பூச்சிகளின் எண்ணிக்கை அபரிதமாகப் பெருகிடும் போதும், அருகாமையிலுள்ள வயல்களிலிருந்து பரவிடும்போதும் பூச்சிகளின் தன்மை மற்றும் அளவினைப் பொருத்து இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக தாவரப்பூச்சிக் கொல்லிகளை அங்ககப் பூச்சி மேலாண்மையில் பயன்படுத்திடலாம். இவற்றை நம் முன்னோர்கள் தொன்று தொட்டு பயன்படுத்தி வந்துள்ளனர். வேம்பு, நொச்சி, எருக்கு, ஆடாதோடா, அரளி, தும்பை, சோற்றுக் கற்றாழை, புங்கம், இலுப்பை, சீத்தாப்பழம் போன்ற தாவரங்கள் சிறந்த பூச்சிக்கொல்லி தன்மையினைப் பெற்றுள்ளன. இவை எளிதில் கிடைப்பதாலும், விவசாயிகளால் எளிதில் பயன்படுத்த முடிவதாலும் அங்ககப் பூச்சிக் கட்டுப்பாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றன.
5 கி.கி.வேப்பங்கொட்டையை நன்றாக இடித்து 100 லிட்டர் தண்ணீரில் 3 முதல் 4 நாட்கள் ஊறவைத்து வடிகட்டி தெளிக்கலாம். இவற்றை இலைப்பேன், அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் இலையை உண்ணும் புழுக்களையும் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம். இவை நன்மை செய்யும் சிலந்தி இனங்கள், தேனீக்கள், ஊண்உண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
வேம்பு, புங்கம், இலுப்பை போன்ற தாவர எண்ணெய்கள் பூச்சிகளை விரட்டவும், கொல்லவும் அங்கக வேளாண்மையில் பயன்படுத்தப்படுகின்றன. 1 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து பயிர்களில் நன்கு படும்படி தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பொதுவாக எண்ணெயைத் தண்ணீரில் ஊற்றும் போது அவை தண்ணீரில் கலக்காமல் அவற்றின் மேலும் மிதக்கும். அவை தண்ணீரில் நன்கு கலக்க சோப்பு திரவம் அல்லது காதி சோப்பு பயன்படுத்தப்படுகின்றது. எண்ணெய் தண்ணீர் கலவையில் சோப்பு திரவத்தினை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அப்போது பால் போன்ற திரவம் தோன்றும். பால் போன்ற தன்மை மாறும் வரை சோப்பு திரவத்தினை சேர்த்து நன்கு கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் தண்ணீர் சோப்பு கலவை தெளிவான தன்மையை அடைந்தவுடன் பயிர்களின் மேல் தெளித்து பூச்சிக் கட்டுப்பாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும்.
அங்ககப்பூச்சி மேலாண்மையில் தாவரங்களின் பங்கு
தாவரம் |
பயன்படும் பகுதி |
செயல்திறன் |
கட்டுப்படுத்தும் பூச்சி |
வசம்பு |
கிழங்கு |
தொடுநஞ்சு மற்றும் பூச்சி விரட்டி |
எரும்பு மற்றும் வண்டுகள் |
வெங்காயம் |
இலை மற்றும் குமிழ் |
பூச்சி விரட்டி |
அனைத்து வகைப்பூச்சிகள் |
சீத்தா |
இலை மற்றும் விதை |
தொடுநஞ்சு, பூச்சி விரட்டி மற்றும் உண்ணாமை |
அனைத்து வகைப்பூச்சிகள் |
வேம்பு |
இலை, விதை, பூ, பட்டை, எண்ணெய் |
தொடுநஞ்சு, பூச்சி விரட்டி, உண்ணாமை, வளர்ச்சி குன்றி மற்றும் வயிற்றுப்பாசனம் |
அனைத்து வகைப்பூச்சிகள் |
எருக்கு |
இலை |
வயிற்றுப் பாசனம் |
புழுக்கள் |
கற்றாழை |
இலை |
தொடுநஞ்சு மற்றும் வயிற்றுப் பாசனம் |
புழுக்கள் |
மிளகாய் |
பழம் |
வயிற்றுப் பாசனம் |
புழுக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் |
சாமந்தி |
பூ |
தொடுநஞ்சு மற்றும் வயிற்றுப் பாசனம் |
அனைத்து வகைப்பூச்சிகள் |
மஞ்சள் |
கிழங்கு |
தொடுநஞ்சு |
நெல் பூச்சிகள் மற்றும் சேமிப்பில் காணப்படும் பூச்சிகள் |
சைகஸ் |
ஆண் பூ |
பூச்சி விரட்டி |
நெல்கதிர் நாவாய்ப்பூச்சி |
ஊமத்தை |
இலை |
உண்ணாமை |
புழுக்கள் |
காட்டாமணக்கு |
இலை |
உண்ணாமை |
புழுக்கள் |
துளசி |
இலை |
உண்ணாமை மற்றும் பூச்சி விரட்டி |
புழுக்கள், வண்டுகள் மற்றும் பழ ஈக்கள் |
மிளகு |
விதை |
வயிற்றுப் பாசனம் |
புழுக்கள் மற்றும் வண்டுகள் |
புங்கம் |
விதை மற்றும் எண்ணெய் |
உண்ணாமை |
அனைத்து வகைப்பூச்சிகள் |
நொச்சி |
இலை |
தொடுநஞ்சு மற்றும் வளர்ச்சி குன்றி |
புழுக்கள் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் சேமிப்பில் காணப்படும் பூச்சிகள் |
இஞ்சி |
கிழங்கு |
பூச்சி விரட்டி |
புழுக்கள் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் சேமிப்பில் காணப்படும் பூச்சிகள் |
பூண்டு |
இலை மற்றும் குமிழ் |
பூச்சி விரட்டி |
அனைத்து வகைப்பூச்சிகள் |
அங்கக வேளாண்மையில் பூச்சி மேலாண்மை முறைகளை சீராகக் கடைபிடிப்பதன் மூலம் பூச்சிகளினால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்த்து நிறைவான மகசூலைப் பெறலாம்.
ஆதாரம் : மலரும் வேளாண்மை