<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;"><strong>விவசாயத்திற்கு பெருக்கம் அளிக்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள்</strong></p> <p style="text-align: justify;">நமது நாட்டின் முதுகெலும்பாக எப்போதுமே விவசாயிகள் தான் இருந்து வருகின்றனர். புத்தம்புதிய, உறுதியான நடவடிக்கைகள் மூலம் நாட்டின் இந்த முதுகெலும்பை மேலும் வலுப்படுத்தவே இந்திய அரசு முயன்று வருகிறது.</p> <p style="text-align: justify;">பாசன வசதிகளை உறுதிப்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்திக்கு ஊக்கமளிப்பதாக பிரதமரின் விவசாய மேம்பாட்டு திட்டம் அமைகிறது. அனைத்து விவசாய நிலங்களுக்கும் ஏதாவதொரு வகையில் பாசன வசதியை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். ‘ஒவ்வொரு சொட்டு நீருக்கும் மேலும் அதிகமான பயிர் விளைச்சல்’ என்பதை செயல்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கும் நவீன பாசன வழிகள் குறித்து பயிற்சி வழங்கப்படும்.</p> <p style="text-align: justify;">விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு இந்திய பகுதியில் இயற்கை விவசாயத்தை வளர்க்கவும், இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் ஊக்கமளிக்கும் விதத்தில் சிறப்புத் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">நீடித்த வகையில் குறிப்பிட்ட பயிர்களை உற்பத்தி செய்வதை அதிகரிப்பதற்கென மண்வள பரிசோதனை அட்டைகள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 14 கோடி விவசாயக் குடும்பங்களுக்கும் இந்த அட்டைகள் வழங்கப்படும். மூன்றாண்டுகளுக்கும் 248 லட்சம் மண் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.</p> <p style="text-align: justify;">எரிசக்தி திறன் மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் புதிய யூரியா கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கோரக்பூர், பரூனி, தால்செர் ஆகிய இடங்களில் உரத் தொழிற்சாலைகளுக்கும் புத்துயிர் அளிக்கப்பட்டு யூரியா உற்பத்தியில் தன்னிறைவை எட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">அழுகக் கூடிய விவசாய-தோட்டப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைப்பதற்கென சந்தையில் தலையீடு செய்வதற்கு உதவி செய்யும் வகையில் ரூ. 500 கோடி கையிருப்புடன் கூடிய விலை நிலைத்திருப்பதற்கான நிதி உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய தலையீடானது சந்தையை ஒழுங்குபடுத்துவதோடு, விலை ஏற்ற இறக்கங்களையும் சரிப்படுத்துவதாக அமையும்.</p> <p style="text-align: justify;">மின்கடத்தி அமைப்பை வேறுபடுத்துவதன் மூலம் தங்குதடையற்ற மின்வசதியை கிராமங்களுக்கு வழங்குவதற்கென கிராம மின்வசதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உற்பத்திக்கு ஊக்கம் தரும் என்பது மட்டுமின்றி, கைவினைத் தொழில்கள், கல்வி போன்ற விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்.</p> <p style="text-align: justify;">சலுகை வட்டிவிகிதத்தில் கடன்களை எளிதாகப் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், விவசாயக் கடன்களுக்கான இலக்கு ரூ. 8.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">விவசாயிகளுக்கான இணைய தளத்தின் மூலம் வழங்கப்படும் பருவநிலை குறித்த அறிக்கைகள், உரனங்கள் பற்றிய தகவல்கள், சிறப்பான விவசாய நடைமுறைகள் பற்றிய செய்திகள் ஆகியவை நவீன தொழில்நுட்பங்களின் மூலம் விவசாயிகள் பெருமளவிற்குப் பயனடைய உதவி செய்துள்ளது. விவசாயத் துறையில் கைபேசி மூலமான நிர்வாகத்தை பயன்படுத்த ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 550 கோடி குறுஞ்செய்திகள் அறிவுரைகளாகவும், தகவல்களாகவும் அனுப்பி வைக்கப்பட்டன.</p> <p style="text-align: justify;"><a class="external-link ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="http://www.narendramodi.in/pm-launches-soil-health-card-scheme-presents-krishi-karman-awards-from-suratgarh-rajasthan-7272" target="_blank" rel="noopener">மண்வள ஆய்வு அட்டைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள இங்கே அணுகவும்</a></p> <p style="text-align: justify;"><a class="external-link ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="http://farmer.gov.in/" target="_blank" rel="noopener">விவசாயிகள் எவ்வாறு மேலும் வலுவாக்கப்படுகின்றனர் என்பதை அறிய இங்கே அணுகவும்</a></p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="external-link ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="http://www.pmindia.gov.in/ta/" target="_blank" rel="noopener">http://www.pmindia.gov.in/ta/</a></p> </div>