অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மகளிர் திட்டம்

மகளிர் திட்டம்

மகளிர் திட்டம்

மகளிர் திட்டம் உருவாகக் காரணங்கள்

  • தமிழகத்தில் பெண்களின் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும், சமூக, பொருளாதார அரசியல் ரீதியில் பின்தங்கிய நிலையிலேயே இருந்தனர்.
  • அரசு நலத் திட்டங்கள் பல இருந்தாலும், வறுமை நிலையை ஒழிக்க முடியாமல் இருந்தது. அரசு நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, குறைவான நிலையில் இருந்தது.
  • பெண்கள் மத்தியில் கல்வி, சுகாதாரம், பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.
  • நலப்பணிகளை மக்களே கேட்டு பெற்றுக் கொள்ளும் (Demand creation) உணர்வு குறைந்த அளவிலேயே இருந்தது.

மகளிர் திட்ட வரலாறு

தமிழகத்தில் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார நிலை வலுவடையவும் 1989 ஆம் ஆண்டு பன்னாட்டு வேளாண்மை அபிவிருத்தி நிதியகத்தின் (IFAD) நிதியுதவியுடன் தற்போதுள்ள 8 மாவட்டங்களில் (தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகியவை (IFAD) திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றி காணப்பட்டது.

அவ்வெற்றியின் அடிப்படையில் “மகளிர்திட்டமாக” தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு முதல், நகரத்தில் வசிக்கும் ஏழைகளும் பயன்பெறும் வகையில் சென்னை மாவட்டத்திற்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

மகளிர் திட்டத்தின் குறிக்கோள்

தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை மகளிரையும், சமூகரீதியாகவும், பொரருளாதார ரீதியாகவும், மேம்பாடு அடைய செய்வது, தாங்களாகவே தங்கள் வாழ்கை தரத்தை உயர்த்திக் கொள்ள செய்து ” சுய சார்பு ” நிலைய அடைய செய்வது.

மகளிர் திட்ட நோக்கங்கள்

ஏழை மகளிரின் சமூக மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல்

சமூக மேம்பாடு

  • மகளிரிடையே தன்னம்பிக்கை மற்றும் ‘ நமக்கு நாமே’ என்ற உணர்வினை உண்டாக்குதல்
  • சாதி, சமய வேறுபாடு இல்லாமல், ஒற்றுமை, நல்லிணக்கத்தை உருவாக்குதல்
  • சமூக, விழிப்புணர்வை உண்டாக்கி, சமூக பிரச்சினைகளைத் தீர்வு காண மகளிரைத் தயார் செய்தல்.
  • உள்ளாட்சி அமைப்புகளில் மகளிரைப் பங்கேற்கச் செய்தல்.
  • கிராமத்தின் அடிப்படை தேவைகளை பெற தேவையான பணிகளில் ஈடுபட செய்தல்.
  • குடுப்பத்திலும், சமூகத்திலும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தி பகிர்ந்தளிக்கச் செய்தல்
  • பெண்களுக்கு எதிரான இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து போராடி வெற்றி காண செய்தல்.
  • மகளிரிடையே மறைந்து இருக்கும் ஆற்றல்களைக் கண்டறிந்து வெளிக் கொணர்தல்.
  • சுகாதாரம், குடும்பநலம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றில் தெளிவடையச் செய்தல்.

பொருளாதார மேம்பாடு

  • சிக்கன நடவடிக்கை மூலம் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்.
  • அவசரக்கடன் தேவைகளை (கந்து வட்டி வாங்காமல்) சுயமாக பூர்த்தி கொள்ள செய்தல்.
  • கடன் தேவைகளுக்கு (ஈட்டி) கந்து வட்டிக்காரர்களைச் சார்ந்து இருப்பதை முழுமையாக தவிர்த்தல்.
  • நேரத்தை வீணாக்காமல் வருவாய் ஈட்டும் தொழில்களில் ஈடுபடுத்துதல்.
  • தொழில் திறன் மற்றும் விற்பனை திறன் பெற்று குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த வழிவகை காணுதல்.
  • மகளிர் செய்த உற்பத்திப் பொருள்களை இடைத்தரகர் இன்றி விற்பனை செய்யும் வகையில் திறனை வளர்த்தல்.
  • பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை பெற்று முன்னேற வழி காட்டுதல்.
  • மத்திய, மாநில அரசுகளின் கடனுதவிகளைப் பெற்று பயனடைதல்.
  • வாங்கிய கடனை முறையாக பயன்படுத்தி கண்ணியமாகத் திரும்ப செலுத்த கற்றுத் தருதல்.
  • மகளிர் பெயரில் சொத்துகளை உருவாக்கச் செய்தல்.

