অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நீரிழிவும் மருந்துகளும்

நீரிழிவும் மருந்துகளும்

நீரிழிவு நோய்

நவீன மருந்துகள் நீரிழிவு நோயாளிகளுக்கு அபரிதமான நன்மைகளைச் செய்துள்ளன. நீரிழிவு என்பது பயங்கர நோயாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. குறைந்த வயதில் மரணமடைவதற்கு அதுவும் முக்கிய காரணமாக இருந்தது.

ஆறாத புண்களுக்காக பலரும் கால்களை இழந்தார்கள். ஆனால் இன்றைய மருந்துகளாலும் நீரிழிவு பராமரிப்பு பற்றிய நவீன அறிவியலாலும் நீரிழிவு நோயாளிகளால் ஏனையவர்களைப் போல மகிழ்ச்சியாக வாழ முடிகிறது. முற்காலம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இன்று அவர்களுக்கு இல்லை. "இந்த மருந்துகளைச் சாப்பிட்டுத்தான் எனக்கு நோய்" எனப் பலர் சொல்வார்கள்

ஆனாலும் மருந்துகள் காரணமாகவே நீரிழிவு நோயாளிகள் நீண்ட காலம் வாழ முடிகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதால் மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரகப் பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படாமல் தடுக்க முடிகிறது. மரணங்கள் பின்தள்ளப்பட்டு முழுமையான ஆயுள் கிட்டுகிறது.

இருந்தும் ஒருசில நோயாளிகள் தங்கள் அறியாமையினால் நோயை ஆபத்தாக்கிக் கொள்கின்றார்கள். அதிக வேலைப்பளு, நித்திரைக் குறைவு, மனச்சோர்வு போன்ற காரணங்களினால் ஏற்படக்கூடிய களைப்பு தலைச்சுத்து, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலும் அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததினால்தான் ஏற்படுகின்றது என எண்ணி சர்க்கரை நோயாளர்கள் சர்க்கரையை தேவையின்றி உபயோகித்து அதன் அளவை இரத்தத்தில் அதிகரிப்பதும், வேறு சிலர் தாம் இன்று சீனிப்பண்டம் அதிகம் சாப்பிட்டுவிட்டோம் என தாமே தீர்மானித்து மருத்துவரின் ஆலோசனையின்றி அதிகமான மருந்தை உட்கொள்வதும் பெரும் ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன.

நோயாளிகள் சரியான முறையில் உணவு முறையைக் கடைப்பிடித்து பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளை அளவு மாறாமல், வேளை தவறாமல் உட்கொள்வதன் மூலம் இதைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது.

தங்களது நீரிழிவின் அளவை கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கே இது ஏற்படலாம் என்பது பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. சீனியின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு சீனியின் மட்டம் திடீரெனக் குறையும் என யாரும் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் 10000 Type 2 நீரிழிவாளர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு எதிர்பாராத முடிவைக் கொடுத்தது. ஒரு வருடம் ஆய்வு செய்யப்பட்ட போது அவர்களில் 10 சதவிகிதமானவர்களுக்கு சீனிமட்டம் குறைந்ததைக் கண்டறிந்தார்கள்.

குறைந்த சீனி மட்டம் என்பது எது?

சாதாரண சீனி மட்டம் என்பது 60 mg/dl  முதல் 118 mg/dl  வரையாகும். சீனி மட்டமானது 60 mg/dl (3.3 mmol/L) ) க்குக் கீழ் குறைந்தால் அது Hypoglycemia எனப்படும் குறைந்த சீனி மட்டம் எனப்படும். இந்த நிலையில் அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். மேலும் குறைந்தால் கோமா என்று சொல்லப்படும் மயக்கத்திற்கும் இட்டுச் செல்லலாம்.

அறிகுறிகள்

நடுக்கம், பயம், வியர்வை, களைப்பு, கடுமையான பசி, தலையிடி, கண்பார்வை மங்கல், தலைச்சுற்று, நெஞ்சுப் படபடப்பு, தடுமாற்றம், பேச்சுத் திணறல், கூடுதலான நித்திரைக் குணம், வயிற்று வலி, ஓங்காளம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

இவ்வறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்ற வேண்டும் என்பதில்லை. ஒரு சில அறிகுறிகள் மட்டும் தெரிந்தாலும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

சில தருணங்களில் நோயாளி உணர்வதற்கு முன்னரே உடன் இருப்பவர்கள் அவரில் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கக் கூடும். நீங்கள் குழப்படைந்திருப்பதையும், கூடுதலாகச் சினமடைவதையும், வெளிறிப் போயிருப்பதையும், வியர்த்திருப்பதையும் அவர்கள் அவதானிக்கலாம்.

இவ்வாறு நேரும்போது குளுக்கோ மீட்டர் இருந்தால் உடனடியாக இரத்தத்தில் சீனி மட்டத்தை அளவிடுவது அவசியம். அதில் சீனி மட்டம் 60 mg/dl (3.3 mmol/L) க்குக் குறைவாக இருந்தால் உங்கள் இரத்தத்தில் சீனி மட்டம் குறைவிட்ட நிலை (Hypoglycemia) என நிச்சயமாகச் சொல்லலாம்.

இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது?

உபவாசம், விரதம், அல்லது பட்டினி கிடப்பது, போதிய உணவு எடுக்காதது, காலம் தாழ்த்தி உண்பது, வழமைக்கு மாறான கடும் உடற்பயிற்சி அல்லது கடுமையான உடல் உழைப்பு போன்றவை காரணமாகலாம்.

திடீரென வழமைக்கு மாறாக மருந்தின் அளவை அதிகரிப்பதும் காரணமாகலாம். 'இன்றைக்கு சாப்பாடு கூடிப் போச்சு' என்று எண்ணி தேவைக்கு அதிகமான இன்சுலின் மருந்தை ஏற்றுவது அல்லது கூடிய அளவு நீரிழிவு மாத்திரைகளை எடுப்பதாலும் இது நிகழலாம்.

நீரிழிவு மருந்துகளில் மெட்போரின் மருந்தை மட்டும் எடுக்கும்போது குருதி குளுக்கோஸ் அளவானது வழமையை விடக் குறைவதில்லை. அதேபோல acarbose, pioglitazone, rosiglitazone போன்றவையும் ஏற்படுத்துவதில்லை. ஏனைய எல்லா மருந்துகளையும் அதிகம் உட்கொண்டால் அந்நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

இது ஆபத்தான நிலையாகும். இவ்வாறு நேர்ந்தால் உடனடியாக சிறிது குளுக்கோஸ் (15 கிராம்- -4 தேக்கரண்டி) குடியுங்கள். குளுக்கோஸ் கிடைக்காவிட்டால் ஒரு மேசைக் கரண்டியளவு சீனி கரைத்துக் குடியுங்கள். அல்லது அரைக் கப் பழச்சாறோ இனிப்புச் சேடாவோ குடியுங்கள். 10 நிமிடம் ஓய்வு எடுக்க சுகம் தெரியும். உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுங்கள். ஏனைய இனிப்புகளை விட குளுக்கோஸ் விரைவாக குருதியால் உறிஞ்சப்படும் என்பதாலேயே அது சிறந்தது.

உங்களால் உடனடியாக இரத்த குளுக்கோஸ் நிலையை அளவிட முடியாதிருந்தால், ஆனால் அதே நேரம் அறிகுறிகள் நிச்சயமாக சீனி மட்டம் குறைந்திருப்பதே எனத் தெரிந்தாலும் மேற் கூறிய நடவடிக்கைகளை எடுங்கள்.

நீரிழிவு இல்லாதவர்களிலும் ஏற்படுமா?

நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களில் ஓரு சிலர் குருதியில் சீனியின் அளவு குறைவதற்குரிய அறிகுறிகள் தமக்கு ஏற்படுவதாகக் கூறுவதுண்டு. ஆனால் அவர்களில் உண்மையான சீனி குறைதல் ஏற்படுவது சாத்தியமில்லை.

ஆயினும் நீரிழிவின் முன்நிலையில் (Pre Diabetes) இருப்பவர்களுக்கு அவ்வாறான நிலை ஏற்பட ஓரளவு சாத்தியமுண்டு. அவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து உணவு உட்கொள்ளாதிருந்தால் அவர்களது சீனி மட்டம் குறையலாம்.

மிக மிக அரிதாக இன்சுலினை உறபத்தி செய்யும் கட்டிகள் (insulinomas) தோன்றினாலும் அவ்வாறான நிலை தோன்றலாம்.

மேற்கொண்டு செய்ய வேண்டியவை

குருதியில் குளுக்கோஸ் அளவு குறைந்தால் நிச்சயம் உங்கள் மருத்துவரைக் காண வேண்டியது அவசியமாகும். அவர் கீழ் கண்ட விடயங்களில் மேலும் ஆலோசனைகள் வழங்குவார்.

மருந்துகளை மாற்றக் கூடும் அல்லது அவற்றின் அளவுகளில் மாற்றம் செய்யவும் கூடும். அவற்றை உணவிற்கு முன்னரா பின்னரா எவ்வளவு நேர இடைவெளியில் எடுக்க வேண்டும் என்பது பற்றி விளக்கக் கூடும்.

சரியான உணவு முறைகள் பற்றியும் அவற்றை எவ்வளவு கால இடைவெளிகளில் எடுக்க வேண்டும் என்பதிலும் ஆலோசனைகள் வழங்கக் கூடும்.

உணவுகளை தவிர்ப்பதும், விரதங்கள் பிடிப்பதும் நீரிழிவுள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. உடற் பயிற்சிகளுக்கு முன்னரும் பின்னரும் இரத்த குளுக்கோஸ் அளவைப் பரிசோதிப்பது சிறந்தது. அது 100 ற்கு கீழாக இருந்தால் சிறிய உணவு உட்கொண்ட பின்னர் பயிற்சியைச் செய்யலாம். நீரிழிவு மருந்துகளை உட்கொண்ட சிறிது நேரத்திற்குள் உடற் பயிற்சி செய்வது உகந்ததல்ல.

மதுபானம் நல்லதல்ல. அதுவும் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்தினால் சீனியின் அளவு குறையலாம். மது அருந்தி ஓரிரு நாட்களுக்குப் பின்னரும் அவ்வாறு ஏற்படலாம் என்பதால் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ் மருத்துவம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/23/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate