অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும்

ஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும்

ஒற்றைத் தலைவலி

உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் ஒற்றைத் தலைவலி - மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும்.

குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது. இதன் முக்கியமான அறிகுறிகளாக குமட்டல், வாந்தி, ஒளி, ஒலிக்கான சகிப்புத் தன்மை குறைவு என்பன இருக்கின்றன.

ஒற்றைத் தலைவலி நோயாலிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினருக்கு இந்த ஒற்றைத் தலைவலி ஏற்பட சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். பார்வைப் புலத்தில் மாற்றங்கள் ஏற்படல் (உ.ம்: பிரகாசமான ஒளி, கறுப்புப் புள்ளிகள், "Z" வடிவங்கள் தெரிதல்), கழுத்து, தோள்மூட்டுப் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படல், உடற் சமநிலை குழம்புதல், பேச்சில் தடுமாற்றம் ஏற்படல், மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் என்பவையே பொதுவான அந்த எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கின்றன.

இவ்வகையான எச்சரிக்கை அறிகுறிகள் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடம் தொடக்கம் 1 மணித்தியாலம் முதல் ஏற்படலாம். இவ்வாறான ஒற்றைத் தலவலி ஏற்கப்பட்ட அல்லது மரபார்ந்த ஒற்றைத் தலைவலி (Classical migraine) எனவும், அப்படி பிரத்தியேகமான எச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமல் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பொதுவான ஒற்றைத் தலைவலி (Common Migraine) எனவும் அழைக்கப்படுகிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும்போது ஒளி, ஒலிக்கு சகிப்புத்தன்மை குறைவதால். இதனால் அவதிப்படுபவர்கள் இருளான, அமைதியான நிலையில் இருக்க விரும்புவார்கள்.

ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் பெண்களில் அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் சமநிலை மாற்றங்களும் காரணமாகக் கருதப்படுகிறது.

மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரோடோனின் (Serotonin) அல்லது 5-ஐடிராக்சி டிரிப்டமைன்  எனப்படும் ஒரு ஒற்றை அமைன் நரம்பு சமிக்ஞை கடத்தியாக செயல்பெறும் வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன.

பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் நம்பப்படுகின்றது.

ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்கும். ஆண்களுக்கு 25 – 55 வயதில் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். பெண்களுக்கு இன்னும் சற்று முன்பே ஆரம்பித்துவிட வாய்ப்பு உண்டு. மாதத்துக்கு ஒருமுறை முதல் ஐந்து முறைக்கு மேலும் வரலாம். தலையின் ஒருபக்கம் உள்ளே லேசாகத் துடிக்க ஆரம்பிக்கும். இது தொடர்ந்தும் இருக்கலாம். சிறிது இடைவெளி விட்டும் இருக்கலாம்.

ஒற்றைத் தலைவலியின் ஆரம்ப அறிகுறி

தினசரி வேலைகளைச் செய்ய முடியாதபடி வலி அதிகரித்தல். சாதாரண வேலைகளைக் கூட செய்ய முடியாதபடி கடுமையாக இருக்கும். திடீர் வயிற்றுப் புரட்டல் ஏற்படும். எந்த உணவுப் பொருளையும் பார்க்கவே பிடிக்காது.

காரணமின்றி வாந்தி ஏற்படும். ஒவ்வாத பொருளைச் சாப்பிட்டது போல, என்ன சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஒன்றுமே சாப்பிடத் தோன்றாது. வெளிச்சத்தினால் தலைவலி அதிகமாவதால் கதவுகளை மூடுவார்கள். விளக்கை அணைத்துப் போர்வைக்குள் முடங்குவார்கள். இருட்டு இவர் களுக்கு இதமாக இருக்கும். குண்டூசி போட்டால் கேட்கும் சத்தம்கூட இவர்களுக்கு எரிச்சல் தரும். நிசப்தமாக இருக்கும் இடத்தைத் தேடிச் செல்வார்கள்.

வலி தீவிரமடையும்போது சுத்தியால் தலைக்குள் அடிப்பதுபோல் இருக்கும். கண்ணைத் திறக்க முடியாது. ஆளை நிலைகுலையச் செய்யும். சிலருக்குத் தற்கொலை எண்ணம்கூட தலை தூக்கும்.

தலைக்குள்ளே வெளிச்சம் மினுமினுப்பது போல இருக்கலாம். புள்ளியாகவும் தெரியலாம். பட்டை பட்டையாக பல நிறத்தில் பட்டைகள் தலைக்குள் பரவி வருவது போலத் தோன்றும்.

கழுத்து வலி வருவது இயல்பு. குனிய, நிமிர முடியாது. அது மட்டுமின்றி கண்கள் சிவந்து அரிக்கலாம். கண்ணிலிருந்து நீர் வடியலாம். தலைவலி ஒரு பக்கமோ இரண்டு பக்கமோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

பலவித நிறங்களில் வெளிச்சம் தலைக்குள்ளே தெரிவதும் இருக்கலாம். சிலருக்கு எதிர்மாறாக பார்வையே பறிபோனது போல ஒரே இருட்டாகவும் இருக்கலாம்.

உடலின் ஒரு பகுதி உணர்ச்சியின்றி மரத்துப் போகலாம். தலைவலியுடன் சேர்த்து இந்த உணர்ச்சியின்மையும் சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு உடலின் ஒரு பாகத்தில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு இருக்கும். உடல் தளர்ச்சியுறும். பொதுவாக வலி ஆரம்பித்து அதன் தீவிர நிலையை அடைய 3 – 4 மணி நேரம் ஆகலாம். மூளையின் மத்திய நரம்பு மண்டலத்தின் சீர்க்கேடுகளால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

இதற்கான காரணம், மூளை இயக்கத்திற்கு தேவையான செட்டடோனின் ஹோர்மோன் போதுமான அளவு மூளைக்குக் கிடைக்காத காரணத்தால் பெருமூளை ரத்த நாளங்கள் சுருக்கி ரத்த ஓட்டம் தடைப்பட்டு ரத்த மண்டல அழற்சி ஏற்படுகின்றது

அதிக சூரியவெம்பம், வானிலை அழுத்த மாற்றங்கள், காற்றோட்ட மற்ற புழுக்கமாக அறைகளில் தங்குதல், அடிக்கடி உறங்கும் முறையை மாற்றிக் கொள்ளுதல், வேலையிலும் ஓய்விலும் மாறுதல்களை உண்டாக்கிக் கொள்ளுதல், ஏதாவது ஓரிடத்திற்கு சென்றிருந்த போது தலைவலி வந்திருந்தால், அதே இடத்தில் வேறு ஒரு சூழ்நிலையில் செல்ல நேர்ந்தாலும் தலைவலி வருதல், மதுவகைகள், சில கீரைகள், பாலடைக்கட்டி, தயிர், வினிகர், சொக்லேட், ஆடு மற்றும் கோழி போன்றவற்றின் ஈரல், ஈஸ்ட்ரோ ஜென் ஹேர்மோன், மிக அதிகமான உறக்கம், உறக்கமின்மை, மிகைபசி, இறைச்சி, தலைவலி அடிபடுதல், உடலின் உட்புற உறுப்புகளில் உண்டாகும் நோய்கள், அதிக மருந்து சாப்பிடுதல், மாதவிலக்கு, கர்ப்பம். மோசோசோடியம் குளுட்டாமேட், கவலை, மனஇறுக்கம், அசதி, வாய்வழி சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை மைக்ரேன் தலைவலியை உண்டாக்குகின்றன.

இவ்வாறு நிகழ்வதை பல விடயங்கள் தூண்டுகின்றன. ஒருவருக்கு எந்தெந்த விடயங்கள் தலைவலயைத் தூண்டுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் தலைவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் (காரணங்கள்)

* மன அழுத்தம்…

* ஒரு முடிவெடுக்கத் தீவிரமாக யோசிக்கும் போது…

* அழும்போதோ, முடித்த பின்போ….

* வானிலையில் மாற்றம் ஏற்படும்போது….

* சிரிக்கும்போது….

* உடலுறவுக்குப் பிறகு…

* பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகும்போது…

* குறிப்பாகப் பெண்கள், போர்வையால் முகத்தை மூடி தூங்கும்போது சுவாசித்த கார்பன்-டை ஆக்ஸைடையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் போது…

* ஒருவேளை உணவைத் தவிர்க்க நேரும்போது…

* காபி குடிக்கத் தவறும்போது… (அப்பழக்கம் உள்ளவர்கள்)

* சூரிய வெளிச்சம் படும்போது…

* பெட்ரோல் போன்ற கடின வாசனைகளை நுகரும் போது…

* ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன்…

* விரதம் இருக்கும்போது…..

* தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்…

* புழுக்கம் அதிகரிக்கும் போது…

* அதிக பயணம்…

* அயர்ச்சி…

* அதிக சத்தம் மற்றும் அதிக வெளிச்சம்…

* சாக்லேட் சாப்பிடும்போது…

* சீஸ், பன்னீர் சாப்பிடும்போது….

* புளிக்க வைக்கப்பட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிடும்போது..

* குளிரூட்டப்பட்ட பானங்களைப் பருகும்போது…

* அதிகமாக காபி,டீ அருந்தும்போது…

* ஃபாஸ்ட்ஃபுட் வகைகளைச் சாப்பிடும்போது…

* மின் விசிறி அல்லது ஏசியின் தாக்கம்…

* எல்லாவிதமான உடல் இயக்கத்திற்குப் பிறகும்…

* விருந்து, கேளிக்கை, சினிமா என்று நேரம் கழித்துவிட்டு வந்தபிறகு…

* எண்ணைக் குளியலுக்குப் பின்பு….

* தலைக்கு சாயம் அடிக்கும்போது…

* வெந்நீர் குளியலுக்குப் பின்பு…

* வலிப்பு இருப்பவர்களுக்கு….

* இறுக்கமான உடை அணிவது…

* தலை வாரும்போது…

* தலையணை…

* வெப்பம்…

* விதம் விதமாக அணியும் கண்ணாடி…

* கழுத்து மற்றும் தலையைச் சுற்றி இறுக அணிந்து கொள்ளும் அணிகலன்கள் அல்லது ஆடைகள் அணிவதனால்…

* குளிர்…இது போன்ற காரணிகள் தோலில் அதீத உணர்வை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்கும்..

* முடியைப் பின்னால் இழுத்துக் கட்டும்போது…

* ஷேவ் செய்யும்போது…

* கண்ணாடி அணியும்போது…

* கான்டாக்ட் லென்ஸ் அணியும்போது…

* நெக்லஸ் அணியும்போது…

* இறுக்கமான உடை அணியும்போது…

* முகத்தில் தண்ணீர் வேகமாக பட்டு குளிக்கும் போது…

* கையிலோ, தலையணையிலோ முகத்தை மூடி இருக்கும்போது…

* வெந்நீரில் முகத்தைக் கழுவும்போது…

* பெண்களின் மாதவிலக்கின் போது….

* குளிர்ந்த நீரில் முகம் கழுவும்போது – போன்ற ஏதாவது ஒன்றால் ஒற்றைத் தலைவலி ஆரம்பமாகலாம்.

தூண்டும் காரணிகள்

85% நோயாளிகளுக்கு தலைவலியை மோசமாக்கும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகளை கண்டறிந்துவிட முடியும். மாதவிலக்கு, மன அழுத்தம், மாதவிலக்கின் போது மன அழுத்தம், மது அருந்துதல், நாள்பட்ட சீஸ், நைட்ரேட் மாத்திரைகள், உயர்வான இடத்தின் அழுத்தம், அதிக சத்தம், அதிக வெளிச்சம், புகை, சிகரெட், வெப்பம் போன்றவை.

முகம் கழுவுவது, ஷேவ் செய்வது, சாப்பிடுவது, பேசுவது, குளிர்ந்த காற்றை சுவாசிப்பது, பல் துலக்குவது போன்ற சாதாரண நடவடிக்கைகள் கூட இந்த நிலையைக் கொண்டு வரலாம். அது மட்டுமின்றி விழுங்குதல், மெல்லுதல், பேசுதல், இருமுதல், கொட்டாவி விடுதல் கூட தலைவலிக்கு காரணிகளாக அமைந்துவிடும்.

இருமல், தும்மல், எடை தூக்குதல், குனிதல் போன்றவற்றால் கூட தலைவலி வரலாம். உடலுறவில் உச்சக்கட்ட நிலையை அடைவதற்கு முன்போ அல்லது பின்போ மண்டையைப் பிளப்பது போன்ற தீவிர வலி தோன்றலாம்.

வயாக்ரா போன்ற வேதிப் பொருட்கள் அடங்கிய மருந்துகளை ஆண்மை குறைபாடு உள்ள ஆண்கள் உபயோகிக்கும்போது ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். வாய் வழியே சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் கூட தலைவலியை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. தலைவலி ஆரம்பித்தவுடன் படுத்துக் கொள்ள முயற்சி செய்யவும். இருண்ட அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதமாக அழுத்திவிடுதல், ஒத்தடம் போன்றவையும் இதமளிக்கும்.

மன அழுத்தம்தான் பல நோய்களுக்குக் காரணம். அதைச் சரியாக கையாளுவது நம் கையில்தான் உள்ளது.

உடற்பயிற்சி செய்யும்போது வேதிப்பொருள் மூளையில் சுரக்கிறது. இது அதிகம் சுரக்கும்போது மகிழ்ச்சி, சிரிப்பு போன்ற உணர்வுகளும் நியூரான்களுக்கு இடையே சீராகக் கடத்தப்பட்டு மனம் நல்ல நிலையில் வைக்கப்படுகிறது. மனம் அமைதி அடைகிறது.

நம் மூளையில் இருந்து மெல்லிய மின் வீச்சுகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு வெளிவரும் மின்வீச்சுகளை விநாடிக்கு இத்தனை சுற்றுகள் (சைக்கிள்) என்று கணக்கிட்டு, டெல்டா, தீட்டா, ஆல்பா, காமா என்று ஐந்து நிலைகளாகப் பிரிக்கிறார்கள். இந்த ஒவ்வொரு சைக்கிள் நிலையும் நம் உடலிலும், மனதிலும் மாற்றம் உண்டாக்கும்.

* டெல்டா நிலை என்பது ஒருவரின் ஆழ்ந்த தூக்கத்தில் தோன்றும். இதை விநாடிக்கு 4HZ

* தீட்டா நிலை, விநாடிக்கு 8HZ இதில் மிதமான அசதி நிலை இருக்கும்

* ஆல்ஃபா மின் அலைகள். தூக்கத்துக்கும், விழிப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் 8-13HZ அளவில் இருக்கும்.

* பீட்டா மின் அலைகள் 13-28HZ என்ற அளவில் இருக்கும். >28HZக்கு மேலும் (படித்தல், எழுதுதல், உடற்பயிற்சி செய்தல்) போன்ற உடல் இயக்கங்களின் போதும் இருக்கும்.

வயதானவர்களுக்கு வரும் ஒற்றைத் தலைவலி

50 வயதிற்கு மேல் ஆண்களுக்குத்தான் ஒற்றைத் தலைவலி வாய்ப்பு அதிகம். வயதானவர்களைத் தாக்கும்போது, தலைவலியைவிட பளிச்சென வெளிச்சம் தோன்றுதல், கண் பார்வையில் சீர்க்கேடு போன்ற அறிகுறிகள் அதிகமிருக்கும். கழுத்தெலும்பு தேயும் நிலை நிறைய பேருக்கு உண்டு. பொதுவாக வயதானவர்களுக்கு தேய்வு இருக்கும்போது தலைவலி வரலாம்.

டெம்பொரல் ஆர்ட்ரைட்டிஸ்

கபாலத்துடன் முகத்தை இணைக்கும் தமனிகள் பாதிக்கப்படும்போது தலைவலி வரலாம். நோயாளிக்குத் திடீர் தலைவலியுடன் காய்ச்சலும் வரலாம். அது மட்டுமின்றி மெல்லும் போது தாடையில் வலி, விழுங்கும்போது நாக்கில் வலி, கண்பார்வையில் பாதிப்பு, இரட்டைப் பார்வை, காதில் ரீங்காரம் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படும்.

தலைவலி எவ்வளவு நேரம் நீடிக்கும்?

72 மணி நேரம் வரை நீடிக்கலாம். பொதுவாக 60% பேருக்கு ஒரு பக்கம் வலி இருக்கும். மீதி பேருக்கு இருபக்கமும் இருக்கும்.

தலைக்குள் மின்னல் போல் வெளிச்சம் உணர்வார்கள். ஒருபக்க பார்வை தற்காலிகமாக இருக்காது. நிறங்களுடன் கூடிய தாறுமாறான பட்டைகள் தலையில் பரவுவது போல் இருக்கும். உடலின் ஒரு பகுதி மரத்துப் போகலாம். கை., கால் உள்பட முகத்தில் நாக்கு, உதடுகள் கூட மரத்துப் பலமிழந்து விடும்.

குழந்தைகளுக்கு வரும் ஒற்றைத் தலைவலியின் தன்மை என்ன?

இருபக்க தலைவலியாக இருக்கும். வலியின் நேரம் 2 மணி நேரத்துக்குக் குறைவாக இருக்கும்.

மாதவிலக்குடன் ஒற்றைத் தலைவலி தொடர்பு?

பெரும்பாலான நோயாளிகளுக்குத் தலைவலி அதிகரிக்க மாதவிலக்கு முக்கிய காரணமாகும். மெனோபாஸ் ஆனவுடன் பெரும்பாலானவர்களுக்கு நோய்த்தாக்கம் குறைய ஆரம்பிக்கலாம். கர்ப்பத்தின் போது பெரும்பாலானவர்களுக்கு தாக்கம் முற்றிலும் குறைகிறது.

க்ளஸ்டர் தலைவலி (Cluster Headache )யின் தன்மை என்ன?

இது பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் வரும். மூளையின் முன் பகுதியில் ஆரம்பிக்கும். பெரும் பாலும் ஒரு பக்கம்தான் இருக்கும். பொதுவாக முதல்நாள் ஆரம்பித்த அதே நேரத்தில் அடுத்த நாளும் ஆரம்பிக்கும். இரண்டு வாரத்தில் நின்றுவிடும். சிலருக்கு வருடக் கணக்கிலும் நீடிக்கலாம். குறிப்பாக இந்த வகை தலைவலி சீராக ஒரே காலத்தில் ஏற்படும். உதாரணத்துக்கு ஒரு வருடம் குளிர்காலத்தில் வந்தால் மறுமுறையும் குளிர்காலத்தில் வரலாம். மதுபானம், நைட்ரோ கிளிசரைடு கலந்த மருந்துகளை உபயோகப் படுத்தும்போது தீவிரமாகலாம்.\

சைனஸ் தலைவலியின் தன்மை என்ன?

தலையின் முன் பகுதியில் கடுமையான வலி இருக்கும். காய்ச்சல் வரலாம். மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் சளி மூக்கின் வழியே வெளியேறலாம். தலையை அசைத்தாலோ குனிந்தாலோ வலி அதிகரிக்கலாம். கண்களுக்குப் பின் பகுதியில் வலி இருக்கும்.

ஆபத்தான தலைவலி என்பது என்ன?

ஒருவர் தன் வாழ்நாளில் அதுவரை தலைவலியை சந்தித்தே இருக்கமாட்டார். ஆனால் திடீரென ஒரு நாள் மண்டையைப் பிளப்பதைப்போல வலி ஏற்பட்டால், அது சாதாரணமானது அல்ல. மூளையில் ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் கசிய ஆரம்பித்திருக்கும். இதனுடன் கழுத்து மற்றும் முதுகு வலியும் இருக்கலாம்.

தொடர்ந்து ஏற்படுகின்ற தலைவலி, நாளுக்கு நாள் அதிகமாகின்ற தலைவலி, இடைவிடாத தலை வலி, காய்ச்சல், வலிப்பு மற்றும் வாந்தியுடன் கூடிய தலைவலி ஆபத்தானது.

உடலுறவுக்கும் தலைவலிக்கும் சம்பந்தம் உண்டா?

உடலுறவை பாதிநிலையில் விலக்குவது, விந்து வெளியேறுவதில் பிரச்சனை இருப்பின் அதற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள், விந்து முந்துதல் போன்றவை தலைவலியின் காரணங்களாகும். பொதுவாக இரண்டு புறமும் வலிக்கும். உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைவதற்கு சற்று முன்பு ஆரம்பித்து விடும்.

பெற்றோருக்கு ஒற்றைத் தலைவலி இருந்தால் குழந்தைகளுக்கும் வருமா?

கண்டிப்பாக வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் தலைவலி வரும் வாய்ப்பு அதிகம். ஒற்றைத் தலைவலி இருக்கும் குடும்பத்தில் வாரிசுகளுக்கும் வரும்.

ஆதாரம் : தமிழ் மருத்துவம்.

கடைசியாக மாற்றப்பட்டது : 6/15/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate