தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது என்னும் செய்தி பல அம்மாக்களை எட்டியிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு வருடத்துக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறது இன்றைய ஆராய்ச்சி.
தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள். குறைந்த ஊட்டச்சத்து, ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சிலருக்குத் தாய்ப்பால் தேவையான அளவு சுரப்பதில்லை. கீழ்க்காணும் உணவுமுறையை பின்பற்றுவதன்மூலம் தாய்ப்பாலை பெருக்கலாம்.
வெந்தயம்
குழந்தை பிறந்த சில நாட்களில், தாய்க்கு வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்துச் சாப்பிடக் கொடுக்க, அதிக அளவில் பால் சுரக்கும். அதிலுள்ள ‘Diosgenin’ பால்சுரப்பு அதிகரிக்கக் காரணமாகிறது. மகப்பேற்றுக்குப் பிறகு வெந்தயமானது கருப்பையைச் சுருங்கச் செய்து, கருப்பையின் அழுக்குகளை வெளியேற்றி, மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டுவருகிறது. அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) வெளியிட்ட பாதுகாப்பான உணவுப் பட்டியலில் வெந்தயமும் இடம்பெற்றுள்ளது.
பூண்டு
பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள், பூண்டு பற்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமன்றி, உடலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவும் குறையும். பால் கொடுக்கும் தாய்மார்கள் பூண்டு, வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால், தாய்ப்பாலில் உண்டாகும் ஒருவித மணம் காரணமாக, குழந்தைகள் அதிக நேரம் பால் அருந்துவதாக ‘American Academy of Pediatrics’ ஆய்விதழில் வெளியான ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவு இருந்தும், பால் குடிக்கக் குழந்தைகள் மறுத்தால், மேற்குறிப்பிட்ட முறையை முயற்சித்துப் பார்க்கலாம்.
தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவேரி)
பப்பாளிக் காய்
ஆமணக்கு இலைகள்
ஆமணக்கு இலைகளுக்குப் பால்பெருக்கி செய்கை உண்டு. ஆமணக்கு இலைகளைக் குடிநீராகவும் குடிக்கக் கொடுக்கலாம் அல்லது இலையை எண்ணெயில் வதக்கி மார்பில் போட்டுவர, பால் சுரப்பு அதிகரிக்கும். இதைப் போலவே இலுப்பை, காட்டாமணக்கு இலைகளையும் மார்பில் வைத்துக் கட்டலாம். வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி மார்பில் கட்டிவரப் பால் சுரப்பு அதிகரிக்கும்.
தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைகிறது என்று இன்றைய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதை அன்றே, ‘வயிறா தாய்முலை யுண்ணாக் குழவியும் நல்குரவு சேரபட்டார்’ என வலியுறுத்தியது ‘திரிகடுகம்’ நூல். தாய்ப்பால் கொடுக்கும் முறை பற்றி, ‘புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை முலைவாய் உறுக்கும் கைப்போல’ என நற்றிணையில் தமிழர்கள் பதிவு செய்கின்றனர். இப்படியாகப் பழங்கால இலக்கியம் தொடங்கி, இன்றைய இணைய யுகம்வரை தாய்ப்பாலின் அத்தியாவசியம் பற்றி பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
உணவில் கவனம்
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதில் தனிக் கவனம் செலுத்துவது அவசியம். தாய் உட்கொள்ளும் உணவின் குணங்களே, தாய்ப்பாலில் பிரதிபலிக்கும். எனவே, வாயுப் பொருட்கள், அதிகக் காரமான மற்றும் செரிமானத்தைப் பாதிக்கும் உணவைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகப் பிராய்லர் கோழி, துரித உணவு, மாங்காய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இயற்கை உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், தாய்ப்பாலின் தரமும் மேம்பட்டிருக்கும். சிறந்த உணவு, நிம்மதியான உறக்கம், சீரான மனநிலை எனும் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது.
அதேநேரம், எதிர்காலத்தில் குழந்தை நோயின்றி வாழச் சிறந்த இயற்கை உணவாகவும் மருந்தாகவும், தாய்ப்பாலுக்கு நிகராக வேறு எதுவுமில்லை. வைட்டமின்கள், தாதுகள், புரதங்கள், கொழுப்புகள், நோய் எதிர்ப்பு பொருட்கள் எனக் குழந்தைக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் தாய்ப்பாலில் பொதிந்து கிடப்பது இயற்கையின் வரம்.
பாசமும் நேசமும் கலந்த தாய்ப்பால் எனும் அமுதத்தை உட்கொள்ளும் குழந்தைகள், பல்லாண்டு காலம் நோயின்றி வாழ்வார்கள். ‘உண்ண உண்ணத் தெவிட்டாதே அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்’ என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்க, தாயின் உயிர்ச்சத்தான தாய்ப்பாலை, குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்குக் கொடுப்பது சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது.
ஆதாரம் : மரபு மருத்துவம் கையேடு
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி என்பது பற்றிய க...
தாய்மையின் அடையாளங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
இளம் தாய்மார்களுக்குத் தேவையான லேகியங்கள் பற்றி இங...
தாய்ப்பாலூட்டுதலில் பிரச்சினைகள் பற்றிய குறிப்புகள...