অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மருந்துகளும் கர்ப்பமும்

மருந்துகளும் கர்ப்பமும்

கருவின் மீது மருந்துகளின் தாக்கம்

கருவுற்ற தாய்க்கும், கருவுக்கும் சில நேரங்களில் மருந்துகள் மிகவும் முக்கியமான தேவையாக இருக்கும் அப்படிப்பட்டவர்கள் மருந்தானாலும், சத்துணவு மாற்றானாலும், மருந்துவரின் ஆலோசனையின்றி எதையும் உட்கொள்ளக் கூடாது. தேவையெனின், வைட்டமின் மற்றும் தாதுக்கள் அடங்கிய மாத்திரைகளை உட்கொள்ள மருத்துவர்களே சிலருக்குப் பரிந்துரைப்பர்..

கருவுற்ற தாய் உட்கொள்ளும் மாத்திரைகள், கருவின் வளர்ச்சிக்குப் பிராணவாயுவும் பிற சத்துக்களும் செல்லக்கூடிய நஞ்சுக்கொடி வழியாகவே செல்லும். எனவே, கருவுற்ற தாய் உட்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகள் கருவை பலவிதங்களில் பாதிக்கும்:

  • இவைகள் கருவை நேரடியாக பாதித்து கருவின் வளர்ச்சியில் அசாதாரண மாற்றத்தை (பிறவிக் குறைபாடுகள்) ஏற்படுத்தலாம்; சில சமயங்களில் கரு இறக்கவும் நேரிடலாம்.
  • இவைகள் சில சமயங்களில் நஞ்சுக் கொடி சுருங்கி, கருவுக்குச் செல்ல வேண்டிய பிராணவாயு மற்றும் பிற சத்துக்கள் செல்லாமலோ, மிகக் குறைந்த அளவோ கிடைக்க செய்யலாம். இதன் விளைவாக குழந்தை வளர்ச்சி குறைந்தோ, எடை குறைந்தோ பிறக்கலாம்.
  • இவைகளால் கருப்பையின் தசைநார்கள் அழுத்தமாக சுருங்கி, விரிய நேரிடலாம். இது கருவுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடை செய்வதோடு, உரிய காலத்திற்கு முன்பே பிரசவ வலியை ஏற்படுத்தி, குறைப்பிரசவத்தை ஏற்படுத்தக் கூடும்.

கருவுற்ற தாயின் இரத்தத்தை குடல் உறிஞ்சியின் அருகிலுள்ள நஞ்சுக் கொடியின் மிக மெல்லிய தசைப்படலமே சிசுவின் இரத்தத்தில் இருந்து தாயின் ரத்தத்தை பிரிக்கிறது. கருவுற்ற தாய் உட்கொள்ளும் மருந்துகள் குடல் உறிஞ்சியின் உள்ள இரத்தக் குழாயகள் மூலம் மெல்லிய திரையைக் கடந்து தொப்புள் கொடி வழியாக கருவைச் சென்றடையும்.

கருவின் வளர்ச்சிக் காலம் மற்றும் தாய் உட்கொள்ளும் அளவு மருந்துகளின் இரண்டும் கருவின் மீது மருந்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன. கரு உருவாகி 20 நாட்களுக்குள் தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் கருவையே அழித்துவிடநேரிடலாம் அல்லது எந்தவொரு பலனும் கூட இல்லாமல் இருக்கலாம். கருவின் உறுப்புகள் வளரும் கருவுற்று 3 முதல் 8 வார காலத்தில், மருந்துகளால் கரு எளிதில் பாதிப்படையக் கூடியது. இக்காலகட்டத்தில் உட்செல்லும் மருந்துகளால் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமலிருக்கலாம் அல்லது கருக்கலைய நேரிடலாம். சில சமயங்களில், பிற்காலத்தில் வெளிப்படையாகத் தெரியக்கூடிய குறைபாடுகளை ஏற்படுத்தலாம். கருவுற்று எட்டு வாரங்களுக்குப் பிறகு உட்கொள்ளும் மருந்துகளால் வளர்ச்சியுற்ற சிசுவின் உடலுறுப்புகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் ஏதேனும் சில பாதிப்பை ஏற்படுத்தலாம்.

உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), கருவுற்ற காலத்தில் உட்கொள்ளும் சில மருந்துகள் கருவின் மீது ஏற்படுத்தும் பாதிப்பின் அளவைக் கொண்டு மருந்துகளை வகைப்படுத்தியுள்ளது. அதிக விஷத்தன்மை கொண்ட சில மருந்துகளால் பிறப்பு குறைபாடுகள் நிகழ வய்ப்புள்ளதனால் , கருவுற்ற பெண்கள் இத்தகைய மருந்துகளை உட்கொள்ளவே கூடாது எனத் தடை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, தலிடோமைடு (வணிகப் பெயர் – தாலோமிட்) என்னும் மருந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு இம்மருந்தால் சிசுவின் கை, கால் வளர்ச்சியை வெகுவாகக் குறைப்பதோடு, குடல், இருதயம், இரத்த நாளங்கள் ஆகியவற்றையும் பாதிப்படைய செய்தது. சில மருந்துகள் விலங்குகளில் பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்திய போதும் மனிதர்களில் ஏதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. உதாரணமாக ஆன்டிபெர்ட் என்று சொல்லக்கூடிய மிக்லீஸின். இம்மருந்து வாந்தி, அஜீரணக் கோளாறுகளுக்காக உட்கொள்ளப்படுகிறது.

கர்ப்பக்காலத்தில் உட்கொள்ளும் மருந்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தின் வகைக

வகை

விளக்கம்

A

இவ்வகை மருந்துகள் பாதுகாப்பானவை, முறையான மருத்துவ ஆய்வுகள் மூலம் கருவுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாது என கண்டறியப்பட்டவை.

B

எந்த பாதிப்பும் இல்லை என விலங்குகளின் மீது முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டவை, ஆனால் மனிதர்கள் மீதான முறையான ஆய்வுகள் ஏதும் நடைபெறவில்லை.
அல்லது
முறையான ஆய்வில் விலங்குகளின் கரு மீது பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் மனிதர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தாதவை.

C

விலங்குகள் மீதோ மனிதர்கள் மீதோ முறையான ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படாதவை
அல்லது
முறையான ஆய்வில் பிராணிகளின் கரு மீது பாதிப்பை ஏற்படுத்தியவை. ஆனால் மனிதக்கரு மீதான விளைவுகள் குறித்த தகவல் ஏதும் கிடைக்கப் பெறாதவை

D

கருவின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையுள்ளவை. ஆனால், சில தவிர்க்கமுடியாத சூழலில் தீமையைவிட நல்ல விளைவுகளுக்காக கர்ப்பிணிப்பெண் உட்கொள்ளக் கூடியவை. உதாரணமாக, தாயின் உயிரைக் காப்பாற்ற இம்மருந்துகளை கட்டாயமாக உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை.

X

நல்ல விளைவுகளைக் காட்டிலும், கருவுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

பல சமயங்களில், கருவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளுக்கு பதிலாக பாதுகாப்பான மருந்துகளை உட்கொள்ளலாம் உதாரணமாக அதிகமான தைராட்டு சுரப்புக்கு புரோபில் தையுராசில் மருந்தும், இரத்த உறைவைத் தடுப்பதற்கு ஹெபாரின் மருந்தும் உட்கொள்ளப்படுகின்றன. பென்சிலின் போன்ற பாதுகாப்பான ஆண்டிபயாடிக் மருந்துகளும் கிடைக்கிறது.

சில மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தப்பட்ட பின்னரும் கூட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, அக்யூடேன் என்று சொல்லப்படுகின்ற ஐசோட்டிரடிநான் தோல் சம்மந்தப்பட்ட நோய்க்கு உட்கொள்ளப்படுவதாகும். இது தோலின் உட்புறம் உள்ள கொழுப்பில் தங்கி மெதுவாக இரத்தத்தில் கலக்கக் கூடியது. இந்த மருந்தை உட்கொண்டு 2 வாரங்களுக்குள் ஒரு பெண் கருவுற்றாலும், இது கருவுக்கு பாதிப்பை உண்டாக்கக் கூடியது. எனவே, இம்மருந்தை உட்கொண்ட பெண்கள் குறைந்த பட்சம் 3 முதல் 4 வாரங்கள் வரை கருவுறாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உயிருள்ள வைரஸ்களின் இருந்து தயாரிக்கப்படும் (ரூபெல்லா, வாரிசெல்லா) தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு போடப்படுவதில்லை காலரா, மஞ்சள் காமாலை, பிளேக், ரேபிஸ், டிப்தீரியா, ரணஜன்னி, டைபாய்டு போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவை என்று அறியப்படும் பட்சத்திலேயே போடப்படுகின்றன. இருப்பினும், 2 வது மற்றும் 3 வது பருவ கர்ப்பகாலத்தில் உள்ள கர்ப்பிணிகள் இன்புளுயன்சியா தடுப்பூசியை புளூ காய்ச்சல் வரக்கூடிய காலத்தில் அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருத்துவம் தேவைப்படும், சிலருக்கு கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் உயரக்கூடும். தாய்க்கும், கருவுக்கும் பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய, உயர் இரத்த அழுத்தம் மருந்துகள் அதிகம் உட்கொள்ளும்போது இரத்த அழுத்தம் மிகவும் குறைந்து கருவுக்கு நஞ்சுக் கொடி வழியாகச் செல்லக்கூடிய இரத்த அளவை வெகுவாகக் குறைக்கிறது. என்வே உயர் இரத்த அழுத்த நோய்க்காக மருந்துகள் உண்ணும் கர்ப்பிணிப் பெண்களை கவனமாகப் பேணுதல் வேண்டும். பொதுவாக கருவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஆஞ்ஜியோடென்சின் நொதியை தடுக்கும் மற்றும் தியாசைடு டையூரெட்டிக்ஸ் மருந்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்குபரிந்துரைக்கப்படாதவை.

