படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி தேடிக்கொண்டிருப்பவராக இல்லாமல், சுயதொழில் புரிபவராக மாறவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் மாவட்ட தொழில் மையங்கள்.
இந்த மையங்களின் உதவியால் சுயதொழில் தொடங்கி முன்னேறியவர்கள் தமிழகத்தில் ஏராளம். சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் ஏராளமாக பெருகி இருப்பதற்கு மாவட்ட தொழில் மையங்களும் முக்கிய காரணம்.
படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம், உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது. பொது மேலாளர் தலைமையின் கீழ், இயங்கி வரும் மாவட்ட தொழில் மையமானது, புதிய தொழில் முனைவோருக்கு தேவையான பயிற்சியை வழங்குவதோடு தொழில் ஆலோசனைகளையும் வழங்குகிறது.
தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருவது இம்மையத்தின் சிறப்பம்சம். எனவேதான் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்குமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
வேலைவாய்ப்பினை அதிகப்படுத்துவதும் இம்மையத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. இதன்மூலம், படித்த இளைஞர்கள் திசைமாறி செல்லாமல் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.
படித்த இளைஞர் ஒருவர் மாவட்டத் தொழில் மையத்தை அணுகினால் தொழில் தொடங்க ஆலோசனை, திட்டஅ றிக்கை இவை வழங்கப்படுவதோடு உரிய பயிற்சிக்கும் வழிவகை செய்யப்படுகிறது.
சுய தொழில் செய்வதை ஊக்கப்படுத்தும் பணியை மாவட்டத்தொழில் மையங்கள் சிறப்பாக செய்து வருகின்றன.
அதேபோல கைவினைத் தொழில், குடிசைத்தொழில் இவற்றை ஊக்கப்படுத்துவதற்காக, இத்தொழிலை மேற்கொள்பவர்கள் தங்கள் தொழிலை நிறுவனமாக பதிவு செய்கொள்ளும் வசதியையும் மாவட்டத்தொழில் மையம் ஏற்படுத்தி தந்துள்ளது.
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (NEEDS), பிரதமரின் வேலைவாப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய திட்டங்களன் கீழ்சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் பெறுவதற்கு,\ மாவட்டத் தொழில் மையம் ஏற்பாடு செய்கிறது.
தமிழக அரசின், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ்சுயதொழில்தொடங்க வழங்கப்படும் வங்கிக் கடனில் 15 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத் தொழில் மையம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. அந்தந்தமாவட்ட தலை நகரத்தில் இம்மையம் அமைந்திருக்கும். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும்.
இப்படி ஏராளமான பணிகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாவட்டத் தொழில் மையத்தின் சேவைகளை படித்த வேலையில்லாத இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஆதாரம் : தொழில்யுகம்