<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">ஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்களிலும் நிறைய காணப்படுகிறது. இந்த செடி வந்துவிட்டால், ஏரி முழுவதும் பரவி, நீரே தெரியாதவாறு மூடி விடும். நீரும் கெட்டு விடும்.</p> <p style="text-align: justify;">ஆகாயத்தாமரை பற்றிய ஆராய்ச்சி மூலம் கற்பூரவல்லி இலையை பயன்படுத்தி கட்டுப்படுத்துவது பற்றிய செய்தியை முன்பே படித்து உள்ளோம். ஆகாயத்தாமரை எப்படி இயற்கை உரம் உருவாக்கலாம் என்பதையும் படித்து உள்ளோம்.</p> <h3>நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி?</h3> <p style="text-align: justify;">நீர்நிலைகளில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ, ஆகாயத்தாமரைகள் மட்டும் செழித்து வளர்ந்திருக்கும். மடைகளிலும், மதகுகளையும் அடைத்தபடி வளர்ந்திருக்கும் இவற்றை அழிப்பது சவாலான விஷயம்.</p> <p style="text-align: justify;">நிலத்தில் பயன்படுத்தக்கூடிய களைக்கொல்லிகளை நீர்நிலைகளில் பயன்படுத்தினால் ஆகாயத்தாமரைகள் இறந்துவிடும். அதில் மீன்கள் வளர்க்க முடியாது. அப்படியே வளர்த்தாலும் திசுக்கள் மாறுபாடு என்பது பிரச்னையாக இருக்கும்.</p> <p style="text-align: justify;">மாடுகளுக்கு பசுந்தீவனமாக இவற்றை கொடுக்கும் போது வயிறு உப்புசம் ஆகிவிடும். மாட்டுத்தீவனத்துடன் 10 சதவீதம் கலந்து கொடுக்கும் போது அவற்றின் ரத்தத்திலோ, செல்களிலோ பிரச்னை இருப்பதில்லை.</p> <p style="text-align: justify;">இலைகளை மட்கச் செய்து உரமாக்கியும், பசுந்தாள் உரமாகவும் நிலத்தில் பயன்படுத்தலாம்.</p> <p style="text-align: justify;">கூன்வண்டு, புல்கெண்டை மீன் ஆகாயத்தாமரை இலைகளின் மெழுகு போன்ற பகுதியை கூன் வண்டுகள் அரித்து தின்றுவிடும். நீர்நிலைகளில் 10 - 15 நாட்களுக்கு கூன்வண்டுகளை விட வேண்டும்.</p> <p style="text-align: justify;">அதன்பின் கற்பூரவல்லி இலையை பவுடராக்கி அதன் சாற்றை 30 சதவீதம் தெளிக்க வேண்டும். இதன் வேதிக்குணம் ஆகாயத்தாமரை வேர் வழியாக இலைக்குள் எளிதாக சென்று நுண்ணுாட்டச் சத்துக்களை வெளியேற்றி சுருங்கி கருகச் செய்து விடும். புல்கெண்டை மீன்கள் மூலமும் இலைகளை கட்டுப்படுத்தலாம்.</p> <h3>நானோ இழை தயாரிப்பு</h3> <p style="text-align: justify;">தாவரங்களில் செல்லுலோஸ் எனும் பொருளில் இருந்து நானோ இழைகள் தயாரிக்கப்படுகிறது. ஆகாயத்தாமரை இலைகளில் அதிகபட்சமாக 64 சதவீதம் செல்லுலோஸ் உள்ளது. ஒரு மில்லிமீட்டரில் லட்சத்தில் ஒரு பகுதி தான் நானோ மீட்டர். இந்த இலையில் இருந்து 5-50 நானோமீட்டர் தடிமனுள்ள நானோ இழைகள் தயாரிக்கலாம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தினமலர்</p> </div>