<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">மேலை நாடுகளில் மேய்ச்சலின் போது ஆடு மற்றும் மாட்டு மந்தைகளைக் குறிப்பிட்ட இடத்தில் மேய்ச்சலில் ஈடுபடுத்தவும் அவை வழி தவறி மந்தையிலிருந்து விலகிச் சென்று விடாமல் பாதுகாக்கவும், மேய்ப்பர் பணிகளிலும் நாய் இனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. கூலி, வெடலேண்ட், ஜெர்மன் ஷெப்பர்டு, ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு, மவுண்டென், மேஷ்டிப் பாக்சர் கிரேட்டேன் போன்ற இனங்கள் இவ்வாறு கால்நடை வளர்ப்பில் ஈடுபடுத்தப்படுகின்றன.</p> <h3 style="text-align: justify;">நாய்களைத் தேர்ந்தெடுக்கும் முறை</h3> <p style="text-align: justify;">நமது இருப்பிடம், சீதொஷண நிலை, உணவுப் பழக்கம், தேவை இவற்றைக் கருத்தில் கொண்டு நாய் இனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நாய் இனத்தைத் தேர்வு செய்த பின்னர் நாய்களை விற்பனை செய்பவரிடம் அணுகி, குட்டி ஈன்ற நாய் மற்றும் அந்நாயுடன் கூடிய ஆண் நாய் ஆகியவை நன்றுடையவையா என உறுதி செய்ய வேண்டும். மேலும் அந்நாய்களின் தாயிக்குத் தடுப்பூசி அளிக்கப்பட்டதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.</p> <p style="text-align: justify;">நாய்க்குட்டிகளை 38 ஆவது நாளில் இருந்து தாயிடம் இருந்து பிரிக்கலாம். பல நாய்க்குட்டிகளிலிருந்து ஒரு குட்டியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை யாதெனில்,</p> <p style="text-align: justify;">1. கூட்டமாக இருக்கும் குட்டிகளை ஒலி எழுப்பி அழைக்க வேண்டும். நம்மை நோக்கி வரும் குட்டிகளில் முதலாவது குட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் நல்ல செவித்திறன் உள்ள நாயா என உறுதி செய்து கொள்ள முடியும்.</p> <p style="text-align: justify;">2. அந்நாய்க்குத் தடைகளைத் தாண்டி வருவதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பார்வைத் திறனைச் சரிபார்க்க முடியும்.</p> <p style="text-align: justify;">3. அவற்றின் உடலில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.</p> <p style="text-align: justify;">நாய்களை வளர்பபோர் தாங்கள் நாய் வளர்க்கும் நோக்கத்தை முழுதாக அறிந்து அதன் பின்னர் அந்நோக்கத்திற்கு உதவும் வகையில் நாய் இனங்களைத் தேர்வு செய்வதால், நாய் வளர்ப்பின் நோக்கத்திற்குரிய பயனை அடையலாம்.</p> <h3 style="text-align: justify;">இடவசதி</h3> <p style="text-align: justify;">இடத்திற்கு தகுந்தாற் போல் செல்ல நாய்க் குட்டிகளைத் தேர்வு செய்வது நல்லது. உதாரணத்திற்கு 400 சதுர அடி வீட்டில் பெரிய இன நாயை வளர்க்க முடியாது. அந்த 400 சதுர அடிக்குத் தகுந்தாற்போல ஒரு சிறிய இன நாயை வளர்ப்பது மிகவும் நல்லது. ஆகவே இடத்திற்கு தகுந்த நாய்க் குட்டிகளையும் தேர்வு செய்வது மிகவும் நல்லது.</p> <h3 style="text-align: justify;">நோக்கத்திற்கு ஏற்ப தேர்வு செய்தல்</h3> <p style="text-align: justify;">நாய்க்குட்டிகளை எந்த நோக்கத்திற்காக நாம் வளர்க்கிறோமோ, அதற்கு ஏற்ப நாய்க் குட்டிகளைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது. நம் குடும்பச் செல்லமாக வளர்க்க வேண்டும் என்றால் குட்டியைத் தேர்வு செய்யும் முறை, குட்டியை தேர்வு செய்யும் போது அதன் தாய் தந்தை நாய்களுடைய குண இயல்புகளைப் பார்ப்பது மிகவும் அவசியம். முறையான வரலாற்றுப் பதிவு மற்றும் மருத்துவப் பதிவேடு பராமரிப்பு பண்ணுகிறார்களா என்று உறுதி செய்தல் அவசியம். தடுப்பு ஊசிகள் முறையாகப் போட்டுள்ளார்களா என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.</p> <p style="text-align: justify;">அகக்கலப்பு செய்து குட்டி இறந்திருக்கலாம், அதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அகக்கலப்பு என்றால் குட்டிகள் வளர்ந்து பருவமடைந்து மீண்டும் பெற்றோருடன் கலந்து இனப்பெருக்கம் செய்வது. இது சரியான முறையன்று.</p> <h3 style="text-align: justify;">குட்டியைத் தேர்வு செய்யும் முறை</h3> <p style="text-align: justify;">1. செல்ல நாயாக</p> <p style="text-align: justify;">நான்கு குட்டிகளில் எந்தக் குட்டி நாம் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் வந்த நம் கால்களை சுற்றி முத்தம் கொடுத்து விளையாடுகிறதோ அதனைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம்.</p> <p style="text-align: justify;">2. பாதுகாப்புக்காக</p> <p style="text-align: justify;">மொத்தக் குட்டிகளில் நாம் சென்ற உடன் எந்தக் குட்டி நாம் தூக்கி வீசுவதைக் கவ்விப் படிக்கிறதோ அந்தக் குட்டியைப் பாதுகாவலுக்குத் தேர்வு செய்வது அவசியம்.</p> <p style="text-align: justify;">3. புலனறிய</p> <p style="text-align: justify;">மொத்தக் குட்டிகளில் ஒரு சின்ன உணவுத் துண்டைப் போட்டால் அந்தக் குட்டிகளில் எந்தக் குட்டி முதலில் அதனை முகர்ந்து கண்டுபிடித்துச் சாப்பிடுகிறதோ அதனைத் தேர்வு செய்யவும். தேர்வு செய்யும் குட்டிகள் அம்மாவிடம் 40 நாள்கள் முதல் அதற்கு மேலும் தாய்ப்பால் குடிப்பது அவசியமாகும்.</p> <p style="text-align: justify;">தேர்ந்தெடுத்த குட்டியைக் கால்நடை மருத்துவரின் உதவியுடன் முறையான பரிசோதனை செய்து, பிறப்பு முதல் அது பற்றிய விபரங்கள் அடங்கிய பதிவேட்டை நல்ல ஒரு மருத்துவரிடம் அல்லது ஒரு நல்ல பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறுதல் அவசியம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: கால்நடைக் கதிர்</p> </div>