<div id="MiddleColumn_internal"> <h3>அறிமுகம்</h3> <p style="text-align: justify;">மூங்கில் இயற்கையிலேயே வேகமாக வளரும் தன்மையுடையது. அதனால் மிக குறுகிய காலத்தில் (4-6 வருடங்கள்) பயன்பாட்டிற்கு வருகிறது. ஒருமுறை நடப்பட்ட மூங்கில் மரமானது, 25-30 வருடங்களுக்கு தொடர்ச்சியான விளைச்சலைத் தருவதால், மீண்டும் நடவேண்டிய அவசியமில்லை. இதனால், “ஏழைகளின் மரம்” மற்றும் “பசுந்தங்கம்” என்றும் மூங்கில் அழைக்கப்படுகிறது. தற்பொழுது மூங்கில் மரஉற்பத்தி நமது தேவைக்கு மிகவும் குறைவாக இருப்பதால் தரிசுநிலத்திலும் வேளாண் பயனுக்கு உதவாத நிலங்களிலும் மூங்கில் மரங்களை நட்டு உற்பத்தியைப் பெருக்கலாம்.</p> <p style="text-align: justify;">மூங்கிலின் விதை முளைப்புத்திறன் குறைவாக இருப்பதால் மூங்கில் மர கணுக்களைக் கொண்டு நாற்றங்காலில் நாற்றுகள் தயார் செய்யப்படுகின்றன. இம்முறையில் பயன்படுத்தப்படும் கணுக்களின் வேர், வளர்ச்சி குன்றி இருப்பதால் தாவர வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிட்டிக் அமிலம் (IAA), இண்டோல் பியூட்டிரிக் அமிலம் (IBA) ஆகிய வேதிமங்களைக் கொண்டு வேர்வளர்ப்புத்திறனையும் விதை முளைப்புத்திறனையும் பயன்படுத்தி மேம்படுத்தலாம்.</p> <p style="text-align: justify;">மண்ணிலே வளரும் பலவகை நுண்ணுயிரிகளான அசோஸ்பைரில்லம், அசிட்டோபாக்டர், பேரிங்கியா, வேர் உட்பூசணம் மற்றும் சூடோமோனாஸ் போன்றவை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்பவையாகும். எனவே மூங்கில் மரக்கன்று வளர்ப்பிற்காக இவ்வகை நுண்ணுயிரிகள், ஆனைகட்டி, பர்லியாறு, மாமரம், கூடலூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள மூங்கிலின் வேர் மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்டு நுண்ணுயிர் உரமாக தயாரிக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இவ்வகையில் தெரிவு செய்யப்பட்ட நுண்ணுயிர் தொகுப்பு உரம் மூங்கில் மர நாற்றங்காலில் இடப்படுவதால் தூர்களும் (66%), நாற்றுகளின் உயரமும் அதிகரிக்கின்றன. இதனால் குறுகிய காலத்தில் தரமான மூங்கில் நாற்றுகளை நடவுக்கு தயார் செய்யலாம்.</p> <h3 style="text-align: justify;">உபயோகிக்கும் முறைகள்</h3> <p style="text-align: justify;">200 கிராம் நுண்ணுயிரிக் கலவையை, 10 கிலோ மூங்கில் விதையுடன் கலந்து நாற்றங்காலில் விதைக்கலாம். விதைக்கும் முன் 1 ச.மீ. நாற்றங்காலுக்கு 100 கிராம் வேர் உட்பூசணக்கலவையை இடவேண்டும். பாலித்தீன் பைகளில் வளர்க்கும் நாற்றுகளுக்கு, 5 கிராம் தொகுப்பு நுண்ணுயிர் உரங்கள் மற்றும் 10 கிராம் வேர் உட்பூசணம் இடவேண்டும். நடவு வயலில் மூங்கில் நாற்றுகளை நடுவதற்கு முன் நடவு செய்யும் குழியில் 5 கிராம் நுண்ணுயிர்த் தொகுப்பு உரம் மற்றும் 10 கிராம் வேர் உட்பூசணம் இடவேண்டும்.</p> <p style="text-align: justify;">நுண்ணுயிர் உரங்களை உபயோகிப்பதால், நல்ல தரமான மூங்கில் நாற்றுகள் குறுகிய காலத்தில் கிடைக்கின்றன. நடவு மரங்களில் அதிக அளவில் வேர்கள் தோன்றி நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கிறது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை</p> </div>