<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">மல்பெரி சாகுபடியில் பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்களை மேற்கொள்ளலாம்.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b9abbeb95bc1baab9fbbf-ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/copy3_of_29.jpg" /></p> <p style="text-align: justify;">பட்டுப்புழு தொழிலில் புழுக்களின் உணவுக்காக மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மல்பெரி செடியின் வளர்ச்சி மற்றும் இலைகளின் தரத்தை குறைப்பதில் பூச்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால், பட்டுப்புழு தொழிலானது பெரும் சரிவைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளைக் கண்டறிந்து அவற்றின் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும்.</p> <p style="text-align: justify;">மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளில் மிகவும் முக்கியமாக விளங்குபவை மாவுப்பூச்சி, இலை பிணைக்கும் புழு, இலைப் பேன், கரையான் போன்றவையாகும்.</p> <h3 style="text-align: justify;">மாவுப்பூச்சி</h3> <p style="text-align: justify;">வெள்ளையாகப் பஞ்சு போல படர்ந்த முட்டைகளுடன்கூடிய இந்தப் பூச்சிகள், கூட்டமாக இலையின் நரம்புகள், இளம் தண்டுகளில் பரவி சேதாரத்தை ஏற்படுத்தும். இவை இளம் தண்டின் சாறினை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்ந்து விடுகின்றன. இந்தப் பூச்சிகள் மல்பெரி மட்டுமல்லாது பப்பாளி, மரவள்ளி, பார்த்தீனியம், துத்தி, செம்பருத்தி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்கவல்லது. இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே எனும் ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 500 வீதம் பாதிக்கப்பட்ட வயல்களில் வெளியிட வேண்டும். மல்பெரி சாகுபடி செய்யும் பகுதிகளில் உள்ள களைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.</p> <p style="text-align: justify;">மேலும், தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் புரபனோபாஸ் அல்லது புப்ரோபெசின் என்னும் பூச்சிக்கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">இலை பிணைக்கும் புழு</h3> <p style="text-align: justify;">மல்பெரி செடியின் இலைகளின் நுனிப் பகுதியில் இளம் புழுக்கள் இருந்து கொண்டு இலையின் திசுக்களை உண்ணும். வளர்ந்த புழுக்கள் வேகமாக இலைகளை உண்பதுடன் அதன் கழிவுகளை வெளியேற்றுவதால் அவை பட்டுப்புழு உண்பதற்கு உதவாது. இதனால் இலைகள், செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.</p> <p style="text-align: justify;">இத்தகைய புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த மல்பெரி செடிகளை கவாத்து செய்த உடன் நீர் பாய்ச்சுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். மேலும், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஹெக்டருக்கு 5 அட்டை வீதம் கட்ட வேண்டும்.</p> <p style="text-align: justify;">மேலும், தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் டைக்குளோர்வாஸ் என்னும் பூச்சிக் கொல்லி 1 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">இலைப்பேன்</h3> <p style="text-align: justify;">இந்தப் பூச்சிகள், இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளைச் சுரண்டி அதன் சாற்றினை உறிஞ்சி விடுகின்றன. இந்தப் பூச்சிகள் தாக்கப்பட்ட இலைகளில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுவதால் அவை பட்டுப்புழு உணவாக பயன்படுத்த முடியாது.</p> <p style="text-align: justify;">மேலும், தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட இலைகள் வாடியும், இலைகள் சிறுத்தும் வெளிறிய கோடுகளுடன் காணப்படும். இந்த வகை பூச்சிகளை கட்டுப்படுத்த கைத்தெளிப்பானில் தண்ணீரைக் கொண்டு தெளிப்பதன் மூலம் பேன்கள் நீருடன் கழுவிச் செல்லப்படுகின்றன. ஏக்கருக்கு 20 மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை வைப்பதன் மூலம் கவர்ந்து அழிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி வீதம் வேப்பெண்ணையை கலந்து தெளிப்பதன் மூலமும் இலைப்பேனை கட்டுப்படுத்தலாம்.</p> <h3 style="text-align: justify;">கரையான்</h3> <p style="text-align: justify;">பொதுவாக செம்மண், மணற்பாங்கான பகுதிகளில் நடவு செய்யப்பட்ட மல்பெரி செடிகளில் கரையான்களின் தாக்குதலானது அதிகமாக காணப்படும். இவை பெரும்பாலும் மல்பெரியின் வேர்ப்பகுதிகள், தண்டுகளில் சேதாரத்தை ஏற்படுத்துகின்றன. கரையானை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வேப்பெண்ணெய் வீதம் கலந்து மல்பெரி செடிகளின் வேர், தண்டுப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். குளோர்பைரிபாஸ் என்னும் பூச்சிக்கொல்லியினை ஒரு லிட்டர் நீருக்கு 4 மில்லி வீதம் கலந்து கரையான் புற்றுகள் இருக்கும் இடத்தில் ஊற்றுவதன் மூலமும் கரையானை கட்டுப்படுத்தலாம்</p> <p style="text-align: justify;">ஆதாரம்: மாவட்ட மத்திய வேளாண் அறிவியல் நிலையம், ஈரோடு</p> </div>