<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">மா, வாழை மற்றும் பப்பாளி ஆகிய பழ வகைகளில் சீராக பழுக்க செய்யும் தொழில்நுட்பம்</h3> <p style="text-align: justify;">மா, வாழை மற்றும் பப்பாளி போன்ற பழ வகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட்டு, பின்பு பழுக்கவைக்கப்படுகின்றன. இயற்கையாக இவ்வகை பழங்கள் பழுக்கவைக்கப்படும் போது மெதுவாக பழுப்பதினால், அவற்றின் எடை குறைதல், உளர்ந்து போதல் மற்றும் ஒரே சீராக பழுக்காமை போன்றவை ஏற்படும். வியாபார ரீதியில் வளர்க்கப்படும் தைவான் ரெட் லேடி போன்ற பப்பாளி ரகங்களில், பழங்கள் முழுவதுமாக பழுக்காமல், நுனியிலும் அடியிலும் கெட்டியாகவும், மத்தியப்பகுதியில் மென்மையாகவும் இருக்கும்.</p> <p style="text-align: justify;">பொதுவாக பழவகைகளின் பழுக்கும் திறனை மேம்படுத்த அவை திரண்ட காயாக இருக்கும் போது, அவற்றின் மீது எத்ரெல் தெளித்தல் அல்லது திரண்ட காய்களை எத்ரெலில் முக்கி எடுத்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் மேற்கூறிய முறைகள் பின்பற்ற கடினமானவை. அது மட்டுமன்றி, வணிக ரீதியாக கிடைக்கும் எத்ரெலில் வேதியல் மாசுப்பொருட்கள் காணப்பட்டால், அவை பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க சில நவீன நிறுவனங்கள் எத்திலீன் வாயுவை வணிக ரீதியாக பழங்களை பழுக்க வைக்க உபயோகிக்கின்றன. ஆனால், இவ்வாறு எத்திலீன் வாயு மூலம் பழங்களை பழுக்கவைக்கும் அமைப்புகளை வடிவமைக்க அதிக செலவாகும். எனவே, இவ்வடிவமைப்புகளை சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளால் நிறுவ இயலாது. எனவே, பழ வகைகளை எளிதில் பழுக்க வைக்க, பிளாஸ்டிக் கூடாரங்களில் எத்திலீன் வாயு மூலம் திரண்ட காய்களை பழுக்கவைக்கும் எளிதான மாற்று முறை வடிவமைக்கப்பட்டது.</p> <img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b85bb1bc1bb5b9fbc8b95bcdb95bc1baabcdbaabbfba9bcd-ba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/papaya.jpg" /> <p style="text-align: justify;">அறை வெப்பநிலையில் 3 நாட்கள் சேமிக்கப்பட்ட பப்பாளி பழங்கள்</p> <p style="text-align: justify;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b85bb1bc1bb5b9fbc8b95bcdb95bc1baabcdbaabbfba9bcd-ba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/pap.jpg" /></p> <p style="text-align: justify;">100 பிபிஎம் அளவு எத்திலீன் வாயுவில் காண்பிக்கப்பட்ட பழங்கள்</p> <p style="text-align: justify;">இம்முறையில், காற்றுப்புகாத பிளாஸ்டிக் கூடாரத்தில் எத்ரெலுடன், காரத்தன்மையுடைய பொருளினை சேர்க்கும் போது உருவாகும் எத்திலீன் வாயுவின் மூலம் பழங்கள் பழுக்கவைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட கொள்ளளவு கொண்ட காற்றுப்புகாத கூடாரத்தினுள், பிளாஸ்டிக் க்ரேட்டுகளில் (காற்று செல்லக்கூடிய ஓட்டைகள் கொண்டவை) பழுக்காத திரண்ட காய்கள் பழுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும். காய்களின் அளவுக்கேற்ற போதுமான அளவு எத்ரெலை ஒரு பாத்திரத்தில் வைத்து கூடாரத்திற்குள் வைக்கவேண்டும். எத்திலீன் வாயு உருவாவதற்கு, எத்ரெலுடன் சோடியம் ஹைட்ராக்ஸைடு (காரத்தன்மையுடைய பொருள்) குறிப்பிட்ட அளவு சேர்க்க வேண்டும். எத்திலீன் வாயு கூடாரம் முழுவதற்கும் சீராக பரவுவதற்கு பேட்டரி மூலம் இயங்கும் ஒரு விசிறியினை கூடாரத்திற்குள் வைக்க வேண்டும். 18-24 மணி நேரத்திற்கு பின்பு பழங்களை வெளியே எடுத்து முழுவதுமாக பழுப்பதற்கு அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;"><img class="image-inline" title="" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b85bb1bc1bb5b9fbc8b95bcdb95bc1baabcdbaabbfba9bcd-ba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/storage.jpg" alt="" width="274" height="331" /></p> <p style="text-align: justify;">இயற்கையான முறையில், 10 நாட்கள் பழுக்க எடுத்துக் கொண்ட மாம்பழங்கள், 100 பிபிஎம் அளவு எத்திலீன் வாயுவில் 24 மணி நேரம் வைக்கப்பட்ட திரண்ட மாங்காய்கள் அவற்றின் குணநலன்கள் மாறாமல் பழுப்பதற்கு 5 நாட்கள் போதுமானது. இது போன்றே, அறை வெப்பநிலையில் 100 பிபிஎம் அளவு எத்திலீன் வாயுவில் 15 மணிநேரத்திற்கு வைக்கப்படும் வாழைத்தார்கள் பழுப்பதற்கு 4 நாட்களும், அதே அளவு எத்திலீன் வாயுவில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்படும் வாழைத்தார்கள் பழுக்க 6 நாட்களும் ஆகும். போதுமான வெப்பநிலையில் எத்திலீன் வாயுவில் வைக்கப்பட்ட பப்பாளி சீராக பழுப்பதற்கு 4 நாட்களாகும்.</p> <p style="text-align: justify;">மேலும் தகவல்களுக்கு</p> <p style="text-align: justify;">இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்<br />ஹசர்கட்டா, பெங்களூரு 560 089<br />மின் அஞ்சல்: director@iihr.ernet.in</p> <h3 style="text-align: justify;">கேள்வி பதில்கள்</h3> <p style="text-align: justify;"><strong>1. அத்தி பழங்கள் பதப்படுத்தும் முறை யாது?</strong></p> <p style="text-align: justify;">முன் நேர்த்திக்கு பின் நீர் அகற்றுதல் முறையாகும்.</p> <p style="text-align: justify;"><strong>2. பலவிதமான பழ வகைகளிலிருந்து உற்பத்தியாகும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் யாது?</strong></p> <ul> <li>மாம்பழம் - கூழ், சாறு, பானங்கள், பட்டைகள் மற்றும் ஜாம்</li> <li>திராட்சை - மதுபானம், உலர்திராட்சை, கலவைச்சாறு, பலவகை பழ ஜாம்</li> <li>வாழைப்பழம் - சிப்ஸ், பானம், உடனடி, பரிமாறும் பான வகைகள், பட்டைகள்</li> <li>அன்னாசி - உடனடி தயாரிக்கும் பான வகைகள், பட்டைகள்</li> <li>பப்பாளி - கற்கண்டு, பட்டைகள், கலவைச்சாறு, கலவை பழ ஜாம்</li> <li>பேஷன் பழம் - கலவை சாறு</li> <li>கொய்யா - ஜெல்லி, ஜாம்</li> <li>ஆப்பிள் - சாறு, ஜாம், பட்டைகள்</li> </ul> <p style="text-align: justify;"><strong>3. பழச்சாறுகளின் தரத்தை பாதிக்கும் காரணிகள் யாது?</strong></p> <ul> <li>இரகங்கள்</li> <li>சத்து மேம்பாடு உத்திகள்</li> <li>முதிர்ச்சி நிலை</li> <li>மண் வளமை</li> <li>அறுவடை முறை</li> <li>போக்குவரத்து கால இடைவெளி</li> <li>பூச்சி மற்றும் நோய் தாக்கம்</li> </ul> <p style="text-align: justify;">மூலம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக செய்தி, மலர் - 15, இதழ் - 4</p> </div>