<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">சம்பங்கி, பாலியாந்தஸ் டியூபூரோசா என்ற தாவரவியல் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இம் மலர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், சௌதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் இம்மலர் 1667 எக்டர் நிலப்பரப்பில் ஆண்டுதோறும் 19,815 டன் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவற்றின் ஓரடுக்கு மலர்கள் வாசனை அதிகம் கொண்டிருப்பதால், வாசனை மெழுகு உற்பத்தி செய்ய பயன்படுகின்றது. ஈரடுக்கு மலர்கள் கொய்மலராகவும், பூங்கொத்து தயாரிப்பதற்கும், பூஜாடியை அழகுபடுத்தவும் பயன்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இம்மலரில் நூற்புழுவின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. அவற்றுள் இலை நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழுக்கள் முக்கியமானதாக கருதப்படுகின்றன.</p> <h3 style="text-align: justify;">இலை நூற்புழு</h3> <p style="text-align: justify;">இலை நூற்புழு (அப்கிலென்காய்டஸ் பெஸ்ஸியே), சம்பங்கி சாகுபடியில் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றது. இவற்றின் தாக்கம் இந்தியாவில் மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காணப்படுகின்றது. இவை முதலில் ஹவாயில் பயிரிடப்பட்ட சம்பங்கியில் தென்பட்டது. நெல்லில் காணப்படும் 'வெள்ளை நுனி' அறிகுறியும் இந்த நூற்புழுவின் தாக்கத்தால் ஏற்பட்டவையாகும்.</p> <h4 style="text-align: justify;">நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்</h4> <ul style="text-align: justify;"> <li>பூவின் தண்டு கடினமாகுதல், அதன் வளர்ச்சி குறைதல்</li> <li>இலைகளிலும் <span style="text-align: justify;">பூவின் இதழ்களிலும்</span> பழுப்பு நிற கோடுகள் காணப்படுதல்</li> <li>தாக்குதலின் கடுமையான நிலையில், இலை, பூவின் இதழில் துரு போன்ற பழுப்பு நிற புள்ளிகள் தோன்றதல்</li> <li>பூவின் தண்டு அழுகுதல்</li> <li>பூங்கொத்தில் காணப்படும் பூவின் எண்ணிக்கைக் குறைதல்</li> </ul> <h4 style="text-align: justify;">கட்டுப்படுத்தும் முறைகள்</h4> <ul> <li>நடும் முன் கிழங்கினைக் கொதிக்கும் நீரில் (60-70° செல்சியஸ்) அல்லது வேம்பு விதைக் கரைசலில் (4%) ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.</li> <li>கிழங்கு முளைத்த பிறகு, 3 முதல் 4 முறை இலை வழியாக குளோர்பைரிபாஸ் (0.5 மில்லி/ லிட்டர்) தெளிக்க வேண்டும்.</li> <li>இரண்டு மூன்றாண்டு செடியில், மேற்சொன்ன மருந்தினை ஏப்ரல் - மே மாதம் வரை மூன்று, நான்கு முறை, 15 முதல் 20 நாள்கள் இடைவெளியில் இலை வழியாக தெளிக்க வேண்டும்.</li> <li>பாதிக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடிங்கி அவற்றை எறிக்க வேண்டும்.</li> <li>நெல் வயலுக்கு பக்கத்து தோட்டத்தில் சம்பங்கி பயிரிடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.</li> <li>நிலத்தை சுத்தமாக வைப்பதன் மூலம் இந்நூற்புழுவின் தாக்கத்தை முற்றிலுமாகக் குறைக்க முடியும்.</li> </ul> <h3 style="text-align: justify;">வேர் முடிச்சு நூற்புழு</h3> <ul style="text-align: justify;"> <li>வேர்முடிச்சு நூற்புழு (மெலாய் டோகைன் இன்காக்னிடா) தாக்குதல், இந்தியாவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகின்றது.</li> <li>இவற்றின் தாக்குதலால் 13.25 சதம் செடியின் எடை, 9.87 சதம் பூக்களின் எண்ணிக்கை, 14.3 சதம் பூத்தண்டு எடை, 13.78 சதம் பூங்கொத்தின் எடை, 28.58 சதம் கிழங்கின் எண்ணிக்கை குறைகின்றது. மேலும், பூக்களின் தரம் அவற்றின் சந்தை விலையும் குறையும்.</li> </ul> <h4 style="text-align: justify;">நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்</h4> <ul style="text-align: justify;"> <li>வேர் முடிச்சுகள் காணப்படுதல்</li> <li>இலைகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து காணப்படுதல்</li> <li>பூங்கொத்தின் விளைச்சல் குன்றுதல்</li> <li>பூக்களின் எண்ணிக்கையும், தரமும் குறைந்து காணப்படுதல்</li> </ul> <h4 style="text-align: justify;">கட்டுப்படுத்தும் முறைகள்</h4> <ul style="text-align: justify;"> <li>கார்போபியூரான் குருணை மருந்தினை செடி ஒன்றுக்கு 2 கிராம் வீதம் இடவேண்டும்.</li> <li>போரேட் 10 ஜி குருணை மருந்தை ஒரு எக்டருக்கு 10கிகி என்ற வீதத்தில் இடலாம்.</li> <li>கிழங்கினை நடும் முன், அவற்றை 30-40 நிமிடம் டிரைசோபாஸ் கரைசலில் (2 மில்லி / லிட்டர்) என்ற அளவில் ஊற வைக்க வேண்டும்.</li> <li>சம்பங்கி மலரைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக வருவாயைப் பெறலாம்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை</p> </div>