திறன் வளர்த்தல்

  • பெண்களுக்கு பேசும் திறன், எமுதும் திறன், வாசிக்கும் திறன் போன்றவற்றை வளர்த்தல்.
  • தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல்.
  • நடைமுறை வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுத்தல்.
  • தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை கொண்டு செயல்களை முடிக்கும் திறனை மேம்படுத்துதல்.
  • தகவல் தொடர்பு திறனை வளர்த்தல்.
  • முடிவெடுக்கும் திறனை வளர்த்தல்.
  • தொழில் திறன் பயிற்சி பெற வழிவகை செய்தல்.
  • பெண்களுக்கான சட்டங்கள், உரிமைகளை அறிந்து, செலாக்கத்தில் ஈடுபடச் செய்தல்.
  • பதிவேடுகளைப் பராமரிக்கும் திறனை வளர்த்தல்.
  • குழுவாக இணைந்து சாதனைகள் புரிந்திடும் ஆற்றலை வளர்த்தல்.
  • கணிணி, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் திறமைகளை வளர்த்தல்.
  • பல திறன்களை வளர்த்துக் கொண்டு குடும்ப / கிராம / நகர் புற மேம்பாட்டிற்கு வழிவகை செய்தல்.
  • மகளிர்க்கு நிதி மேலாண்மையைக் கற்றுக் கொடுத்தல்.
  • போன்ற மகளிர் திட்ட நோக்கங்கள், சுய உதவி குழுக்களை ஒட்டுமொத்த மேம்பாட்டை அடையச் செய்வது சுய சார்பு தன்மைக்கு இட்டுச் செல்கிறது.

பிற சேமிப்பும் குழு சேமிப்பும்

பிற சேமிப்புகளில் உள்ள குறைபாடுகள் :

  • பிற சேமிப்பு எனும் போது, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு, பாத்திரச் சீட்டு, நகை சீட்டு என வகைப்படுத்தலாம். உறவினர்களிடம் கொடுத்து வைத்தல் நண்பர்களிடம் சேமித்தல் போன்ற பல வகை உள்ளது. இது போன்ற சேமிப்புகளில் உள்ள சிரமங்கள்
  • பிற சேமிப்புகளில் நம்பிக்கையும், நாணயம் மிகக் குறைவே.
  • நினைக்கும் போதோ, தேவைப்படும் போதோ பணம் பெறுவது மிக அரிது.
  • ஏல சீட்டுகள் கட்டுபவர் ஏலம் தள்ளி எடுக்கும் போது கட்டியதைவிட குறைவாக பணம் கிடைக்கலாம்.
  • இறுதியில், ஏலச்சீட்டியில் அல்லது குலுக்கல் சீட்டில் பணம் பெறத்
  • தகிதியானவர்க்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் போகலாம்.
  • லாபம் மற்றும் பயன்கள் யாவும் சீட்டு பிடிப்பவரையே சாரும்.
  • சீட்டு பிடிப்பவர் நட்டத்திற்கு உள்ளாகி, தலைமறைவாகும் சூழ்நிலையில் பணம் இழப்பு ஏற்படலாம்.
  • பிற சேமிப்பில், பாதுகாப்பின்மை அதிகம். அதேநேரம் நிதி நிலைமை யாருக்கும் தெரியாது.
  • வீட்டில் சேமிக்கும் போது, திருட்டு பயம் இருக்கும், யாரும் கேட்டால் கொடுக்கும் மனப்பான்மை ஏற்படலாம்.
  • தனிப்பட்ட முறையில் சேமிக்கும் போது, கட்டயமாக சேமிக்கும் நிர்பந்தம் குறைவு.
  • பிற சேமிப்பில், ஆர்வம், போட்டி மனப்பான்மை குறைவாக இருக்கும்.

குழுவாக சேமிப்பதால் உள்ள நன்மைகள்

  • குழு உறுப்பினர்களை ஒன்றாக இணைப்பதே சேமிப்பு.
  • குழுவில் சேமிப்பதால் பாதுகாப்பு.
  • பணம் தனி நபரிடம் இல்லாமல் அனைவரிடமும் பத்திரமாக இருக்கும்.
  • யாரும் எடுக்கவோ, கொண்டு செல்லவோ இயலாது.
  • அனைவரும் சேமிப்பதால் நாட்டமுடன் சேமிக்க கற்றுக் கொள்வர்.
  • குழுவில் சேமிப்பதால், எல்லோரும் சேமிக்கும் போது நாமும் சேமிப்போம் – என்ற கட்டாயம், ஒரு உந்துதல் உண்டாகிறது.
  • எப்போது அவசியத் தேவையோ அப்போது பணத்தை உடனே பெறலாம்.
  • உறுப்பினர்களிடம் ஒற்றுமை வளரும்.
  • குழுவில் சேமிப்பதால் பலரது சேமிப்பும் சேர்ந்து ஒரு பெரிய தொகையாக சேர வாய்ப்பாகும்.
  • குழு சேமிப்பு தொகையை வைத்து வங்கியில் கடன் பெறலாம்.
  • குழுவில் சேமிப்பதால் லாபம், பணப்பெருக்கம் யாவும் குழுவுக்கே கிடைக்கும்.
  • குழுவில் சேமிப்பதால் குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது.

குழு சேமிப்பில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் :

  • குழுக் கூட்டத்தின் போது மட்டுமே சேமிப்பு தொகையை செலுத்த வேண்டும்.
  • உறுப்பினர்கள் விரும்பும் தொகையை சேமிப்பாக செலுத்தலாம்.
  • சேமிப்பினை செலுத்தியவுடன் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • உறுப்பினர்கள் பாஸ்புத்தகத்திலும் பதிவு செய்து பெற வேண்டும்.

உள் கடன் (சங்கக் கடன்) :

சுய உதவிக்குழுவில் சேமித்த பணத்தை அவ்வப்போது வங்கியில் இருந்து எடுத்து, தேவையானவர்களுக்கு முன்னுரிமையின் பேரில் வழங்கும் கடனே உள்கடன் அல்லது சங்கக் கடன்.

இந்த உள்கடன் வழங்குவதற்கும் வழிமுறைகள் உள்ளது. அதே போன்று உரிய தேவைக்கு மட்டுமே கடன். அந்த கடனுக்கு குழுக்கள் மூலமாக நிர்ணயிக்கும் வட்டியே உள்கடன் வட்டி. இந்த வட்டி முழுவதும் குழுவிற்கே சேரும்.

உள் கடன் வழங்க வழிமுறைகள்:

  • உறுப்பினர்கள் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் இருக்க உள்கடன் மிகவும் உபயோகமானது. எனவே சேமிப்புத் தொகையை வங்கியில் சேர்த்து வைக்காது உள்கடன் வழங்க வேண்டும்.
  • குழு ஆரம்பித்து மூன்று மாதங்கள் கழித்து குழு சேமிப்பில் இருந்து. தேவைக்கேற்ப உள்கடன் வழங்கலாம்.
  • ஆரம்ப கால கட்டத்தில் ரூ.500/= வரை உள்கடனாக வழங்கலாம்.
  • குழு உறுப்பினர்களின் கடன் தேவை நியாயமானதாகவும், தொழில் மேம்பாட்டுக்காகவும் இருத்தல் வேண்டும்.
  • ஆரம்பத்தில் குறைந்த தவணையில் திருப்பி செலுத்தப்படும் கடனாக வழங்குவது சிறந்த ஓன்று.
  • அதிகமான கடன் தொகை வழங்க வேண்டுமெனில் குழுதான் தீர்மானிக்க வேண்டும்.
  • கடன் தொகைக்கு ஏற்ப தவணைக் காலம் அதிகப்படுத்தப்பட வேண்டும்.
  • குழு உறுப்பினர்கள் மட்டுமே கடன் தொகையைப் பயன்படுத்த வேண்டும்.
  • கடன் பெறும் உறுப்பினரின் நிலை, தகுதி யாவும் அறிந்தே கடன் வழங்க வேண்டும்.
  • உறுப்பினர் திரும்ப செலுத்தும் தகுதியை அறியாது வழங்கினால், வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி உள்கடன் செலுத்தும் சூழல் உருவாகும்.
  • இறப்புச் செலவு போன்றவற்றிற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம். மருந்துவச் செலவு, பிரவசச் செலவு, கடன் தேவைக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபட வேண்டும். உதரணமாக, அவசரத் தேவைகளான கல்வி செலவு,
  • ஒரு உறுப்பினர்க்கு, கடன் நிலுவையில் இருக்கும் போது மீண்டும் கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை விபரம் குழுக்கூட்டத்தில் அனைவரின் முன்னிலையில் வழங்கப்பட வேண்டும்.
  • குழு உறுப்பினர்களின் உள்கடன் நிலுவையினைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்.
  • முக்கியமான எல்லாக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், தவறாமல் சேமிக்கும் உறுப்பினர்கள் கடன் பெற தகுதியானவர்கள்.
  • வழங்கப்படும் கடன் பற்றிய விபரம் யாவும் தீர்மானப் புத்தகத்தில் எழுதப்பட வேண்டும்.
  • கடன் கேட்கும் உறுப்பினர்கள் எந்த தேவைக்காக கேட்கிறார்களோ அதற்கே அத்தொகையைப் பயன்படுத்த வேண்டும்.
  • உள்கடன் (சங்கக் கடன் ) ஆபத்து காலங்களில் பெரிதும் உதவும். அதை முறையாக பயன்படுத்த வேண்டும்.
  • கடன் பெறும்போது, திரும்ப செலுத்தும் போதும் உறுப்பினர் பாஸ்புத்தகத்தில் பதிவு செய்து பெற வேண்டும்.
  • உறுப்பினர்கள் உள்கடன் திரும்ப செலுத்தும் போது, அசலுடன், வட்டியும் சேர்த்து தவணை தவறாமல் கண்ணியமாய் திரும்பச் செலுத்தி ரசீதினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சுய உதவிக் குழுவின் பதிவேடுகள்

குழுவில் பதிவேடுகள் ஏன் பாரமரிக்க வேண்டும்:

  • ஒரு குழு நன்கு செயல்படுகிறதா என்பதை கண்டறிய பதிவேடுகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன.
  • சீரான நிதி செயல்பாட்டிற்கு வழிவகை செய்கின்றன.
  • குழு உறுப்பினர்களிடையே நம்பிக்கை வளர்க்கின்றன்.
  • குழுவின் தற்போதைய நிலையை அறிய உதவுகின்றன.
  • குழுவின் தரத்தை அளக்கும் கருவியாக உள்ளன.
  • வங்கி மற்றும் இதர நிறுவனங்களுடன் உறுதியான தொடர்பினை ஏற்படுத்துவதோடு அவைகளிலிருந்து உதவிகள் பெற வழி வகுக்கின்றன.
  • குழுவின் ஆண்டுக் கணக்குத் தணிக்கைக்கு உதவிகரமாக உள்ளன.
  • குழுவின் எதிர்காலத் திட்டமிடலுக்கு வழிகாட்டுகின்றன.

சுய உதவி குழுவில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்:

  1. வருகைப் பதிவேடு
  2. தீர்மான புத்தகம்
  3. சேமிப்பு பேரேடு [தனி நபர்]
  4. கடன் பேரேடு [தனி நபர்]
  5. தனி நபர் சேமிப்பு மற்றும் கடன் புத்தகம்
  6. ரொக்க ரசீது
  7. பண பட்டுவாடா ரசீது
  8. வங்கி பாஸ்புத்தகம்
  9. ரொக்கப் புத்தகம்
  10. பொதுப் பேரேடு
  11. பார்வையாளர் புத்தகம்

பதிவேட்டின் முக்கியத்துவம்:

வருகைப் பதிவேடு:

  1. குழு உறுப்பினர்களின் தொடர் வருகையை அறிவதற்காக.
  2. வருகை தராத உறுப்பினர் மீது ஓழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக.
  3. தீர்மான புத்தகத்தில் உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறுவதற்கு ஆதாரமாக உள்ளது.

தீர்மானப் புத்தகம்:

  1. பதிவேடுகளில், தீர்மானப் புத்தகம் ஓரு தாய்ப் பதிவேடு
  2. இது குழுவின் வரவினங்களுக்கும், செலவினங்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறது.
  3. குழுவின் விதிமுறைகள், விதிமுறையில் மாற்றங்களை உள்ளடக்கி, குழுவை, சீராகச் செயல்பட வைக்கிறது.
  4. குழுவின் செயல்பாடுகளை அறிந்திட உதவுகிறது.
  5. குழு எடுக்கும் முடிவுகளில், உறுப்பினர்கள் பங்கேற்பினை உறுதி செய்ய வழிவகுக்கிறது.
  6. குழு திட்டமிட்டு செயல்படவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் வழிகாட்டுகிறது.

தீர்மான புத்தகத்தை எவ்வாறு எழுதுவது

  • கூட்ட நாள், கூட்ட எண், குழுவில் உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கை, வருகை புரிந்தோர் ஆகியவை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • சென்ற வாரம் முடிய, மொத்த சேமிப்பு எழுதி, இந்த வார சேமிப்பை கூட்டி, இவ்வாரம் முடிய, மொத்த சேமிப்பு எழுத வேண்டும்.
  • குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
  • ஒரே கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம்.
  • ஒவ்வொரு தீர்மானத்திற்கும் தனித்தனி தீர்மான எண் கொடுக்கப்பட வேண்டும்.
  • உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் தொகை, வரவு, அட்டவணையில் பதிவு செய்யப்பட்டு கணக்குப் பதிவேடுகளுக்கு எடுத்து எழுதப்படலாம்.
  • கூட்ட இறுதியில், தீர்மானங்களை வாசித்து காண்பித்து உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற வேண்டும்.
  • தீர்மானம் எழுதாமல் கையெழுத்து வாங்க கூடாது.

சேமிப்பு பேரேடு

  • ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் மொத்த சேமிப்பு எவ்வளவு உள்ளது என அறிய உதவுகிறது.
  • உறுப்பினர்கள் தொடர்ந்து சேமிக்கிறார்களா என்பதை அறியலாம்.
  • விருப்பு சேமிப்பு முறை பின்பற்றப்பட்டதா என்பதை அறியலாம்.
  • குழுவில் எந்தெந்த மாதங்களில் சேமிப்பு அதிகரித்துள்ளது, குறைந்துள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

கடன் பேரேடு

  • ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒவ்வொரு உறுப்பினரும் பெற்ற கடன் தொகை, திருப்பி செலுத்திய தொகை மற்றும் கடன் நிலுவையைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
  • அனைத்து உறுப்பினர்களும் கடன் பெற்றுள்ளார்களா என்பதை அறிய உதவும்.
  • கடன் பெறும் நோக்கத்தை அறிய உதவும்.
  • ஒவ்வொரு உறுப்பினரும், பெற்ற கடன்களை, தவணை தவறாமல் செலுத்தினார்களா என்பதை அறியலாம்.
  • உறுப்பினர்களின் தவணை கடந்த பாக்கியையும் கண்டுபிடிக்கலாம்.
  • குழுவில் கடன் சுழற்சி எத்தனை முறை நடைப்பெற்றுள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம்.
  • தனிநபர் சேமிப்பு மற்றும் கடன் புத்தகம்
  • சுய உதவிக் குழு உறுப்பினர் என்பதற்கான ஆதாரம்.
  • ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் செலுத்தும் சேமிப்புத் தொகை மற்றும் மொத்த சேமிப்பை அறிய உதவுகிறது.
  • ஒவ்வொரு உறுப்பினரும், தாங்கள் பெற்ற கடன் தொகை, திரும்ப செலுத்திய தொகை மற்றும் கடன் நிலுவையையும் அறியலாம்.
  • எத்தனை முறை கடன் வாங்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

ரொக்க ரசீது

  • குழுவிற்கு வரும் அனைத்து வரவுகளுக்கும் ஆதாரம்.
  • ஒரு குறிப்பிட்ட தேதியில், எவ்வளவு தொகை வசூல் ஆகி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
  • வசூலிக்கப்பட்ட தொகை, வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அறிய உதவும்.
  • தணிக்கை செய்யும் போது தணிக்கையாளரால் சரிபார்க்கப்படும்.
  • ஓவ்வொரு ரசீதின் தொகையும், ரொக்க புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என அறிய உதவும்.

பணப்பட்டுவாடா ரசீது

  • குழுவிலிருந்து செய்யப்படும் அனைத்து செலவுகளுக்கும் ஆதாரம் ( போக்குவரத்து செலவு, சங்கக் கடன் உள்பட)
  • செலவுக்கான காரணத்தை, விளக்கமாக வவுச்சர் மூலம் அறியலாம்.
  • தணிக்கை செய்யும் போது தணிக்கையாளரால் இது சரிபார்க்கப்படும்.
  • கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு, ஏற்றுக் கொள்ள கூடிய (அ) செல்லுபடியாவதற்கான ஆவணமாகிறது.

வங்கி பாஸ்புத்தகம்

  • வங்கி கணக்கு துவங்கப்பட்ட தேதியே, குழு துவங்கிய தேதியாக கருதப்படுகிறது.
  • குழுவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை, எடுத்த தொகை மற்றும் வங்கி இருப்பு ஆகியவற்றை அறிய உதவுகிறது.
  • குழு கணக்கிற்கு வழங்கப்பட்ட வங்கி வட்டித் தொகையினை அறியலாம்.

ரொக்க புத்தகம்

  • குழுவில் நடைபெறும் அனைத்து வரவு செலவுகளையும் தேதி வாரியாக Date wise எழுதி மாத இறுதியில், கையிருப்பு , வங்கி இருப்பு கண்டுபிடிக்க உதவுகிறது.
  • வரவு செலவுகள் சுயதணிக்கை அடைகிறது.
  • மாதத்தின் எந்த தேதியிலும் வங்கியிருப்பு மற்றும் கையிருப்பை கண்டுபிடிக்க இயலும்.

பொதுப் பேரேடு:

  • எல்லா கணக்குகளையும் ஓரே புத்தகத்தில் கண்டுபிடிக்கலாம்.
  • குழுவின் வரவினங்கள், செலவினங்களின் மொத்த தொகையை அவ்வப்போது அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் நிதி நடவடிக்கைகளை மாற்றி அமைத்து கொள்ளலாம்.
  • குழுக் கணக்கை நிதி தணிக்கை செய்ய உதவுகிறது.

பார்வையாளர் புத்தகம்:

  • இப்புத்தகம் குழுவைப் பார்வையிடும் பார்வையாளர்களிடம் குழுவைப் பற்றிய அவர்களது கருத்தை எழுதுவதற்கானது.
  • இப்புத்தகத்திலிருந்து குழுவை யார் யார் பார்வையிட்டுள்ளார்கள் என அறியலாம்.

தணிக்கை விளக்கம்

குழுவில் குறிப்பிட்ட காலத்தில் நடைப்பெற்ற நிதி மற்றும் பிற நடவடிக்கைகளை தகுதி பெற்ற நபர்களால் முறைப்படி ஆய்வு செய்வது, அறிக்கை சமர்பிக்கும் வழிமுறையே தணிக்கையாகும்.

தணிக்கையின் சிறப்பம்சங்கள்:

  • குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை நடத்தப்படுதல்.
  • வரவு செலவு புத்தகங்கள், ஆவணங்களை சரிபார்த்தல்.
  • முறைப்படி ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தல்.
  • குழு சாராத வெளி நபரால் செய்யப்படுதல் ஆகியவை ஆகும்.

தணிக்கையின் முக்கியத்துவம்:

  • குழுவின் நிதி நிலையை அறிந்து கொள்வதற்காக.
  • குழுவின் நம்பகத்தன்மையை உறிதி செய்து கொள்ள.
  • குழுவில் பதிவேடுகள் பராமரித்தலில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்துவதற்காக.
  • குழுவின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக.
  • குழு வெளிக்கடன் பெற தங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ள.
  • குழுவில் நிதிமுறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அதனை கண்டறிந்து சரிசெய்து கொள்வதற்காக.

தணிக்கையின் வகைகள்:

  1. நிதித் தணிக்கை (அ. உள்தணிக்கை, ஆ. வெளித் தணிக்கை)
  2. சமூகத் தணிக்கை

நிதித் தணிக்கை:

அ. உள்தணிக்கை: பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வரவு செலவு கணக்குகள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், குறைகள் இருப்பின் அதனை சரி செய்யவும் உள்நபர்களால் எடுக்கப்படும் நடவடிக்கையே உள் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:

  • மூன்று மாதத்திற்கொரு முறை செய்யப்பட வேண்டும்.
  • தொண்டு நிறுவனப் பிரநிதியால் செய்யப்பட வேண்டும்.
  • குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.
  • கட்டணம் வசூலிக்கப்பட வேண்டியதில்லை.
  • அறிக்கை தயாரிக்க வேண்டியதில்லை.

ஆ. வெளித் தணிக்கை: குழுவால் நிர்ணயிக்கப்பட்ட, ஆங்கீகாரம் பெற்ற தணிக்கையாளரால் வருடத்திற்கொரு முறை, முறைப்படி ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதே வெளித் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:

  • ஆண்டிற்கொரு முறை சட்டரீதியாக செய்யப்பட வேண்டும். ( ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை)
  • அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளரால் செய்யப்பட வேண்டும்.
  • கீழ்க் காணும் தணிக்கைகள் அறிக்கை செய்யப்பட வேண்டும்.
  • பெறுதல் செலுத்துதல் அறிக்கை.
  • வருவாய் செலவின அறிக்கை.
  • இறுதி நிலைக் குறிப்பு.
  • அனைத்து பதிவேடுகளையும், தணிக்கையின் போது சமர்பிக்க வேண்டும்.
  • தணிக்கை கட்டணத்தை குழுவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • தணிக்கை அறிக்கை குழுவில் வாசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு குறைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

சமூகத் தணிக்கை

சுய உதவிக் குழுக்களின் சமூக ரீதியான நோக்கங்களை அடைவதற்காக செயல்படுத்தப்பட்ட செயல்பாடுகளை ஆண்டிற்கொருமுறை தணிக்கை செய்வதே சமூகத் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:

அ. தணிக்கைக்கு முன்பு பின்பற்றப்பட வேண்டியவை:

அனைத்து பதிவேடுகளும் முறைப்படி அவ்வப்போது எழுதப்பட வேண்டும்.

நிதியாண்டின் இறுதியிலிருந்து 3 மாதத்திற்குள் தொண்டு நிறுவனம் (அ) கூட்டமைப்பின் வழிகாட்டுதலுடன் செய்து முடிக்க வேண்டும்.

வங்கியிருப்புச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

உறுப்பினர்கள், சேமிப்பு உறிதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

உறுப்பினர்களின் கடன் நிலுவை உறுதிச்சான்று, உறுப்பினர்களின் கையெழுத்துடன் பெறப்பட வேண்டும்.

ஆ. தணிக்கைக்குப் பின்பு, பின்பற்றப்பட வேண்டியவை:

தணிக்கை அறிக்கை பற்றி உறுப்பினர்களுக்கு தெளிவடைய வைத்தல்.

தணிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், ஆலோசனைகளை கடைப்பிடிக்கவும் முயற்சி எடுத்தல்.

தணிக்கை அறிக்கையை பாதுகாத்து பின்னர் தேவைகளுக்கு பயன்படுத்துதல்

நிலைத்த தன்மை

  • சுய உதவிக்குழு ஓற்றுமையுடனும், அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்புடனும் செயல்பட்டு, பிற நிறுவனங்களை முழுமையாக சார்ந்திருப்பதை தவிர்த்து, குழு உறுப்பினர்களின், சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைய தொடர்ந்து செயல்படுவதே நிலைத்த தன்மை ஆகும்.
  • நீண்ட நாட்களாக செயல்பட்டாலே நிலைத்த தன்மை அடைந்த குழுவா :
  • குழு நிலைத்த தன்மை அடைய காலம் மட்டுமே ஒரு அளவுகோல் அல்ல.
  • 3 ஆண்டுகள் ஆகிவிட்டாலே நிலைத்த தன்மை அடைந்து விட்டதாக கருத கூடாது.
  • குழுவின் செயல்பாடுகளே அதன் நிலைத்த தன்மையை நிர்ணயிக்கும.

நிலைத்த தன்மையை அடைய:

  • குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஓற்றுமையை வளர்த்துக் கொண்டால்.
  • குழு பொறுப்பாளர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால்.
  • திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் அனைத்து பயிற்சிகளிலும் கலந்து கொண்டால்.
  • அரசு திட்டங்களை நேரடியாக பெற்று முழு பலனை அடைந்தால்.
  • அனைத்து நடவடிக்கைகளையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் செய்தால்.
  • முடிவுகளை சுயமாக எடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டால்.
  • தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டால்.
  • குழு நிலைத்த தன்மையை அடைந்துவிட்டதா என்பதை அறிய:
  • குழு, அனைத்து முடிவுகளையும், தானாக எடுத்து செயல்படுத்துகிறதா?
  • தொண்டு நிறுவனத்தையும், மகளிர் திட்ட அலுவலகத்தையும் முழுமையாக சாராமல் இருக்கிறதா?
  • குழு நிதி, உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளதா?
  • கிராம வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா?
  • சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா?
  • குழு, கூட்டமைப்பு செயல்பாடுகளில் முழுமையாக பங்கேற்கிறதா?
  • உறுப்பினர்கள் போதிய வருமானம் தரக்கூடிய அளவில் தொழில்களில் ஈடுபடுகிறதா?
  • மேற்கூறிய செயல்களை ஒரு குழு முழுமையாக செயல்படுத்தினால் அக்குழு நிலைத்த தன்மை அடைந்து விட்டது என அறியலாம்.

கூட்டமைப்புகள்

பல சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து மகளிரின் சமூக, பொருளாதார மேம்பாட்டை அடையவும், சுய சார்புடன் நிலைத்த தன்மை பெறவும் தொடர்ந்து கூட்டாக செயல்படவும் ஜனநாயக அமைப்பே கூட்டமைப்பாகும்.

மகளிர் திட்டத்தின் கீழ் அமைக்க வேண்டிய கூட்டமைப்புகள்:

  • பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள்
  • வட்டார அளவிலான கூட்டமைப்புகள்
  • மாவட்ட அளவிலான கூட்டமைப்புகள்
  • எத்தெந்த குழுக்கள் கூட்டமைப்பில் சேரலாம்:
  • ஓரே பஞ்சாயத்தில் செயல்படும் குழுக்கள்
  • மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் குழுக்கள்

கூட்டமைப்பில் தன்னார்வத்துடன் இணைந்து செயல்பட விரும்பும் குழுக்கள்

குழுவிலிருந்து கூட்டமைப்பிற்கு யார் வர வேண்டும்:

இரண்டாண்டிற்கொருமுறை சுழற்சி முறையில் கூட்டமைப்பில் பிரதிநிதித்துவம் மாற்றப்பட வேண்டும். ஓவ்வொரு கூட்டத்திற்கும் வேறு வேறு நபர்கள் கலந்து கொள்ள கூடாது. ஒவ்வொரு குழுவிலிருந்தும், ஊக்குனரும் ஓரு பிரதிநிதியும் கூட்டமைப்பு கூட்டத்திற்கு வரலாம். பிரதிநிதிக்கு பதிலாக விருப்பமுள்ள உறுப்பினரும் வரலாம்.

எத்தனை நாட்களுக்கொருமுறை கூட்டம் நடத்த வேண்டும்:

மாதம் ஓரு முறை நடத்த வேண்டும்.

தேவையென்றால் சிறப்பு கூட்டங்களும் நடத்தலாம்.

கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் :

பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இணை செயலாளர் செயலாளர்

கூட்டமைப்பின் நோக்கங்கள்:

சுய உதவிக் குழுக்கள், பிற நிறுவனங்களை நம்பியே இல்லாமல் சுயமாக இயங்கவும், நிலைத்த தன்மை பெற்று தொடர்ச்சியாக செயல்படச் செய்யவும்.

சமுதாயத்தில் பின்தங்கிய அனைத்து பெண்களையும் குழுக்களாக அமைக்க.

பஞ்சாயத்து அளவிலான பிரச்சனைகளை இணைந்து தீர்த்துக் கொள்ள.

கிராம அடிப்டை மேம்பாட்டிற்காக,ஊராட்சி மன்றத்துடன் இணைந்து செயல்பட.

குழுக்களுக்கு கடன் வசதிகளையும், அரசு நலத் திட்டங்களையும் பெற வங்கி மற்றும் அரசு துறைகளுடன் ஒன்றிணைந்து பணியாற்ற.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/21/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate