<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">“விதைச் சட்டம் 1966 பிரிவு 6-ன் படி வெவ்வேறு வகையான விதைகளுக்குரிய குறைந்தபட்ச முளைப்புத்திறன் மற்றும் தூய்மை தரம் ஆகியவை அங்கீகரிக்கப்படுகிறது. பிரிவு (பி) விதியின் படி விதைப்பெட்டகத்துடன் அடையாள அட்டை இணைக்கப்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;">பிரிவு 7-ன் படி அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு வகை விதைகள் மற்றும இரகங்களின் விற்பனை ஒழுங்குபடுத்தப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">விதை விற்பனை செய்யும் போது மேற்கொள்ள வேண்டியவை</h3> <ul style="text-align: justify;"> <li>வகை மற்றும் இரகம் குறிப்பிடபட வேண்டும்.</li> <li>குறைந்தபட்ச முளைப்புத் திறன், புறத்தூய்மை மற்றும் இனத்தூய்மை குறிப்பிடப்படவேண்டும்.</li> <li>முழுமையான விபரங்களுடைய அடையாள அட்டை பொருத்தப்பட வேண்டும்.</li> <li>மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் குறிப்புரைகள் இருத்தல் வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">விதி-13-ன்படி விதை விநியோகம் செய்பவர் கவனிக்க வேண்டியவை</h3> <ul style="text-align: justify;"> <li>காலக்கெடு முடிந்தபிறகு விதை விற்பனை செய்த நபர்களின் எண்ணிக்கை</li> <li>அடையாள அட்டையில் அனைத்துத் தகவல்களும் இருத்தல் வேண்டும்.</li> <li>விதை விநியோகம் செய்யும் அனைவரும் குவியல் வாரியத் தகவல்களை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு கடைபிடித்தல் வேண்டும். அனைத்து குவியல்களின் விதை மாதிரியை ஒரு வருடத்திற்கு இருப்பு வைத்திருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை இடத்திற்குச் சென்று விதையின் தரத்தை ஆய்வு செய்வார்கள். அவர்கள் விற்பனை செய்யும் இடத்தில் விதையின் தரத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் உடனே அதன் விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை ஆய்வு கூடத்திற்கு தரத்தை அறிய அனுப்புவார்கள். அந்த விதை ஆய்வின் முடிவின்படி தவறுசெய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983ன் கீழ் விதை விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து விதை பற்றிய ஏதேனும் புகார்கள் வந்தால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.</li> </ul> <h3 style="text-align: justify;">விதை தரத்தை பாதுகாப்பதில் விவசாயிகளின் பங்கு</h3> <p style="text-align: justify;">விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை நிலையத்திலிருந்து விதைகளை வாங்க வேண்டும். அப்படி வாங்கும்போது விதைப்பையில் உற்பத்தியாளர் அட்டையில் உள்ள கீழ்க்கண்ட விபரங்களை சரிபார்க்க வேண்டும்.</p> <ul style="text-align: justify;"> <li>பயிர் இரகம்</li> <li>குவியல் எண்</li> <li>பரிசோதனை செய்யப்பட்ட நாள் (தேதி/மாதம்/வருடம்)</li> <li>காலக்கெடு (தேதி/மாதம்/வருடம்)</li> <li>முளைப்புத்திறன் சதவீதம் (குறைந்தபட்சம்)</li> <li>புறச்சுத்தம் (குறைந்தபட்சம்)</li> <li>இனத்தூய்மை (குறைந்தபட்சம்)</li> <li>நிகர எடை</li> <li>விதைநேர்த்தி செய்த மருந்து</li> <li>மருந்தின் பெயர்</li> <li>உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி</li> </ul> <p style="text-align: justify;">மற்றும் இதை உணவு, தீவனம் அல்லது எண்ணெய் எடுப்பதற்கு உபயோகிக்கக் கூடாது என்று சிகப்பு மையினால் எச்சரிக்கை எழுதப்பட்டிருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">விவசாயிகள் விதைத்தரத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை கண்டிறிந்தால் உடனே விதை ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் அட்டை, கயிறு மற்றும் விதைப்பை ஆகியவற்றை பத்திரமாக வைத்திருத்தல் வேண்டும். விதை சரியாக முளைக்கவில்லையென்றால் அதை சம்ப்ந்தப்பட்ட ரகங்களை அல்லாத இரகங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.<br /><br />விவசாயிகள் விதைவாங்கும் போது ரசீது வாங்க மறுத்துவிடக்கூடாது. இந்த ரசீதில் ரகம் பற்றிய விபரங்கள், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகிய விபரங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;"><strong>விதை பரிசோதனைக்கு வரும் விதை மாதிரிகள் </strong></h3> <p style="text-align: justify;"><strong>சேவை மாதிரிகள்</strong></p> <p style="text-align: justify;">இந்த வகை விதைமாதிரிகள் உழவர்களிடமிருந்தும், விற்பனையாளர்களிடமிருந்தும், உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட தரம் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த மாதிரிகள் ஆய்வு செய்ய ரூ 30/- வசூலிக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong> சான்று விதை மாதிரிகள்</strong></p> <p style="text-align: justify;">சான்று விதை உற்பத்திக்கு பதிவு செய்யும் பொழுதே ரூ 20/- ஐ விதை பரிசோதனை கட்டணமாக செலுத்த வேண்டும்.</p> <p style="text-align: justify;">இந்த விதைமாதிரிகள் சான்று அலுவலர்களால் எடுக்கப்பட்டு விதைச்சான்று உதவி இயக்குநர் வாயிலாக விதை ஆய்வு கூடத்திற்கு இரகசிய குறியீட்டு எண்கள் கொடுத்து சமர்பிக்கப்படுகிறது. விதை ஆய்வு உதவி இயக்குநர் இரகசிய குறியீட்டை நீக்கி பழைய எண்களுக்கு மாற்றி உற்பத்தியாளர்களுக்கு சான்று பணியைத் தொடர அனுப்பப்படுவார்.</p> <p style="text-align: justify;"><strong>அலுவலக மாதிரிகள்</strong></p> <p style="text-align: justify;">தரக்கட்டுப்பாட்டு உபயோகத்திற்காக அரசாங்க செலவில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த வகை விதை மாதிரிகள் விதைத்தரக்கட்டுபாட்டு ஆணை, மற்றும் விதை விதிகள் ஆகியவற்றின் கீழ் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க விதை ஆய்வாளர்களால் எடுக்கப்படும் விதை மாதிரியாகும்.</p> <h3 style="text-align: justify;">விதை பரிசோதனை</h3> <p style="text-align: justify;">விதைப்பரிசோதனை என்பது விதையின் நடவு மதிப்பளவை மதிப்பிடும் அறிவியல் ஆகும். விதைப் பரிசோதனை கூடத்திற்கு சமர்ப்பிக்கப்படும் விதை மாதிரியை ஆய்வு செய்து மிகவும் துல்லிய முடிவுகளை வெளியிடுவதே இதன் முக்கிய நோக்கமாகும். விதை மாதிரியை திரும்பவும் ஆய்வுசெய்யும் போது மறு முடிவுகள் முதல் முடிவுடன் ஒப்பிடும்போது ஒன்றாக இருக்கும் அளவிற்கு மிகவும் துல்லிய முடிவுகள் வெளியிடப்படுகின்றது.</p> <p style="text-align: justify;">விதை ஆய்வு முடிவுகளை அந்தந்த சம்மந்தப்பட்ட உற்பத்தியாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>விதை ஆய்வுக் கூடத்தில் கீழ்காணும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன</strong></p> <ol style="text-align: justify;"> <li>முனைப்புத்திறன்</li> <li>புறச்சுத்தம்</li> <li>பிற ரக கலவன்கள்</li> <li>ஈரப்பதம்</li> </ol> <ul> <li style="text-align: justify;">விதை பரிசோதனைக் கூடம் விதையின் தரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு மையமாகும்.</li> <li style="text-align: justify;">விதைக் குவியலின் நடவு மதிப்பை அறிந்து கொள்ள அவ்வப்போது விதை ஆய்வு செய்வது அவசியமானதாகும். விதை பரிசோதனை நிலையங்களில் சான்று விதை மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு விதை மாதிரிகள் மட்டுமின்றி உழவர்களிடமிருந்தும், விற்பனையாளர்களிடமிருந்தும், விதை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்படும் விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.</li> </ul> <h3>கேள்வி பதில்கள்</h3> <p style="text-align: justify;"><strong>1. விதைக் கட்டுப்பாட்டிற்கான சட்டங்கள் யாவை?</strong></p> <p style="text-align: justify;">விதை சட்டம் - 1966, விதை விதிமுறைகள் – 1968 மற்றும் விதை ஆணைகள் - 1983 ஆகியவை ஆகும்.</p> <p style="text-align: justify;"><strong>2. தேசிய விதை கழகம் என்றால் என்ன?</strong></p> <p style="text-align: justify;">தேசிய விதை கழகம் என்பது ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். விவசாயிகளுக்கு நல்லத் தரமான விதைகளை விநியோகம் செய்ய கம்பெனி சட்டம் 1956ன் கீழ் வேளாண் மற்றும் கூட்டுறவுத் துறையின் ஆளுமைக்கு உட்பட்டு நிறுவப்பட்டது. விதை உற்பத்தியாளர்களின் ஒப்பந்தத்தின் பேரில் இக்கழகம் விதை உற்பத்தியை மேற்கொள்கிறது. 560 இரகங்கள் மற்றும் 79 பயிர்களை என்.எஸ்.சி கையாள்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>3. போலியான விதைகளை விற்பதற்கான தண்டனை மற்றும் அபராதங்கள் யாவை?</strong></p> <p style="text-align: justify;">விதைச்சட்டம், விதிமுறைகளை மீறும் நபர் அதன்படி தண்டிக்கப்படுவர்.</p> <p style="text-align: justify;">முதல் குற்றத்திற்கு ரூ. 500 வரையில் அபராதம் மற்றும் <span style="text-align: justify;">ஏற்கெனவே இப்பிரிவில் தண்டிக்கப்பட்டவராக இருப்பின் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனையோ (அ) ரூ. 1000 வரை அபராதம் (அ) இரண்டும் உண்டு.</span></p> <p style="text-align: justify;"><strong>4. விதை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான விதிமுறைகள் யாவை?</strong></p> <p style="text-align: justify;">வர்த்தக அமைச்சகத்தினால், விதிக்கப்பட்ட எக்ஸிம் கொள்கைகள் 2002-07களினால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்படுத்தப்படுகிறது. எக்ஸிம் கொள்கைகளின் கீழ், விதை வளர்ச்சிக்கான புதியக் கொள்கை 1988 மற்றும் பயிர் தொற்று நோய் தடுப்பு விதிகள், 2003 படியும் இறக்குமதிக்கான சலுகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு டிஏசியின் எக்ஸிம் குழு ஏற்றுமதி அல்லது இறக்குமதி பற்றிய முடிவுகளை எடுக்கும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="https://agritech.tnau.ac.in/ta/" target="_blank" rel="noopener">தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்</a></p> </div>