இது பெண்களை மட்டுமே பாதிக்கும் ஒரு மரபியல் கோளாறு ஆகும். இனக்கீற்று (குரோமோசோம்) இயல்பற்று இருப்பதே இதற்குக் காரணம். பால்வேறுபாட்டுக்குரிய இனக்கீற்றுகள் அனைத்துமோ அல்லது ஒன்றின் பகுதிகளோ இல்லாமல் இருப்பதும் அல்லது பிற குறைபாடுகளுடன் இருப்பதோ இந்நிலைக்குக் காரணம் (இயல்பான மனிதர்களில் 46 இனக்கீற்றுகள் இருக்கும். இவற்றில் இரண்டு பால்வேறுபாட்டுக்கு உரியவை). சில வேளைகளில் பால்வேறுபாட்டு இனக்கீற்று சில உயிரணுக்களில் மட்டும் இருக்காது. இதை ”டர்னர் மொசைக்கிசம்” என அழைப்பர்.
23 இணை இனக்கீற்றுகளுடன் ஓர் இயல்பான குழந்தை பிறக்கிறது. ஒரு இனக்கீற்று இணை பால்வேறுபாட்டைத் தீர்மானிக்கிறது. இதை பால்வேறுபாட்டு இனக்கீற்றுகள் என அழைக்கிறோம். ஒரு பால்வேறுபாட்டு இனக்கீற்று தந்தையிடம் இருந்தும் இன்னொன்று தாயிடம் இருந்தும் வருகின்றன. தாயிடம் இருந்து பெறுவது எப்போதும் X இனக்கீற்றே. தந்தையிடம் இருந்து X அல்லது Y இனக்கீற்றைப் பெறலாம். பெண் குழந்தைக்குப் பொதுவாக இரு X இனக்கீற்றுகளும் (X X), ஆண் குழந்தைகளுக்கு ஒரு X-ம் ஒரு Y-ம் இருக்கும் (X Y). Y இனக்கீற்று ஆண்பாலைத் தீர்மானிக்கிறது. ஆகவே, டார்னர் நோய்க்குறியில் (பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை) இருப்பது போல், Y இனக்கீற்று இல்லாமல் இருந்தால், குழந்தை நிச்சயமாகப் பெண்குழந்தையாகவே இருக்கும். பிறப்புறுப்பு வளர்ச்சியின்மைக் கோளாறு உள்ள ஒரு பெண் குழந்தைக்கு X இனக்கீற்றின் ஒரு பகுதி அல்லது முழுமையும் இல்லாமல் இருக்கும். இப்பெண்குழந்தை, இரண்டு முழு X இனக்கீற்றுக்குப் பதில் ஒன்றை மட்டுமே பெற்றுள்ளது என்று பொருள்.
இயல்பற்ற பால்வேறுபாட்டு இனக்கீற்றுகளால் உண்டாகும் ஒரு மரபியல் கோளாறே டார்னர் நோய்க்கோளாறு எனப்படும் பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை நோய்.
முழுமையற்ற X இனக்கீற்று அல்லது X இனக்கீற்றே இல்லாமல் இருப்பது போன்ற குறைபாடுகள் உள்ள பெண்களை இது பாதிக்கிறது.
பிறப்புக்குப் பின்னான சோதனைகள்
டர்னர் நோயை (பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை) பிறப்புக்குப் பின் எந்த வயதிலும் கண்டறியலாம். இதய நோய்கள், இயல்புக்கு மாறான அகலக் கழுத்து, கால்கை வீக்கத்தைக் கொண்டு பொதுவாக பிறப்பிலேயே இதைக் கண்டறியலாம். இருப்பினும், பல ஆண்டுகளாக கண்டறியப் படாமலேயே போகலாம். பெண் தக்க வயதை அடையும் போது பருவம் அடையாமல் இருப்பதைக் கொண்டே அறியப்படும்.
கருவகை அல்லது இனக்கீற்று ஆய்வு என்ற சோதனை மூலம் ஒருவரின் இனக்கீற்று தொகுப்பு சோதிக்கப்படுகிறது. இது டர்னர் நோயைக் கண்டறிய முதன்மையானச் சோதனையாகும்.
டர்னர் நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால், குள்ள வடிவம், பாலியல் வளர்ச்சிப் பிரச்சினைகள், கற்பதில் உள்ள சிக்கல்கள் போன்ற தொடர்புடைய அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்.
குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரை போன்ற பெண் இயக்குநீர் சிகிச்சைகளின் மூலம் இரண்டாம் நிலை பாலியல் தன்மைகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. சிறந்த எலும்பு சீர்மை, இதய இரத்தக் குழாய் ஆரோக்கியம், திசு ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு பெண் இயக்குநீர் முக்கியமானது. இயற்கையாகவே பருவம் அடையாத டர்னர் நோய் உள்ள பெண்களுக்கு பெண் இயக்குநீர் மாற்றுச் சிகிச்சை அளிக்காவிட்டால் எலும்புப் புரை மற்றும் இதயக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம்.
தற்கால இனப்பெருக்க உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, வேறொருவரால் வழங்கப்படும் கருமுட்டையைக் கொண்டு கரு உருவாக்கப்பட்டு அதனை டர்னர் நோய் உள்ள பெண் சுமக்கலாம்.
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020
தோல் அலர்ஜி ஏற்பட காரணங்கள் மற்றும் அதன் தடுப்பு ம...
ஆக்னி வல்காரிசின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் எள...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
ஃபிரே நோய் பற்றிய குறிப்புகள்