অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

குழந்தை பிறக்கும் முன்பு பாதுகாப்பு

குழந்தை பிறக்கும் முன்பு பாதுகாப்பு

  • ஒவ்வொரு பெண் குழந்தை பிறந்தவுடனும் இனப்பெருக்கத்துக்கான தகுதிச் சுற்று ஆரம்பித்துவிடுகிறது. பிறந்த பெண் குழந்தையின் ஓவரி எனப்படும் கருவகத்தில் (ovary) பத்து லட்சம் ஃபாலிகிள்ஸ் (follicles) இருக்கும். இவைதான், பூப்பெய்திய பிறகு மாதா மாதம் மாதவிலக்குக் காலத்தில் கருமுட்டையாக (ஓவம் - ovum) வெளியாகிறது. இந்தக் கருமுட்டைதான், ஆணின் விந்தணுவுடன் (sperm) சேரும்போது கருவாக உருவாகிறது. ஆனால் ஆண் குழந்தைக்கு, அது பிறக்கும்போது விந்து (semen) உற்பத்தியாகும் செல்கள்தான் இருக்கும். ஆனால், 14 வயதில்தான் ஸ்பெர்ம் எனப்படும் விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. அப்படியானால், அடுத்த தலைமுறைக் குழந்தைகளின் பாதுகாப்பு, ரொம்ப ரொம்ப முன்னாடியே ஆரம்பம் என்றுதானே சொல்ல வேண்டும்.
  • ஒரு பெண், குழந்தை பெறும் நிலையை அடையும்போது குறைந்தபட்சம் 45 கிலோ எடையும் 145 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். இதில், எது குறைந்தாலும் கூடினாலும் பாதிப்புதான்! அதிக ஒல்லியான, அதிக குண்டான, மிகவும் குட்டையான உடல் அமைப்புடன் உள்ளவர்களுக்கு மகப்பேறு சிக்கலாகும்! தாய்க்கு முதுகெலும்பு, இடுப்பெலும்பு, கால்களில் பிறவிக் கோளாறுகள் இருந்தாலும் பிரசவம் சிக்கல்தான்.
  • தாய் 35 வயதுக்கு மேலும், தந்தை 40 வயதுக்கு மேலும் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மரபணு நோய்கள் இருக்க வாய்ப்பு மிகவும் அதிகம். அதனால், பெண்கள் 35 வயதுக்குள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளையும் பெற்றுக்கொள்வதுதான் சரி. அதேபோல், தாய் 20 வயதுக்குக் கீழேயும், தந்தை 24 வயதுக்குக் கீழேயும் இருந்தாலும் பிரச்னைதான். அதனால்தான், பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 21 என்கிறது சட்டம்.
  • குறைந்த வயதுடைய பெண்ணுக்குக் குறைமாதப் பிரசவம், எடை குறைந்த குழந்தை, பிரசவத்தில் சிக்கல்கள், அதிக ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றால் தாய் இறந்துவிடவும் வாய்ப்பு உண்டு. 20 வயதுக்கு மேல்தான் பெண்ணின் இடுப்பு எலும்பு மற்றும் இடுப்பு தசைகள் முதிர்ச்சி அடைந்து, கருப்பை சுருங்கி விரிந்து பிரசவத்தை எளிதாக்குகின்றன.
  • திருமணத்துக்கு முன்பு ஏற்பட்ட நோய்கள், எடுத்துக்கொண்ட மாத்திரைகள், செய்துகொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் போன்றவை, கருவுருவதையும், மகப்பேறையும் பாதிக்கலாம். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். தாய்க்கு அதிகம் பொருந்தும்.
  • இவைதவிர, தம்பதியரின் ரத்தப்பிரிவு மற்றும் உட்பிரிவுகூட முக்கியம். தந்தைக்கு ஆர்.எச். நெகடிவ் (Rh negative) வகை ரத்த குரூப் இருந்து குழந்தை ஆர்.எச். பாசிட்டிவ்வாக (Rh positive) இருந்தால், குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம். கருவிலேயே குழந்தை இறந்துவிடலாம் அல்லது குழந்தை பிறந்த பிறகு உயிருக்கு ஆபத்தான மஞ்சள் காமாலை ஏற்படலாம். இதற்கு சிகிச்சை முறை மிகவும் சிக்கலானது. ரத்தம் மாற்றப்பட்ட வேண்டிய சூழ்நிலை (Exchange Blood Transfusion) ஏற்படும்.
  • தற்போது, உயிர்க்கொல்லி நோய்களான ஹெச்ஐவி, எய்ட்ஸ் (HIV / AIDS) போன்றவை உலகத்தைப் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றன. அதனால், குழந்தைப்பேற்றுக்கு முன் தம்பதியர் இருவரும் ஹெச்ஐவி டெஸ்ட் செய்துகொள்வது காலத்தின் கட்டாயம்.
  • மகப்பேறு என்ற தருணத்தை எதிர்கொள்ள உடல், மனம், உணர்வுகள், பொருளாதாரம், சுற்றுப்புறச் சூழல் ஆகியவை ஏதுவாக இருக்க வேண்டும். எனவே, அதற்கான திட்டமிடல் அவசியம்.
  • முதல் குழந்தைக்கு ஒரு வயசுதான். அவளுக்கு மூன்று வயதாகி எல்.கே.ஜி. சேர்ந்த பிறகுதான் அடுத்த குழந்தை! இது சரியான முடிவுதான். ஆனால், சரியான காரணம் இல்லாமல் முதல் குழந்தையைத் தள்ளிப்போடுவது அல்லது முதல் கருவைக் கலைப்பது போன்றவை கூடாது. அதிகபட்சம் இரண்டு வருடம் தள்ளிப் போடலாம். அதிக நாட்கள் தள்ளிப்போட்டு, அதிக மன உளைச்சல் ஏற்பட்டு, விரக்தி உண்டாகி, மகிழ்ச்சியான சூழ்நிலைகள் மறைந்துபோய்விட்ட சமயத்தில் கருவுருவது நல்லதல்ல. அது குழந்தையைப் பாதிக்கும். ஆக, கருவுருவதில் இருந்து கருவுற்றக் காலம் முழுவதும், மகப்பேறு சமயமும், குழந்தையை வளர்க்கும்போதும் மன அமைதி, சந்தோஷம் கட்டாயம் தேவை!
  • தாய் கருவுற்றவுடன், தம்பதியர் தங்களின் தினசரி செயல்பாடுகளை, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவேண்டும்.
  • தாய்க்கு நல்ல ஊட்டச்சத்து உணவாக 200 கலோரிகளும், 20 கிராம் புரதமும் வழக்கத்தைவிட அதிகம் தேவை. நிறைய தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள், கீரை போன்றவற்றை நிறைய உட்கொள்ள வேண்டும். கணவனின் அன்பும் ஆதரவும் கர்ப்பிணிக்கு அவசியம் தேவை. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, ஊக்கம், வேலைப் பகிர்வு, அன்பு ஆகியவை கட்டாயம் தேவை.
  • கருவுற்ற பிறகு, பேறு காலத்தில் ஏற்படக்கூடிய செலவுகளைக் கருத்தில் கொண்டு, நிதி நிலைமையை யோசிக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனைகள், ஸ்கேன் போன்றவற்றுக்கு அதிகம் பணம் தேவைப்படும். முதல் குழந்தைக்கு ஏதேனும் நோய் இருந்தால், அடுத்த குழந்தைக்கு இன்னும் அதிகமான டெஸ்டுகள் செய்யவேண்டி வரும். அதற்கும் திட்டமிடுவது அவசியம்.
  • தம்பதியரின் வேலைக்குத் தகுந்தபடி லீவு போடுவதைத் தீர்மானிக்க வேண்டும். ஏற்கெனவே குழந்தை இருந்தால், இரண்டாவது குழந்தையின் வரவை அந்த முதல் குழந்தை மனத்தளவில் ஏற்றுக்கொள்ளும் வகையில் தயார்படுத்த வேண்டும். இது sibling rivalry என்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க உதவும்.

ஆதாரம் : டாக்டர். என். கங்கா

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate