অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அனைவருக்கும் கல்வி இயக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம்

அறிமுகம்

அனைவருக்கும் கல்வித் திட்டம் அனைவருக்கும் தரமான கல்வியை தரும் நோக்கத்தில் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்தான் இத்திட்டம் நன்றாக வெற்றி நடை போடுகிறது. திருநெல்வேலி மாவட்டமும் இத்திட்டத்தில் சிறந்த வெற்றி கண்டுள்ளது. இம்மாவட்டம் தொடக்கக்கல்வி முதல் கல்லூரி கல்வி வரை சிறந்ததொரு கல்விக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது. அனைவருக்கும் கல்வித்திட்டம் 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து பள்ளி வயது குழந்தைகளுக்கும் தரமான கல்வியை உறுதி செய்கிறது.

மாவட்ட நிர்வாக அமைப்பு

மாவட்ட நிர்வாக அமைப்பானது கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், மற்றும் அவருக்கு உதவியாக உதவி திட்ட அலுவலர் ஆகியோரைக் கொண்டுள்ளது. மாவட்டம் 21 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு வட்டார வளமையம் மேற்பார்வையாளர் தலைமையின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டார வளமையங்களிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கற்றல் கற்பித்தல் முறையில் மாற்றங்களை செயல்படுத்துவதிலும், மாணவர்களின் தரத்தை முன்னேற்றுவதிலும், பாடக்கருத்துருக்களை வலுவூட்டுவதிலும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர்களுக்கு உதவி புரிகின்றனர்.

தொலைபேசி எண்கள்

அலுவலரின் பெயர்

தொலைபேசி எண்

கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்

9788859059

மாவட்ட திட்ட அலுவலர்

0462-2502223

உதவி திட்ட அலுவலர்

9788859060

புள்ளியியல் அலுவலர்

9788859061

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – பயிற்சி

9788859064

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – OSC

9788859066

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – UDISE

9788859065

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – QMT

9788859067

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – IED

9788859063

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – CIVIL

9788859087

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – MDO

9788859062

கணக்கு மற்றும் தணிக்கை மேளாலர் – AAM

9788859068

அணுகுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 3159 குடியிருப்பு பகுதிகளில் 3127 குடியிருப்பு பகுதிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் தொடக்கக்கல்வி கிடைக்கிறது. மீதமுள்ள 32 குடியிருப்பு பகுதிகள் 1 கி.மீ. தொலைவிற்கு தொடக்கக்கல்வி கற்க வசதி இன்றியும், 37 குடியிருப்பு பகுதிகள் 3 கி.மீ. தொலைவிற்கு உயர் தொடக்கக்கல்வி கற்க வசதியின்றியும் இருப்பது புவிசார் தகவல் முறை வரைபடம் மூலம் கண்டறியப்பட்டு அனைத்து குடியிருப்புகளுக்கும் பள்ளி வசதி கிடைக்க உறுதி செய்யப்படுகிறது.

வாகன வசதி

அருகாமையில் பள்ளி வசதியில்லாக் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த குழந்தைகளுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தருதல் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும். அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், மேற்கூறிய குழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளி சென்று வர வாகனவசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. 2017-18ம் ஆண்டில் அருகாமை பள்ளியில்லா 32 குடியிருப்புகளைச் சார்ந்த 522 குழந்தைகளுக்கு வாகனவசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

பள்ளி செல்லாக் குழந்தைகள்

கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் உரிமையாக்கப் பட்டுள்ளது. இருந்த போதிலும், சில குழந்தைகள், வறுமை, பெற்றோர்களின் அறியாமை, புலம்பெயர்வு, பெற்றோர்களின் மறைவு, கற்றலில் விருப்பமின்மை போன்ற காரணங்களினால் பள்ளி செல்லாமல் இடையில் நின்று விடுகின்றனர். இடைநின்ற இக்குழந்தைகள் கண்டறியப்பட்டு இணைப்பு பயிற்சி மையம், உண்டு உறைவிட பயிற்சி மையம் மற்றும் குழந்தை தொழிலாளர் பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு வயதுக்கேற்ற கல்வி மற்றும் கல்வி சார்ந்த திறன்கள் மேம்பட பயிற்சி அளிக்கப்படுகிறது.

2017-18ம் கல்வியாண்டில் 43 இணைப்பு பயிற்சி மையங்கள் தலைமையாசியரின் கண்காணிப்பில் பள்ளி வளாகத்திலேயே நடைபெறுகின்றன. இக்குழந்தைகள் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டு வயதிற்கேற்ற அறிவை பெறும் வண்ணம் கல்வி தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இவ்விணைப்பு பயிற்சி மையம் மூலம் 803 குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

பிற மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு இணைப்பு பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. இம்மையங்களில் ஹிந்தி பேசும் குழந்தைகள் சேர்க்கப்பட்டு ஹிந்தி பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஹிந்தி கற்பித்தலில் அனுபவமுள்ள கல்வி தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு கற்பித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள மூலம் 3 உண்டு உறைவிட பயிற்சி மையங்கள் நடைபெற்று வருகின்றன. இவ் உண்டு உறைவிட பயிற்சி மையங்கள் மூலம் புலம் பெயர்வு தொழிலாளர்களின் குழந்தைகள், வறுமைக் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் ஆகியோருக்கு உணவு, உடை மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய கல்வி வழங்கப்படுகிறது. இம்மையங்களில் 159 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி

அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத் திறன் குழந்தைகள் மேல் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாற்றுத்திறன் குழந்தைகளும் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். தொடக்கக் கல்வி பதிவேடு, மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு, அங்கன்வாடி மைய பதிவேடு மூலம் இக்குழந்தைகள் கண்டறியப்படுகின்றனர். விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரம் மூலம் பொதுமக்களுக்கு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்குள்ள வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாற்றுத் திறனாளி குழந்தைகளின் தேவையை கண்டறியும் பொருட்டு, மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. மருத்துவ முகாம் மூலம் அடையாள அட்டை, தேவையான உபகரணங்கள், மற்றும் தேவையான குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறன் குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பாசியர்கள், இயன்முறை மருத்துவர் மூலம் சைகைமொழி, தசை பயிற்சி, பிரெய்லி பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பள்ளி செல்ல இயலாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக மாவட்டத்தில் 21 பகல் நேர பாதுகாப்பு பயிற்சி மையங்கள் செயல்படுகிறது, இக்குழுந்தைகள் மையத்திற்கு வருவதற்கு வாகனவசதியும், சத்தான உணவு, உதவி உபகரணம் மூலம் பயிற்சி மற்றும் சிறப்பு கவனமும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒவ்வொரு வட்டார வளமையத்திலும் ஒரு ஆதார வளமையம் செயல்பட்டு வருகிறது. அதில் சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் மூலம் உதவி உபகரணங்களைக் கொண்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

வீட்டிலிருந்து வெளிவர இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பாசியர்கள் வீட்டிற்கேச் சென்று அடிப்படை செயல்பாடுகளான உணவு உண்ணுதல், ஆடை அணிதல், கழிவறை பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி வழங்குகின்றனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளை கல்வி கற்க வைப்பதற்காகவும், தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டும் வாகன வசதி மற்றும் பாதுகாவலர் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது.

கட்டிடப் பணிகள்

அனைவருக்கும் கல்வி இயக்கம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவு செய்கிறது. தேவையின் அடிப்படையில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரப்படுகிறது. பள்ளிகளுக்கு தேவையான கழிவறை வசதிகள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகின்றன. கட்டிடப்பணிகள் கட்டிட பொறியாளரால் கண்காணிக்கப்படுகின்றன.

புதிய அணுகுமுறையிலான கல்வி

மாணவிகளுக்கான தற்காப்புக்கலை பயிற்சி

நமது மாவட்டத்தில் மாணவிகள் தங்களை ஆபத்திலிந்து பாதுகாக்கும் வண்ணம் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து வட்டார வளமையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பள்ளிகளில் மாணவியருக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 2000 மாணவிகள் பயன் பெற்றனர்.

அறிவியல் மையத்திற்கு களப்பயணம்

வளரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மாணவர் அறிவு மேம்படும் வண்ணம் மாவட்ட அறிவியல் மையத்திற்கு மாணவிகள் களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், சிறுபான்மையினர், நகர்புற நலிவடைந்த பிரிவினர் ஆகியவற்றைச் சார்ந்த 2000 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்ட செயல்பாடு

மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித கற்றலை மகிழ்ச்சியான கற்றலாக அமைப்பதற்காக இத்திட்டம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குறுவளமைய அளவில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டது. குறுவள மைய அளவில் சிறந்த மூன்று மாதிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த பள்ளிக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், உயர்தொடக்க வகுப்பு உள்ள பள்ளிகளில் “Techno Club ” என்ற அமைப்பை நிறுவி அதன் வாயிலாக மாணவர்களுகு கணினி வழிக் கற்றல் பயிற்சி வழங்கப்பட்டது. குறுவளமைய மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

மானியம்

ஆண்டு தோறும் பள்ளிக்கு பள்ளி மற்றும் பராமிப்பு மானியம் வழங்கப்படுகிறது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி மானியமும், அரசு பள்ளிகளுக்கு பள்ளி பராமிப்பு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

கணிணி வழிக்கல்வி

தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மூலம் கற்றலை மேம்படுத்தும் பொருட்டு கணிணி வழிக்கற்றல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பல அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் இம்மையம் செயல்பட்டு வருகிறது. இக்கணிணி வழி கற்றல் மையங்களில் புரொஜக்டர், குறுந்தகடுகள் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழி விளையாட்டுகள் கற்பிக்கப்படுகிறது. இக்கணிணி வழிக் கற்றல் மையங்கள் மாணவர்களை தகவல் தொழில்நுட்பத்தில் வல்லமை மிக்கவர்களாக மாற்றுகிறது.

ஆசிரியர்களுக்கான பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முக்கிய கூறாக ஆசிரியர்களுக்கான பயிற்சி விளங்குகிறது. ஆண்டு தோறும் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பாடப் பொருளை வளப்படுத்துதல், புதிய கற்றல் கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகள் பயிற்சி போன்றவற்றில் பணியிடை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப் பயிற்சியின் முக்கிய நோக்கம் தரமான கல்வியை வழங்குதல் ஆகும்.

தரமான கல்விக்கான செயல்முறைகள்

எளிய செயல்வழிக்கற்றல் முறை

இது குழந்தைமைய கல்விமுறை. குழந்தைகள் சிறுசிறு செயல்பாடுகள் மூலம் சுதந்திரமான சூழலில் மகிழ்வுடன் கற்கின்றனர்.

படைப்பாற்றல் கல்வி முறை

உயர் தொடக்க வகுப்புகளிலும் படைப்பாற்றல் கல்வி முறை பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் மாணவர்கள் எளிதாக தாமே கற்பதோடு அவர்களின் படைப்பாற்றல் திறனும் வளர்கிறது.

துணைப்பாட புத்தகங்கள் (புத்தக பூங்கொத்து)

பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் மற்றும் ஆங்கில புத்தக பூங்கொத்து புத்தகங்கள் மூலம் மாணவர்களின் வாசிக்கும் பழக்கம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அறிவியல் உபகரண பெட்டி

அறிவியல் உபகரண பெட்டி மூலம் ஆசிரியர்கள் செய்து காண்பித்து அறிவியல் விதி மற்றும் கருத்துக்களை மாணவர்களுக்கு எளிதாக கற்பிக்கின்றனர்.

அனிமேஷன் குறுந்தகடுகள்

மாணவர்களின் ஆங்கில தகவல் தொடர்புக்கு இந்த குறுந்தகடுகள் ஒரு வலுவுட்டுதல் சாதனமாக செயல்படுகிறது.

வரைபடத்தாள் பயிற்சி புத்தகம்

இப்புத்தகம் நம்நாடு மற்றும் உலக அரசியல் சார்ந்த தகவல்கள், இயற்கை வளங்கள் மற்றம் புவி சார்ந்த விவரங்கள் பற்றிய அறிவை வளப்படுத்துகிறது.

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மூலம் மாணவர்களின் கற்றல் அடைவு மதிப்பிடப்படுகிறது. இம்மதிப்பீட்டின்மூலம் ஆசிரியர்கள் மாணவர்களின் கலைத்திட்டம் சார்ந்த உற்று நோக்குதல் திறன், குழு மனப்பான்மை, பாட மற்றும் பாட இணை செயல்பாடுகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்கின்றனர்.

தேசிய கற்றல் அடைவு சோதனை

2017-18ம் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவிடும் பொருட்டு பள்ளிகளில் 3, 5, மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய அளவிலான கற்றல் அடைவு சோதனை நடைபெற்றது. நமது மாவட்டம் மாநில அளவில் 8வது இடத்தில் உள்ளது.

பள்ளிப் பரிமாற்றம் திட்டம்

மாணவர்கள் தாம் படிக்கும் பள்ளியின் பல்வேறு விவரங்களையும், கற்றல் அனுபவங்களையும், தங்கள் கருத்துக்களையும் பிறபள்ளி மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக கிராமப்புற பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் 20 மாணவர்கள் நகர்புற பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் இணைந்து கற்கும் வகையில் பள்ளி பரிமாற்றம் திட்டம் என்ற புதிய திட்டம் 2017-18ஆம் கல்வியாண்டில் நடைமுறை படுத்தப்பட்டது, இத்திட்டத்தில் 13 கிராமப்புற பள்ளியை சார்ந்த மாணவர்கள் 13 நகர்புற பள்ளியை சார்ந்த மாணவர்களுடன், மாதம் ஒரு முறை அவர்கள் பள்ளிக்கு சென்று, கற்றல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள்

போட்டிகள்

பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்து மாணவ மாணவியர்களிடையே பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் வட்டம் மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.

வண்ண சுவர் சித்திரங்கள்

தொடக்க நிலை வகுப்பு மாணவர்களிடம் ஆங்கில உச்சரிப்புகளை செம்மைப்படுத்திடும் நோக்கத்தில் 84 பள்ளி வகுப்பறைகளில் வண்ண சுவர் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. அப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர்.

தூய்மையான பள்ளிகளுக்கான விருது வழங்கும் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியும் இதற்கென அமைக்கப்பட்ட இணையதளத்தில் தங்கள் பள்ளி குறித்த சுய விவரங்களை ஆறு செயற்களங்களில் பதிவேற்றம் செய்தனர். இப்பள்ளிகள் மாவட்ட குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் மாநில குழுவினால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : https://tirunelveli.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate