<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">பஞ்சகவ்யம்</span></h3> <p style="text-align: justify;">பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடிய இயற்கை ஊட்டச் சத்து உரமாக விளங்குவது பஞ்சகவ்யம். இதைக் கொண்டு பயிர்களையும், மண்ணின் தன்மையையும் மேம்படுத்தலாம்</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/Panchakaavya.jpg" /></p> <p style="text-align: justify;">உணவுப் பயிர்களில் பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கை ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கேடு விளைவிப்பதாக உள்ளன.</p> <p style="text-align: justify;">இதில் இருந்து மீளும் வகையில் விவசாயிகளுக்கு இயற்கை வழியாகவும், பசுமாட்டின் வாயிலாகவும் கிடைக்கப் பெரும் பஞ்சகவ்யம் பயனுள்ளதாக இருக்கும்</p> <h3 style="text-align: justify;">பஞ்சகவ்யம் தயாரிக்கத் தேவையானவை</h3> <p style="text-align: justify;">பசுவின் புது சாணம் 5 கிலோ. பசுவின் கோமியம் 3 லிட்டர், பசு மாட்டுப் பால் 2 லிட்டர், பசுந்தயிர் 2 லிட்டர், பசு நெய் 1 லிட்டர், கரும்புச் சாறு 3 லிட்டர், இளநீர் 2 லிட்டர், வாழைப்பழம் 12, கள் (கிடைக்கும் இடங்களில்) 2 லிட்டர் ஆகியவை தேவை.</p> <p style="text-align: justify;">கரும்புச் சாறு கிடைக்கவில்லையென்றால் 500 கிராம் நாட்டுச் சர்க்கரையுடன் 200 கிராம் ஈஸ்டு சேர்த்து 3 லிட்டர் நீரில் ஊற வைத்தால் 30 நிமிடங்களில் அதே தன்மையுடைய கரைசல் கிடைக்கும்.</p> <h3 style="text-align: justify;">தயாரிக்கும் முறை</h3> <p style="text-align: justify;">பசுவின் புது சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை நன்கு கலந்து 3 நாள்களுக்கு அடிக்கடி கலக்கி வைக்கவும். நான்காம் நாள் இந்தக் கலவையுடன் இதர பொருள்களான தயிர், நெய், கரும்புச் சாறு, இளநீர், வாழைப்பழங்கள், கள் ஆகியவற்றை அதனுடன் கலக்க வேண்டும். இந்தக் கலவையை குறைந்த பட்சம் 4 நாள்கள் நன்றாக கலக்கி 15 நாள்கள் வைத்திருந்து 19-ஆம் நாள் முதல் பயிர்களில் தெளிக்கலாம்.</p> <h3 style="text-align: justify;">பஞ்சகவ்யத்தில் உள்ள சத்துக்கள்</h3> <p style="text-align: justify;">பசும் சாணம், பாக்டீரியா, பூஞ்சானம், நுண் சத்துக்கள்.</p> <p style="text-align: justify;"><strong>பசு </strong><strong>கோமியம் </strong></p> <p style="text-align: justify;">பயிர் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்து.</p> <p style="text-align: justify;"><strong>பால்</strong></p> <p style="text-align: justify;">புரதம், கொழுப்பு, மாவு, அமினோ, அமிலம், கால்சியம் சத்துக்கள்.</p> <p style="text-align: justify;"><strong>தயிர்</strong></p> <p style="text-align: justify;">ஜீரணிக்கத் தக்க செரிமானத் தன்மையைத் தரவல்ல நுண்ணியிரிகள்.</p> <p style="text-align: justify;"><strong>நெய்</strong></p> <p style="text-align: justify;">வைட்டமின் ஏ.பி.கால்சியம், கொழுப்புச் சத்து.</p> <p style="text-align: justify;"><strong>கரும்புச் சாறு</strong></p> <p style="text-align: justify;">சைக்கடோகைனின் எனும் வளர்ச்சி ஊக்கி, அனைத்து வகை தாது உப்புக்கள்.</p> <p style="text-align: justify;"><strong>இளநீர்</strong></p> <p style="text-align: justify;">நுண்ணுயிர் வளர்ச்சிக்கான இனிப்பு.</p> <p style="text-align: justify;"><strong>வாழைப்பழம், பதநீர்</strong></p> <p style="text-align: justify;">தாது உப்புக்கள் தரவல்லது. நொதிப்பு நிலை தந்து நுண்ணூட்டச் சத்தை உருவாக்குகின்றன.</p> <p style="text-align: justify;">முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்ச கவ்யத்தில் பயிர் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புக்கும், உறுதுணையாக விளங்கும் நுண்ணுயிர்களான அசோபைரில்லம், அசட்டோபேக்டர், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவையும், பேரூட்டச் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், வளர்ச்சி ஊக்கிகள் உள்ளிட்ட பயிர்களுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன.</p> <h3 style="text-align: justify;">பயிர்களுக்குப் பயன்படுத்தும் முறை</h3> <p style="text-align: justify;">முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் 300 மில்லி மருந்தை 10 லிட்டர் நீரில் கலந்து விசைத் தெளிப்பான், கைத் தெளிப்பான் மூலம் எல்லா பயிர்களுக்கும் படும் வகையில் காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்கலாம். ஒரு ஏக்கர் பயிருக்கு ஒரு முறை தெளிக்க 3 லிட்டர் பஞ்சகவ்யம் தேவைப்படும். இந்தக் கரைசலைத் தெளிப்பான்களில் ஊற்றிப் பயன்படுத்தும்போது கைத் தெளிப்பான் எனில், வடிகட்டியும், விசைத் தெளிப்பான் எனில் அதன் வால்வு, குழாயின் நுனிப் பகுதியை பெரிதாக்கிக் கொண்டும் பயன்படுத்த வேண்டும்.</p> <p style="text-align: justify;">இந்த முறைகளில் பஞ்சகவ்யத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது பயிர்களை இயற்கை வழியில் பராமரித்துப் பயன் பெறலாம்.</p> <iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/lfC19DSaA9k" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe> <br />பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை</div> <p style="text-align: justify;">ஆதாரம்: திருவள்ளூர் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம்</p>