Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு

Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு
india_flag

Government of India



MeitY LogoVikaspedia
ta
ta

வலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி?

Review in Process

Contributor  : Ganesan14/05/2022

Empower Your Reading with Vikas AI 

Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.

மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரை பாதிப்பது, வலிப்பு நோய். ‘காக்காய் வலிப்பு’ என்று தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும். இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். பிறந்த குழந்தை, இளைய வயதினர், முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிப்பதாலும், வலிப்பு பற்றிய மூடநம்பிக்கைகள் நம் சமூகத்தில் அதிகம் என்பதாலும், இது குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியம்.

எது வலிப்பு?

‘வலிப்பு’ என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது. ஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் இழுக்கும். வாயில் நுரை தள்ளும்.

கண்கள் மேலே சுழன்று, நாக்கு பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியச் சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த ‘நிகழ்வு’க்குப் பெயர் ‘வலிப்பு’ (Fits/Seizures/Convulsions). ஒருவருக்கு இரண்டுமுறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய் (Epilepsy) இருப்பதாகக் கொள்ள வேண்டும்.

மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம். பூமியின் உள் அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப்போல, மூளையில் உண்டாகிற மின் அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.

காரணம்

  • தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சி காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.
  • வலிப்பு உள்ளவர்களின் உறவினர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் பரம்பரையாகவும் வலிப்பு வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக்குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக ‘பொய் வலிப்பு’ (Pseudo seizure) வருவதும் உண்டு. பல நேரம் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும்.

குழந்தைகளுக்கு வலிப்பு

பிறக்கும்போது ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடுகள், குறைப் பிரசவம், பிரசவ காலத் தொற்றுநோய்கள், பிரசவத்தின்போது தலையில் அடிபடுதல் போன்றவற்றால் குழந்தைகளுக்கு வலிப்பு வருகிறது. இவர்களின் ரத்தத்தில் கால்சியம், குளுக்கோஸ், மெக்னீசியம் அளவு குறைந்தாலும் வலிப்பு வரும். குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். பெரும்பாலும் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வருவது உறுதி. சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.

வலிப்பின் வகைகள்

மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும். மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது ‘பகுதி வலிப்பு’ (Partial seizure). நாம் அவ்வப்போது காண்கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியிருக்கும். இந்த வகைக்கு ‘முழுவீச்சு வலிப்பு’ (Generalised seizure) என்று பெயர். இவை தவிர, இன்னும் பல துணை வகைகளும் உள்ளன. வலிப்பின் வகைக்கு ஏற்பச் சிகிச்சை முறை மாறுவது மருத்துவ நியதி.

முன்னெச்சரிக்கை அறிகுறிகள்

பொதுவாக வலிப்பு நோய் திடீரென்றுதான் வரும். என்றாலும், அது வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, ‘ஆரா’ (Aura) என்று அழைக்கப்படுகிற எச்சரிக்கை மணி அடிப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அவை:

  • திடீர் தலைவலி, உடல் சோர்வு.
  • குழப்பமான மனநிலை.
  • பதட்டம், பயம், வியர்த்தல்.
  • காதில் மாயக் குரல் கேட்பது.
  • கண்கள் கூசுவது அல்லது மங்கலான பார்வை.
  • உடலில் மதமதப்பு.
  • நடை தடுமாற்றம்.
  • இந்த அறிகுறிகள் தென்பட்டால் வலிப்புப் பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குச் சென்று படுத்துக்கொள்வது நல்லது. அப்படியும் வலிப்பு வந்துவிட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் இவ்வாறு செய்யுங்கள்:
  • அவரை இடது பக்கமாகச் சாய்த்துப்படுக்க வையுங்கள்.
  • சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை’ போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.
  • முகத்தில் கண்ணாடி அணிந்திருந்தால், வாயில் செயற்கைப் பல் இருந்தால் அவற்றை அகற்றி விடுங்கள். அவர் கையில் ஏதேனும் பொருள் இருந்தாலும் அகற்றி விடுங்கள்.
  • அவர் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி கூர்மையான பொருட்கள் இருந்தால், அவற்றையும் அகற்றி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வலிப்பின்போது பாதிக்கப்பட்டவரின் உடலில் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
  • மின்விசிறி/ கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.
  • உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.
  • காய்ச்சல் இருந்தால், காய்ச்சலுக்குச் செய்யப்பட வேண்டிய முதலுதவிகளையும், காயம் இருந்தால், காயத்துக்குச் செய்யப்பட வேண்டிய முதலுதவிகளையும் செய்யுங்கள்.
  • பாதிக்கப்பட்டவர் முழுமையாக சுயநினைவுக்கு திரும்பிய பிறகு, வலிப்புக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து கைவசம் இருந்தால், ஒரு 'டோஸ்’ கொடுத்து விடுங்கள்.
  • ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்கவேண்டியது அவசியம்.
  • அதன்பின் சிறப்பு மருத்துவரிடமோ அல்லது பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே சிகிச்சை பெறும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள்.
  • வலிப்பு வந்தவருக்குச் சிகிச்சை பெறச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து தரும் விளைவுகள் உடலில் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

செய்யக்கூடாதவை

  • அவரைச்சுற்றி கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.
  • வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
  • வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.
  • முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொண்ட பிறகு தண்ணீரைப் பருகச் செய்யலாம். ( இதற்கு அவர் பெயரைச் சொல்லச் சொல்லலாம் ).
  • வலிப்பு ஏற்படும்போது அவர்கள் கையில் இரும்புச் சாவி கொடுப்பதால் எந்தப் பலனும் இல்லை.
  • மூக்கில் வெங்காயச் சாற்றை ஊற்றுவதும் கூடாது.

பரிசோதனைகள்

  • வலிப்பு வந்தவர்கள் மூளை நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
  • சில அடிப்படை ரத்தப் பரிசோதனைகளோடு மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் ஈஈஜி, ‘வீடியோ ஈஈஜி’ சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் (PET) ஸ்கேன், ஸ்பெக்ட் (SPECT) ஸ்கேன் முதலியவற்றைச் செய்து வலிப்பு நோய்க்குக் காரணம் அறிந்து, வலிப்பின் வகை தெரிந்து சிகிச்சை பெற வேண்டும்.

சிகிச்சை

இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்பைக் குறைக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் நிறைய மாத்திரைகள் உள்ளன. வலிப்பின் வகை, பாதிக்கப்பட்டவரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து மாத்திரை / மருந்து பரிந்துரை செய்யப்படும். வலிப்பை ஆரம்பநிலையில் கவனித்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு வகை மாத்திரைகளே போதும். நல்ல பலன் கிடைத்துவிடும். மாத்திரைகளை ஒருநாள்கூட விடாமல் உட்கொண்டு முறையாகச் சிகிச்சை பெறுகிறவர்களில் 60 முதல் 70 சதவிகிதம் பேருக்கு வலிப்பு வருவதை முழுவதுமாகத் தடுத்துவிடலாம்.

வலிப்பு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமோ என அச்சப்படத் தேவையில்லை. மருந்து / மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பித்து, 3 ஆண்டுகள் வரை வலிப்பு வரவில்லை என்றால், மாத்திரைகளைச் சிறிது சிறிதாகக் குறைத்து, பின்னர் முழுவதுமாக நிறுத்திவிடலாம். மாத்திரைகளை நேரம் தவறி உட்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, உடனடியாக நிறுத்துவதோ கூடாது. வலிப்புக்கான சிகிச்சையில் இதுதான் முக்கியம்.

2 முதல் 3 சதவிகித நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் / பெட் ஸ்கேன் மூலம் மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் ‘மைக்ரோ அறுவைச் சிகிச்சை’ தற்போது உள்ளது. இந்தச்சிகிச்சையை செய்து கொள்வதன் மூலம் வலிப்பு நோயிலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபடமுடியும்.

குழந்தைகளுக்கு வலிப்பைத் தடுப்பது எப்படி?

கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி பராமரிப்பது, மருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு உண்டாவதைத் தடுக்கலாம். குழந்தைக்குக் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்வது, காய்ச்சல் வந்தால் உடனடியாக காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுப்பது, காய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத்துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பது, காய்ச்சல் உள்ள குழந்தையைக் குளிரூட்டப்பட்ட அறையில் படுக்க வைப்பது ஆகிய முதலுதவிகளை உடனே செய்வது போன்றவற்றால் காய்ச்சல் வலிப்பைத் தடுத்துவிடலாம். வலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்த்துவிடலாம்.

பாதுகாப்பது எப்படி?

  • வலிப்பு நோய்க்குக் காரணம் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
  • வலிப்பு நோய்க்கு மருத்துவர் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும். அப்படித் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வரும்போதும் வலிப்பு வருமானால், அதை மருத்துவரிடம் கூறி, மருந்தின் அளவை அதிகப்படுத்தலாம். அல்லது மருந்தை மாற்றலாம்.
  • வலிப்புக்கான மருந்தைத் திடீரென்று ஒருநாளில் நிறுத்திவிடக்கூடாது. மருந்தின் அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டே வந்து நிறுத்த வேண்டும்.
  • வலிப்பு மருந்தை ஒரு வேளைக்குச் சாப்பிட மறந்துவிட்டாலும், அது நினைவுக்கு வந்ததும் உடனே விட்டுப்போன மருந்தைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
  • வேறு ஏதேனும் நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது வலிப்பு நோய்க்குச் சாப்பிடும் மருந்துகளை மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
  • வலிப்பு வந்தவர்கள் விபத்துக்கு உள்ளாவதைத் தடுக்க வேண்டியது முக்கியம். இயந்திரங்களில் பணிபுரிவது, உயரமான இடங்களில் வேலை செய்வது, தண்ணீரில் அல்லது தண்ணீருக்கு அடியில் இயங்கும் பணிகளில் ஈடுபடுவது, வாகனம் ஓட்டுவது போன்ற பணிகளைத் தவிர்க்க வேண்டும்.
  • வலிப்பு உள்ள குழந்தைகளைக் குளம், குட்டை, ஏரி, கிணறு, அருவி ஆகிய இடங்களில் குளிப்பதற்கும், நீர் நிலைகளுக்கு அருகே விளையாடுவதற்கும் அனுமதிக்கக் கூடாது.
  • வலிப்பு வந்தவர்கள் மது அருந்தக்கூடாது. அப்படி அருந்தினால், வலிப்புக்கான மருந்து முழுவதுமாக வேலை செய்யாது.
  • தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
  • குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால், 'பாராசிட்டமால்’ மருந்தை உடனடியாகத் தந்துவிட வேண்டும்.

ஆதாரம்: தி ஹிந்து தமிழ்

Related Articles
Current Language
English
മലയാളം
অসমীয়া
ஆரோக்கியம்
வலிப்பு நோய்

வலிப்பு நோயைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.

ஆரோக்கியம்
ரத்த சர்க்கரை குறைவது பற்றிய குறிப்புகள்

ரத்த சர்க்கரை குறைவது பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய்

நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
சிறுவர்களுக்கு வரக் கூடிய சிறுநீரகப் பாதை தொற்று

சிறுவர்களுக்கு வரக் கூடிய சிறுநீரகப் பாதை தொற்று பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
சிறுநீர் பாதைத் தொற்று

சிறுநீர் வெளியேறும் பாதையில் வரும் தொற்றுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
சர்க்கரை நோய் பற்றி அறிய வேண்டிய தகவல்கள்

சர்க்கரை நோய் பற்றி அறிய வேண்டிய சில முக்கிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

M sangeetha

3/25/2023, 10:24:17 AM

நன்றி ?

எம் ஜே மரிய லூர்துசாமி

4/14/2022, 3:08:33 AM

என் பெயர் லூர்து சாமி எனக்கு ஒரு நாள் ஒரு நாளைக்கு 10 தடவையாவது வலது கை வலது கண் இழுத்து கொண்டே இருக்கிறது என்னால் தாங்க முடியவில்லை என்ன செய்வது என்ன மருந்து சாப்பிடுவது நான் ஹாஸ்பிடலில் நானும் நான் ஒரு 30 வருடத்துக்கும் மேலாக சாப்பிட்டுவிட்டேன் ஆனால் எனக்கு தீர்வே கிடைக்கவில்லை

s

selvarani

4/7/2022, 8:58:38 AM

Excellent karuthu

P

Palani

4/1/2022, 5:01:56 PM

நன்றி

கருணாநிதி

3/30/2022, 8:10:38 AM

எனக்கு வருடத்திற்கு இரண்டு முறை வலிப்பு வருகிறது தூக்கம் கெட்டால் வருகிறது

வலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி?

Contributor : Ganesan14/05/2022


Empower Your Reading with Vikas AI 

Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.



Related Articles
Current Language
English
മലയാളം
অসমীয়া
ஆரோக்கியம்
வலிப்பு நோய்

வலிப்பு நோயைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.

ஆரோக்கியம்
ரத்த சர்க்கரை குறைவது பற்றிய குறிப்புகள்

ரத்த சர்க்கரை குறைவது பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய்

நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
சிறுவர்களுக்கு வரக் கூடிய சிறுநீரகப் பாதை தொற்று

சிறுவர்களுக்கு வரக் கூடிய சிறுநீரகப் பாதை தொற்று பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
சிறுநீர் பாதைத் தொற்று

சிறுநீர் வெளியேறும் பாதையில் வரும் தொற்றுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியம்
சர்க்கரை நோய் பற்றி அறிய வேண்டிய தகவல்கள்

சர்க்கரை நோய் பற்றி அறிய வேண்டிய சில முக்கிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

Lets Connect
Facebook
Instagram
LinkedIn
Twitter
WhatsApp
YouTube
Download
AppStore
PlayStore

MeitY
C-DAC
Digital India

Phone Icon

+91-7382053730

Email Icon

vikaspedia[at]cdac[dot]in

Copyright © C-DAC
vikasAi