லானோகியின் என்றழைக்கப்படும் டிகோஸின் மாத்திரைகள் இருதயக் கோளாறுகளுக்காக வழங்கப்படுகிறது. இம்மாத்திரை நேரடியாக நஞ்சுக் கொடியைக் கடந்து செல்லக் கூடியவை, ஆனால், இம்மருந்து குழ்ந்தை பிறப்புக்கு முன்போ, பின்போ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கர்ப்பகாலத்தில் சில மருந்துகள் உட்கொள்ளப்படும்போது சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அவையாவன

வகை

எடுத்துக்காட்டு

பாதிப்பு

படபடப்புக் கெதிரான மருந்துகள்

டயாஸ்பம் (டயாஸ்டட்வேலியம்)

கர்ப்பகாலத்தின் கடைசி மாதங்களின் உட்கொள்ளப்பட்டால், குழந்தைக்கு எரிச்சல், உதறுதல், மன உளைச்சல் ஆகியன ஏற்படும்.

ஆன்டிபயாடிக்ஸ்

குளோரம்பெனிகால்

சிவப்பணுக்கள் எளிதில் உடைவதனால், குளுகோஸ் 6 பாஸ்பேட் (G6PD) எனப்படும் குறைபாட்டுடன் கிரே பேபி சிண்ட்ரோம் எனப்படும் பாதிப்பும் ஏற்படலாம்.

 

சிலோசான்சிப்ரோ பிளாக்ஸின் அக்குபிளாக்ஸ் லெவாகுயிக்ஸின் நாராக்ஸின்

மூட்டு எலும்புகளில் இயல்பற்ற தன்மை ஏற்படவாய்ப்புள்ளது. (விலங்குகளில் மட்டுமே காணப்பட்டுள்ளது)

 

கானாமைஸின்

கருவின் காதுகளில் பாதிப்பு ஏற்படுத்தி, செவிட்டுத் தன்மையை உருவாக்கும்.

 

நைட்ரோபியூரண்டாயின்

சிவப்பணுக்கள் உடைவதோடு,G6 PD குறைபாடுகளை தாய்க்கும், சேய்க்கும் உண்டாக்கக் கூடியது.

 

ஸ்டெரப்டோமைசின்

கருவின் காதுகளில் பாதிப்பு ஏற்படுத்தி, செவிட்டுத் தன்மையை உருவாக்கும்.

 

சல்போனாமைட்ஸ், (அஸீல்பிடின்)

கர்ப்பகாலத்தில் கடைசி மாதங்களில் உட்கொள்ளப்பட்டால், சிசுவிற்கு மஞசள்காமாலை மற்றும் மூளைச் சிதைவு ஏற்படலாம்.

 

டெட்ரசைக்ளின் (சுமிசின்)

மெதுவான எலும்பு வளர்ச்சி பற்களில் நிரந்தரமாக மஞ்சள் படிதல், சிசுவின் எலுப்புச் சிதைவுக்கான வாய்ப்பு அதிகமாதல் ஆகியன ஏற்படக்கூடும்.

இரத்த உறைவுக்கு எதிரான மருந்துகள்

ஹெபாரின்

நீண்ட காலத்திற்கு இம்மருந்தை உட்கொண்டால், எலும்பு அடர்த்தி குறைபாடும், இரத்தம் உறைவதற்கு உதவக்கூடிய இரத்த தட்டணுக்கள் குறையவும் வாய்ப்புண்டு.

வலிப்புக்கு எதிரான மருந்துகள்

டெக்ரீடால், லுமினால், டைலான்டின்

சில பிறப்புக் குறைபாடுகள் பிறந்த சிசுவுக்கு இரத்தப் போக்கு ஏற்படலாம். வைட்டமின் k மாத்திரையை வாய்வழியாக பிறசவத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பிருந்து தொடர்ந்து உட்கொள்வதாலும் அல்லது பிறந்தவுடன் வைட்டமின் k ஊசியைக் சிசுவுக்குச் செலுத்துவதன் மூலமும் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

 

டிரிடியான்

கருவுற்ற தாயின் கருக்கலைய நேரிடலாம். பிளவுபட்ட உதடுகளும், இருதயம், முகம், கைகள், மண்டையோடு ஆகியவற்றில் பாதிப்புகள் உள்ளடக்கிய 70% பிறப்புக் குறைபாடுகள் ஏற்படலாம்

 

டெப்பாகான்

1% பிறப்புக் குறைபாடு ஏற்படாமல் பிளவுபட்ட உதடுகள், இருதயம், முகம், மண்டையோடு, தண்டுவடம் மற்றும் கை ஆகிய உறுப்புகளில் குறைபாடு ஏற்படலாம்.

மன அழுத்தம் குறைவதற்கான மருந்துகள்

ஆன்ஜியோ-டென்சினை மாற்றும் நொதிக்கான குறைப்பான்கள் தடுப்பான்கள்

கர்ப்பகாலத்தின் கடைசி மாதங்களில் உட்கொள்ளப்பட்டால், சிசுவின் சிறுநீரகங்கள் பாதிப்படையலாம். கருவைச் சுற்றியுள்ள அம்னியோடிக் திரவம் குறையலாம். முகம், கைகள், நுரையீரல் ஆகியவற்றில் குறைபாடுகள் ஏற்படலாம்.

 

பீட்டா தடுப்பான்கள்

சிலவகை பீட்டா-தடுப்பான்களை கர்ப்ப காலத்தில் உட்கொள்ளப்படும்போது இதயத்துடிப்பு குறைதல், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் கருவுக்கு ஏற்படலாம். இதனால் கருவின் வளர்ச்சியும் பாதிக்கப்படலாம்.

 

தையாசைடு டைபூரெடிக்ஸ்

கருவின் இரத்தத்தில் ஆக்ஸிஜன், சோடியம், பொட்டசியம் மற்றும் இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையலாம். இதனால் வளர்ச்சி தடைபடலாம்.

கீமோதெரபி மருந்துகள்

ஆக்டினோமைசின்

பிறப்புக் குறைபாடுகளுக்கான சாத்தியங்கள் (விலங்குகளில் மட்டுமே காணப்பட்டுள்ளன))

 

புஸல்பான், மைலீரான், லீயூகெரான், லையோபிலிஸைடு சைட்டக்ஸன், பியூரிநேதால், டிரக்ஸால்

கீழ்த்தாடை வளர்ச்சியின்மை, பிளவுபட்ட உதடுகள், மண்டை ஓட்டின் மாறுபட்ட வளர்ச்சி, தண்டுவடக் கோளாறுகள், காதுகளில் குறைபாடுகள், கால் விரல்கள் ஒட்டி இருத்தல், வளர்ச்சிக் குறைபாடுகள் ஆகியன நேரிடலாம்.

 

வின்பிளாஸ்டின், வின்கிறிஸ்டின்

பிறப்புக் குறைபாடுளுக்கான சாத்தியங்கள் (விலங்குகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன)

மனநிலையைச் சமன்படுத்தும் மருந்துகள்

(லித்தோபிட்) லித்தியம்

பிறப்புக் குறைபாடுகள் (குறிப்பாக இதயம்), சோம்பல், குறைவான சதைவளர்ச்சி, மிகக் குறைவாக உண்ணுதல், தைராய்டு சுரப்பிகள் குறைவாகச் சுரத்தல், சிசுவுக்கான சர்க்கரை நோய் ஆகியன ஏற்படலாம்.

 

ஆஸ்ப்பிரின், இபுபுரோபென், நப்ரோக்ஸென்

இம்மருந்துகள் அதிக அளவில் கருவுற்ற தாயால் உட்கொள்ளப்படும் போது பிரசவ வலி ஏற்படுவதில் தாமதம் ஏற்படலாம், நுரையீரலில் உள்ள மகாதமனிக்கும் சிரைக்கும் இடையேயான தொடர்பு விரைவாக நின்றுவிடும். மஞ்சள்காமாலை, எப்போதேனும் மூளைச்சிதைவு, இரத்தப்போக்கு (பிரசவத்தின் போதும், பின்பும்) ஏற்படலாம். கருவைச் சுற்றியுள்ள நீரின் அளவு குறையக்கூடும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்ப்டுத்தக்கூடிய மாத்திரைகள்

டயாபினிஸ், டோல்புடாமைடு

சிசுவின் இரத்தத்தின் மிக குறைந்த அளவிலான சர்க்கரை அளவு; சர்க்கரையின் அளவை கருவுற்ற தாயிடம் கட்டுப்படுத்த முடியாமை; இரண்டாம் வகை (Type II) சர்க்கரை நோய் உள்ள கருவுற்ற சிசுவிக்கு பிறப்புக் குறைபாடுகளும் நேரலாம்.

செக்ஸ் ஹார்மோன்கள்

டனஸால், ஸிந்தெடிக் புரோஜெல்டின்ஸ்

முன்கர்ப்ப காலத்தில் இம்மருந்துகள் உட்கொள்ளப்பட்டால், பெண்கருவின் பிறப்புறுப்புகள் ஆண்மைத் தன்மை பெறக்கூடும். சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்து சரிப்படுத்த நேரிடும்.

 

டைஎத்தில்ஸ்புல்பெஸ்ட்ரால்

கருப்பையில் பிரச்சனைகள், மாதவிடாய்க் கோளாறுகள், பிறப்புறுப்பு புற்றுநோய், பெண்குழந்தையின் கர்ப்ப காலத்தில் பிரச்சனைகள், ஆண் குழந்தையின் ஆணுறுப்பில் கோளாறுகள் ஏற்படக்கூடும்.

சரும/தோல் மருத்துவம்

எட்ரீடினேட், அக்யூடேன்

இருதயக் கோளாறு, சிறிய காதுகள், மூளை நீர்கோர்த்து தலை பெருத்த குழந்தை பெற நேரிடலாம். அக்யூடேன் மருந்துகள் மூளை வளர்ச்சி குறைபாடுகள் உடைய சிசு, கருக்கலைதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

தைராய்டு மருந்துகள்

டாப்பாஸோல் புரோப்பில் தையோயுராசில்

கருவின் தைராய்டு சுரப்பிகள் பெருத்திருக்கும் அல்லது குறைந்த செயல்பாடு பெற்றிருக்கும். சிசுவின் மண்டையோட்டில் பாதிப்பு ஏற்படலாம்.

 

கதிரியக்க அயோடின்

கருவின் தைராய்டு சுரப்பி முழுமையாக அழியக்கூடும். கர்ப்பகாலத்தின் முதல் பருவத்தில் இம்மருந்துகளை உட்கொண்டால், கருவின் தைராய்டு சுரப்பி பெருத்தும், அதிவேகத்தோடும் இயங்கக்கூடும்.

 

தைரோலார்

கருவின் பெருத்துஅதிவேகமாக செயல்படும் தைராய்டு சுரப்பி காணப்படலாம்.

தடுப்பூசிகள்

ரூபெல்லா, வாரிசெல்லா

நஞ்சுக் கொடியிலும், வளரும் கருவிலும் நோய்த் தொற்று ஏற்படக் கூடும்.

 

மணல்வாரி, அம்மைக்கட்டு, போலியோ, மஞ்சள்காமாலை ஆகிய நோய்க்களுக்கான தடுப்பூசிகள்

பாதிப்புகள் கண்டறியப்படவில்லை

கட்டாயத் தேவை ஏற்பட்டல் மட்டுமே கருவுற்ற காலத்தில் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இருப்பினும் சில நேரங்களில், கருவுற்ற தாய்க்கும், கருவுக்கும் மருந்துகள் மிகவும் அவசியமாக தேவைப்படும். அத்தகைய சமயத்தில், கருவுற்ற பெண் முறையான மருத்துவரிடம் கலந்தாலோசித்து, உட்கொள்ளும் மருந்துகளின் பயன்கள் மற்றும் பின் விளைவுகள் குறித்து கேட்டறிந்த பின் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

சமூக மருந்துகள்

புகைத்தல்

சிசுவின் எடை குறைதல் முக்கிய விளைவாகும். புகைபிடிக்கும் தாயின் குழந்தை புகைபிடிக்காத தாயின் சிசுவை விட 170 கிராம் எடை குறைவாகவே பிறப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாட்பட்ட புகைபிடிப்வர்களின் குழந்தையின் எடை மிக மிக குறைவாக உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.

இருதயம், மூளை, முகம் ஆகியவற்றிலும் புகைபிடிக்கும் தாயின் சிசுக்கள் பாதிப்பு அடையக்கூடும். SIDS எனப்படும் திடீர் சிசு மரணங்கள் புகைபிடிக்கும் தாய்மாரின் சிசுக்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் இடம்மாறிய நஞ்சுக் கொடி, குறைப்பிரசவம், முன்பிரசவ வலி, சிறுநீரகத் தொற்று, குழந்தை இறந்து பிறத்தல், பிரசவ காலத்திற்கு முன்பே நீர்க்குடம் உடைதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படவாய்ப்புண்டு. புகைபிடிக்கும் பழக்கம் உள்ள தாய்மார்களின் குழந்தைகள் உடல் வளர்ச்சியில் மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும், அறிவு வளர்ச்சியிலும் பல குறைபாடுகளைச் சந்திக்கின்றனர். கார்பன் மோனாக்ஸைடு மற்றும் நிக்கோட்டின் ஆகியவற்றின் பின்விளைவுகளே இக்குறைபாடுகளுக்கான காரணம் என்று கருதப்படுகிறது. கருவுற்ற பெண்கள் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவராயினும் புகைபிடிப்போரின் அருகில் இருந்தாலும் கருவில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்பட கூடும்.

மது அருந்துதல்

கருவுற்ற போது மது அருந்துதல் சிசுவுக்கு பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தும். FAS என்று சொல்லப்படும் கரு ஆல்கஹால் குறைபாடு ஏற்படுத்துவதற்குக் காரணமான மதுவின் அளவு சரியாகத் தெரியாததால், கருவுற்ற பெண்கள் தினசரியோ, எப்போதேனுமோ மது அருந்தவே கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குடிக்கும் பழக்கம் உள்ள தாய்மாரின் கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. சராசரி எடையைக் காட்டிலும் மிகக் குறைவான எடையுடனே இவர்களின் குழந்தைகள் பிறக்கின்றன. சராசரியாக குழந்தையின் எடை 7 பவுண்டு எனில், கர்ப்ப காலத்தில் விடாமல் குடிக்கும் பழக்கம் உள்ள பெண்களின் குழந்தைகள் 4 பவுண்டு மட்டுமே உள்ளனர். பெரும்பாலும் பிறந்தவுடன் இறந்து விடுகின்றனர்.

கர்ப்பகாலத் தாயின் குடிப்பழக்கத்தால் ஏற்படக்கூடிய கரு ஆல்கஹால் குறைபாடுகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. பிறக்கின்ற குழந்தைகளில் 1000 – க்கு இருவர் இக்குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். சிசுவின் வளர்ச்சிக் குறைபாடு, முகத்தில் ஏற்படும் குறைபாடுகள், சிறிய தலை, மூளை வளர்ச்சியின்மை, மாறுபட்ட நடத்தை வளர்ச்சி, சிற்சில நேரங்களில் மூட்டு எலும்புகள், இருதயம் ஆகியவற்றில் கோளாறுகள் ஏற்படும்.

குடிப்பழக்கம் உள்ள தாயின் குழந்தைகள் வளர்ந்த பின்னரும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவராகவும், போதிய கவனிப்பின்மை, எண்ணச் சிதைவுகளால் துன்பப்படுகிறவர்களாகவும் வளரக் கூடும். வெளிப்படையான உடல் கூறு வளர்ச்சியில் பிரச்சனைகள் ஏதுமில்லாவிட்டாலும், உளவியல் ரீதியான பிரச்சனைகளில் அவதியுறுவர்.

காஃபின்

அதிகமாக காபின் உட்கொள்ளும் கர்ப்பிணி பெண்களின் கருமீது ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து முறையான ஆய்வு முடிவுகள் ஏதுமில்லை. காபின் பொதுவாக காபி, டீ, சில சோடா வகைகள், சாக்லேட்டு, சில மருந்துகள் ஆகியவற்றில் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு கோப்பை காபி அருந்துவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கண்டறியப்பட்டுள்ளது. காபின் எனப்படும் ஊக்கி, நஞ்சுக் கொடியில் விரைவாகப் பாய்ந்து, கருவைச் சென்றடையும். இது கருவின் இதயத்துடிப்பை அதிகரிக்கக்கூடியது. ஆனால் காபின் நஞ்சுக் கொடியில் இரத்த ஓட்டத்தை குறைப்பதோடு, இரும்புத் தாதுக்களை உறிஞ்சும் தன்மையையும் மட்டுப்படுத்தக் கூடியது. எனவே, இரத்த சோகை ஏற்படக்கூடிய அபாயம் உண்டு. ஒரு நாளைக்கு ஏழு கோப்பை காபி, டீ போன்றவற்றை அருந்துவதால் குறைப்பிரசவம், குழந்தை இறந்து பிறத்தல், எடை குறைவான சிசு, கருக்கலைதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். சில மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்கள் காபி அருந்துவதை குறைக்க வேண்டும் அல்லது காபின் கலக்காத பானங்களை அருந்துவது நல்லது என பரிந்துரைக்கின்றனர்.

செயற்கை இனிப்பூட்டிகள்

அஸ்பார்ட்டேம் (Aspartame) எனப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் சிறிய அளவில் (சாதாரணமாக செயற்கை இனிப்புகள் மற்றும் குளிர்பான்ங்களில் சேர்க்கப்படும் அளவு) உட்கொள்ளப்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அரிதான சிறுநீரகக் கோளாறு உள்ள (phenylketonuria) கர்ப்பிணிப் பெண்கள் செயற்கை இனிப்பூட்டிகள் கலந்த பண்டங்களை உண்ணக் கூடாது.

பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக்கூடிய மருந்துகள்

பாலூட்டும் தாய்மார்கள் ஏதேனும் மருந்துகள் உட்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால், தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டலாமா, நிறுத்த வேண்டுமா என்பதைக் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்:

  • தாய்ப்பாலில் கலக்கக்கூடிய மருந்தின் அளவு
  • மருந்தின் வீரியத்தை குழந்தை பெறக்கூடிய அளவு
  • மருந்து குழந்தைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு
  • குழந்தை உட்கொள்ளும் தாய்ப்பாலின் அளவு, குழந்தையின் வயது மற்றும் பிற திட, திரவ உணவுகளைக் குழந்தை உட்கொள்ளும் அளவு

எப்நெப்ரின், ஹிப்பாரின், இன்சுலின் போன்ற சில மருந்துகள் தாயிடமிருந்து தாய்ப்பாலில் கலப்பதில்லை. எனவே, இம்மருந்துகள் உட்கொள்ள பாதுகாப்பானவை. சில மருந்துகள் தாய்ப்பாலில் கலக்கும் தன்மையுள்ளவை, இருப்பினும் இந்தகுறைந்த அளவு கூட குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். சில மருந்துகள் தாய்பாலில் கலக்கப்படும். ஆனால் மிகக்குறைந்த அளவே குழந்தையின் உடலில் சென்றடைவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை உதாரணமாக, நோய் எதிர்ப்பு மருந்துகள், ஜெண்டமைசின், கானாமைசின், ஸ்டெப்ரோமைசின் மற்றும் டெட்ராசைக்ளின்.

மருத்துவரால பரிந்துரைக்கப்படாத சாதாரண இருமல் மருந்துகள், ஜீரணக் கோளாறுகளுக்கான மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள் ஆகியவற்றை பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்வதால் குழந்தைக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால், தொடர்ந்து, பெரிய அளவில் ஆஸ்ப்பிரின், சாலிசைலேட் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

தோலின் மேற்புறத்தில் தடவப்படும் மருந்துகள், கண்களில் போடப்படும் மருந்துகள், மூக்கால் உறிஞ்சப்படும் மருந்துகள் ஆகியன பாதுகாப்பான மருந்துகளே. உயர் இரத்த அழுத்த்த்திற்கான மாத்திரைகள், பீட்டா தடுப்பான்களும் பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக்கூடிய மருந்துகளே. ஆனால், கோக்குமாடின் போன்ற மருந்துகள் மருத்துவரின் கண்காணிப்போடு உட்கொள்ளவேண்டும். காஃபின், தியோபில்லின் போன்ற மருந்துகள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனினும் குழந்தைகளுக்கு எளிதில் எரிச்சலூட்டக் கூடியவை.

குழந்தையின் இதயத்துடிப்பு, மூச்சு இரைப்பு ஆகியன அதிகமாகக் கூடும். பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக் கூடிய பல மருந்துகள் குழந்தைக்கு ஏதும் பாதிப்பை உண்டாக்காதவை என்ற போதிலும், மருத்துவரின் ஆலோசனையும், பரிந்துரையும் இன்றி மருந்து மாத்திரைகளையோ, பச்சிலை மருந்துகளையோ உட்கொள்ளாமல் இருப்பதே நல்லதாகும். மருந்துகளின் மேற்குறிப்பு அட்டையை முழுமையாகப் படித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏதேனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

முக்கிய முன்னெச்சரிக்கைகள்

  • பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குழந்தைகு பாலூட்டுவதை நிறுத்தி விட வேண்டும்.
  • புகைபிடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள் புகை பிடித்த 2 மணி நேரம் வரை குழந்தைக்கு பாலூட்டக்கூடாது. குழந்தையின் அருகில் புகைபிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பது தாய்ப்பாலின் அளவைக் குறிப்பதோடு, குழந்தையின் எடை கூடுதலையும் பாதிக்கும்.
  • குடிப்பழக்கம் உள்ள தாய்மாரின் குழந்தைகள் சோம்பலுள்ளவர்களாகவும், அதிகமாக வியர்வை சிந்துபவர்களாகவும் இருப்பார்கள்.

தடை செய்யப்பட்ட மருந்துகள்

தடை செய்யப்பட்ட, சட்டத்திற்கு புறம்பான மருந்துகள், குறிப்பாக போதை மருந்துகள், கர்ப்பகாலத்திலும், கருவின் வளர்ச்சியிலும், பிறந்த சிசுவின் மீதும் பலவித மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஊசிமூலம் ஏற்றப்படும் போதை மருந்துகளைப் பயன்படுத்தும் கர்ப்பிணி பெண்கள் மஞ்சள் காமாலை, பால்வினைத் தொற்று நோய்கள் போன்ற நோய்த் தொற்றுக்கு ஆளாகக்கூடும். அவர்களது கருவிற்கும் தொற்று பரவக்கூடிய அபாயம் உள்ளது. போதை மருந்துகளை உட்கொள்ளும் பழக்கமுடைய கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் போதிய வளர்ச்சியின்றி, குறைப்பிரசவமாகவே பிறக்கும் அபாயமும் அதிகமுள்ளது. கோக்கேன் எனப்படும் போதைப்பொருளை உண்ணும் தாய்மாரின் குழந்தைகள் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதற்கு கோக்கேன் மட்டுமே காரணமா அல்லது தாயின் புகை பிடிக்கும் பழக்கம், பிற மருந்துகள், போதிய முன்பிரசவ கால கவனிப்பின்மை, வறுமை போன்றவைகளும் காரணமா என்பது முழுமையாகக் கண்டறியப்படவில்லை.

ஹெராயின், மெத்தடோன், மார்பின் போன்ற போதை மருந்துகள் நஞ்சுக் கொடியை உடனடியாகக் கடந்து கருவைச் சென்றடையக் கூடியவை. கருவும் இம்மருந்துகளுக்கு அடிமையாகிப் பிறந்தபின் 6 முதல் 8 மணி நேரத்திற்கு பின்னிழுக்கும் அறிகுறியை வெளிப்படுத்தும். பிறப்புக் குறைபாடுகள் இம்மருந்துகளால் அதிகம் ஏற்படுவதில்லை. ஹெராயின் பழக்கம் உள்ள தாயின் குழந்தைகள் அளவில் மிகச் சிறியவர்களாக இருப்பார்கள். போதை மருந்துகள் உட்கொள்ளும் தாய்மாரின் பிரசவத்தில் கருக்கலைதல், குழந்தை கொடிசுற்றிப் பிறத்தல், குறைப்பிரசவம் போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். ஆம்பிடாபின்ஸ் எனப்படும் மருந்துகளும் கர்ப்பகாலத்தில் உட்கொள்ளப்படும் போது இதயக் கோளாறுகள் பிற பிறப்புக் குறைபாடுகள் ஏற்படுத்தலாம்.

மாரிஜீவானா

மாரிஜீலானா எனப்படும் போதை மருந்து கருவை பாதிக்குமா என்பது இன்னும் தெளிவாக்கப் கண்டறியப்படவில்லை. மாரிஜீவானாவில் உள்ள டெட்ராஹைட்ரோகன்னாபினால் நஞ்சுக் கொடியைக் கடந்து கருவை நேரடியாகச் சென்றடையக்கூடியது. கர்ப்பகாலத்தில் மிக அதிக அளவு பயன்படுத்தப்பட்டால் மட்டுமே மாரிஜீலானா மருந்துகள் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பிரசவ வலியின் போதும், குழந்தைப்பேற்றின் போதும் பயன்படுத்தப்படும் மருந்துகள்

மயக்கமருந்துகள், வலி நிவாரணிகள் போன்றவைகள் நஞ்சுக் கொடியைக் கடந்து கருவை பாதிக்கக் கூடிய மருந்துகளாகும். உதாரணமாக, இம்மருந்துகள் சிசுவின் மூச்சுவிடும் முனைப்பைக் குறைக்கக்கூடும். எனவே, இம்மருந்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மிகச்சிறிய அளவிலேயே கொடுக்கப்படும்.

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate