<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">பூச்சிகளை கண்காணித்தல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் முக்கிய <span style="text-align: justify;">அங்கமாக </span>கருதப்படுகிறது. பயிர்களில் தோன்றும் பூச்சிகளை சரியான காலகட்டங்களில் கண்டறிந்தால் அவற்றினை கட்டுப்படுத்திடலாம். பூச்சிகளை கண்காணிக்க பல்வேறு முறைகள் மிகவும் எளிதாக கடைபிடிக்கப்பட்டாலும், அவற்றுள் இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்துவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. இனக்கவர்ச்சி பொறிகளில் <span style="text-align: justify;">பூச்சிகளைக் </span>கவர்ந்திடும் இனக்கவர்ச்சி திரவம் பயன்படுத்தப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">இனக்கவர்ச்சி <span style="text-align: justify;">திரவம்</span></h3> <p style="text-align: justify;">இனக்கவர்ச்சி திரவம் என்பது பூச்சிகளால் சுரக்கப்படும் ஒரு வகை வாசனை திரவமாகும். இவை பெரும்பாலும் ஆண் பூச்சிகளை கவர்ந்திட பெண் பூச்சிகளால் சுரக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. இருப்பினும், தென்னையில் காணப்படும் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூண்வண்டு போன்ற பூச்சிகளில் ஆண் மற்றும் பெண் இனங்கள் இரண்டும் இனக்கவர்ச்சி திரவத்தினை சுரக்கின்றன. இனக்கவர்ச்சி திரவம் ரப்பரினாலான, <span style="text-align: justify;">குப்பி (செப்டா) என்று சொல்லக்கூடிய</span> சிறு உபகரணத்தினுள் வைக்கப்பட்டிருக்கும்.</p> <h3 style="text-align: justify;">குப்பிகள்</h3> <p style="text-align: justify;">இந்தக் குப்பிகளை பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு பயன்படுத்தும் போதுதான் வெளியே எடுக்கவேண்டும். எனவே, அவைகளை குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஒருவகை இனக்கவர்ச்சி திரவத்தால் ஒரு வகை பூச்சிகளை மட்டுமே கவர்ந்தழித்திட முடியும். <span style="text-align: justify;">எனவே, </span>பூச்சிகளுக்குத் தகுந்தாற்போல் இனக்கவர்ச்சி திரவங்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனக்கவர்ச்சி திரவங்களை ஒரு குறிப்பிட்ட பயிரில் பயன்படுத்தும் போது கையுறை அணிய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனக்கவர்ச்சி திரவங்களை பூச்சிக் கண்காணிப்பிற்கு பயன்படுத்தும் போது ஒன்றுக்கொன்று சுமார் 40 மீட்டர் இடைவெளித் தேவை. இனக்கவர்ச்சிப் பொறிகளை வயல்களில் வைத்தவுடன் குறியீடு செய்தல் அவசியம். <span style="text-align: justify;">இனக்கவர்ச்சிப் பொறிகளை பயிர்களின் நுனியிலிருந்து சுமார் ஒரு அடி உயரத்தில் இருக்குமாறு </span><span style="text-align: justify;">பொருத்த வேண்டும்.</span><span style="text-align: justify;"> </span></p> <p style="text-align: justify;">ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை</p> </div>