অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இந்தியப் பத்திரச் சந்தை

இந்தியப் பத்திரச் சந்தை

அறிமுகம்

இந்திய நிதியியல் வழிமுறைகளில் பங்குப்பத்திரச் சந்தை முக்கிய அங்கம் வகிக்கின்றது. பல்வேறு விதமான பத்திரங்களை இந்தச் சந்தையில் வியாபாரம் செய்யமுடியும். முதலீட்டாளர்கள் பங்காதாயம் எனும் லாப ஈவு, வட்டி, மற்றும் முதலீட்டின் மதிப்புக்கூடுதல் போன்ற நோக்கங்களை மனத்தில் கொண்டு இந்தச் சந்தையில் வியாபாரமாகும் பல்வேறு வகையான பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர்.

பத்திர ஆவணங்களின் பொருள்

பத்திரங்கள் ஒப்பந்த (ஒழுங்காற்று) சட்டம் 1956 கீழ்க்கண்டவற்றைப் பத்திர ஆவணங்கள் என அதன் 2(h) பிரிவின் கீழ் வரையறுத்துள்ளது.

  1. பங்குப் பத்திரங்கள், பங்குச்சான்றிதழின் தொகுதி, தொழிலக மற்றும் அரசாங்கக் கடனீட்டுப் பங்குகள், தொழிலகக் கடனீட்டுப்பத்திரங்கள், வருவிக்கப்பட்ட சொத்துகள், பரஸ்பர நிதியகங்களின் கூட்டு முதலீட்டுத் திட்டங்களின் அலகுகள், பத்திர ரசீதுகள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் அளிக்கும் பல்வேறு விதமான திட்டப் பத்திர அலகுகள்
  2. அரசுப் பத்திரங்கள் மற்றும் அரசுப் பத்திரம் என அறிவிக்கும் அத்தனை பத்திரங்களும் மற்றும்
  3. உரிமையான வெளியீடுகள், பத்திரச் சந்தையில் மேற்கண்ட பல்வேறு வகையான நிதிசார்ந்த ஆவணங்கள் வர்த்தகம் செய்யப்படுகின்றது.

பத்திரச்சந்தைகளின் பணிகள்

பத்திரச் சந்தை என்பது அனைத்து விதமான பத்திரங்களையும் வாங்க நினைப்பவரும், விற்க நினைப்பவரும் கூடி வியாபாரம் செய்யும் இடமாகும். இந்தச் சந்தையின் சிறப்பான செயல்பாடு புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுமங்கள் தங்களுக்குத் தேவையான முதலீட்டைத் திரட்ட மிகவும் உதவுவதாக இருக்கும். பணத்தைச் சேமிப்பவர்களிடம் இருந்து அந்தப் பணம் முதலீடாகத் தேவைப்படும் தொழில்களுக்குச் சென்றடைய பத்திரச்சந்தை முக்கிய காரணியாக இருக்கின்றது. வழக்கமாகப் பத்திரச்சந்தைகள் சேமிப்பை முதலீடாக மாற்றி தேவையானவர்களுக்குக் கொண்டு சேர்க்கின்றது என்று சொல்லலாம்.

சேமிப்புதனை சேகரிப்பதன் மூலம் முதலீட்டினை வேகமாக உருவாக்குதல்

போதிய அளவு வருவாய் வீதம் (return) மற்றும் நீர்மத்தன்மை என்ற இரண்டு விதமான நற்செயல்களைச் சேமிப்பவர்களுக்குத் தந்து பங்கு பத்திரச்சந்தைகள் சேமிப்பவர்களை பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தூண்டுகின்றது.

தொழில் வளர்ச்சியை தூண்டுதல்

சேமிப்பவர்களை ஊக்குவித்து பங்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யத்தூண்டுவதன் மூலம் பத்திரச் சந்தைகள் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது. இப்படித் தொழில்கள் வளர்வதால் நாட்டின் பொருளாதாரமும் வளர பத்திரச் சந்தைகள் உதவுகின்றன.

நீண்ட நாள் உபயோகத்திற்கான முதலீட்டைத் திரட்டுதல்

தொழில் நிறுவனங்கள் நீண்ட நாள் தேவைக்காக முதலீட்டாளர்களை அணுகுகின்றன. முதலீட்டாளர்களுக்கோ அவர்களுடைய சேமிப்பு எப்போது வேண்டுமென்றாலும் அவர்களது செலவிற்காகத் தேவைப்படலாம் என்ற நிலை இருக்கின்றது. இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தேவை மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு பத்திரச்சந்தை பெரும்பங்காற்றுகின்றது. பங்குகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட நாள் தேவைக்கான முதலீட்டை அளிக்கின்றார்கள். அதே சமயத்தில் அவர்களுக்குப் பணம் தேவைப்படும் போது பத்திரங்களைப் பத்திரச் சந்தையில் விற்று பணத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். சுலபமாகப் பத்திரங்களை ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைப் பத்திரச்சந்தைகள் அளிப்பதால் மட்டுமே தொழில் நிறுவனங்களின் நீண்ட நாள் தேவைக்கான நிதி சுலபமாகக் கிடைக்கின்றது.

உடனடி மற்றும் தொடர் சந்தை வாய்ப்பு

பங்குப் பத்திரச் சந்தை, விற்பவர்களையும் வாங்குபவர்களையும் சந்திக்க வைத்து அவர்களுக்குத் தேவையான பங்குகளை வாங்கவும் விற்கவும் உதவுகின்ற இடமாக இருக்கின்றது. இப்படி சுலபமாக பங்கு பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்கவும் / விற்கவும் முடிவதால் பங்குப் பத்திர முதலீடுகள் முதலீட்டாளர்களுக்குக் கவர்ச்சிகரமானதாக இருக்கின்றது.

சேமிப்பைச் சரியான இடத்துக்குக் கொண்டு செல்லும் வழி

சிறப்பாகச் செயல்படும் பங்குப் பத்திரச் சந்தைகள் முதலீடுகளுக்குச் சரியான விலை கிடைக்க வழிசெய்வதோடு மட்டுமல்லாமல் சிறப்பாகச் செயல்படும் தொழில்களுக்குத் தேவையான அளவு முதலீடு சரியான நேரத்தில் கிடைக்கவும் வழிவகை செய்கின்றது. சந்தையில் இருக்கும் ஒரு பங்கின் விலையும் அது தற்சமயம் தரும் வருமானமும் (return) மற்ற முதலீட்டாளர்களை அந்த நிறுமத்தில் முதலீடு செய்யத்தூண்டுகின்றது. இப்படி மற்ற முதலீட்டாளர்களைத் தூண்ட உதவுவதால் சரியான தொழில்களுக்கு முதலீடுகள் சென்றடைய பங்குச்சந்தை மிகவும் உதவி செய்கின்றது.

பல்வேறு வகையான சேவைகளையும் தருகின்றது

பங்குப் பத்திரச் சந்தை மற்றும் அந்தச் சந்தையைச் சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு விதமான பின்வரும் சேவைகளையும் முதலீட்டாளர்களுக்கும் நிறுமங்களுக்கும் வழங்கி வருகின்றன:

  • தொழில் நிறுவனங்களுக்குத் தொழிலை நிறுவ, விரிவாக்கம் செய்ய மற்றும் நவீனமயப்படுத்தத் தேவையான நீண்ட கால மற்றும் குறுகிய காலத்திற்கான கடன்களை வழங்குதல்
  • பெரும் தொழில் நிறுவனங்களைத் துவங்குவதற்கு உதவுதல் (ஐடிபிஐ போன்ற தொழில் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வங்கிகள்)
  • பங்கு வெளியீட்டின் போது ஒரு பகுதியை வாங்கிக்கொள்ளுதல்
  • தொழில் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல் போன்ற சேவைகளைத் தருகின்றது.

பங்குப் பத்திரச் சந்தையின் இரு முக்கிய பிரிவுகள்

பத்திரச் சந்தைகள் ஒன்றை ஒன்று சார்ந்த மற்றும் பிரிக்க முடியாத இரண்டு முக்கிய உட்பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது. ஒன்று, முதன்மைச் சந்தை எனப்படும் புதிய பங்குகள் வெளியிட்டுச் சந்தை. மற்றொன்று அவ்வாறு வெளியிடப்பட்ட பங்குகளை விற்று / வாங்க உதவும் இரண்டாம் நிலைச் சந்தை என்ற இரண்டுமே அந்த உட்பிரிவுகளாகும்.

முதன்மைச் சந்தை

நிறுமங்கள் தங்களுடைய புதிய பங்குகளை வெளியீடு செய்ய உதவுவது முதன்மைச் சந்தையாகும். முதன்மைச் சந்தையில் பொது நிறுமங்கள் மற்றும் அரசுடைமையான பொது நிறுமங்கள் பங்கு வெளியீட்டைச் செய்யலாம். முதன்மைச் சந்தையில் வெளியிடப்படும் பொதுப் (மக்களுக்கான) பங்கு வெளியீடுகள் இரண்டு வகையானவை. ஒன்று, நிறுமங்கள் பயன்படுத்தும் தொடக்கப் பொது வெளியீடுகள் (IPO), மற்றொன்று, தனியார் ஒதுக்கு மூலம் முதலீடு திரட்டும் முறை ஆகும். பொதுமக்களில் யார் வேண்டுமென்றாலும் முதலீடு செய்யக்கூடிய வகையிலான பங்கு வெளியீடுகள் பொது வெளியீடு என்று அழைக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு சில நபர்கள் மட்டுமே முதலீடு செய்யலாம் என்று வெளியிடப்படும் பங்கு வெளியீடுகள் தனிப்பட்ட வெளியீடுகள் அல்லது தனியார் ஒதுக்கு என்றழைக்கப்படுகின்றன. பத்திர வெளியீட்டு சந்தையில் இரண்டு முக்கிய பிரிவினர் முதலீடு (நிதி) திரட்டுகின்றார்கள். அவற்றில் ஒன்று பங்கு மற்றும் கடன் பத்திரங்களை வெளியிடும் நிறுமங்களாகும். மற்றொன்று கருவூலச் சீட்டுகள் மற்றும் பிணையங்களை வெளியிடும் மத்திய, மாநில அரசுகளாகும்.

இரண்டாம் நிலைச் சந்தை

முதன்மைச் சந்தையில் வெளியிடப்படும் புதிய பத்திரங்கள்தான் இரண்டாம் நிலைச்சந்தையில் வியாபாரம் செய்யப்படுகின்றன. இரண்டாம் நிலைச் சந்தை என்பது முதன்மைச்சந்தையில் வெளியிடப்பட்ட பத்திரங்களை மறு விற்பனை செய்யும் சந்தையாகும்.

பங்குச் சந்தை இரண்டு விதமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒன்று உடனடிப் பங்குச் சந்தையிலும் மற்றொன்று பங்கு மாற்றகத்திலும் நடக்கும் வியாபாரம் ஆகும். உடனடி பங்குச் சந்தையில் பங்குகள் பிற பொருள்களைப் போல பணத்தை உடனடியாக அளித்து பெறப்படுகின்றன. பொதுவாகப் பெரும்பான்மைக் கடன் பத்திரங்களின் உடனடி சந்தையின் மூலமே நடைபெறுகின்றது. நிறுமங்களின் பங்கு பத்திர வியாபாரத்தில் உடனடியாக விற்பவரிடமிருந்து பங்குகள் வாங்குபவருக்கும், வாங்குபவரிடமிருந்து பணம் விற்பவருக்கும் போய்ச்சேர வேண்டிய உடனடிச் சந்தையின் (spot) கீழ் நடக்கும் வியாபாரமும் இம்முறையின் மூலமே நடக்கின்றது. பங்குப் பத்திர வியாபாரத்தில் அடுத்த பெரும்பான்மை வியாபாரம் பங்கு மாற்றகங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. இந்த வசதியைத்தான் பங்குச் சந்தை என்று வழக்கில் குறிப்பிடுகின்றனர்.

பத்திரங்கள் ஒப்பந்த (ஒழுங்காற்று) சட்டம், 1956இன் கீழ், பங்கு மாற்றகம் என்பது “பங்குப் பத்திரங்களை வாங்குதல் அல்லது விற்பனை செய்தல், அவற்றைச் சீர்படுத்துதல், கட்டுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட பதிவு பெற்ற அல்லது அவ்வாறில்லாத நிறுவனம் அல்லது தனி நபர்களின் அமைப்பு ஆகும்" என வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது.

இந்தியப் பங்கு மாற்றகங்கள் ஒரு முறையான தீர்வு நாளை கடைப்பிடிக்கின்றன. சந்தையில் ஒரு நாளில் (Day=T) நடக்கும் அனைத்து வியாபாரமும் (பங்கு மாற்றத்திற்கான ஒப்பந்தங்கள்) நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட நாள்கள் கழிந்த பின்னர் (T+2Day) தீர்க்கப்படுகின்றது. பங்குத் தீர்வகங்கள் மூலம் பங்குச் சந்தையில் நடக்கும் வர்த்தகம் அனைத்தும் தீர்த்து வைக்கப்படுகின்றது. பங்குத் தீர்வகங்கள் சந்தையில் நடக்கும் எல்லா வியாபாரத்திலும் தான் ஒரு எதிராளியாய் இருந்து கொண்டு தீர்வுகளுக்கு உத்திரவாதம் அளிக்கின்றது.

இரண்டாம் நிலைச் சந்தையின் மற்றொரு மாறுபட்ட உருவம் முன்னோக்கிய சந்தையாகும். அதில் பத்திரங்களைப் பெறுவதும் பணத்தைக் கொடுப்பதும் எதிர்காலத்தில் நடைபெறும். முன்னோக்கிய சந்தையின் ஒரு மாறுபட்ட உருவம்தான் எதிர்கால மற்றும் விருப்ப சந்தைப் பிரிவாகும். தற்சமயம் தேசியப் பங்கு மாற்றகமும், மும்பைப் பங்கு மாற்றகமும் எதிர்கால மற்றும் விருப்பங்கள் சந்தை வசதிகளை வழங்கி வருகின்றது.

பத்திரச் சந்தைகளின் வரலாறு

இந்தியாவில் பங்கு வர்த்தகம் 18ஆம் நூற்றாண்டிலிருந்தே நடைபெற்று வருகின்றது. அந்தக் காலகட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்குகள் மும்பையிலும், கொல்கொத்தாவிலும் வியாபாரம் செய்யப்பட்டுவந்தது. மும்பையில் தரகர்கள் ஒர் ஆலமரத்தின் கீழும், கொல்கொத்தாவில் தரகர்கள் ஒரு வேப்ப மரத்தின் கீழும் கூடி வியாபாரம் செய்து வந்தனர் என்கிறது வரலாற்றுப்பதிவுகள். 1850ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட நிறுமங்களை அமைப்பதற்கான சட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின்னர்தான் வியாபாரம் முழுவீச்சில் நடைபெற ஆரம்பித்தது. 1860இல் வியாபாரம் முழுவீச்சில் நடக்க ஆரம்பித்து முதலீட்டாளர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொள்ள ஆரம்பித்தனர். இந்த சூழ்நிலைதான் தரகர்களை ஒன்றாகச் சேர்த்து இந்தியாவில் முதன்முதலாய் மும்பைப் பங்கு மாற்றகத்தை ஆரம்பிக்கத் தூண்டுகோலாய் அமைந்தது. அதன் பின்னர் 1894இல் ஆமதாபாத் பங்கு மாற்றகமும், 1908இல் கொல்கொத்தா பங்கு மாற்றகமும், 1937இல் சென்னைப் பங்கு மாற்றகமும் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டு வரை 22 பங்கு மாற்றகங்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டன. பங்கு மாற்றகங்கள் மற்றும் பங்கு வர்த்தகத்தை முறைப்படுத்த 1956இல் மத்திய அரசு பத்திரங்கள் ஒப்பந்த (ஒழுங்காற்றுச்) சட்டம் 1956 என்ற சட்டத்தை இயற்றியது.

1960 வரை கொல்கொத்தாப் பங்கு மாற்றகம்தான் இந்தியாவிலேயே பெரிய பங்கு மாற்றகமாகத் திகழ்ந்தது. 1960இன் கடைசியிலிருந்து கொல்கொத்தாப் பங்கு மாற்றகத்தின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்து மும்பைப் பங்கு மாற்றகம் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

1990இன் தொடக்கம் வரை இந்தியாவில் பல மண்டலப் பங்கு மாற்றகங்கள் செயல்பட்டு வந்தன. இவற்றின் செயல்பாடுகளில் பல்வேறு வகையான குறைபாடுகள் இருந்தது. முதலீட்டாளருக்குத் தரகர் என்ன விலையில் பங்குகளை வாங்கினார்/விற்றார்? என்பதை முதலீட்டாளர் தெரிந்துகொள்ள முடியாமலும், முதலீட்டாளரின் கையில் வாங்கிய பங்குகள் வந்து சேரும் நாள், விற்ற பங்கிற்கான பணம் வந்து சேரும் நாள் போன்றவை தெளிவில்லாமலும், இடர்ப்பாட்டு மேலாண்மையில்லாமலும், தரகர்களிடம் மந்தப் போக்கும் நிறைந்ததாய் இந்த மண்டலப் பங்கு மாற்றகங்களின் செயல்பாடுகள் இருந்து வந்தன.

தேசியப் பங்கு மாற்றகத்தின் உதயம்

தேசியப் பங்கு மாற்றகம் மண்டலப் பங்கு மாற்றகங்களில் அப்போதைய முறையில் நிறைந்திருந்த குறைபாடுகளைக் களையவும், வியாபாரம் நடப்பதற்காகப் அதிவேகத்துடன் நடுநிலை நிறுமங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும் நிறுவப்பட்டது. பெரு நகரங்களில் மட்டுமே நிறைந்திருந்த சக்தி வாய்ந்த தரகர்கள் சிலர் பங்குச் சந்தையில் மேலோங்கியிருந்த காலம் அது. உலகத்தரம் வாய்ந்த பங்கு மாற்றக வசதியை முதலீட்டாளர்களுக்குத் தந்து வட்டாரப் பங்கு மாற்றகங்களுக்குப் போட்டியாய் இருப்பதன் மூலம் நடைமுறைச் செயல்பாட்டில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதை தேசியப் பங்கு மாற்றகம் தனக்குத்தானே ஒரு கொள்கை விதியாக வைத்துக்கொண்டு தன்னுடைய செயல்பாட்டை ஆரம்பித்தது. 1992ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, 1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பங்கு மாற்றகமாகச் செயல்படத் தேவையான அனுமதியைப் பெற்று, 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் பின்வரும் குறிக்கோள்களுடன் செயல்பட ஆரம்பித்தது தேசியப் பங்கு மாற்றகம்:

(அ) இந்தியா முழுவதும் அனைத்து வகையான பத்திரங்களின் வர்த்தகத்திற்கான வசதியினை ஏற்படுத்துவது.

(ஆ) சரியானதொரு தகவல்தொடர்பு வலையமைவு வசதியின் மூலம் அனைத்து முதலீட்டாளருக்கும் சரிசமமானதொரு அணுகுமுறையை உறுதி செய்தல்.

(இ) நியாயமான, ஆற்றல் மிக்க மற்றும் வெளிப்படையான செயல்பாட்டினைக்கொண்ட மின்னணு வியாபார முறையை சந்தை வசதியை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது,

(ஈ) குறுகிய தீர்வை சுழற்சிகள் மற்றும் புத்தகப் பதிவுத் தீர்வு முறையை எளிதாக்குதல். (உ) பத்திரச் சந்தைகளின் தற்போதைய பன்னாடு சார்ந்த தர அளவுகளைப் பூர்த்தி செய்தல்.

தேசியப் பங்கு மாற்றகம் மிகவும் குறுகிய காலத்திலேயே மேற்சொன்ன சுய குறிக்கோள்களைப் பூர்த்திசெய்து, இந்தியப் பங்கு மாற்றக வரலாற்றில் பெரியதொரு மாற்றத்தினைக் கொண்டுவந்தது. இன்றைக்கு உலகத்தரம் வாய்ந்த சந்தைக் கட்டுமானத்தினையும், செயல்பாட்டையும் திறமையாக நடத்தி நிர்வகித்து வருகின்றது. தேசியப் பங்கு மாற்றகத்தின் வருகைக்குப் பின்னால் இந்தியப் பங்குச் சந்தை முதலீடு திரட்டுதல் அளவீட்டிலும், பட்டியலிடப்பட்ட நிறுமங்களின் அளவீட்டிலும், பங்குகளின் சந்தை மதிப்பு அளவீட்டிலும், வியாபார எண்ணிக்கை மற்றும் பண ரீதியான அளவீட்டிலும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அளவீட்டிலும் (ஒரு கோடியே இருபது லட்சம் முதலீட்டாளர்கள்), பல்வேறு வகையான பங்குச் சந்தைக் குறியீடுகள் அளவீட்டிலும் அதிவேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. இவையனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததால் முதலீடு செய்வதற்கான செலவுக் குறைவு (தரகுத் தொகை போன்றவை), சந்தையின் திறம்பட்ட வெளிப்படையான செயல்பாடு மற்றும் பங்குச் சந்தையில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் தரகர்கள் மற்றும் நிறுமங்கள் பாதுகாப்பு போன்றவற்றில் வேகமான மற்றும் தீவிரமான அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

பங்குச் சந்தையில் பங்கேற்கும் நபர்கள்

ஒவ்வொரு பொருளாதார அமைப்பிலும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் உள்ளன. அதில் சிலர் வருமானத்தை மிச்சப்படுத்தி சேமிப்பாளர்களாகவும் வேறு சிலர் வருமானப் பற்றாக்குறையால் செலவாளிகளாகவும் இருப்பார்கள். தனிநபர் மற்றும் குடும்பங்கள் பொருளாதாரத்தில் சேமிப்பவர்களாக இருக்கின்றனர். நிறுமங்களும் அரசாங்கங்களும் செலவாளிகளாகவும் பற்றாக்குறை உடையவர்களாகவும் இருக்கின்றார்கள். சேமிப்புகள் பங்குச் சந்தையின் வாயிலாகப் பற்றாக்குறை நபர்களைச் சென்று சேர்கின்றது. சேமிப்பைத் தேவையானவர்களுக்கு உபயோகத்திற்குப் பல்வேறு விதமான வழிகளில் அளிக்கும் போது அதற்கு ஈடாக வட்டி, பங்காதாயம், முதலீட்டு மதிப்பு உயர்வு மற்றும் லாபப் பங்குகளை எதிர்பார்த்தே அளிக்கின்றார்கள். சேமிப்பாளர்கள், பங்கு மற்றும் கடன் பத்திரம் வெளியிடுவோர், இடையீட்டாளர்கள் மற்றும் ஒழுங்குபடுத்துபவர்கள் எனப் பத்திரச் சந்தையில் பங்கேற்பவர்களை நான்கு முக்கிய பிரிவாகப் பிரிக்கலாம். சேமிக்கும் முதலீட்டாளர்களும், சேமிப்புகளைப் பத்திரங்களை தருவதன் மூலம் பெற்று தொழில் நடத்தும் நிறுமங்களும் பத்திரச் சந்தையில் முக்கிய அங்கம் வகிக்கும் முதல் இரண்டு பிரிவினர் ஆவர். இதில் மூன்றாவதாக வருபவர்கள் இடைத்தரகர்கள். இவர்கள் முதலீட்டாளர்களுக்கும் சேமிப்பவர்களுக்கும் இடையே ஒரு இடையீட்டாளராகச் செயல்படுகின்றனர். இறுதியாகப் பத்திரச் சந்தையில் பங்காற்றி வருபவர்கள் ஒழுங்குபடுத்துபவர்கள். இவர்கள் பத்திரச் சந்தை குறித்த சட்டதிட்டங்களை நடைமுறையில் அனைவரும் கடைப்பிடிக்கின்றனரா? என்று தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் கடமையைச் செய்துவருகின்றனர். நாளடைவில் பத்திரச் சந்தையின் நடைமுறைச் சட்டதிட்டங்கள் இந்த ஒழுங்குபடுத்துபவர்கள் கண்காணிப்பிலும் ஆலோசனையின் பேரிலுமே கொண்டுவரப்படுகின்றன. இந்த ஒழுங்குபடுத்துபவர்கள் சந்தை நல்ல விதத்தில் நடைபெறத் தேவையான வழக்கமான முறைகளைக் கொண்டுவருவதன் மூலமும், பங்குகளை வெளியிடுவோருக்கான சட்டதிட்டங்கள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதா? என்பதைக் கண்காணித்தும், இடையீட்டாளர்களின் செயல்பாடுகள் சட்டதிட்டப்படி இருக்கின்றதா? என்று சரி பார்ப்பதன் மூலமும் முதலீட்டாளர்களுக்குச் சேவையாற்றி வருகின்றார்கள். அதே போல், இந்த ஒழுங்குபடுத்துபவர்கள் முதலீட்டாளரின் உரிமைகளை நிலைநாட்டி அவர்களுடைய முதலீட்டின் பாதுகாப்புக்கு உறுதுணையாகவும் இருக்கிறார்கள். இவர்களில் நான்கு முக்கிய பங்கேற்பாளர்கள் பத்திரச் சந்தையில் உள்ளனர். அவர்கள் முதலீட்டாளர்கள், வெளியிடுவோர் (நிறுமம்) இடைநிலையர்கள் (தரகர்கள்) மற்றும் ஒழுங்குபடுத்துபவர்கள் ஆவர்.

முதலீட்டாளர்கள்

எந்த ஒரு பொருளாதாரத்திலும், நிறுமங்களை நிறுவுவதற்கோ நிறுமங்களை விரிவாக்கம் செய்வதற்கோ தேவையான முதலீட்டைத் தன்னுடைய சேமிப்பிலிருந்து முதலீட்டாளர்கள் கொடுப்பதால் அவர்களை மூலதனச் சந்தையின் முதுகெலும்பு எனக் கூறலாம். முதலீட்டாளர்கள் தாங்கள் தரும் பணத்திற்குக் கைமாறாக நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கின்றனர். முதலீட்டாளர்களைத் தனி நபர் முதலீட்டாளர் மற்றும் நிறுவன முதலீட்டாளர் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

தனி நபர் முதலீட்டாளர்கள்

தனக்காகத் தன்னுடைய சேமிப்பிலிருந்து மட்டுமே முதலீடு செய்யும் முதலீட்டாளர்களைத் தனி நபர் முதலீட்டாளர்கள் என அழைக்கின்றோம். இவர்கள் வேறு நபருக்காகவோ நிறுவனத்திற்காகவோ பணத்தை முதலீடு செய்வதில்லை.

நிறுவன முதலீட்டாளர்கள்

உள் நாட்டு நிதி நிறுவனங்களான வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதியகங்கள், உள்ளூர் நிதி நிறுவனங்கள் மற்றும் அயல் நாட்டு நிதி நிறுவன முதலீட்டார்கள் (இது போன்ற நிறுமங்கள் இந்தியாவிற்கு அப்பால் அயல்நாட்டில் கூட்டுருவாக்கம் செய்யப்பட்டு இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவார்கள்) போன்றவர்கள் நிறுவன முதலீட்டாளர்கள் ஆவர்.

பங்கு வெளியீட்டாளர்

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது நிறுமங்கள் விரிவாக்கத்திற்கும் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் தங்களுடைய நிதித்தேவைக்காகப் பல்வேறு வகையான பத்திரங்களைக் கொடுத்து முதலீட்டாளர்களிடமிருந்து பணம் திரட்ட சந்தையை நாடி வருகின்றன. சில சமயம் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கூட பத்திரச் சந்தையில் தங்களுக்குத் தேவையான பணத்தைத் திரட்ட முயல்கின்றன. அடுத்து பரஸ்பர நிதியகங்களும் புதிய திட்டங்களை வகுத்து அந்தத் திட்டங்களில் சிறுமுதலீட்டாளர்களை முதலீடு செய்யக்கோரி சந்தையை நோக்கி வருகின்றன. 1991ஆம் ஆண்டுக்குப்பின் கொண்டுவரப்பட்ட பங்கு பத்திரச் சட்ட மற்றும் நடைமுறைச் சீர்திருத்தங்கள் இந்திய நிறுமங்கள் பன்னாட்டுச் சந்தைகளிலும் முதலீட்டைத் திரட்ட வழிவகைச் செய்தது. இந்த வகை நிதி திரட்டுதலின் போது பங்குகளை வழங்க குளோபல் வைப்பக ரசீது மற்றும் அமெரிக்கன் வைப்பக ரசீது, அந்நிய செலாவணி மாற்றத்தக்க பிணைகள் (FCCB) மற்றும் வெளிநாட்டு வியாபாரக் கடன் (ECB) போன்றவற்றிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இடையீட்டாளர்கள்

மற்றவர்களின் பணத்தை வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்து மேலாண்மை செய்பவர்கள், பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி விற்கும் உத்தரவுகளை ஏற்று செய்து கொடுப்பவர்கள், பங்குளையோ பத்திரங்களையோ விநியோகம் செய்பவர்கள் மற்றும் பங்கு வர்த்தகத்தில் முடிவுகளை எடுக்கத்தேவையான தகவல்களைக் கொடுப்பவர்கள் எனப் பல்வேறு விதமானவர்கள் இடையீட்டாளர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இந்த இடைநிலையர்கள் வாங்குபவர்களின் தேவைகளையும் விற்பவர்களின் அளிப்பையும் ஒன்று சேர்க்கின்றனர்.

பங்கு மாற்றகம்

பங்கு மாற்றகம் பங்கு வணிகத்திற்கான ஒரு தளத்தை அமைத்துத்தருகின்றது. அதில் பங்குகளை விற்பவர்களும் வாங்குபவர்களும் சந்தித்து தங்களுக்குத் தேவையான பங்குகளை வாங்கவோ விற்கவோ செய்கின்றார்கள். பத்திரங்களின் ஒப்பந்தச் (ஒழுங்காற்றுச்) சட்டம் 1956இன்படி “பங்கு மாற்றகம் என்பது பங்கு பத்திரங்களை வாங்குதல் அல்லது விற்பனை செய்தல், அவற்றைச் சீர்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட பதிவு பெற்ற அல்லது அவ்வாறில்லாத நிறுவனம் அல்லது தனி நபர்களின் அமைப்பாகும்" என வரைவிலக்கணம் தந்துள்ளது. தற்போது இந்தியாவில் 21 பங்கு மாற்றகங்கள் உள்ளன.

பங்குத்தீர்வகம்

பங்குத்தீர்வம் என்பது ஒவ்வொரு பங்கு மாற்றகத்தின் ஒரு பகுதியாகவோ தனி நிறுவனமாகவோ இருந்து கொண்டு மூன்று வகையான பணிகளை அது நிறைவேற்றுகிறது. அவையாவன: இது பங்கு வியாபாரத்தைத் தீர்வு செய்து கணக்கை முடிக்க உதவுகின்றது. அதாவது பங்கு வாங்குபவரிடமிருந்து பணத்தையும் பங்கு விற்றவரிடமிருந்து பங்குகளையும் பெற்று அவரவருக்குப் போய்ச் சேரவேண்டிய பங்குகளையும் பணத்தையும் சரிவரக் கொண்டு போய்ச் சேர்க்கும். முழு நடைமுறையையும் இந்தத் தீர்வகங்கள் செய்கின்றன. பங்குத்தீர்வகங்கள் மாற்றகங்களில் நடக்கும் அத்தனை வியாபாரமும் உறுதியாகப் பணம் மற்றும் பங்குகள் தருவதன் மூலம் தீர்வு செய்யப்படும் என்று ஒப்புறுதியளிக்கிறது, மற்றும் இது இடர் மேலாண்மைப் பணியையும் செய்கிறது. தேசியப் பங்கு மாற்றகத்தில் நடக்கும் வியாபரத்தினைப் பங்குத் தீர்வகக் கழகம் அதன் 100 சதவிகித துணை நிறுவனமாக இருந்து தீர்வு செய்து கணக்குகள் முடிக்க உதவுகின்றது.

பங்குத் தரகர்கள் மற்றும் துணைத் தரகர்கள்

பங்கு மாற்றகங்களில் உறுப்பினராய் இருப்பவர்கள் பங்குத்தரகர்கள் என்றழைக்கப்படுகின்றனர். பங்கு மாற்றகத்தில் உறுப்பினராக இல்லாமல் ஒரு பங்குத் தரகருடன் தன்னை இணைத்துக்கொண்டு முதலீட்டாளர்களுக்கு அவர்கள் பங்குத் தரகரோடு செய்யும் பங்கு வர்த்தகத்தில் உதவி செய்பவர்கள் (வாங்க மற்றும் விற்க) துணைத் தரகர்கள் என்றழைக்கப்படுகின்றார்கள்.

பத்திர வைப்பகங்கள்

ஒரு வங்கியோ நிறுமமோ பிறரால் வைப்புகளாக வைப்பப்பட்ட நிதியையோ பத்திரங்களையோ பிறருக்கு மாற்றம் செய்வதற்காக வைத்திருப்பவர்கள் வைப்பகங்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பத்திர வைப்பக பங்கேற்பாளர்கள்

பத்திர வைப்பகங்கள் முதலீட்டாளர்களுக்குத் தங்களுடைய சேவைகளை முகவர் ஒருவர் மூலமாக வழங்குகின்றனர். அந்த முகவர்கள் தான் வைப்பகப் பங்கேற்பாளர்கள் (DP) என அழைக்கப்படுகின்றனர். இந்தியப் பத்திர மாற்றக வாரியத்தின் அனுமதி பெற்று வைப்பகங்கள் இது போன்ற முகவர்களை நியமிக்கும். இந்தியப் பத்திரங்கள் மாற்றக வாரியத்தின் ஒழுங்காற்று விதிகளின்படி, மூன்று வகையான நிறுவனங்களைப் பங்கேற்பாளராக நியமிக்கலாம். அவையாவன : வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய பத்திரங்கள் மாற்றக வாரியத்தின் பதிவு பெற்ற வணிக உறுப்பினர்கள்.

பாதுகாப்பகங்கள் (Custodians)

அடிப்படையில் பாதுகாப்பகம் எனப்படுவது தன்னுடைய வாடிக்கையாளரின் பங்கு மற்றும் பத்திரங்களைப் பதிவு செய்து தன்வசம் பாதுகாப்பாக வைத்திருக்கும் சேவையினை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும். பங்கு மற்றும் பத்திரங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் கீழ்க்கண்ட சேவைகளையும் பாதுகாப்பகங்கள் வழங்குகின்றன. அவை

  • பங்கு மற்றும் பத்திரக் கணக்குகளைப் பராமரித்தல்
  • வாடிக்கையாளர்கள் சார்பாகப் பத்திரங்களின் மீது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் மற்றும் உரிமைகளைப் பெற்றுத் தருதல்.
  • பத்திரங்கள் மீது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் அல்லது உரிமைகள் குறித்து அவர்களுக்கு அவ்வப்போது தகவல்களைத்தருதல் போன்ற சேவைகளைப் பாதுகாப்பகங்கள் வழங்குகின்றது.

வியாபார வங்கிகள்

வியாபார வங்கி என்பது நிறுமங்கள் பங்கு வெளியீட்டினைச் செய்யும் போது அவற்றை முதலீட்டாளர்களுக்கு விற்கவோ கொண்டு சேர்க்கவோ, தானே அந்த வெளியீட்டில் முதலீடு செய்யவோ, அந்தப் பங்கு வெளியீட்டை மேலாண்மை செய்யவோ, அந்தப் பங்கு வெளியீட்டிற்கு ஒரு நிபுணராக ஆலோசனைகளைத்தரவோ செய்யும் நிறுவனம் ஆகும். வியாபார வங்கிகளை முதலீட்டு வங்கிகள் என்றும் அழைப்பார்கள். வியாபார வங்கிகள் பத்திரச் சந்தையில் ஒரு முக்கிய இடத்தை கொண்டிருக்கும் அமைப்பாகும். இவற்றைச் செபி (வியாபார வங்கிகள்) கட்டுப்பாட்டு விதிமுறை 1992 என்ற விதிகள் கட்டுப்படுத்தி வருகின்றது.

அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்

அயல் நாட்டில் அந்த நாட்டுச் சட்ட திட்டங்களின் படி நிறுவப்பட்டு இந்தியாவில் சட்ட ரீதியான அனுமதியுடன் முதலீடு செய்து வரும் நிறுவனங்களுக்கு அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் என்று பெயர்.

பரஸ்பர நிதியகங்கள்

பரஸ்பர நிதியகம் என்பது ஒருநிறுமம். அது சிறுமுதலீட்டாளர்களிடம் இருந்து நிதியினைத் திரட்டி ஒன்று கூட்டி பங்கு மற்றும் கடன் பத்திரங்கள், குறுகிய காலப் பணச் சந்தை முதலீடுகள், மற்றும் பல்வேறு விதமான முதலீடுகள் அல்லது சொத்துக்கள் அல்லது இவை அனைத்தும் சேர்ந்த கலவையாக முதலீடு செய்கின்றன

கூட்டு முதலீட்டுத் திட்டங்கள்

இது ஒரு நிறுமத்தால் கொண்டு வரப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட திட்டம் அல்லது வழிமுறை அதன் மூலம் பல முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டினைப்பெற்று பல்வேறு விதமான சொத்துக்களில் முதலீடு செய்வதைக் குறிக்கும்.

துணிகர முதலீட்டு நிதி

துணிகர முதலீட்டு நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒர் அறக்கட்டளை அல்லது நிறுமம் போன்ற கூட்டு அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிதியாகும். இந்நிதி ஒர் உள்நாட்டு நிறுமத்தைப் போன்று அதன் பங்கு மாற்றகங்களில் பட்டியலிடப்படுவதில்லை. மேலும் இது இந்தியப் பத்திரங்கள் மாற்றக வாரியத்திடமிருந்து சான்றிதழ் பெற்று, 1996 ஆம் ஆண்டு செபியின் நிபந்தனைகளுடன் இந்த நிதி ஒழுங்குபடுத்தப்படுகிறது.

கடன் தர மதிப்பீட்டு நிர்ணய முகமைகள்

கடன் தர மதிப்பீட்டு நிர்ணய முகமை நிறுவனங்கள் நிறுமத்தின் பங்குகளுக்குக் குறிப்பாகக் கடன் பத்திரங்களுக்குத் தர நிர்ணயம் அளிக்கின்றது. பொதுமக்களுக்கு அளிக்கப்படும் நேர்மைப் பங்குகளையும் இந்த முகமைகள் மதிப்பீடு செய்கின்றன.

கடனீட்டுப்பத்திர பொறுப்பாளர்

கடனீட்டுப்பத்திரங்கள் வெளியிடப்படும்போது அந்தக் கடனுக்குப் பிணையமாகத் தரப்படும் சொத்துகளுக்குப் பிணையப் பொறுப்பாளராகக் கையெழுத்திடும் நபருக்குக் கடனீட்டுப்பத்திரப் பொறுப்பாளர் என்று பெயர்.

ஒழுங்குபடுத்துபவர்கள்

ஒழுங்குபடுத்துபவர்கள் பங்கு மற்றும் பத்திரச் சந்தையின் செயல்பாடுகள் முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் விதத்திலும், மேன்மேலும் முதலீடுகள் செய்யத் தூண்டும் விதத்திலும் செயல்படுகின்றது என்பதைக் கண்காணித்து உறுதிசெய்யும் கடமைக்கு உட்பட்டவர் ஆவார். பத்திரச் சந்தையினை ஒழுங்கு செய்யும் பொறுப்பு அரசின் பொருளாதார நடவடிக்கைப் பிரிவு, நிறுமங்களின் நடவடிக்கை அமைச்சகம், மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி போன்ற அரசு நிறுவனங்களிடம் இருக்கின்றது. இவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு மூலதனச் சந்தையில் உள்ள நிர்வாகக் குழுவிடம் உள்ளது. பங்குச்சந்தை குறித்த செபியின் ஆணைகளை மறுபரிசீலனை செய்யக் கோரி பத்திரங்கள் மேல்முறையீட்டு ஆணையத்திடம் அந்த ஆணையால் பாதிப்படைபவர்கள் முறையிடலாம்.

பத்திரச் சந்தையின் உட்பிரிவுகள்

பத்திரச் சந்தையில் பின்வரும் பல்வேறு விதமான உட் பிரிவுகள் மற்றும் பத்திரங்கள் வியாபாரம் செய்யப்படுகின்றது.

நேர்மைப் பங்குகள் மற்றும் கடனீட்டுப்பத்திரங்கள்

பங்கு மாற்றகத்தில் நேர்மைப்பங்குகள் பிரிவில் நேர்மைப்பங்குகள், கடனீட்டுப்பத்திரங்கள், ஆணைப்பத்திரங்கள், பரஸ்பர நிதியகங்கள் வெளியிட்ட திட்ட அலகுகள் மற்றும் மாற்றகத்தில் வியாபாரம் செய்யப்படும் நிதிகள் போன்றவை வியாபாரமாகின்றது.

பங்குகள்

அ) நேர்மைப் பங்குகள்

பொதுவாக நேர்மைப் பங்குகளைச் சாதாரணப் பங்குகள் எனவும் அழைக்கலாம். நேர்மைப் பங்குகள் ஒரு நிறுமத்தின் சிறு பகுதி உரிமையைக் குறிக்கும். நேர்மைப்பங்குகளின் பங்குதாரர்கள் அனைவரும் சேர்ந்து ஒருநிறுமத்தின் உரிமையாளர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து நிறுமத்தின் இடர்களையும் லாபத்தையும் பகிர்ந்து கொள்கின்றார்கள். ஒரு நிறுமத்தின் நீடித்தத்தன்மையைக் கொண்டு நேர்மைப்பங்குகள் முதலீட்டாளர்களால் கீழ்க்கண்ட விதமாகக் குறிப்பிடப்படுகின்றது. –

  • நீல சீவல் பங்குகள் நன்கு வளர்ந்து நல்ல நிதி நிலையுடன் நன்கு நிறுவப்பட்ட சிறந்த லாபத்துடன் செயல்படும் மிகப்பெரிய நிறுமங்களின் பங்குகள்
  • வளர்ச்சிப் பங்குகள் மிக அதிக லாபம் இல்லாவிட்டாலும் கூட வேகமாக வளர்ந்து பிற்காலத்தில் நல்ல லாபம் தரக்கூடிய நிறுமங்களின் பங்குகள்
  • வருமானப் பங்குகள் தொழில் நன்கு நடந்துவந்த போதிலும் பெரிய வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாமலும் அதே நேரத்தில் லாபம் குறையாமலும் இருக்கும் நிறுமங்களின் பங்குகள்
  • சுழலும் பங்குகள் : பொருளாதார ஏற்ற இறக்கத்திற்குத் தகுந்தாற்போல் லாபம் மற்றும் வியாபார அளவு கூடுதல் குறைவாக இருக்கும் நிறுமங்களின் பங்குகள்
  • ஊக வணிகப் பங்குகள் அதிக அளவிலான விலை மாறுதலுக்கு அன்றன்று உட்படும் நிறுமங்களின் பங்குகள்
  • எதிர்த்து நிற்கும் பங்குகள் பொருளாதார ஏற்ற இறக்கங்களினால் பாதிப்படையாமல் செயல்படும் நிறுமங்களின் பங்குகள்

ஆ) உரிமைப் பங்கு வெளியீடு / உரிமைப் பங்குகள் :

இப்பொழுது அந்த நிறுமத்தின் நேர்மைப்பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு அந்நிறுமம் புதிய பங்குகளை வெளியிடும்போது ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்படும். உதாரணமாக, உரிமைப் பங்கு வெளியீடு 23 விகிதத்தில் ரூபாய் 125க்கு என்றால், ஏற்கனவே நேர்மைப் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர் அவர் வைத்திருக்கும் ஒவ்வொரு மூன்று பங்குகளுக்கும் இரண்டு பங்குகளைப் பெறுவர் என்பதாகும்.

இ) மேலூதியப் பங்குகள்

நிறுமங்கள் தற்சமயம் நேர்மைப்பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளருக்கு இலவசமாகத் தரும் பங்குகளாகும் இவை. இந்த மேலூதியப்பங்குகளும் ஏற்கனவே அவர்கள் வைத்து இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படுகின்றது.

ஈ) முன்னுரிமைப் பங்குகள் :

இந்த வகைப்பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் ஒரு நிலையான பங்காதாயத்திற்கு உரிமை கொண்டாடும் தகுதியுள்ளவர்கள். நேர்மைப் பங்குகளை வைத்திருப்பவர்களுக்குப் பங்காதாயம் தருவதற்கு முன்னரே இவர்களுக்குக் குறிப்பிட்ட நிலையான பங்காதாயம் வழங்கப்பட்டுவிட வேண்டும். அதே சமயம் நிறுமம் ஏதாவதொரு காரணத்தால் கலைக்கப்பட்டால் நிறுமத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் மற்றும் கடன் பத்திரம் / பிணைப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட பின்னரே இவர்களுக்குப் பணம் தரப்படும். ஆனால், நேர்மைப் பங்குதாரர்களை விட இவர்களுக்கு மீதமுள்ள தொகையில் பங்கு பெற உரிமை உண்டு.

உ) குவிவு முன்னுரிமைப் பங்குகள்

இந்த வகைப் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்குப் பங்காதாயம் ஏதாவது ஒரு வருடம் போதிய இலாபம் இல்லாத காரணத்தால் வழங்கப்படாவிட்டால் அடுத்த வருடம் சேர்த்து வழங்கப்படவேண்டும். வரும் வருடங்களில் லாபம் வந்தால் முதலில் இந்த வகைப் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்கனவே பாக்கியிருக்கும் பங்காதாயத்தையும் சேர்த்து கொடுக்கப்பட்ட பின்னரே நேர்மைப் பங்குகளுக்கான பங்காதாயம் வழங்கப்பட வேண்டும்.

ஊ) குவிவு மாற்றற்குரிய முன்னுரிமைப் பங்குகள்

இவ்வகைப் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஏதாவது ஒரு வருடம் போதிய இலாபம் இல்லாத காரணத்தால் பங்காதாயம் வழங்கப்படாவிட்டால், அடுத்த வருடம் அது சேர்த்து வழங்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக மேலே சொல்லப்பட்ட பங்காதாயம் குவியலாகும் பொழுது முன்னுரிமைப் பங்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் நேர்மைப் பங்குகளாய் மாற்றித்தரப்படும். இதுவே குவிவு மாற்றற்குரிய முன்னுரிமைப்பங்குகள் என அழைக்கப்படுகிறது.

நேர்மைப் பங்குதாரருக்கும் முன்னுரிமைப் பங்குதாரருக்கும் இடையேயுள்ள வேற்றுமைகள்

நேர்மைப் பங்குதாரர்கள் நிறுமத்தின் உரிமையாளர்கள் என்ற உரிமையின் பெயரில் பங்காதாயத்தை நிறுமம் கொடுக்கும்போது மட்டும் பெறுவதற்கு உரிமையுடவர்கள். மேலும், அவர்கள் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று எந்த ஒரு தீர்மானத்திற்கும் வாக்களிக்கும் உரிமையையும் பெற்றவர்கள். முன்னுரிமைப் பங்குதாரர்களுடைய முதலீடும் நிறுமச் சட்டப்படி நிறுமத்தின் முதலீடாகவே கருதப்படுகின்றது. இவர்களுக்கு இரண்டு சிறப்புரிமைகள் உண்டு.

  1. நிறுமத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பங்காதாயத்தை நிறுமத்தின் வாழ்நாள் முழுவதும் பெறுகின்ற உரிமை
  2. நிறுமம் கலைக்கப்பட்டால் (wind-up) அப்போது முதலீட்டை நேர்மைப் பங்குதாரர்களுக்குக் கொடுப்பதற்கு முன்னரே திருப்பி வாங்கிக்கொள்ளும் உரிமையும் முன்னுரிமைப் பங்குதாரர்களுக்கு உண்டு. ஆனால் முன்னுரிமைப்பங்குகளை நேர்மைப்பங்குகள் போலச் சந்தையில் சாதாரணமாக வியாபாரம் செய்யமுடியாது.

கடனீட்டுப் பத்திரம்

நீண்ட காலக்கடனை ஏற்படுத்தும் ஒரு ஆவணம் கடனீட்டுப்பத்திரமாகும். சாதாரணமாக இந்தியாவில் வெளியிடப்படும் கடனீட்டுப் பத்திரங்களெல்லாம் ஒரு நிலையான சொத்தைப் பிணையமாக வைத்தே வெளியிடப்படுகின்றது. பின் வரும் வகையில் கடனீட்டுப்பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன:

அ) மாற்றற்குரிய கடனீட்டுப்பத்திரங்கள் : இது கடனீட்டுப்பத்திரத்தின் குணாதிசியத்தையும் நேர்மைப்பங்குகளின் குணாதிசியத்தையும் கொண்டது. இந்த வகைக் கடனீட்டுப்பத்திரத்தை வாங்கும் முதலீட்டாளர் அவருடைய விருப்பப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் தன்வசம் இருக்கும் கடனீட்டுப் பத்திரத்தை ஒரு குறிப்பிட்ட விலையில் நேர்மைப் பங்குகளாக மாற்றிக்கொள்ளலாம்.

ஆ) மாற்ற இயலாக் கடனீட்டுப்பத்திரங்கள் : இந்த வகை கடனிட்டுப்பத்திரங்கள் வேறு எந்த வகையிலும் மாற்ற இயலாத சுத்தமான கடன் பத்திரங்களாகும். பத்திரத்தின் முதிர்வு நாளன்று கடன் தொகை முதலீட்டாளருக்குத் திருப்பித்தரப்படும். பொதுவாக இந்த வகைப் பத்திரங்கள் தள்ளுபடியில் வெளியிடப்படுகிறது.

இ) பகுதியை மாற்றற்குரிய கடனிட்டுப்பத்திரங்கள் : இந்த வகை கடனீட்டுப்பத்திரங்கள் பகுதித்தொகையைப் பங்குகளாக மாற்றிக்கொள்ளவும், மீதித்தொகையைப் பங்குகளாக மாற்றிக் கொள்ள இயலாத வசதியையும் கொண்டது.

பற்றாணைகள்

நிறுமங்கள் தங்களுடையை நேர்மைப் பங்குகளையோ கடனிட்டுப்பத்திரங்களையோ வெளியிடும் போது அத்துடன் சேர்த்து பற்றாணைகளையும் வழங்கும். முதலீட்டாளர்கள் இவ்வகை பற்றாணைகளைக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட விலையில் நேர்மைப் பங்குகளைப் பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

பங்கு சார்ந்த சொத்துகளின் வருவித்த சந்தை

பத்திரம் சார் சொத்துகளின் வருவித்த சந்தையில் பங்குசாரச் சொத்துகளின் வருவித்த சந்தை மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. வருவித்த சொத்துக்களின் மதிப்பு அது எந்த சொத்தை அடிப்படைச் சொத்தாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றதோ? அந்தச் சொத்தின் மதிப்பைச் சார்ந்தே இருக்கும். நேர்மைப்பங்குகள், அந்நியச் செலாவணி அல்லது தங்கம், வெள்ளி போன்ற எந்த விதமான சொத்துக்களும் அடிப்படைச் சொத்தாக இந்த வருவித்த சொத்துகளின் சந்தையில் வியாபாரம் செய்யப்படலாம்.

எதிர்கால மற்றும் விருப்பம் ஒப்பந்தங்கள் என்ற இரண்டு விதமான வருவித்த சொத்துக்கள் தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வியாபாரம் செய்யப்படுகின்றது.

அரசாங்கக் கடன் பத்திரங்களின் சந்தை

அரசாங்கம் அதன் கடமைகளான நாட்டின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, நீதி, மத்திய வங்கி மற்றும் உள் நாட்டுக் கட்டமைப்பு வசதிகளை நிறுவவும் நிர்வாகம் செய்யவும் பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதி அரசாங்கத்திற்கு அது விதிக்கும் வரிகளின் மூலமாகவும், அது செய்திருக்கும் முதலீடுகளில் இருந்து வரும் லாபம் மற்றும் பங்காதாயத்தின் மூலமாகவும் கிடைக்கின்றது. இதைத் தவிர இது அரசு செலவுகளுக்காக வங்கிகளிடமிருந்து நிதி நிறுவனங்களிடமிருந்து பொது மக்களிடமிருந்தும் கடனைப் பெறுகிறது. இந்தக் கடனை அரசாங்கம் கடன் பத்திரங்களைக் கொடுப்பதன் மூலம் அரசாங்கக் கடன் பத்திர சந்தையிலிருந்து பெற்றுக்கொள்கின்றது. அரசாங்கம் தன்னுடையை குறுகியகால மற்றும் நீண்ட காலப் பணத்தேவைக்காக இந்தச் சந்தையில் கடனைப் பெற்றுக்கொண்டு கடன் பத்திரங்களை அளிக்கின்றது. இந்த வகைக் கடன் பத்திரங்களில் இடர்கள் ஏதும் இல்லை? ஏனென்றால் அரசாங்கமே இந்தப் பத்திரங்களுக்கான கொடுக்க வேண்டிய வட்டிக்கும் திரும்ப அளிக்க வேண்டிய கடனுக்கும் உறுதி அளிக்கிறது. அதனாலேயே இந்த வகைக் கடன்கள் தங்கமுலாம் பூசப்பட்ட கடன்கள் (Git) என்று அழைக்கப்படுகின்றது. மத்திய அரசு, மாநில அரசுகள், மற்றும் அரசு நிறுவனங்கள இது போன்ற அரசுக் கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன.

கூட்டு முதலீட்டுத் திட்டங்கள்

முதலீட்டாளர்கள் தனித்தனியாகவோ நேரிடையாகவோ சந்தையில் முதலீட்டைச் செய்யாமல் கூட்டாகச் சேர்ந்து ஒரு நிறுவனத்திடம் பணத்தைக் கொடுத்து முதலீடு செய்வதற்குப்பெயர் கூட்டு முதலீட்டுத்திட்டங்கள் ஆகும். பரஸ்பர நிதியகங்கள், பங்கு மாற்றகத்தின் மூலம் மட்டுமே வியாபரம் செய்யப்படும். கூட்டுமுதலீட்டுத்திட்ட அலகுகள், கூட்டு முதலீட்டுத்திட்டங்கள், புதிய மற்றும் இடர்ப்பாடு அதிகமிக்க தொழில்களுக்கு நிதியுதவி செய்ய அமைக்கப்படும் திட்டங்கள் போன்றவை இவற்றின் உதாரணங்களாகும். இந்தியாவில் பரஸ்பர நிதியகங்கள், பங்குமாற்றகத்தின் மூலம் மட்டுமே வியாபாரமாகும் கூட்டு முதலீட்டுத்திட்ட அலகுகள் மற்றும் குறியீடுகளில் முதலீடு செய்வதற்காகத் திரட்டப்படும் முதலீட்டின் அலகுகள் என்ற மூன்று பெரிய பிரிவாக இந்தச் சந்தையில் வியாபாரம் நடந்து வருகின்றது.

பரஸ்பர நிதியகங்கள்

முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியைத் திரட்டி அவற்றைப்பங்குகள், நிறுமங்களின் கடன் பத்திரங்கள், குறுகிய காலப் பணச்சந்தைப் பத்திரங்கள் எனப் பல்வேறு விதமான பத்திரங்களில் அல்லது சொத்துக்களில் அல்லது இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து முதலீடு செய்யும் நிறுமங்களுக்குப் பரஸ்பர நிதியகங்கள் என்று பெயர். இது ஒரு முக்கியமான முதலீட்டுச் சாதனமாகும். இந்த நிதியகங்களின் திட்டங்களில் கூட்டாகப் பணம் செலுத்துவோர் அனைவருக்கும் ஒரே மாதிரியான முதலீட்டு எண்ணங்கள் இருக்கும். "பரஸ்பர நிதி என்பது அறக்கட்டளை மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிதி, அது அலகுகளை (Units) விற்பதன் மூலம் பொதுமக்களிடமிருந்தோ பொதுமக்களின் ஒரு பிரிவினர்களிடமிருந்தோ மூலதனங்களைப் பெற்று அவற்றைப் பணச்சந்தைப் பத்திரங்கள் அல்லது தங்கம் அல்லது தங்கம் சம்பந்தப்பட்ட திட்டங்கள் அல்லது நிலபுலன் திட்டங்கள் போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும் நிறுமம் ஆகும்" என்று இந்தியப் பத்திர மாற்றக வாரியம் (SEBI) வரைவிலக்கணம் தந்துள்ளது.

ஒவ்வொரு பரஸ்பர நிதியகமும் ஒரு நிதி மேலாண்மை அதிகாரியைக் கொண்டிருக்கும். இந்த நிதி மேலாண்மை அதிகாரிகள் அலகுகள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைப் பங்கு மற்றும் கடன் பத்திரச் சந்தைகளில் முறையாக முதலீடு செய்து நிர்வகித்து வருவார்கள்.

ஆதாரம் : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/20/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate