অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

காவல்துறையின் இ-சேவை

காவல்துறையின் இ-சேவை

அறிமுகம்

'காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை’ என்ற ஒரு புதிய இணைய வழி சேவையினை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பின்வரும் சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

  1. தனிநபர் விவரம் சரிபார்ப்பு
  2. வேலை நிமித்தமான சரிபார்ப்பு
  3. வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு
  4. வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு

மேற்படி சேவையினைப் பயன்படுத்துவதற்காக தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500 மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒருமுறையினைப் பயன்படுத்தி மேற்படி கட்டணத் தொகையினை செலுத்தலாம்.

நோக்கம்

காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் என்னவெனில், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபர் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், மேற்படி நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும்.

செயல்படும் முறை

விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் காவல் முன் நடத்தை சரிபார்ப்புப் பணி முடிக்கப்படும். காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவைக்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். காவல் சரிபார்ப்பு அறிக்கையிலுள்ள QR குறியீட்டினை (QR CODE) ஸ்கேன் செய்தும் அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள சரிபார்ப்பு (verify) என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

PVR எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். இச்சேவை தொடர்பாக எழும் வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளை FAQs தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

மேற்படி சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னூட்டம் (Feedback) என்ற பகுதியினைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர் இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம். மேற்படி பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாநகர ஆணையருக்கு மற்றும் சென்னை மாநகர நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர்-2 ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.

விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் மேற்படி விண்ணப்பமானது நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. மேலும், காவல் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டணைக்குரிய குற்றமாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு காவல் துறை

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate