தகவல் தொலைத் தொடர்பு சார்ந்த தேசிய மின் ஆளுமைத் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு மின் ஆளுமை திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது.
வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகள் அனைத்துத் துறைகளிலும் எய்தவேண்டிய இலக்குகளை அதிவிரைவாகவும், துல்லியத்துடனும் மற்றும் எதிர்காலப் பயன்பாட்டிற்கான பெருந்தரவுகளை ஏற்படுத்துவதன் மூலமும் அடைந்திட வழிநடத்துவதோடு அல்லாமல், அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தகுந்த புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பக் கருவிகளைப் புகுத்தி டிஜிட்டல் புரட்சியை உருவாக்கியுள்ள தகவல் தொழில்நுட்பமானது முழுமையான மாற்றத்திற்கான ஒரு தொடர் இயக்கியாகவும் விளங்குகிறது. உலகம் முழுதும் பரவி வரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியானது சமமான வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், புதிய கருவிகள், நடைமுறைகள், வளங்கள், சேவைகள், தயாரிப்புகள், திறன் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்களைச் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் அணுகிடவும் வழிவகுக்கிறது. மேற்கண்ட சூழலில், அதிக வேலைவாய்ப்பு உருவாக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பு, குடிமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குதல் மற்றும் நேரத்தையும் ஆற்றலையும் சேமிப்பதன் மூலம் ஒவ்வொரு நாளையும் மிக வசதியானதாக தகவல் தொழில் நுட்பவியல் துறை திறம்பட மாற்றியுள்ளது.
மாநிலத்தில் உள்ள திறமையான மனித வளத்தைப் பயன்படுத்தி புதிய தகவல் தொழில்நுட்ப முயற்சிகள் மற்றும் மின்னாளுமைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. குடிமக்களுக்கான அரசின் சேவைகளை விரைவாகவும் மற்றும் வெளிப்படையான முறையிலும் வழங்குவதே அரசின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சமூக கைபேசி பகுப்பாய்வு மேகக்கணினியம் (SMAC) ஆகியவை வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகத் திகழும் சூழலில், தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறை, அமையப்பெற்ற தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி விரிவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்காலத் துறைகளான மேகக்கணினியம், இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம், முப்பரிமாண அச்சிடுதல், வங்கி மற்றும் வணிக சேவைகளில் தகவல் தொழில்நுட்பவியல் பயன்பாடுகள், வணிக தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், பல்பொருள் இணையம், மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ESDM), அனிமேஷன் மற்றும் விளையாட்டு, தரவுப் பகுப்பாய்வு, வணிக நுண்ணறிவு மென்பொருள், தரவுக் கிடங்கு மற்றும் தமிழகத்தில் முதலீடுகள் சார்ந்த தரவு மையங்கள் ஆகியவைத் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. தமிழகம் இத்தகைய தற்கால மற்றும் மாறாத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவது, வருங்காலத்தில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமன்றி, சமூக, பொருளாதார நலத்திட்டங்களைத் திறமையுடனும், குறைந்த செலவிலும் மற்றும் வெளிப்படையாகவும் மாநிலக் குடிமக்களுக்கு அளித்திட உதவும்.
ஆதாரம் : தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் துறை
கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020