உற்று நோக்குகிறது. குழந்தைகளுக்கு குடும்பத்தைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் சொல்லித் தர வேண்டும். நண்பர்களிடம் பழகுவது, சம வயது பெண்ணிடம் பழகுவது, ஆண்களிடம் பழகும் விதம் பற்றி கற்றுத்தரப்படல் வேண்டும்.

வளர் இளம் பருவத்தில் உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள்,மாத விலக்கு சமயங்களில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களையும், உணர்வுகளையும் அந்த பெண் குழந்தைகளுக்கு அச்சமும்,கூச்சப்படாமல் எடுத்துக் கூறி மன அச்சத்தை போக்க வேண்டும்.ஆரோக்கியமான உணவுப் பழக்கம்,தன் சுத்தம்,சுய முயற்சி ,தலைமைப் பண்பு ஆகியவற்றினை கற்றுத் தரல் வேண்டும்.

மாத விலக்கு சமயங்களில் காட்டன் துணிகளை உடுத்துவதும், தரமான நாப்கின்களை பயன்படுத்தல் வேண்டும். கர்ப்பப்பை வளர்ச்சிக்கும்,எலும்புகள் வலுவடைவதற்கும் தேவையான கால்ஷியம் நிறைந்த உணவுகளை அளிக்க வேண்டும்.

மாத விலக்கு சமயங்களிலோ அல்லது மாத விலக்கிலோ பிரச்சனைகளோ –சிரமங்களோ ஏற்பட்டால் சுய வைத்தியம் செய்து கொண்டிராமல் மகப்பேறு மருத்துவ நிபுணரிடம் உரிய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

திருமணமாகி கர்ப்பம் தரிக்கும் முன்பிருந்தும்,கர்ப்பம் தரித்த பின்னும் கர்ப்பம் உறுதிப்படுத்திய பின்பும் முறையான தடுப்பூசி போடப்படல் அவசியமானது.தொடர்ந்து குழந்தையின் வளர்ச்சி,குழந்தையின் முழுமையான நலனை கண்காணித்து வரல் வேண்டும்.பிரசவத்திற்காக கொடுக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே தேவையான பணம்,மருத்துவமனை முன்பதிவு போன்ற விசயங்களில் முன் ஏற்பாடு செய்து கொள்வது மிகவும் முக்கியமானது.

குழந்தை பிறந்த பின்பு, குழந்தை –தாய் இருவரின் நலனை மேம்படுத்தும் பரிசோதனையும், சிகிச்சையும், தடுப்பூசிகளிலும் கவனம் செலுத்தல் வேண்டும்.குழந்தை ஆரோக்கியமாக வளர வாய்ப்பளிப்பதும்,தாயின் உடல் நிலை மேம்பட கால அவகாசம் அளித்திடல் வேண்டும். அதுவரை கர்ப்பதடை சாதனங்களை பயன்படுத்தல் முக்கியம். (ஆணுறை,காப்பர்-டி,மாலா-டி).

தொடர்ந்து பெண்ணின் நலனை மேம்படுத்தி வரும் போது வாழ்க்கையின் பிற்பகுதி காலம் சுமையாக இருக்காது. சுகமாக இருக்கும், மாத விலக்கு இல்லாத அந்த சமயங்களில் மன அழுத்தமின்றி மகிழ்வுடன் வாழ வழிகிட்டும்.

தகவல்: மேக்னம், தமிழ்நாடு

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate