அறிமுகம்
உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துணவுத் தேவைகள் ஒரு கட்டத்தில் மறைந்து விட்டாலும் ஒரு தனிமனிதன் தன் வாழ்நாள் முழுவதும் நல்ல உடல்நலத்தைப் பேண சத்துணவு தேவைப்படுகிறது. நல்ல சத்துணவு சாப்பிட்டால் நோய், அறுவைச் சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு ஆகியவற்றிலிருந்து சீக்கிரம் குணமடைவதுடன் வாழ்வின் ஒட்டுமொத்தத் தரம், வாழ்நாள் ஆகியவற்றை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
51-வயதான ஒருவரின் சத்துணவுத் தேவைகள் 60, 70, 80 மற்றும் 90 வயதானவர்களின் தேவைகளை விட மாறுபட்டுள்ளன. துரதிருஷ்டவசமான, போதிய தகவல் இல்லாத காரணத்தினால் வயதுப் பிரிவினரின் தேவை மற்றும் பரிந்துரை குறித்து மேலும் நம்மால் கூற முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு வயதானவருக்கும் அவருக்கென பரிந்துரைக்கப்பட்ட சத்துணவு குறைவாகவே இருக்கும். ஏனெனில், முதியவர்களுக்கான சத்துணவு ஆய்வின்படி அவை வழங்கப்படவில்லை. அவை வயது குறைந்தவர்களின் ஆய்விலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கூறப்பட்டவை; முதியவர்களுக்கு ஏற்படும் தீராத நோய்களை பற்றியும் அதனால் உட்கொள்ளும் மருந்துகள் சத்துணவைப் பாதிக்கலாம் என்பது பற்றியும் இந்த ஆய்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
வயதாகும்போது உடலில் காணப்படும் குறைந்த எடை (தசை மற்றும் எலும்பு) காரணமாக ஆற்றல் தேவைகள் மிகவும் குறைவாகவே இருப்பதாலும் கொழுப்பு அதிகம் தேவைப்படுவதாலும், 'ஓய்வு ஆற்றல் செலவு' (ஆர்.ஈ.ஈ.) நிலை ஏற்படுகிறது. எலும்பு மற்றும் மூட்டு வலி, உட்கார முடியாத நிலை, ஏஞ்ஜினா உட்பட வியாதிகளும் கூடவே தோன்றுவதால் முதியவர்களிடம் உடல் செயல்பாட்டு நிலையும் வெகுவாகக் குறைந்து விடுகிறது.
எனவே, ஆர்.ஈ.ஈ. குறைதல் மற்றும் உடல் செயல்பாடு குறைதல் ஆகிய இரண்டும் ஒருசேரத் தோன்றுவதால் ஆற்றல் தேவைகளும் குறைந்து விடுகின்றன. மனிதர்களிடத்தில் இவ்வகை மாற்றங்கள் வெவ்வேறு சமயங்களில் தோன்றுவதும் தெரியவந்துள்ளது. எனவே, கலோரித் தேவைகளை வயதை வைத்துக் கணக்கிட்டு விட முடியாது.
ஆரோக்கியமான முறையில் முதுமையடைவதற்கான உணவுப்பழக்க உத்திகள்
- முதியவர்களை மூன்று பிரிவுகளாகப் பின்வருமாறு பிரிக்கலாம் - செயல்படும் முதியவர்கள், பலவீனமான முதியவர்கள் மற்றும் நீண்ட நாளாக நோய்வாய்ப் பட்டவர்கள். ஒவ்வொரு பிரிவினருக்கும் குறிப்பிட்ட ஒரு சத்துணவுத் தேவை இருக்கின்றது. இவர்கள் உண்டு வாழும் உணவுப் பழக்கத்தைப் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன: வயது, பாலினம், வாழும் நிலைமை, உளவியல் மற்றும் உடல் நலம், உட்கொள்ள வேண்டிய மருந்துகள் மற்றும் சமூகத்தாரின் ஆதரவு ஆகியவை.
- சில சத்துணவு வகைகளைத் தவிர ஆரோக்கியமான இளைஞர்களின் தேவைகளுடன் ஒப்பிட்டால், செயல்படும் முதியவர்களின் சத்துணவுத் தேவையில் பெரும் மாற்றங்கள் ஏதும் ஏற்படாது. பரிந்துரைக்கப் படுவதை விட இவர்களிடத்தில் கால்சியம், ஃபோலேட் மற்றும் துத்தநாகம் ஆகியவை குறைவாகவே காணப்படுகின்றன; இதை பால் மற்றும் பாலின் உப பொருட்களிலிருந்து சுலபமாகப் பெற்றுக் கொள்ளலாம். பச்சைக் காய்கறிகளிலும் பழங்களிலும் ஃபோலேட் அதிக அளவில் காணப்படுகிறது; சிவப்பு இறைச்சி, மீன் மற்றும் முழுத்தானியங்களில் துத்தநாகம் காணப்படுகிறது.
- பலவீனமான முதியோர்களின் சத்துணவுத் தேவைகள் மிகவும் மாறுபடலாம்; சத்துணவுக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயமும் இப்பிரிவினருக்கு அதிக அளவில் உண்டு. பலவீனத்தின் சத்துணவுக் குறைபாட்டுக் காரணிகளாக பசியின்மை, குறைந்த அளவு உணவு உட்கொள்வது, தானாகவே எடை குறைவது மற்றும் சார்கோபேனியா (வயதாவதால் தசைகளின் எடை மற்றும் பலம் படிப்படியாகக் குறைதல்) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
- இதய நோய் மற்றும் உயர்-இரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் அவதிப்படும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு அந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சிறப்பான சத்துணவுத் தேவைகளுக்கான அவசியம் இருக்கிறது. நீண்ட கால இதய நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அடர்த்தியான கொழுப்பை - சிவப்பு இறைச்சி, உணவுக்கொழுப்பு வகைகளான நெய், வெண்ணெய், க்ரீம், தேங்காய் எண்ணெய் - ஆகியவற்றைக் குறைக்கவும் நார்ச்சத்து வகைகளை - முழுத்தானிய வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை - அதிகரிக்கவும் ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கவும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
- ஹைப்பர்டென்ஷனைக் குறைப்பதற்கு எடையக் குறைத்தல், உப்பின் அளவைக் குறைத்தல், கால்சியம் உள்ள உணவு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தினமும் உட்கொள்வதை அதிகரித்தல் ஆகிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
- ஒவ்வொரு உணவு வகையிலிருந்தும் சிறிதளவு பெறப்பட்ட சமநிலையான உணவுப் பழக்கமானது பல ஆக்கபூர்வமான விளைவுகளை உருவாக்குவதுடன் ஒருவரது உடல் மற்றும் மனநிலையையும் நல்ல விதத்தில் பாதிக்கக் கூடியதாகும். உடலியக்கத்திற்குத் தேவையான அனைத்துச் சத்துணவுகளையும் இது அளிப்பதுடன் நோய் உண்டாவதை முடிந்தவரை தாமதப்படுத்தி, தற்போது இருக்கும் நல்ல உடல்நிலையை அவ்வாறே பராமரிக்கவும் உதவுகிறது.
- உணவுக் கட்டுப்பாட்டைச் சரிவர மேற்கொண்டால், புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க அது மிகவும் உதவும். ஃபைடோ-கெமிகல் பொருட்கள் அடங்கிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உட்கொண்டு, கொழுப்பை அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்த்தாலே புற்றுநோய் வராமல் தடுக்கப் பேருதவியாக இருக்கும்.
ஆதாரம் : ஹெல்பேஸ் இந்தியா அறக்கட்டளை