অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மலச்சிக்கலின் பாதிப்பு, தடுக்கும் வழிமுறை

மலச்சிக்கலின் பாதிப்பு, தடுக்கும் வழிமுறை

நோய்களில் மிகவும் தொல்லை தரும் நோய் மலச்சிக்கலாகும். பொதுவாகவே மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்போதும் தங்கள் மலப்போக்கினைப் பற்றியே சிந்தனைச் செய்வார்கள். அநேகமாக இவர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் தேவையின்றி மலமிளக்கிகளை உண்டு வருகின்றனர். பலருக்கு தலைவலி, உடற்சோர்வு, பசி குறைதல் போன்ற தொல்லைகள், "மலம் சரியாகப் போவதில்லையே" என்ற ஒருவித மனப்பதற்றத்தினால் ஏற்படுகின்றனவே தவிர, மலச்சிக்கலினால் அல்ல

மலச்சிக்கலின் இரு வகைகைள்

மலம் நாள்தோறும் செல்லும். ஆனால் இறுகிப் போய் கட்டியாகிச் செல்லும். முக்க வேண்டிய அவசியம் இருக்கும்.

மலம் இறுகல் இன்றி சாதாரணமாக இருக்கும். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் செல்லும்.

மலச்சிக்கலுக்கான காரணங்கள்

நார்ச்சத்து மிகுதியாய் உள்ள உணவை குறைவாக உட்கொள்தல், அல்லது நார்ச்சத்தையே நாடாதிருத்தல்.

குடலில் ஏற்படும் கட்டி, புற்றுநோய், அடைப்பு, நீண்ட காலக் குடலிறக்கம், மூலநோய், குதத்தில் ஏற்படும் வெடிப்பு முதலிய நோய்கள். தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பி குறைவாக சுரத்தல், உடலில் சுண்ணாம்புச் சத்து அதிகமாகுதல், பொட்டாசியம் குறைதல், மனச் சோர்வு.

போதிய உடற்பயிற்சியின்மை

அடிக்கடி சிறுநீர் கழிப்தைத் தவிர்க்க முதியவர்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதில்லை. இதுவும் மலச்சிக்கலுக்கு காரணமாக அமைகிறது. அதிலும் பெண்கள் இதை அதிகம் செய்கின்றனர்.

சில மாத்திரைகள்: இரும்புச்சத்து மாத்திரை, "கோடிகன்" கலந்த வலி நிவாரணி, அலுமினியம் சேர்ந்த வயிற்றுவலி மாத்திரை, சிறுநீர் வெளியேற பயன்படுத்தும் மாத்திரை முதலியவற்றை உட்கொள்தல், தூக்க மாத்திரையை அதிகமாக உட்கொள்தல்.

மலம் கழிக்கும் கழிவறை சரியாக இல்லாததாலும், இடுப்பு, முழங்கால் வலியால் அவதிப்படும் முதியோர் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதாலும் மலச்சிக்கல் ஏற்படும்.

மலச்சிக்கல் தொல்லைகள்

  • மலச்சிக்கலை கவனிக்காமல் விட்டால் பல தொல்லைகள் உண்டாகும். அத்தொல்லைகள் உடலுக்கு கெடுதல் விளைவிப்பதோடு உயிருக்கும் சில சமயங்களில் ஊறு விளைவிக்கும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ஏற்படும் மலச்சிக்கலால் தொல்லைகள் இல்லை. ஆனால் பல மாதங்கள், பல ஆண்டுகள் தொடர்ந்து இருந்தால் அதனால் பல தொல்லைகள் ஏற்படலாம். அவற்றில் சில:
  • முதியவர்கள் மலச்சிக்கலினால் அவதியுறும்போது நெஞ்சு வலியும், மயக்கமும் வரக்கூடும்.
  • குடல் இறக்கம் மற்றும் கால்களிலுள்ள ரத்தக் குழாய்கள் சுருண்டு பெரிதாகி, நோய் வர வாய்ப்பிருக்கிறது.
  • மலம் சரிவரப் போகாததால் மனதில் ஒருவித துன்பம், ஒருவித பதட்டம் பற்றிக் கொள்ளும்.
  • மலம் கட்டியாகப் போவதால் குதத்தில் விரிசல் ஏற்பட்டு அதனால் ரத்தக் கசிவு ஏற்படும்.
  • மலச்சிக்கலினால் சில நேரங்களில் திடீரென்று சிறுநீர் அடைப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
  • மலம் சிறுகுடலில் தேங்கி நிற்பதால், சிறு குடலில் அடைப்பு ஏற்படலாம்.
  • மலம் பெருங்குடலில் தேங்கி, சில சமயம் முழுமையாய் பெருங்குடலை அடைத்துவிடும். அப்படி முழுமையாய் பெருங்குடலை அடைத்து விடுவதால் அவ்விடத்தில் தேங்கியுள்ள அசுத்த நீர் மட்டும் கசிந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். அது வயிற்றுப் போக்குப் போல காணப்படும்.
  • மலமிளக்கி மாத்திரைகளைத் தொடர்ந்து உண்ணும் தீய பழக்கம் உண்டாகும்.
  • மலச்சிக்கலுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருந்தால் அந்த நோய்க்குரிய சிகிச்சையை முதலில் செய்துகொள்ள வேண்டும். அதைத் தவிர சில விதிமுறைகளை கடைப்பிடித்தால் முதுமையில் மட்டுமல்ல, இளமையிலும் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க

  • ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து தம்ளர் (2-3 லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும். இதற்கு மேலேயும் குடிக்கலாம்.
  • அன்றாடம் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • தேவையற்ற மாத்திரைகளை நிறுத்த வேண்டும்
  • முக்கியமாக நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை நிறைய உண்ண வேண்டும்.

கேழ்வரகு, கோதுமை, திணை, வரகு போன்ற உணவு வகைகள் நார்ச்சத்து மிகுந்தவை. தவிட்டிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நாள்தோறும் 2-4 கரண்டி தவிட்டைத் தண்ணீரிலோ, பாலிலோ கலந்து குடித்தால் மலச்சிக்கலை எளிதாக தவிர்க்கலாம். கீரை, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், காலிபிளவர், புடலங்காய், பாகற்காய் முதலிய காய்களிலும் பேரீச்சம் பழம், அத்திப் பழம், மாம்பழம் ஆகிய பழங்களிலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

நம்மில் பலர் வாழைப்பழம் மலச்சிக்கலுக்கு மிக நல்லது என எண்ணுகிறார்கள். ஆனால் அதில் மாவுச்சத்து தான் நிறைய உள்ளது. நார்ச்சத்து மிக குறைவுதான். அந்த மாவுச்சத்து மலத்தைப் பெருக்க வைத்து இளக்கி விடதான் உதவும். மிளகு, ஓமம், கொத்தமல்லி, மிளகாய் வற்றல் போன்ற பொருட்களிலும் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.

இம்முறைகளினால் பயனில்லை என்றால் மலமிளக்கி மாத்திரைகளை இடைவிட்டோ, தொடர்ந்தோ முதியவர்கள் உண்ணலாம். ஆனால் அதையும் ஒரு மருத்துவரின் ஆலோசனைப் பெற்று உட்கொள்வதே நல்லது. நோய் வாய்ப்பட்ட முதியவர்கள், மிக வயதான முதியவர்கள் இனிமாவை மேற்கொண்டோ, மலமிளக்கி மாத்திரைகளை ஆசனவாயில் நுழைத்தோ மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஆனால் முடிந்த அளவிற்கு இவற்றை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

மலச்சிக்கல் நோயின் அறிகுறிகள்

எந்த நோய்க்கு இது அறிகுறி என்றால் பொத்தம் பொதுவாக எல்லா நோய்களுக்குமே மலச்சிக்கல் அறிகுறி என்று சொல்லி விடலாம். அதில் உச்ச கட்டமாக மலச்சிக்கல் அதிகமாக இருந்தால், நாள்பட்டதாக இருந்தால் அது மூல நோயில் முடிந்து நம்மை மூலையில் உட்கார வைக்கும் ஆபத்து இருக்கிறது. உள் மூலம், ஆசனவாய்க்கட்டி, ஆசனவாய் பிளவு, பௌத்திரம் போன்ற நோய்கள் கடுமையானவை. இவை அனைத்துமே மலச்சிக்கலில் இருந்துதான் தொடங்குகின்றன. எந்த வகையான மூலம் என்பதனை அறிந்து அதற்கான மருந்துகளை சாப்பிட வேண்டும். மலச்சிக்கல், ஆசனவாய் எரிச்சல், வலி, மலத்துடன் ரத்தம் போகுதல், தனியாக ரத்தம் சிவப்பு நிறத்தில் போகுதல், ஊறல், ஆசனவாய் நமச்சல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். ஆக மொத்தத்தில் காலையில் மலச்சிக்கல் இன்றி அன்றைய நாள் தொடங்க வேண்டும். மலச்சிக்கல் இன்றி அன்றைய நாளின் மாலை, இரவுப் பொழுது விடிய வேண்டும். அப்படி விடிந்தால் தான் அந்த நாள் இனிமையான நாளாக இருக்கும்.

மலச்சிக்கல் இருப்பவர்கள், வயிற்றில் பிரச்சினை இருப்பவர்கள் பொதுவாக வாய்ப்புண் இருப்பதாகச் சொல்வார்கள். வாய்ப்புண் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. புண் வாயிலும் இருக்கலாம், வயிற்றிலும் இருக்கலாம். பல், ஈறு, தாடை, உதடுகளில் ஏதேனும் நோயோ அல்லது ரத்தக் கசிவோ அல்லது பல்லில், மேல் அன்னத்தில் செய்த ஏதேனும் சிகிச்சையால் கூட வாய்ப்புண் வரலாம். சிறிய புண்ணாக இருந்து அது பெரிய புண்ணாகக் கூட மாறலாம். சிலருக்கு வாய்ப்புண் வருவது, தொடங்குவது, வாய்ப்புற்று நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். எல்லா வாய்ப்புண்ணையும் புற்றுநோய் என்று சொல்லிவிட முடியாது. இதற்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சில வகை வைரஸ்கள் வாய்ப்புண்ணை ஏற்படுத்தலாம். வயிற்று அல்சர், அமீபியாசிஸ் மற்றும் வயிற்றுப் பூச்சிகள், சாப்பிடுகின்ற உணவின் தன்மைகள் இன்னும் வயிற்றில் உள்ள ஏகப்பட்ட கிருமித் தொற்றுகள் போன்றவை மூலமும் வாய்ப்புண் உண்டாகலாம். வாய்க்கும், வயிற்றுக்கும் உள்ள மாறாத தொடர்பு இது. வாயால் வயிறு பாதிக்கும். வயிறால் வாயில் புண்கள் ஏற்படும். இதற்கான காரணங்களை கண்டறிந்து மருந்துகளை சாப்பிட்டால் வாயில் வாய்ப்புண் இருக்காது.

ஹோமியோபதி மருந்துகள்

தாய் திரவங்களும், POTENCY மருந்துகளும், பல வகை பயோகெமிக்கல் மருந்துகளும், சில வகை பயோகெமிக்கல் மருந்துகளின் கூட்டுக் கலவை மருந்துகளும் மலச்சிக்கல், மூலம், வாய்ப்புண் போன்ற நோய்களை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. இதில் உடலும், மனநலமும் சேர்ந்து இருப்பதால் ஒரு மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமானது.

ஆதாரம் : தமிழ்சகூடல்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate