உடல் உறுப்புகளின் பாதுகாப்பில் கண் நலம் மிக முக்கியம். இன்றைய நவீன வாழ்க்கை சூழலாலும் மேற்கத்திய உணவு முறையைப் பின்பற்றுவதாலும் குழந்தைப் பருவத்திலேயே கண் பாதிப்புகள் ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதேநேரம், கண்ணில் ஏற்படும் பல பாதிப்புகளைக் குழந்தைப் பருவத்திலேயே கவனித்துச் சிகிச்சை பெற்றால்தான் முழுமையாகக் குணப்படுத்த முடியும். நடுத்தர வயதினருக்கு நீரிழிவு நோய் காரணமாகக் கண்புரை, விழித்திரை பாதிப்பு, கண் நீர்அழுத்த நோய் எனப் பலதரப்பட்ட நோய்கள் தாக்கிப் பார்வையைப் பறிக்கின்றன. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முறையான கண் பரிசோதனைகள் அவசியம்.
பார்வையில் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை இது. இப்போதெல்லாம் பலருக்கும் பள்ளிப் பருவத்திலேயே பார்வையில் குறை உண்டாகி, கண்ணுக்குக் கண்ணாடி அணிய வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். எனவே, எட்டு வயதுக்குள் எல்லாக் குழந்தைகளும் ஒருமுறை இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.
கண்ணில் சத்துக்குறைவு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை இது. கண்ணைப் பாதிக்கும் சத்துக்குறைவு நோய்களில் பெரும்பாலும் வைட்டமின் ஏ பற்றாக்குறையால்தான் பலரும் துன்பப்படுகிறார்கள். இதைச் சாதாரணக் கண் பரிசோதனையிலேயே தெரிந்துகொள்ள முடியும். டார்ச் லைட் வெளிச்சத்தில் கண்களை நேரடியாகப் பார்த்து விழிவெண்படல நோயைக் கணிப்பார்கள். இதை எல்லா வயதினரும் எல்லா மருத்துவர்களிடமும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளலாம். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் குறைபாட்டால் கார்னியாவில் ஏற்படும் குறைபாடுகளையும் கண்புரை நோயையும் (Cataract) இந்தப் பரிசோதனை மூலம் ஆரம்ப நிலையிலேயே தெரிந்துகொள்ள முடியும்.
மாறு கண் பரிசோதனை குழந்தைகளின் பார்வை வித்தியாசமாகத் தெரிந்தால், அது மாறுகண்ணா இல்லையா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, குழந்தைகளின் மாறுகண் பிரச்சினைக்கு எவ்வளவு விரைவாக இயலுமோ, அவ்வளவு விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு அறுவைசிகிச்சை தேவைப்படுபவர்கள் மூன்று வயதுக்கு மேல் செய்துகொள்ளலாம்.
பார்வைப் பிரச்சினைக்காகக் கண்ணாடி அணிபவர்கள், கண்ணாடியை மாற்றும்போது அல்லது வருடத்துக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக, தூரப்பார்வைக் குறைபாடு, நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் இதைத் தவறாமல் செய்துகொள்ள வேண்டும். இதில் விழித்திரை மற்றும் கண் நரம்புகள் பரிசோதிக்கப்பட்டுக் கூடுதல் பாதிப்புகள் உள்ளனவா என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பச் சிகிச்சை அளிக்கப்படும். பார்வை நரம்பு மேன்மேலும் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
விழி அழுத்தமானி (Tonometer) எனும் கருவியைக் கொண்டு கண்ணின் அழுத்தத்தைத் தெரிந்துகொள்ளலாம். இதன் இயல்பு அளவு 20 மி.மீ. மெர்குரி. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் ஆண்டுக்கு இருமுறை இதைச் செய்துகொள்வது நல்லது. இதன்மூலம் குளுக்கோமா நோய் உள்ளதா என்பதை அறியலாம். ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்தால், அது மேன்மேலும் அதிகரிப்பதைத் தடுத்துவிட முடியும்.
கண் நீர்அழுத்த நோய் உள்ளவர்கள் இந்தப் பரிசோதனையை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் பக்கப் பார்வைக் குறைபாட்டை அறிந்து, பார்வை நரம்பின் நிலைமையைத் தெரிந்துகொள்ளலாம். அது பாதிக்கப்படாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.
குளோரோகுவின் விழித்திரைப் பரிசோதனை (Chloroquine Retinopathy Test) என்றும் இதைக் கூறுவார்கள். நாட்பட்ட மூட்டுவலிக்காக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு, பொருளின் நிறத்தை அறியும் தன்மை பாதிக்கப்பட்டு நிறக்குருடு வரலாம். இந்தப் பாதிப்பு இருக்கிறதா என்பதை இந்தப் பரிசோதனைமூலம் தெரிந்துகொண்டு, நிறக்குருடு வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
ஆதாரம் : தி-ஹிந்து நாளிதழ்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
கண்களின் கருவளையங்களைப் பாதுகாக்க ஆயுர்வேத வழிகள் ...
அதிக வெப்பத்தால் ஏற்படும் கண் பிரச்சனைகளைப் போக்க ...
கணினி வேலையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கான முக்கிய தக...
கண்ணில் ஏற்படும் கோளாறுகள் பற்றி இங்கு விவரிக்கப்ப...