<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">பீச் பழம்</h3> <p style="text-align: justify;">பீச் குளிர் பிரதேசத்திக்கேற்ற ஒரு பணம் தரும் பழப்பயிராகும். மலைப்பகுதிகளில் மட்டுமல்லாமல் மித வெப்ப மண்டல பகுதிகளிலும், குறைந்த உறைநிலை நிலவும் இடங்களிலும் வளரும் தன்மையுடையது. தமிழ்நாட்டில் மேல் பழனி, உதகமண்டலத்திலும் இப்பயிர் சாகுபடி செய்யப்படுகின்றது.</p> <p style="text-align: justify;">பீச் பழங்களை நாம் அதிகளவில் உட்கொள்வதற்கு காரணம் அதன் நிறமும், அதிக சுவையாகும். குறிப்பாக பழங்களில் பொட்டாசியம் (50 சதம்), நார்ச்சத்து (6.0 சதம்), புரதம் (0.9 சதம்), வைட்டமின் 'எ' (6.0 சதம்), வைட்டமின் ‘சி’ (110 சதம்) போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. பீச்சிலிருந்து உலர் பழங்கள், ஜாம், ஜிஸ், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பழக்கூழ் போன்ற மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.</p> <p style="text-align: justify;">மண்/காலநிலை சத்துக்கள் நிறைந்த, வடிகால் வசதி கொண்ட இரு மண்பாட்டு நிலம் சாகுபடிக்கு உகந்தது. கடல் மட்டத்திலிருந்து 1800 முதல் 2000 மீட்டர் வரை உள்ள மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யலாம். மண்ணின் கார அமில நிலை 5.8 முதல் 6.2 இருத்தல் வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">இரகங்கள்</h3> <ul> <li style="text-align: justify;">குறைந்த பருவ கால இரகங்கள் - (ஏப்ரல் - மே) - புளோரிடாசன்</li> <li style="text-align: justify;">மித பருவ இரகங்கள் - (ஜீன் - ஜூலை) - ஷா பசந்த் அதிக கால இரகங்கள் - (ஜீலை - ஆகஸ்ட்) -ரெட் ஷாங்காய் புளோரிடாசன் இரகம் இந்த பழங்கள் உருண்டையாக, சிவப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். உட்புற சதைப்பற்று மஞ்சள் நிறத்துடன் புளிப்புத்தன்மையைக் கொண்டிருக்கும். குறைந்த உறைகுளிர் நிலைக்கு ஏற்ற இரகமாகும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>ஷா பசந்த் இகரம்</strong></p> <ul> <li style="text-align: justify;">பழங்கள் பெரியதாக, மஞ்சள் நிறத்துடன் அதிக சாற்றினைக் கொண்டிருக்கும். இனிப்பு கலந்த புளிப்புச் சுவையுடன் காணப்படும்.</li> <li style="text-align: justify;">ரெட் ஷாங்காய் இரகம் பழங்கள் பெரியதாக வெளிர் மஞ்சள் நிறத்தில் சிவப்பு நிறத்தில் காணப்படும். மஞ்சள் நிற சதையுடைய பழங்கள் பிரதாப் இரகம் பழங்கள். ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் பழுக்கத் தொடங்கிவிடும். 65 - 70 கிராம் எடையுடன் பழங்கள் உருண்டையாக சிவப்பு நிறத்துடன் காணப்படும். விளைச்சலாக மரத்திற்கு 70 கிலோ பழங்கள் கிடைக்கும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>புளோரிடா பிரின்ஸ் இரகம்</strong></p> <ul> <li style="text-align: justify;">பழங்கள் ஏப்ரல் நான்காவது வாரத்தில் இருந்து பழுக்கத் தொடங்கிவிடும். பழங்களின் எடை 65 - 70 கிராம் ஆகும். ஒரு மரத்திற்கு 100 கிலோ பழங்கள் விளைச்சலாக கிடைக்கும். பழத்தின் மொத்தக் கரையும் திடப்பொருளின் அளவு 12 சதம், அமிலத்தின் அளவு 0.5 சதம் ஆகும்.</li> <li style="text-align: justify;">ஷான்-இ-பஞ்சாப் இகரம் - மே முதல் வாரத்தில் பழங்கள் பழுக்கத் தொடங்கி விடும். பழுத்த பின் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். விளைச்சலாக ஒரு மரத்திற்கு 70 கிலோ பழங்கள் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் செய்வதற்கு உகந்தது. பழத்தின் மொத்தக்கரையும் திடப்பொருளின் அளவு 12 சதம், அமிலத்தின் அளவு 0.74 சதம் ஆகும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>இயர்லி கிராண்டி இரகம்</strong></p> <p style="text-align: justify;">மே முதல் வாரத்தில் பழுக்கத் தொடங்கி நல்ல விளைச்சல் தரக்கூடிய ஒரு இரகமாகும். பழங்கள் பெரியதாக 90 கிராம் எடையுடன், அதிக கால சேமிப்பிற்கான தரத்தையும் கொண்டிருக்கும். பழத்தின் மொத்தக் கரையும் திடப்பொருளின் அளவு 10.5 சதம், அமிலத்தின் அளவு 0.7 சதம் ஆகும்.</p> <h3 style="text-align: justify;">வெள்ளைநிற சதையுடைய பழங்கள்</h3> <p style="text-align: justify;"><strong>பிரபாத் இரகம்</strong></p> <ul> <li style="text-align: justify;">ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் பழுக்கத் தொடங்கிவிடும். பழங்கள் நடுத்தர அளவாகவும் வெளிப்புறத்தில் சிவப்பு நிறம், உட்புறத்தில் வெள்ளை <span style="text-align: justify;">நிற சதையைக் கொண்டு, சாறு நிறைந்து காணப்படும். </span></li> <li style="text-align: justify;">பழத்தின் மொத்தக் கரையும் திடப்பொருளின் அளவு 12 சதம், அமிலம் 0.37 சதம். ஒரு மரத்திற்கு 64 கிலோ பழங்கள் விளைச்சல் கிடைக்கும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>குர்மானி இரகம்</strong></p> <ul> <li style="text-align: justify;">மே இரண்டாவது வாரத்தில் பழுக்கத் தொடங்கி 90 கிராம் எடையுடனும் உருண்டையாக சிவப்பு, மஞ்சள் நிறத்துடனும் காணப்படும். மொத்தக் கரையும் திடப்பொருளின் அளவு 11.5 சதம், அமிலம் 0.8 சதமாகும். விளைச்சலாக - ஒரு மரத்திற்கு 40 கிலோ பழங்கள் கிடைக்கும்.</li> </ul> <h3 style="text-align: justify;">பயிர் பெருக்கம்</h3> <p style="text-align: justify;">பொதுவாக நாட்டு பீச் இரகத்தில் மொட்டுக்கட்டுதல், ஒட்டுக்கட்டுதல் மூலமாகப் பயிர்ப்பெருக்கம் செய்யப்படுகின்றது. மொட்டுக்கட்டிய அல்லது ஒட்டுக்கட்டிய ஒரு ஆண்டு நாற்றுகள் நடுவதற்கு சிறந்தவை.</p> <h3 style="text-align: justify;">நடவுப் பருவம்</h3> <ul> <li style="text-align: justify;">ஒட்டுக்கட்டிய நாற்றுகளை ஜீன் டிசம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். நடவு இடைவெளி - நிலத்தைப் பண்படுத்தி 60 x 60 x 60 செ.மீ. ஆழம், அகலம், உயரம் என்ற அளவுள்ள குழிகள் எடுக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">பின்பு 4 x 4 மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">கவாத்து செய்தல்</h3> <ul> <li style="text-align: justify;">பீச்சில் கவாத்து செய்வதற்கு ஜனவரி மாதமே உகந்தது. கவாத்து செய்தவுடன் வெட்டிய இடங்களில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு என்ற பூஞ்சாணக் கொல்லி மருந்து கலவையைத் தடவ வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">உர நிர்வாகம்</h3> <p style="text-align: justify;">பழமரங்கள் ஒவ்வொரு ஆண்டும் விளைச்சலைத் தரும் பொழுது பல விதமான சத்துக்கள் மண்ணிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இதனை ஈடு கட்டுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் உரநிர்வாகம் செய்வது மிக இன்றியமையாததாகும். தொழுஉரம், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களை டிசம்பர் மாதத்திலும் யூரியாவை இரண்டு முறையும் அளிக்க வேண்டும். மொத்த யூரியாவில் பாதியை கவாத்து செய்த பின்பும் அடுத்த பாதியை காய் காய்க்கும் பருவத்திலும் (மார்ச்) இடவேண்டும்.</p> <h3 style="text-align: justify;">நீர்ப்பாசனம்</h3> <p style="text-align: justify;">பீச்சில் காய்ப்பு என்பது பொதுவாக மார்ச் மாதத்தில் ஆரம்பித்து பின் ஏப்ரல் - ஜீன் வரை இருக்கும். இரகங்களைப் பொறுத்து ஜீலை - செப்டம்பர் மாதம் வரை காய்களை அறுவடை செய்யலாம். எனவே இந்த சமயத்தில் நீர்ப்பாசனம் என்பது மிக முக்கியமானதாகும். பழங்கள் அறுவடைக்குத் தயாராவதற்கு 25 முதல் 30 நாள்கள் வரை நீர்ப்பாசனம் அவசியமாகும்.</p> <h3 style="text-align: justify;">களை நிர்வாகம்</h3> <p style="text-align: justify;">கோடை, மழைக்காலங்களில் பீச் தோட்டங்களில் அதிகமான களைகள் வர வாய்ப்புள்ளது. டையூரான் (எக்டருக்கு 2கிலோ) அல்லது கிளைபோசேட் அல்லது கிரமாக்சோன் எக்டருக்கு 1.5 முதல் 2 லிட்டர் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தலாம். களைகள் வளர்வதற்கு முன் மார்ச் முதல் வாரத்தில் டையூரானும் வளர்ந்த பின் கிளைபோசேட், கிரமாக்சோனையும் தெளிக்கலாம்.</p> <h3 style="text-align: justify;">விளைச்சல்</h3> <ul> <li style="text-align: justify;">விளைச்சலாக ஒரு மரத்திற்கு 10-15 கிலோ பழங்கள் கிடைக்கும். அறுவடை சந்தைகளின் நிலவரத்தைப் பொறுத்து பீச் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. தொலைதூர சந்தைகளுக்கு, (86)3FT35 முதிர்வடையும் பொழுது (அதாவது மஞ்சள் சதையுடைய இரகங்களுக்கு பச்சை நிறத்திலிருந்து லேசான மஞ்சளாக மாறும்போது, வெள்ளை சதையுடைய இரகங்களுக்கு பச்சை நிறத்திலிருந்து லேசான சிவப்பு நிறத்திற்கு மாறும்போது) அறுவடை செய்யலாம். பொதுவாக இரண்டுவிரல்களுக்கு இடையில் அழுத்தம் கொடுக்கும் பொழுது பழங்கள் கடினமாக இருத்தல் கூடாது.</li> <li style="text-align: justify;">அருகில் இருக்கும் சந்தைகளுக்கு அனுப்பும் போது, நன்றாக பழுத்த பழங்களை அறுவடை செய்தால் போதுமானது. மரத்திலிருக்கும் அனைத்துப் பழங்களும் ஒரே நேரத்தில் முதிர்ச்சியடைவதில்லை. எனவே 3 முதல் 4 முறை அறுவடை செய்வது அவசியமாகும். அறுவடை செய்த பழங்கள் மரப் பெட்டிகள் அல்லது கார்ட்போர்டு பெட்டிகளில் வைக்கப்படுகின்றன.</li> <li style="text-align: justify;">அறுவடை சமயத்தில் பெட்டிகளின் அடியில் காய்ந்த புற்களை வைப்பதால் பழங்களில் காயங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படுகின்றது. அறுவடை செய்த உடன் பழங்கள் நிழலான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அதன் பிறகு 10-15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் அமிழ்த்தி பின் நிழலில் உலர வைக்க வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">பயிர் பாதுகாப்பு</h3> <ul> <li style="text-align: justify;">பூச்சி தாக்குதல் பச்சை அசுவினி இளம் பூச்சிகள் இலைகள், பழங்கள், பூ மொட்டுகளில் உள்ள சாற்றினை உறிஞ்சி விடும். தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு விடும். இளம் பழங்கள் சுருங்கி முதிர்வடையும் முன்பு உதிர்ந்துவிடும். தாக்குதல் அதிகரிக்கும் பொழுது விளைச்சல் குறைந்து விடும். இதனை அசி.பேட் அல்லது டைமித்தோயேட் 0.1 சதவீத கரைசலைத் தெளித்து கட்டுப்படுத்தலாம். தண்டுத்துளைப்பான் இளம் பூச்சிகள் இலைகளை உண்டு அதன் முட்டைகளை மரங்களில் இருக்கும் கிளைகள், இலைகளின் மேல் இட்டு விடும்.</li> <li style="text-align: justify;">வளர்ந்து வரும் பொழுது இளம் புழுக்கள் தண்டுகளைத் துளைத்து விடும். இதனால் மரப்பட்டைகள் உரிந்து பசை போன்ற திரவம் வெளிவந்து மங்கிய நிறத்தோடு காணப்படும். தாக்குதல் அதிகரிக்கும் பொழுது மரங்கள் வளர்ச்சியற்று பின் காய்ந்து விடும்.</li> <li style="text-align: justify;">கட்டுப்படுத்தும் முறைகள் குளோரிபைரிபாஸ் 0.05 சதவீதக் கரைசலை பஞ்சில் நனைத்து ஒரு துணியில் கட்டி தண்டின் துளைகளில் வைத்துவிட்டால் தண்டு துளைப்பான்களைக் கட்டுப்படுத்தலாம்.</li> <li style="text-align: justify;">வளர்ச்சியடைந்த ஈக்கள் பழங்களைத் துளையிட்டு அதன் சாற்றினை உறிஞ்சி விடும் இதனால் பழங்களின் தரம் குறைவதுடன் சந்தையில் விற்பனை செய்யவும் இயலாத நிலை ஏற்படுகின்றது.</li> <li style="text-align: justify;">கட்டுப்படுத்தும் முறைகள் மரீத்தைல் யூஜினால் இனக்கவர்ச்சி பெறியுடன் ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.</li> </ul> <h3 style="text-align: justify;">நோய்கள்</h3> <p style="text-align: justify;"><strong>பீச் இலைச்சுருள் நோய்</strong></p> <ul> <li style="text-align: justify;">செடிகளில் மொட்டு வெடிப்பதற்கு பின் இந்நோய் தோன்றுகின்றது. இதனால் இலைகள் வடிவமற்று, தடிமனாக சுருக்கங்களுடன் சிவப்பு நிறத்தில் காணப்படும். தாக்குதல் அதிகரிக்கும் பொழுது இலைகளில் இருக்கும் பச்சையம் மாறி சாம்பல் நிற திட்டுகள் காணப்பட்டு பின் உதிர்ந்து விடும்.</li> <li style="text-align: justify;">கட்டுப்படுத்தும் முறைகள் ஜிரம் 0.2 சதம் அல்லது மீத்தைல் டெமட்டான் 25 இ.சி ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். பூ மொட்டுகள் தோன்றும் பொழுது ஒரு முறையும் அனைத்து மொட்டுகளும் பூத்த பின் ஒரு முறையும் தெளிக்கலாம்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>சாம்பல் நோய்</strong></p> <ul> <li style="text-align: justify;">இலைகள், பழங்களின் மேல் சாம்பல் நிறத்திட்டுக்கள் காணப்படும். சல்பர் ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் என்ற அளவில் தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.</li> <li style="text-align: justify;">தமிழகத்தின் மலைப்பாங்கான மிதவெப்பப்பகுதிகளில் விளையும் பீச் பழத்தில் பூச்சி, நோய் பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு நல்ல வருமானம் பெறலாம்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை</p> </div>