অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை

டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை

டெங்கு காய்ச்சல்

இது டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சலாகும்.

எப்படி பரவுகிறது?

நல்ல நீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு வைரசுடன் உருவாகிறது. இந்த கொசுக்கள் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவுகிறது.

கொசு உற்பத்தியாகும் இடம்

டயர், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், திறந்த கிணறு, பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் கப்களில் தேங்கும் நீரில் உருவாகிறது. ஏடிஸ் கொசு மூன்று வாரம் உயிர் வாழும். இந்த மூன்று வார காலத்தில் ஒரு கொசு நல்ல நீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. ஏடிஸ் கொசு பகலில் மனிதர்களை கடிக்கும் தன்மையுடையது.

காய்ச்சலின் அறிகுறிகள்

காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். டெங்கு வைரஸ் ரத்த தட்டணுக்களை அழித்துவிடும் தன்மை உடையது. ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர் பாதையில் ரத்த கசிவு ஏற்படும்.

கவனிக்க வேண்டியவை

டெங்கு காய்ச்சலுக்கு உரிய மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டும். தாமாகவே கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்கி உட்கொண்டாலோ, போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.

எவ்வாறு குணப்படுத்தலாம்?

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், முறையான கவனிப்பும் கொடுத்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம். டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் கொடுக்கப்படும் உயிர்காக்கும் ஓஆர்எஸ் கரைசல் போன்ற நீராகாரம் தேவையான அளவு கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் நின்ற பின்னர் மூன்று நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்க வில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் டாக்டரிடம் செல்ல வேண்டும்.

வராமல் தடுக்க

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் இடங்களை அழிக்க வேண்டும். வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.

பன்றிக்காய்ச்சல்

பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடையே இந்த காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. தற்போது பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவுவதில்லை. ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமிகளால் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது.

அறிகுறிகள் என்ன?

சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு இந்த அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

எப்படி பரவுகிறது?

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் இருமும்போதோ, தும்மும்போதோ வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்த கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை, குளிர்சாதன பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை நாம் தொடும் போது, நம்முடைய கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது. அதன் பின் நாம் கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடும்போது நமக்கும் கிருமி தொற்று ஏற்படுகிறது.

வராமல் தடுப்பது எப்படி?

வீட்டில் இருந்து பள்ளி, அலுவலகம் சென்றவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பியவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக கழுவ வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவினால் மிகவும் நல்லது. கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகியிருக்க வேண்டும்.

மாத்திரை, மருந்துகள் என்ன?

பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரை உள்ளது. டாக்டர்களின் ஆலோசனைப்படி டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் காய்ச்சல் குணமாகிவிடும்.

காய்ச்சல் வந்தால்..

காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோசனை பெற்று முறையான சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாமாகவே கடைகளுக்கு சென்று மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. பள்ளி, அலுவலகம் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். பயன்படுத்திய கைக்குட்டை மற்றும் இதர துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும்.

டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.

டெங்கு காய்ச்சல்: காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். டெங்கு வைரஸ் ரத்த தட்டணுக்களை அழித்துவிடும். பன்றி காய்ச்சல்: சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.

ஆதாரம் : தி இந்து நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate