<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">உரம்</h3> <p style="text-align: justify;">ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை நாளுக்கு நாள் மாறி வரும் நிலையில், பசுந்தழை உரம் மண்ணுக்கு தழைச்சத்தை அளித்து பசுமையான விவசாயத்துக்கு வழி வகுக்கிறது.</p> <p style="text-align: justify;">பசுந்தாள், பசுந்தழை என்பது மண்ணுக்கு வளம் சேர்க்கும் இன்றிமையாத உரமாகும். மண்ணுக்கு தழைச்சத்தை அதிகளவில் கொடுக்கும் உரமாக பசுந்தாள், பசுந்தழை உரங்கள் உள்ளன.</p> <p style="text-align: justify;">பசுந்தாள் உரம் என்பது தக்கைப் பூண்டு, சணப்பை, மணிலா அகத்தி, கொளஞ்சி, நரிப்பயிறு ஆகியனவாகும்.</p> <p style="text-align: justify;">பசுந்தாள் என்பது சித்தகத்தி, கிளைரிசிடியா ஆகியனவாகும்.</p> <h3 style="text-align: justify;">பசுந்தழை உரம்</h3> <p style="text-align: justify;">இலை தழைகளையும், புங்கம், வேம்பு, கிளைரிசிடியா, வேலிமசால், பூவரசு, ஆவாரை, எருக்கு, வாகை போன்ற இலைகளையும் வெட்டி வயலுக்கு இடுவது பசுந்தழை உரமாகும்.</p> <p style="text-align: justify;">சித்தகத்தி பருவம்: எல்லா பருவத்துக்கும் ஏற்றதாகும். குறிப்பாக மார்ச்- ஏப்ரல் மாதங்கள் சிறந்த பருவ காலமாகும். எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றதாகும்.</p> <p style="text-align: justify;"><strong>விதை அளவு:</strong> ஒரு ஹெக்டேருக்கு 30 முதல் 40 கிலோ விதை தேவைப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>விதை நேர்த்தி:</strong> குறிப்பிட்ட ரைசோபியம் நுண்ணுயிர் உரத்தை ஒரு ஹெக்டேருக்கு 5 பாக்கெட் என்ற அளவில் விதையுடன் கலந்து விதைக்க வேண்டும். கை விதைப்புக்கு 30 சென்டி மீட்டருக்கு 10 சென்டி மீட்டர் என்ற அளவில் இடைவெளி விட வேண்டும்.</p> <p style="text-align: justify;">இதற்கு உரங்கள், பயிர் பாதுகாப்பு அவசியமில்லை. தேவைப்படும் பட்சத்தில் புரனோபாஸ் ஒரு சதவீதத்தை பூ, காய் பருவத்தில் தெளிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>நீர்ப்பாசனம்:</strong> 15 நாள்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>அறுவடை:</strong> விதைத்த 45 முதல் 60 நாள்களில் மண்ணில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">கிளைரிசிடியா</h3> <p style="text-align: justify;">பொதுவாக மழைக்காலங்களில் இதை நடலாம். ஜூலை, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இதன் நாற்றுகளை நடலாம்.</p> <p style="text-align: justify;">இது எல்லா மண் வகைகளிலும் வளரும் தன்மை உடையது.</p> <p style="text-align: justify;"><strong>வளர்க்கும் முறை: </strong>கிளைரிசிடியா விதைகள் அதிகளவில் கிடைப்பதில்லை. எனவே இதை பதியன் போட்டு நடவு செய்யலாம். நன்கு முற்றிய நிலையில் உள்ள குச்சிகளை சாணக் கரைசலில் நனைத்து நட வேண்டும். வரப்புகளின் ஓரங்களில் 2 மீட்டர் இடைவெளியில் நடலாம். வருடத்துக்கு இரண்டு முறை இதன் இலைகளை பறித்து பசுந்தழை உரமாக இடலாம்.</p> <p style="text-align: justify;">மழைக் காலங்களில் இலைகளையும், தண்டு பகுதிகளையும் அறுத்து உரமாக பயன்படுத்தும் போது மீண்டும் நன்கு வளர ஏதுவாகின்றது.</p> <p style="text-align: justify;">இதற்கு பயிர் பாதுகாப்பு, உரங்கள் அவசியமில்லை. இந்த முறையில் பயிரிட்டால் ஒரு வருடத்துக்கு ஒரு கிளைரிசிடியா செடியில் இருந்து 20 கிலோ தழைச்சத்து கிடைக்கிறது.</p> <p style="text-align: justify;">வைக்கோலும் உரம் தான்: நெல் அறுவடைக்குப் பின் வயலில் உள்ள தாள்களையும், வைக்கோலையும் உரமாக பயன்படுத்தலாம். நெல் வைக்கோலில் 6 சதவீத கந்தகச் சத்து, 1.37 சதவீத சாம்பல் சத்து, சிலிக்கான், 40 சதவீத கரிமம் ஆகிய சத்துகள் உள்ளன.</p> <p style="text-align: justify;">வைக்கோலை வயலில் மடக்கி உழுவதால் ஹெக்டேருக்கு 45 கிலோ தழைச்சத்தும், 7 முதல் 10 கிலோ மணிச்சத்து கிடைக்கிறது. மேலும் நிலத்தில் சாம்பல் சத்து, கந்தகச் சத்து, சிலிக்கான், மயில் துத்தம், இரும்புச் சத்து போன்ற நுண்ணூட்ட சத்துகளையும் மண்ணில் கூட்டுகிறது.</p> <p style="text-align: justify;">வைக்கோலை வயலில் ஒரு மாதத்துக்கு முன்பு இட்டு மக்க வைத்து உழுத பிறகே நெல் நடவு செய்ய வேண்டும். இதுபோல் விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்து தங்களது சாகுபடியை பெருக்கலாம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தினமணி</p> </div>