<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">மூங்கில் கழிகளைக் கொண்டு இனப்பெருக்கம்</h3> <p style="text-align: justify;">மூங்கில் காகிதம் தயாரிக்கத் தேவையான, மரக்கூழ் உற்பத்திக்கான ஓர் முக்கியமான பயிராகும். தன் ஆயுள்காலத்தில் (40 வருட காலத்திற்குபின்) ஒரே ஒருமுறை பூத்து இப்பயிர் விதை உற்பத்தி செய்வதாலும், விதைகள் குறைந்த முளைப்புத்திறன் மற்றும் வீரியம் கொண்டவையாக இருப்பதால், விதைகளைக் கொண்டு இனப்பெருக்கம் சாதாரணமாக செய்யப்படுவதில்லை. எனவே ஒன்று அல்லது இரண்டு கணு கொண்ட கழிகள் இனப்பெருக்கத்திற்காக (விதையில்லா இனப்பெருக்க முறை) உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆனால் இம்முறையில் வேர்விடும் தன்மை 25 சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது. மேம்படுத்தப்பட்ட இம்முறையில், நன்கு வளர்ந்த மூங்கிலில், (5 - 10ஆண்டு) ஓராண்டு முதிர்ச்சி கொண்ட கழிகள் தேர்வு செய்யப்பட்டு, கழிகள் தாய் மரத்திலிருந்து தூர் பகுதியில் சேதப்படாமல் அகற்றப்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;">கிளைகளை நுட்பமாக அகற்றிவிட்டு, மொட்டுக்களுடன் கூடிய கணுக்கள் கொண்ட கழியை மேட்டுப்பாத்தி நாற்றங்கால் பாத்திகளில் இடவேண்டும். பின்பு, கழிகளை செம்மண் மற்றும் மணல் சரிவிகிதத்தில் கலந்த கலவையால் மென்மையாக 0.5 செ.மீ. உயரத்திற்கு இடவேண்டும். தென்னங்கீற்று ஓலைகளால் போதிய நிழலினை கழிகளுக்கு ஏற்படுத்தியபின், தினமும் தண்ணீர் ஊற்றி பாதுகாத்தால், முதல் இரண்டு மாதங்களில் கழிகளிலுள்ள ஒவ்வொரு கணுவிலும் உள்ள மொட்டுகளிலிருந்து தண்டு வளர்ச்சி பெறும். மூன்று மாதங்களில் ஏறக்குறைய எல்லா கணுக்களில் இருந்தும் வேர் வளர்ச்சி பெறும். இலைப்பகுதியும், வேர்களும் நன்கு உருவானபின், மொத்த கழியையும் நாற்றங்கால் பாத்தியிலிருந்து அகற்றி, ஒவ்வொரு கணுவாக வெட்டி பிரிக்க வேண்டும். தற்பொழுது, ஒவ்வொரு கணுவும் நன்கு வளர்ந்த தண்டு மற்றும் வேர்களுடன் தானே வளரக்கூடிய தனிச்செடியாக உருபெறும். இதனை, செம்மண், மணல் மற்றும் தொழு உரம் ஆகியவை 1:1:1 விகிதத்தில் கலந்த கலவை நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளில் மாற்றி வீரியமிக்க மூங்கில் நாற்றுகளை உருவாக்கலாம்.</p> <h3>நன்மைகள்</h3> <p style="text-align: justify;">மேற்கண்ட தொழில்நுட்பத்தில் மூங்கிலில் வேர் உருவாகுவதற்கு எந்தவித ஊக்கிகளையும் பயன்படுத்துவதில்லை. எனவே இதனை விவசாயிகள் மிக சுலபமாக பயன்படுத்த முடியும். இந்த தொழில்நுட்பத்தில் பசுமை நிற கண்ணாடி கூடுகள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் செலவினங்கள் மிக குறைவாகவே அமைகிறது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை</p> </div>