অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்

அரசுப் பணியாளர்கள் தங்களது பெயரிலோ, தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்குவது, விற்பனை செய்வது, மற்றும் காலிமனை வாங்கும் போது அதற்கு உண்டான நிதி ஆதாரங்களை சமர்பிப்பது போன்ற விதிமுறைகளை அரசுப் பணியாளர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி எண் 7-ல் சொல்லப்பட்டதைப் பார்ப்போம்.

அசையும், அசையா மற்றும் விலை மதிப்புள்ள சொத்துக்கள் விதி (Movable, Immovable and Valuable Property)

  • (அ) அரசு பணியாளர் எவரும் தங்களுடைய பெயரிலோ, தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ, உரிய அலுவலருக்கு அறிவிக்காமல் குத்தகை அடைமானம் வாங்குதல் விற்பனை பரிசில் பரிமாற்றம் அல்லது பிற வழிகளில் இடம் பெயராச் சொத்து எதையும் பெறவோ தீர்வு செய்யவோ கூடாது.
  • அரசுப் பணியாளருடைய நிதி ஆதாரங்களிலிருந்து அவருடைய குடும்ப உறுப்பினர் எவராலும் பெறப்படும் ஏதேனுமொரு இடம் பெயராச் சொத்துக்கும் அத்தகையதொரு அறிவிப்பு தேவைப்படுவதாகும்.
  • மேலும், இந்நடவடிக்கையானது அரசு பணியாளருடனான அலுவல்முறைத் தொடர்பு கொண்டுள்ளவருடனான நடவடிக்கையெனில் உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்புப் பெறப்பட வேண்டும்.
  • இருப்பினும், அரசால் அரசுப் பணியாளருக்கு வீட்டுமனை உரிமை மாற்றம் செய்யப்படும் நேர்வில் அந்த இடம்பெயராச் சொத்தினை பெற உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்புத் தேவையில்லை.

விளக்கம்:- இடம்பெயராச் சொத்தானது தொடர்புடைய அரசுப் பணியாளருடைய நிதி ஆதாரங்களிலிருந்து பெறப்படாத நேர்வில், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களால் இடம் பெயராச் சொத்துகள் கையகப்படுத்தப்படுதற்கு அல்லது தீர்வு செய்யப்படுவதற்கு அந்த அரசுப் பணியாளர் உரிய அதிகாரிக்கு அறிவிக்கவோ உரிய அதிகாரியின் முன் அனுமதியைப் பெறவோ தேவையில்லை. [அரசாணை எண். 409 ப. 9(ம) நி.சீ.துறை நாள். 24.12.1992 (G.O.Ms.No.409, P&AR dated 24.12.92) இல் சேர்க்கப்பட்டது.]

(ஆ. ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அல்லது விரிவுப்படுத்துவதற்கு அல்லது உடைமையாக்கிக் கொள்வதற்கு அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் உரிய அதிகாரிக்கும் பின்வரும் முறையில் அறிவிக்க வேண்டும்.

  • அரசிடமிருந்து அல்லது மற்றவர்களிடமிருந்து கடன் அல்லது முன்பணம் அல்லது பொதுவைப்பு நிதியிலிருந்து பகுதி இறுதி பெறுகையைத் கொண்டு வீடு கட்டுவதற்கு அல்லது விரிவுபடுத்துவதற்கு அல்லது உடைமையாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன் அவர் நேர்வுக்கேற்ப உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்பினைப் பெற வேண்டும்.
  • கட்டுமானம் அல்லது விரிவாக்கம் முடிந்ததும், அவர் உரிய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.

இயலுமிடத்து, இவ்விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், விவரங்களை அளிக்க இயலாதவிடத்து கட்டடம் எழுப்பப்பட்டுள்ள அல்லது எழுப்பக் கருதப்பட்டுள்ள பரப்பளவையும், கட்டடத்தின் மதிப்பீட்டுச் செலவு விவரத்தையும் அரசுப் பணியாளர் குறிப்பிட வேண்டும்.

(இ) கூட்டு நிதியிலிருந்து பிரிக்கப்படாத கூட்டுக் குடும்பச் சொத்துக்களின் பழுதுபார்ப்பு செலவில், இந்து கூட்டு குடும்ப உறுப்பினராகவுள்ள அரசுப் பணியாளரின் பங்கானது ரூ.50,000/-க்கு மிகையாகும் போது அப்பழுதுபார்ப்புகள் தன்னுடைய கவனத்திற்கு வரும்போதெல்லாம் அரசுப்பணியாளர் அவ்விவரத்தை உரிய அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். [அரசாணை எண். 39 ப. 9(ம) நி.சீ.துறை நாள். 9.3.2010 (G.O.Ms.No.39, P&AR dated 9.3.2010) இல் சேர்க்கப்பட்டது.]

A. அரசுப் பணியாளர் எவரும் அரசு நிலங்களை அத்துமீறி கைப்பற்றக்கூடாது.

A- தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ.80,000, B-தொகுதி அலுவலர்களை பொறுத்த ரூ.60,000, C-தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ.40,000 மற்றும் D-தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ. 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட விலைமதிப்புள்ள இடம் பெயர் சொத்துத் தொடர்பான விற்றல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபடும் அரசுப் பணியாளர் அத்தகு நடவடிக்கை ஒவ்வொன்றும் நடைபெற்ற நாளிலிருந்து ஒரு திங்களுக்குள் இது குறித்த விவரத்தை உரிய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.

மேலும், அந்நடவடிக்கையானது அரசுப் பணியாளருடன் அலுவல்முறைத் தொடர்பு கொண்டுள்ளவருடனானது எனில் உரிய அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும். இருப்பினும், தன்னுடைய அலுவல் சார்ந்த அதிகாரியின் எல்லையிலிருந்து வெளியேறவுள்ள அரசுப் பணியாளர், உரிய அதிகாரிக்குத் தெரிவிக்காமல், தன்னுடைய இடம் பெயர் சொத்து எதையும் அவற்றின் பட்டியல்களைப் பொதுவான முறையில் பொதுமக்களிடையே சுற்றறிக்கை விடுவதன் மூலம் அல்லது பொது ஏலத்தில் விற்பனை செய்தவன் மூலம் தீர்வு செய்யலாம்.

இந்த உள் விதியின் நோக்கங்களுக்கான ‘இடம் பெயர் சொத்து” என்னும் சொற்றொடரானது பின்வரும் சொத்துகளை உள்ளடக்கியதாகும். அவையாவன:-

(அ) நகைகள், ஈட்டுறுதி ஆவணங்கள், பங்குகள், பிணையங்கள் மற்றும் கடனீட்டு ஆவணங்கள்.

(ஆ) சீருந்து, மிதி இயக்கிகள், குதிரைகள் அல்லது பிற வகை ஊர்திகள்

(இ) குளிர்பதனிகள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் காணொலி பதிவுக் கருவிகள் (VCR)

ஒப்பளிப்பு / அனுமதி வேண்டி அரசுப் பணியாளரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தினை உரிய அதிகாரியானவர், அவ்விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத கால அளவுக்குள் தீர்வு செய்ய வேண்டும். விளக்கங்கள் அல்லது விவரங்கள் எவையேனும் அரசுப் பணியாளரிடம் கேட்கப்பட்டிருந்தால், மேற்கூறப்பட்ட ஆறு திங்கள் கால அளவென்பது கேட்கப்பட்ட விளக்கங்கள் அல்லது விவரங்கள் பெறப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும். அவ்வாறான ஒப்பளிப்பு அல்லது அனுமதி அளிப்பு ஆணை எதுவும் மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாத கால அளவுக்குள் அளிக்கப்படவில்லையெனில், மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாத கால அளவு முடிந்தவுடன் உரிய அதிகாரி தனது ஒப்பளிப்பினை வழங்கியதாக அல்லது அனுமதியளித்ததாக கருதி, இடம் பெயராச் சொத்தினை பெறலாம் அல்லது விற்பனை செய்யலாம். இடம் பெயர் சொத்தினை வாங்கலாம் அல்லது விற்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான/ விரிவாக்கப் பணியினை தொடங்கலாம்.

அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் பின்வருவன தொடர்பில் முழுமையான விவரங்களுடன் 31.12.1980ஆம் நாளன்று உள்ளவாறான சொத்துகள், கடன் பொறுப்புகள் குறித்த விவர அறிக்கையினை 31.3.1981 ஆம் நாளன்றோ அதற்கு முன்போ அளிப்பதுடன் அதன் பிறகு ஐந்தாண்டுகளுக்கொருமுறை, அவ்வறிக்கைக்குத் தொடர்புடைய ஆண்டுக்கு மறு ஆண்டு மார்ச் மாதம், 31-ஆம் நாளன்றோ அதற்கு முன்போ அளிக்க வேண்டும்.

(அ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது அடையப்பெற்ற அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தமது பொறுப்பிலுள்ள, தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள இடம் பெயராச் சொத்து.

(ஆ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது இதே போன்று சொந்தமான, அடையப்பெற்ற அல்லது தம் வசமுள்ள பங்குகள், கடனீட்டு ஆவணங்கள் மற்றும் வங்கி வைப்புகள் உட்பட ரொக்கம்.

(இ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது இதே போன்று சொந்தமான, பெறப்பட்ட அல்லது தம் வசமுள்ள பிற இடம் பெயர் சொத்து.

(ஈ) நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தம்மால் ஏற்பட்ட கடன்கள் மற்றும் பிற கடன் பொறுப்புகள்.

மேலும், அரசுப்பணியாளர் ஒவ்வொருவரும் தாம் எந்தவொரு பணிக்கேனும் அல்லது பணியிடத்திற்கேனும் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் தாம் பணியில் சேர்ந்த காலத்தில் தமக்கிருந்த சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை மேற்கண்ட படிவங்களில் அளிக்க வேண்டும். அதன் பின்னர் மேலே குறிப்பிடப்பட்டவாறு, தமது முதல் நியமனத்தின்போது தமது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவர அறிக்கை அளிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் முடிவடையாத நிலையிலும் காலமுறைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் விவர அறிக்கையை அளிக்க வேண்டும்.

இருப்பினும், அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் ஐந்தாண்டுகள் இடைவெளிகளில், ஆண்டுதோறுமான தன்னுடைய சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை அளித்த பின்னர், தன்னுடைய வயது முதிர்வு ஓய்வு நாளுக்கு முந்தைய கடந்த ஐந்தாண்டுகளுக்கான தன்னுடைய ஆண்டுதோறுமான சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை உரிய அதிகாரிக்கு அளித்தல் வேண்டும்.

இருப்பினும், உரிய அதிகாரியானவர், அரசுப் பணியாளர்களிடமிருந்து அத்தகைய அறிக்கைகள் பெறப்பட்ட நாளிலிருந்து இரு மாதத்திற்குள், அவர்களுடைய சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய முந்தைய விவர அறிக்கை நாளுக்கு பிறகு அனுமதியளிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை மறு ஆய்வு செய்து நேர்வுக்கேற்ப முந்தைய ஐந்தாண்டுகளில்/ ஆண்டுதோறும் அளிக்கப்பட்ட அறிக்கைகளுடன் அவை ஒத்திசைவாக உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும். [(அரசாணை எண்.149. ப (ம) நி.சீ.துறை நாள்.15.3.1996 (Added vide G.O.Ms.No.149, P&AR (A) Dept., dt.15.3.96)இல் சேர்க்கப்பட்டது)]

எடுத்துக்காட்டு: 1980 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25ஆம் நாளன்று பணியில் சேர்ந்தவர். தமது முதல் நியமன நாளன்று உள்ளபடியான தமது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவர அறிக்கையினை 25.4.1980-க்கு முன்னர் அளிக்க வேண்டும். அதன் பின்னர் அறிக்கைகளை 31.12.1980, 31.12.1985, 31.12.1990 நாளின்படியான சொத்துக்கள், பொறுப்புகள் ஆகியவற்றுக்கான விவர அறிக்கையினை 31.3.1981, 31.3.1986, 31.3.1991 ஆம் நாளன்றோ அவ்வாறே தொடர்ந்து அளிக்க வேண்டும்.

விளக்கம்:- எல்லா அறிக்கைகளிலும் ரூ.50,000/-க்குக் குறைந்த விலை மதிப்புடைய இடம் பெயர் சொத்துகளின் மதிப்புத் தொகையாவும் ஒன்றாகக் கூட்டப்பட்டு ஒட்டுமொத்தத் தொகையாகக் காண்பிக்கப்பட வேண்டும். துணிகள், பாத்திரங்கள், மண்பாண்டங்கள், புத்தகங்கள் முதலிய அன்றாடப் பயன்பாட்டிற்குரிய பொருள்களின் விலை மதிப்புகள் அவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. அரசு பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த ஆதாரங்களின் மூலம் இடம் பெற்ற இடம் பெயர் மற்றும் இடம் பெயராச் சொத்துகளின் விவரங்கள் இவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. [ (அரசாணை எண். 39 ப(ம) நி.சீ. துறை நாள். 09.03.2010), அரசாணை எண். 409 ப(ம) நி.சீ. துறை நாள். 14.12.1992)]

(3A) உள்விதி (3)-இல் குறிப்பிடப்பட்டுள்ள இவ்விவர அறிக்கையினை மறைவடக்க ஆவணமாகக் (secret document) கொள்ள வேண்டும். 10-ஆவது விதியின் காப்புரைகள் இயன்றவரையில் இவ்விவர அறிக்கைக்கும் பொருந்தும்.

(4)அரசு மற்றும் ஆவணக்குழு எதுவும் அல்லது இதன்பொருட்டு அவற்றால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள அலுவலர் எவரும் அல்லது உரிய அதிகாரி ஒருவர் அரசு பணியாளர் அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர் எவரும் உடைமையாகக் கொண்டிருக்கும் அல்லது தேடிக் கொண்டிருக்கும் இடம் பெயர் அல்லது இடம் பெயராச் சொத்துப் பற்றிய அனைத்து முழு அறிக்கையினை ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ள கால அளவுக்குள் அளிக்குமாறு எத்தருணத்திலும் பொது அல்லது சிறப்பு ஆணை மூலம், கேட்டுக் கொள்ளலாம். அரசால் அல்லது ஆணைக்குழுவால் அல்லது இதன்பொருட்டு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அலுவலரால் அல்லது உரிய அதிகாரியால் வேண்டப்பட்டால் அச்சொத்து அடையப் பெற்றமைக்குரிய வழிவகை அல்லது ஆதாரம் பற்றி விவரம் அவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்;.

மேலும், குறிப்பிட்ட ஊழல் விசாரணை ஒன்றுக்கு சொத்து விவர அறிக்கை தேவைப்பட்டால் உரிய அதிகாரி, அதனைப் பெற உள்விதியின் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.

(5) (அ) இவ்விதியின் நோக்கங்களுக்காக ‘உரிய அதிகாரி” எனப்படுவர்.

(i) துறைத்தலைவர் நேர்வில் ‘அரசு’

(ii) (அ) மாவட்ட ஆட்சியர் அனைவரும்.

(ஆ) மாவட்ட நீதிபதிகள்

(இ) மாவட்டக் குற்றவியல் நீதிபதிகள்

(ஈ) சென்னை மாநகர் உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி

(உ) தலைமை நீதிபதி, சிறுவழக்குகள் நீதிமன்றம், சென்னை.

(ஊ) மாநகர முதன்மை நீதிபதி, சென்னை

(எ) தங்கள் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ‘இ” மற்றும் ‘ஈ” பிரிவைச் சார்ந்த அரசு பணியாளர்களை பொறுத்தவரையில் மாநகரிலுள்ள (அலுவல் முறையிலான ஒப்படை பெற்றவர் நீங்கலாக) சட்ட அலுவலர்கள் அனைவரும்.

(iii) மாவட்டங்களிலுள்ள நில அளவை மற்றும் பதிவுருக்கள் துறையிலுள்ள பின்வரும் பணியிட வகைகளைப் பொறுத்தவரையில் மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும், சென்னையிலுள்ள துத்தநாகத் தகடச்சு நிறழ்பட அச்சகம் உள்பட நில அளவை மற்றும் பதிவுருக்கள் இணை இளநிலை இயக்குநர் அலுவலகங்கள் மற்றம் மைய நில அளவை அலுவலகத்திலுள்ள மேற்குறிப்பட்ட வகைகளைப் பொறுத்தவரையில் நில அளவை மற்றம் நிலவரித் திட்ட இயக்குநர்.

1. இளநிலை வரைஞர்கள், நிலைகள் - I மற்றும் II

2. நில அளவர்கள்

3. துணைஅளவர்கள்

4. இளநிலை உதவியாளர்கள்

5. உதவியாளர்கள்

(iv) மற்ற நேர்வுகளில் தொடர்புடைய துறைத் தலைவர்

இருப்பினும் துறைத்தலைவர், தாம் பொருத்தமெனக் கருதுகின்ற காப்பு அதிகாரங்களைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, இவ்விதியின் கீழ் அமைந்த தன்னுடைய அதிகாரங்களை தமது துறையிலுள்ள இரண்டாம் நிலை அலுவலர்களுள் ஒருவரிடம் ஒப்படைக்கலாம்.

(ஆ) அயல் பணிக்கு அல்லது வேறு ஏதேனும் அரசுப் பணிக்கு வேற்றுப்பணி முறையில் அனுப்பப்பட்டுள்ள அரசுப் பணியாளரைப் பொருத்தவரையில் உரிய அதிகாரி என்பது அவ்வரசுப் பணியாளர் முன்னர் பணியாற்றிய தாய்த்துறையை குறிப்பிடுவதாகும்.

(6) அரசுப்பணியாளர் தாம் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள இடம் பெயராச் சொத்துக்கு மரபுரிமை, வழியுரிமை அல்லது விருப்ப ஆவணம் வாயிலாக உரிமை பெறுமிடத்து அல்லது இவ்வதியில் கருதப்படுகின்றவாறு அந்த இடம் பெயராச் சொத்தில் சட்டப்படி உரிமைகொள்ளுமிடத்து அவர் அது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வழக்கமான வழிமுறையில் உரிய அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

(7) நீக்கப்பட்டது (அரசாணை நிலை எண். 638, பணியாளர் (ம) நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை (பணி.அ) நாள். 16.5.1980.)

(8) அரசுப் பணியாளர் தமது உடைமையாக உள்ள அல்லது தாம் சட்டப்படி உரிமை கொண்டுள்ள இடம் பெயராச் சொத்து அமைந்துள்ள மாவட்டத்திற்கு மாறுதல் பெறுமிடத்து அவர் அவ்விவரத்தினைத் தன்னுடைய உடனடி மேலுள்ளவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

(9) பணியாளர்களின் மந்தணக் கோப்புகளையும் (Personal files) பதிவுருத் தாள்களையும் பராமரிக்கும் அலுவலர், தமது நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து அரசுப் பணியாளர்கள் குறித்து பிரிவு வாரியாக பதிவேடுகளைப் பராமரிக்கவேண்டும். அப்பதிவெடுகளில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள இடம் பெயராச் சொத்துக்களின் விவரங்களைப் பதிவு செய்வதுடன் துணை விதி (3)-இல் குறிப்பிட்டவாறு அரசு பணியாளரால் அடுத்தடுத்து அளிக்கப்படும் விவர அறிக்கைகளின்படி அப்பதிவேட்டிலுள்ள பதிவுகளைத் தக்கவாறு திருத்திக் கொள்ளவும் வேண்டும்.

(10) அறிக்கைகளில் தவறான வழிகாட்டும் எந்த முயற்சியும் முழுமையான மற்றும் சரியான தகவல்தருவதில் எந்த தவறுகையும், தொடர்புடைய அரசு பணியாளரைக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தும்.

(11) வருவாய்த் தண்டல் அல்லது நீதி நிர்வாகப் பணியிலுள்ள அல்லது அதற்கு தொடர்புடையவருக்கு எந்த வணிக நோக்கத்திற்கும் இந்தியாவின் எப்பகுதியிலும் நிலம் வாங்குவதற்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

(12) இடம் பெயராச் சொத்தினைக் கையகப்படுத்துதலுக்கும் உடமையாகக் கொள்ளுதலுக்கும் உரிய வரையறைகள், அச்சொத்தின் மீதான எந்த ஒரு உரிமைக்கும் மற்றும் வேறொருவர் பெயரில் அரசுப் பணியாளர் அச்சொத்தினைக் கையகப்படுத்தி உடைமையாக்கிக் கொள்ளுதலுக்கும் பொருந்தும். ஆனால் அவை பொறுப்பாட்சியாக நிறைவேற்றுவராக, நிர்வாகியாக அச்சொத்தினைக் கையகப்படுத்துதலுக்கு அல்லது உரிமையாக்கிக கொள்ளுதலுக்குப் பொருந்தாது.

(13) வருவாய் வாரிய நிலை ஆணைகளுக்கு இணக்கமில்லாமல் அரசு நிலம் எதுவும் நிலையாகவோ தற்காலிகமாகவோ பணிக்கமர்த்தப்பட்டுள்ள அரசுப் பணியாளர் எவருக்கும் விற்கப்படவோ குத்தகைக்கு விடப்படவோ கூடாது.

(14) (அ) அரசுப் பணியாளர், தாம் பணியாற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டினை வாங்கும் நோக்கத்திற்காக அன்றி வேறெந்த நோக்கத்திற்காகவும் நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டார். அம்மாவட்டத்திலிருந்து அவர் மாற்றப்பட்ட பின்னரும், அவருடைய பணி மாற்றல் நாளிலிருந்து ஈராண்டுகள் வரை, அம்மாவட்டத்தில் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டினை வாங்கும் நோக்கத்திற்காக அன்றி பிற நோக்கங்களுக்காக நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அவர் அனுமதிக்கப்படமாட்டார்.

இருப்பினும் உள் விதி (1)-இன் பிரிவுக்கூறு (அ)க்குட்பட்டு, அரசுப்பணியாளர் தாம் பணிபுரியும் அல்லது பணிபுரிந்த வருவாய் மாவட்டத்தில் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டை வாங்கலாம்.

(ஆ) பொதுவாக, அரசு பணியாளர் தாம் பணிபுரியும் வருவாய் மாவட்டத்திற்கு வெளியே இடம் பெயராச் சொத்தினை உடைமையாக்கிக்கொள்ள அனுமதிக்கப்படலாம். ஆனால், அந்த இடம் பெயராச் சொத்தினை உடைமையாகக் கொண்டுள்ள மாவட்டத்திற்கு அரசுப் பணியாளர் மாற்றப்படுகையில் உள் விதி (17)-இல் கோரியுள்ள அறிக்கையை அளித்தவுடன் உரிய அதிகாரி அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்றுவார்.

இருப்பினும் ஒரு வருவாய் மாவட்டத்திலிருந்து மற்றொரு வருவாய் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட அரசு பணியாளர், அவர் எந்த வருவாய் மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டாரோ அந்த வருவாய் மாவட்டத்திற்குள், அவருடைய மாற்றல் நாளிலிருந்து ஈராண்டுகள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் வீட்டுமனை அல்லது கட்டப்பட்ட வீடு அல்லாத வேறு நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்.

(இ) வருவாய் வாரியமும், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள துறைத் தலைவர்களும், அரசுப்பணியாளர் மாற்றப்பட்டுள்ள மாவட்டத்தில் அவருக்குரிய இடம் பெயராச் சொத்தினை தக்கவைத்துக் கொள்வதற்கு, அத்துறை தலைவர்களால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதிகளின் நேர்வுகள் பற்றி ஒவ்வோராண்டும் மார்ச் 31-ஆம் நாளுக்குள் அரசுக்கு ஆண்டு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.

இதே போன்ற ஒப்பளிப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்ட சார்நிலை அலுவலர்களாலும் இவ்வறிக்கைகள் வருவாய் வாரியத்திற்கு அல்லது துறைத்தலைவர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

வருவாய் வாரியத்தாலும்; துறைத்தலைவர்களாலும் அனுப்பப்படும் இவ்வறிக்கைகளில், அவர்களுக்குச் சார்நிலையிலுள்ள அலுவலர்கள் தீர்வு செய்த நேர்வுகளைக் குறிப்பிட வேண்டியதில்லை.

(ஈ) கூறுகள் (அ), (ஆ) மற்றும் (இ) இல் உள்ள ‘வருவாய் மாவட்டம்” மற்றும் ‘மாவட்டம்” எனும் சொற்றாடரானது.

(i) பதிவுத்துறையிலுள்ள துணைப்பதிவாளர்கள், எழுத்தர்கள், பதிவுரு எழுத்தர்கள், அடிப்படை அரசுப் பணியாளர்கள் ஆகியோரைப் பொறுத்தவரையில் ‘பதிவுத்துணை மாவட்டம்” என்றும் பதிவுத் துறையிலுள்ள மாவட்ட பதிவாளர்களைப் பொறுத்தவரையில் ‘பதிவு மாவட்டம்” என்றும்,

(ii) ஆயத்துறை அல்லது மதுவிலக்குத் துறையின் தடுப்புக் கிளைகளிலுள்ள துணை ஆய்வாளர்களைப் பொறுத்தவரையில் ‘ஆயத்துறை அல்லது மதுவிலக்கு வட்டம்” என்றும்,

(iii) தமிழ்நாடு பொது சார்நிலைப் பணித் தொகுதி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணித் தொகுதிப் பணி உறுப்பினர்களல்லாத பொதுப்பணித்துறை சார்நிலைப் பணி உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் ‘பொதுப்பணித்துறை உட்கோட்டம்’  என்றும்,

(iv) தமிழ்நாடு வனப்பணித் தொகுதி மற்றும் தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணிப் தொகுதி உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் ‘வனக்கோட்டம்” என்றும் பொருள்படும்.

(உ) (அ) முதல் (ஈ) வரையிலான பிரிவுக்கூறுகளில் இடம்பெறாத எதுவும், 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி வாரியச் சட்டம் (1961ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 17) அல்லது மேற்குறிப்பிடப்பட்ட வாரியத்தால் நிறுவப்பட்ட எந்தவொரு வீட்டுவசதிப் பிரிவு அல்லது 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்சங்கங்கள் சட்டத்தின் கீழ் (1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 53) பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட சங்கம் வாயிலாக கையகப்படுத்தப்பட்ட வீட்டுமனைகள் உள்ளிட்ட நிலத்திற்கு பொருந்தாது.

(ஊ) குறிப்பிட்ட சொத்தானது அரசுப் பணியாளரால் கட்டப்பட்ட அல்லது மரபுரிமையாகப் பெறப்பட்ட வீடாக இருப்பின், பிரிவுக்கூறு (ஆ)-இல் உள்ள எதற்கும் பொருந்தாது.

(15) மருமக்கள் தாயம் அல்லது அளிய சந்தான சட்டத்தினால் முறைப்படுத்தப்படும் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அக்குடும்பத்தின் சார்பில் மேலாண் உறுப்பினரால் இடம் பெயராச் சொத்து வாங்கப்படுகையில், பொதுவாக இளநிலை உறுப்பினராக உள்ள அரசுபணியாளர், இதற்கான அனுமதியினைப் பெற தேவையில்லை. ஆனால் கையகப்படுத்துகை ஏதேனும் கர்ணவான் அல்லது எஜமான் பெயரில் செய்யப்பட்டிருந்து உள்ளபடியே அது அவ்வரசுப்பணியாளரின் சொந்தக் சொத்தாகக் கருத இடமளிக்கப்பட்டால் அது தொடர்பில் இவ்விலக்கு பொருந்தாது.

(16) வருவாய் அல்லது நீதித்துறையில் அரசுப் பணியாளர், அரசின் அனுமதியின்றி தாம் அப்போதைக்குப் பணியாற்றும் மாவட்டத்தில் அரசுக்கு சேர வேண்டி நிலுவைகள் காரணமாக அல்லது நீதிமன்றஆணைகளின்படி விறப்னைக்குரிய இடம் பெயர் அல்லது இடம் பெயராச் சொத்து எதனையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்குதல் இதன்மூலம் தடை செய்யப்படுகிறது.

(17) அரசுப் பணியாளர் தன்னுடைய சொந்த கணக்கில் அல்லது பொறுப்பாட்சியர் நிறைவேற்றுநர் அல்லது நிருவாகி அல்லது கோயில் மிராசுதாரர் எனும் முறையில் உடைமையாகக் கொள்ளப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட அல்லது அவரது மனைவி அல்லது அவருடனுள்ள குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் அல்லது எவ்வகையிலேனும் அவரைச் சார்ந்தவராக உள்ள எவரேனும் ஒருவர் பெயரி; உரிமையாக் கொள்ளப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ல்லத அவர்களால் மேலாண்மை செய்யப்படும் இடம் பெயராச் சொத்து விவரம் அனைத்தும் ஆண்டு விவர அளிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும். மருமக்கள் தாயம் அல்லது அளிய சந்தானம் சட்டத்தைப் பின்பற்றும் அரசுப் பணியாளர் நேர்வில் அவரது வாழ்க்தை; துணைவரால் உடைமையாக கொள்ளப்பட்ட இடம் பெயராச் சொத்தானது விவர அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆதாரம் : சட்டம் மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate