பாரம்பரிய நெல் வகைகளில் இன்றைக்கும் பிரபலமாக பேசப்படும் ரகம் கட்டச்சம்பா. இந்தப் பயிருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், இந்த பயிரில் நோய் தாக்குதல் என்பதே இருக்காது. நம்முடைய முன்னோர் இந்த ரகத்தைப் பயிரிட்டு ஏக்கருக்கு முப்பது மூட்டைக்கு மேல் மகசூல் எடுத்துள்ளனர்.
பாரம்பரிய நெல் ரகங்களில் குள்ள ரகமாக இருப்பதால், இதைக் கட்டச்சம்பா என்று அழைக்கின்றனர். இந்த நெல் ரகத்தைப் பயிரிடுவதன் மூலம், குறைந்த செலவில் அதிக மகசூல் எடுக்கும் பலனை நம் முன்னோர் பெற்றனர்.
பருவநிலை பாதிக்காத வகை
பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றங்களிலிருந்து மீளக்கூடிய, சாயும் தன்மை இல்லாத நெல் ரகங்களில் முதன்மையானது கட்டச்சம்பா. உழைப்பாளியின் உடலுக்கு வலுசேர்க்கும் முதன்மை ரகமாக கட்டச்சம்பா நெல் இருக்கிறது. இரவு சாப்பிட்ட பின் மீதம் இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றி மண்பானையில் வைத்து, மறுநாள் காலையில் அருந்தி வந்துள்ளனர். இன்றைக்கும் அந்த நீராகாரம் பதனீர் அருந்துவதுபோல் சுவையுடன் இருந்துவருகிறது.
ஆதாரம் : பசுமை தாயகம்